Thursday, September 21, 2017

உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது!



நான் பாபாவை எனக்கு தெரிந்த அளவில் நன்றாகத்தான் வணங்குகிறேன், ஆனால் அவர் எனக்கு மட்டும் சோதனையைத்தான் தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பாபாவினை வணங்கும் பல பக்தர்கள் தவிக்கிறார்கள்.  சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.
அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அந்த சாதனையை வெற்றியாக்க சோதனைகள் தரப்படும். சுகத்திற்குப் பிறகு துக்கம் வரும் என்பதை புரியாதவர்கள்தான் சுகம் வந்தபோது அதை இன்முகத்தோடு ஏற்று களிக்கிறார்கள். துக்கம் வந்ததும் தாளாமல் அழுகிறார்கள்.
துக்கத்திற்குப் பிறகு வருகிற சுகம் கடைசி வரை நிலைத்து நீடிக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளும் படிப்பினையைத் தருவதற்காக பாபா தன் பக்தனுக்குத் சோதனைகளைத் தருகிறார்.
நமக்கு வர வேண்டியவைகளை வரவேற்றாலும், அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதே சோதனையின் நோக்கம். சோதனைகள் நம்மை திடப்படுத்த வருகின்றன என்பதை உணர்ந்திட வேண்டும். உதாரணக் கதை ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்:
ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.
பையன் சொன்னான்: அப்பா நான் போய் திருடிவருகிறேன்என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென திருடன், திருடன் என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.
சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த உரிமையாளர், அந்தப் பெட்டியின் மீது  அமர்ந்து கொண்டான். இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்து போன நிலையில் பையன் பெட்டிக்குள்ளிருந்து எலி வருடுவதுபோல பெட்டியை வருடினான். பெட்டியின் உள்ளே எலி இருப்பதாக நினைத்து உரிமையாளன் பெட்டியைத் திறந்தபோது, அந்த பையன் சர்ரென எழுந்து பொருளோடு தப்பி ஓடினான். உரிமையாளர் திகைத்தான்.
நேராக வீட்டுக்கு வந்தான் பையன். அங்கே ஓய்வாக இருந்த அப்பாவிடம், “ஏம்பா என்னை காட்டிக்கொடுத்துட்டு ஓடி வந்துட்டே?” எனக்கேட்டான். அப்படி செஞ்சதாலதானே நீயா தப்பிக்கிற வழியைக் கண்டுபிடிச்சு தப்பிச்சு வந்தே -  இல்லேன்னா திருடத் தெரிந்த உனக்கு தப்பிக்கும் வழி தெரியாமல் போயிருக்குமே!என்று பதில் சொன்னான் அப்பா.
கதை புரிகிறதா?
ஒரு பிரச்சினையிலிருந்து நீயாகத் தப்பிக்கவே சோதனையை கடவுள் அனுமதிக்கிறார். சோதனை நேரத்தில் சாயி பற்றி சொல்லிக் கொண்டிருப்பவர்களின் சங்கத்தை நாடும்போது, அச்சம், தயக்கம் போன்றவை நீங்கி உபாயம் பிறக்கிறது. இதனால்தான் துன்பம் வரும்போது இறை அடியார்களின் சத்சங்கத்தை நாடுங்கள் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
சோதனை என்பது உனக்குக் குழந்தை இன்னும் பிறக்க வழியில்லாமல் கோயில் குளங்களைச் சுற்றுவதாக இருக்கலாம். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவமனைக்கு அலைந்து லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து இன்னும் பலன் கிடைக்காத நிலையாக இருக்கலாம். தைரியத்தை விடாதே! அவரைப் பற்றிக்கொள், நிச்சயம் பலன் கிடைக்கும்.
சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட கடனாக இருக்க லாம்; கடன் தந்தவர் கழுத்தை நெறிக்க என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி இருக்கலாம்; பயப்படாதே! அவர் உன்னோடு இருந்து அதை அடைப்பதற்கான வழியைக்காட்ட சோதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள். பணத்தை பெருக்க இன்னும் தீவிரமாக உழை.  கிடைத்ததை செலவழிக்காமல் சேமித்து வை.
