Saturday, November 20, 2021

குரு நம்பிக்கை


 'குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை, நம்பிக்கையினை மேலும் வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களாக திரு சாயி வரதராஜன் அவர்கள் கூறியுள்ள எட்டு சிறந்த வழிகளை இங்கு பகிர்வது அனைவருக்கும்  உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.


முதன்முதலில்

சாயிபாபாவின் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல. தவிர, அது  பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நமக்கு நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படி நம்மை தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

இரண்டாவதாக,

பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

மூன்றாவதாக,

எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நாலாவதாக,

நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக,

நாளின் முதல் 15 நிமிடநேரத்தை, நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச்  சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

ஆறாவதாக,

ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக,

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

எட்டாவதாக,

முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாராந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்


 ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்


ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்

தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சாயிசத்சரிதம் பயன்படுத்த சிறந்த ஒன்பது வழிகள்

 

சாயி பக்தர்கள் எப்படி ஸ்ரீ சாயி சத்சரிதத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:


1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தினை (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை),  ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் நாம் வழிபாட்டிற்கு என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) வைத்து மிகப் புனிதமாக கருதி வழிபட வேண்டும்.

2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்கச் செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் .ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசி சிந்தனையாக பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும்.

3. ஏதேனும் நமக்கு ஏதும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும். முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும். சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மஹாசிவராத்திரி, நவராத்திரி, முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில், ஒருஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்..

4. ஏதாவது ஒரு கோயிலில்தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் .மற்ற மக்கள் இருந்தால்குழு வாசிப்பு முறையில் எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .

5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.

7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய நியாயமான விலையில் பல மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும். எனவே, ஷீரடி சென்று வரும் பக்தர்கள், இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க சில பிரதிகளை கூடுதலாக வாங்கி கொண்டு வர வேண்டும்

8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்லமிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும். மேலும், அவருக்கு பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.

9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ, அதே போன்று சாயிசத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின் தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.

நான் இதை விரும்புவதில்லை.


 என்னை வணங்குவதற்காக ஆடம்பரமாக பூஜை புனஸ்காரங்கள் அலங்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு.

நான் இதை விரும்புவதில்லை.

வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா?

ஆத்மார்த்தமாக  இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது. அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்.

வேண்டுதல்

 


யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம்போக்காக வேண்டுகிறார்கள். 

எந்த வெள்ளம் புரண்டுவருகிறதோ அந்த வெள்ளம் வழிகளை உண்டாக்குகிறது. 

எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. 

இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.

Monday, January 20, 2020

இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்

அன்புக் குழந்தையே! 
நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது. என் குழந்தையே உன்னை நான் எனது வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை நீ உச்சரித்துக்கொண்டே இருப்பதால், ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்.

யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து உனது நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவதும் நானே என்று அறிந்துகொள். சோதனைக் காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது. மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும்,  பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானப்பட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?, இனி நான் பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்துத் துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கான  நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................

சாயியின் குரல்🙏🏻

நான் உன் தந்தை










அன்புக் குழந்தையே!
புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளை பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகு தானே உள்ளே வந்து வாழ்க்கையை நடத்துகிறாய். அப்படி தான் குழந்தையே! உனது பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான் உன்னிடம் செயல்படும் போதும்,  உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசுபட்டிருக்கிறாய். உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம் பிரச்சினை என்று பேதலித்து வருகிறாய். அவற்றையெல்லாம் நான் மெதுவாக செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத்தெரிகிறது. சோதனைக்காலம் வரும்போது நீ பயப்படாதே! கலங்காதே! நான் உன் தந்தை! உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதை போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களை கடிந்துகொண்டு நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை என் பொறுப்பில் எடுத்துக் கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.................. 


சாயியின் குரல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...