வீடு கட்ட முடியாத நிலையாக இருக்கலாம். அதனால் என்ன? கடன் வாங்கி வீடு கட்டி பிறகு கஷ்டப்படுவதைவிட பொறுமையாக இருந்து கடனே இல்லாமல் வீட்டைக் கட்டி முடிக்க அவர் இந்த சோதனையைத் தருகிறார் என்பதை உணர்ந்து கொள், வாழ்க்கை இனிமையாகும்.
வேலையில் பிரச்சினை என்கிற வடிவில் இந்த சோதனை வருவதாக இருக்கலாம். இந்த வேலைக்காகவா படைக்கப்பட்டாய்? இல்லையே! இதை விட நல்ல வேலையைத் தேடுவதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். அல்லது இதுவே நல்ல வேலை என்றால், எதற்காக உனக்குப்பிரச்சினை தரப்படுகிறது என்பதை யோசித்து அதற்கு ஏற்ப சமயோசிதமாக நடந்து கொள். விட்டு ஓட வேண்டும் என நினைக்காதே!
ஜெயித்தே ஆகவேண்டும்...
அதற்காகத்தான் இந்த சோதனை. இதிலிருந்து எப்படி மீள்கிறாய் என்று பார்க்க சுவாமி இதை அனுமதித்து இருக்கிறார். நீச்சல் கற்றுத் தரும்போது இடுப்பில் துணியைக் கட்டி விட்டு குழந்தையை தண்ணீரில் இறக்கி விடுவதைப் போலத்தான் பாபா உன்னைப் பிடித்துக்கொண்டு சோதனையில் நடமாட விட்டிருக்கிறார். இதை புரிந்துகொண்டால் நீ ஜெயித்து விடுவாய்.

Thursday, August 31, 2017

தன்னை அறிதல்



பாபாவின் சத்சரித்திரம் அவரை எனக்குக் கடவுளாகக் கற்பிக்கவில்லை. நானாகக் கற்றுக் கொண்டது. உபநிக்ஷத்துக்கள் என்னை இந்த உடலாகக் கற்பிக்காமல் ஆன்மாவாக நான் அளவற்ற சக்தி பெற்ற இறைவனாகக் கற்பித்தது.
ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டவர்கள் அனைவரையும் ஐயப்பனாக நினைப்பதையும், அவரது கோயில்களில் தத்வமசி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் பார்த்தேன். அது நீயே என்ற அந்த விளக்கம் என்னை மாற்றியது. நான் எங்கிருந்து வந்தேன்? என யோசித்து ஒவ்வொன்றாக அலசும்போது, நான் இறைவனாக - இறைவன் நானாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த உடம்பில் இருக்கும் வரை இதற்கு உரிய மாயைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையும் இறைவனாக வெளிப்பட்ட மனிதர்கள் வாழ்விலிருந்து அறிந்துகொண்டேன்.
சுக துக்கம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை எனப் புரிந்துகொண்டேன். நீர் பழத்தில் சாறாகவும், இலையில் சாரமாகவும் இருக்கிறது. உடம்பில் ரத்தமாகவும், சிறுநீராகவும் இருப்பதும் நீர்தான். பாம்பில் விஷமாக இருப்பதும் நீர்தான். பாலாக இருப்பதும், தேனாக இருப்பதும் நீர்தான்.
அது எதனுடன் சேர்கிறதோ அதன் தன்மையை அது அடைந்துவிடுகிறது. அதைப் போலவே, ஆன்மா இருக்கும் இடம், எடுக்கும் பிறவி, வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப மாற்றம் அடைவது தவிர்க்க  முடியாதது. இதற்குக் கடவுளை காரணம் காட்ட முடியாது என உணர்ந்தேன்.
உலகம் இந்த உடம்புக்காக வேலை செய்கிறது. இந்த உடம்போ, தான் நிலைத்திருக்கப் போகிறோம் என்ற நினைப்பில் செயல்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், உடம்பு தன்னை அறியாமலேயே அடுத்து வரப்போகும் உடம்புக்காக வேலை செய்கிறது.
அதனால்தான் இந்த உடம்பு செய்கிற செயலை ஒட்டி அடுத்த ஜென்மம் ஏற்படுவதாக நமது சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அது இப்போது செய்கிற நன்மை தீமைக்கு ஏற்பவே அடுத்த உடம்பு தரப்படுகிறது என்பன போன்ற உண்மைகளை உணர்ந்து கொண்டேன்.
இந்த ஆன்மா எப்போதும் கட்டுண்டு கிடக்கிறது. அதற்கு கதி மோட்சமே கிடையாது. அடுத்த ஜன்மம் இருக்கிறது என்றால், அந்த ஜென்மத்திற்குப் போக வேண்டியதும் இந்த ஆன்மாதானே! ஆகவே, அது கட்டுண்டுதான் கிடக்கிறது.
நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, இயேசு உங்களுக்குக் கடவுளாகவோ, மகானாகவோ தெரிவார். ஆனால் எனக்கோ, அது நானாக, என் ஆன்மாவின் குரலாக நினைப்பேன்.
பைபிளில் இயேசுவைப் பற்றி யோவான் எழுதிய ஒரு பகுதி முதல் அதிகாரத்தில் இருக்கிறது. ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை”.  (அத்1 - 1,2,3).
அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் (அத் 1- 14)
இது கிறித்தவர்களுக்கு இயேசுவைப் பற்றிய செய்தி. ஆனால் எனக்கு, இது என் ஆன்மாவின் நிலை பற்றிய செய்தி. ஆதியில் வார்த்தையிருந்தது என்கிறார்கள். என்ன வார்த்தை என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
ஓம் என்கிற ஓங்காரமே அந்த வார்த்தை. அந்த வார்த்தை இறைவனிடத்தில் இருந்தது. அதுவே இறைவனாகவும் இருந்தது. அதுதான் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமாக இருந்தது. அதுவே என் ஆன்மாவாக இருந்தது. இப்போது மனிதனாகவும், மனிதனுக்குள்ளும் இருக்கிறது. நீயும், நானும் ஓங்காரத்தின் சொரூபங்கள். நமக்குள் இருப்பதும் ஓங்காரத்தின் சொரூபம். இது நான் உணர்ந்து கொண்ட விக்ஷயம்.
இந்த உணர்தலோடு வாழ்வது சாத்தியமா? ஒருவன் தன்னை கடவுளாகவே உணர்ந்தாலும் அவன் இறைவனாக நடந்துகொள்ள முடியுமா? என்றால் அதுவும் இல்லை.
எனக்குள் இருக்கிற ஆன்மா இறைவனாக இருந்தாலும், உடலுக்குள் இருப்பதால் அது மனிதனாகக் கருதப்படுகிறது. எனவே மனிதருக்கு உள்ள இயல்புப்படி வாழ வேண்டும் என்ற இயற்கை நியதிக்குக் கட்டுப்படுகிறது. இந்த உணர்தலோடு தான் _ராமச்சந்திரன் வாழ்ந்தார்.  ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்தார். இறை அவதாரங்கள் அனைவரும் வாழ்ந்தார்கள். மாயையால் மறைக்கப்பட்டு மாயையின் வசப்பட்ட மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
நானும் அவ்வாறுதான் வாழ முடியும். மாயைத் தருகிற அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும். எனவே, எனக்காக நான் வேண்டிக்கொள்ளக் கூடாது, என்னைப் போல உணர்தல் இல்லாதவர்கள் இதை உணர்ந்து கொள்ளும் வகையில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
பாபா இதை அழகாகக் கற்றுத் தந்தார். லவுகீக விக்ஷயங்களுக்காக தன்னிடம் வந்தவர்கள் தடை செய்யப்பட்ட போது, அவர்களை என்னிடம் வரத் தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பது போல நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு தந்து அவர்களை சிறிது சிறிதாக மாற்றுவேன் என்று கூறினார்.
தன்னைத்தான் அவர்கள் உணர்ந்து கொள்ளும் வழியை போதிக்க நினைத்தார் அவர். ஆனால், மாயை வசப்பட்ட மனிதர்கள் லவுகீக சுகத்திற்காக மட்டுமே பாபாவை கடவுளாகப் பார்த்தார்கள்.
பாபாவின் முயற்சியை நான் முன்னெடுத்துச்சென்று பார்க்கவேண்டும். அவர்களுக்கு லவுகீக சுகங்களைப் பெற்றுத் தந்து ஆன்மீகத்தில் வழி நடத்த உதவவேண்டும். அவர்கள் மேன்மைக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என நினைத்தேன்.
இந்த எண்ணத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, என்னைத் தேடி பலர் வர ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பு சாதாரண மனிதனாக ஒதுக்கப்பட்ட நான், அவர்களால் மகானாகக் கருதப்பட ஆரம்பித்தேன்.
அழியப் போகிற இந்த உடம்புக்குள் இருக்கிற நான் என்னை மகானாக நினைக்காமல் மனிதனாக நினைத்துக் கொள்ளத் துவங்கினேன். என்னை பாதுகாப்பதில் என்னைவிட அதிக அக்கறை செலுத்துவது யாராக இருக்கமுடியும்?
அதைப்போலவே என் மீது பக்தி செலுத்த என்னைத்தவிர வேறு யாராலும் முடியுமா? முடியாது.. எனவே, கிருஷ்ணர் ராமனையும், ராமன் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கியதைப்போல, எனது பூர்ண வடிவமான இறை வடிவத்தை, வணங்கக் கடமைப்பட்ட முதல் பக்தனாக என்னைக்கருதி அதை நடைமுறைப் படுத்தினேன். எனது பூரண ரூபமாக சாயியை ஏற்றுக் கொண்டேன். அவர் முன் குறையுள்ள பக்தனாக தினமும் வணங்கி, வரம் கேட்கிறேன். இதனால் எனது உணர்தல் என்னோடு புதைந்திருக்கிறது. எனக்கு மட்டும் புரிந்திருக்கிறது.
யதார்த்தத்தை -  எளிமையாகச் சொல்லவும், வித்தியாசத்தைக் காட்டவும் பாபா கற்றுத் தந்தார். கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை எண்ணி பயப்படாமல் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வதுதான் இயல்பான வாழ்க்கை என்பதை அவர் கற்பித்து, அதில் நடக்கப் பழகினார்.
இந்த உடம்பு செத்த பிறகு எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆகவே, இருக்கிற வரை எவ்வளவு தூரம் முயற்சி செய்ய முடியுமோ அதைச் செய்து பார். எது உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை அறிந்துகொள். அறியாவிட்டால், எது மகிழ்ச்சியைத் தருகிறது என ஆராய்ந்து பார்.. அதில் தயக்கம் காட்டாமல் ஈடுபடு.. அவர் நினைப்பார், இவர் தப்பாகப் பேசுவார் என நினைத்து, யாருக்காகவும் உனது சந்தோக்ஷத்தை இழந்துவிடாதே..
இவ்வாறு போதிக்கப்பட்ட நான், மற்றவர்களின் நன்மையைச் சீர் செய்வதற்காக என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். பக்தியில் மிகப் பழைய முறையான பிரார்த்தனை முறையைக் கையில் எடுக்க வைத்தார். அதிலும் கூட்டுப் பிரார்த்தனை முறையை நடை முறைக்குக்கொண்டு வர வைத்தார். இன்றுவரை இந்த புதிய அணுகுமுறை என்னை -  எனது வழியை மிக வேகமாக உயர்த்தி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் தெரிந்த சாயி பக்தர்கள் மனதில் தனியிடம் பெற வைத்தது.
எல்லாவற்றையும் ஈர்க்கும் திறன் என்னிடம் இருந்தாலும், நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை எல்லாம் நடைமுறைப் படுத்தவேண்டும் என முயற்சிக்கக் கூடாது.
இவ்வாறு முயற்சித்தால் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும். எனக்கு எல்லாம் தெரியும் என்பவனுக்கு உருப்படியாக ஒன்றும் தெரியாது. உனக்கு என்ன தெரியும் என்பதைச் சொல் அதற்கேற்ப வேலை தேடு, வெற்றி பெறுவாய் என்பது பொன்மொழி.
ஆக, அனைத்திலும் ஈடுபட்டு ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் போவதைவிட, ஏதோ ஒன்றைத்தனித்தன்மையுள்ளதாக ஏற்று, அதில் முழு விருப்பத்தையும் செலுத்தி அதை ஈர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம் அல்லவா?
சாயி என்ற கடவுளைத் தனித் தன்மையுள்ளவராக அடையாளம் கண்டு ஏற்றேன். இன்று அவரால் ஈர்க்கப்பட்டு, ஜெயிக்கிறேன், ஜெயிக்க வைக்கப்படுகிறேன். எனது அணுகுமுறையை பல சாயி பாபா ஆலயங்கள் பின்பற்ற வழிவகுத்தது.
இவற்றைப் பற்றியெல்லாம் நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டே போகிறேன். கேட்டபடியே என்னைப் பின் தொடர்ந்து வா!
சாயி வரதராஜன்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...