Saturday, May 31, 2014

உன் தலையெழுத்து மாறும்!

 25129



சாயி சரித்திரம் அத்தியாயம் பத்து நமது தலையெழுத்தை மாற்றுகிற உபாயத்தைக் கூறுவதிலிருந்து துவங்குகிறது.



”எவர் சகல உலகங்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மத்திலேயே சதா லயித்து இருக்கிறாரோ, அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக.



யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச்சுழலில் இருந்து விடுவிப்பதற்குப் போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீகப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இதற்கு ஒரு பைசாவும் செலவில்லை.



சொற்பப் பயிற்சியால் பெரும் பலன் அனாயசமாக கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.



இதர தேவதைகள் அனைத்தும் மாயை. குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம் தலையெழுத்தையே மாற்றி விடுவார். எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலம் ஆகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாத்திரங்களை படித்துவிட்டு,  ஒரு தலைமுடியை இரண்டாகப்பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திப்பூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.



சத்குரு நாவாயைச் செலுத்தும்போது, ஆதிபவுதிகம், ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம் ஆகிய இன்னல்களில் இருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.



கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின் மீது விசுவாசம் வைக்கவேண்டும். அதுபோலவே, சம்சாரக்கடலைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.



ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்க கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தமது லீலையால், ஆனந்தத்தை லட்சணமாக உடைய மோட்சத்தை அளிக்கிறார்.



எந்த சத்குருவின் தரிசனம் இருதயத்தின் முடிச்சுகளை அவிழ்க்குமோ, புலனடக்கம் கிடைக்கச்செய்யுமோ, முன் ஜென்மங்களில் சேர்த்த பாவ மூட்டைகளையும் இந்த ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ அவருடையப் பெருமையை பாடுவோமாக.. என்று எழுதப்பட்டுள்ளது.



இந்த விக்ஷயங்களை நன்றாக உள்வாங்கி தியானித்தால் போதும்.. அனைத்தும் சரியாக நடக்கும்…..



தியானிக்கலாம் வாருங்கள்..



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பின் வரும் விக்ஷயங்களை  தெளிவாக அறிந்து கடைப் பிடிக்க வேண்டும்.



1) குருவைஎந்நேரமும்நினைக்கவேண்டும்.



அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும்.  குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது.



சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.



என் பிரச்சினை இப்படியிருக்கிறது... குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை.



குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.



அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.



இந்த நினைவை எப்படி உண்டாக்கிக்கொள்வது?



ஓர் இளைஞன் இருக்கிறான். தன் வயதுள்ள பல பெண்களைப் பார்க்கிறான்.. அவர்கள் அனைவரையும் நினைத்து அவன் ஒருபோதும் தூக்கத்தை இழப்பது கிடையாது. அவர்களுள் தன் நடத்தைக்கும், தனது குணத்திற்கும் ஒத்து வருகிற யாரோ ஒருத்தியை மனதில் நினைக்கிறான். அந்த நினைவு அவனை, அவளிடம் நெருங்க வைக்கிறது. பேசவைக்கிறது, அது காதலாக மாறி, சதா அவளது நினைவில் மனம் லயிக்கிறது.



இப்படித்தான்.. பல குருமார்கள், கடவுள்கள் என இருக்கும் நிலையில் இதில் நாம் யாரைத் தேர்வு செய்வது என முடிவு செய்யுங்கள். தேர்வு செய்த பின், அந்த ஒன்றின் மீது மனத்தை முழுமையாகச் செலுத்துங்கள். பிறகு, இரவு பகலாக நீங்கள் அந்த ஒன்றிலேயே லயித்து விடுவீர்கள்.



குருவை எப்போது நினைக்க வேண்டும்?



உடல் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருக்கும் போது எப்போதும் குருவை தியானிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.



வயதாகி, நோய்கள் வந்து, பலம் இழந்து பிறரால் கைவிடப்பட்டு நினைவு தடுமாறி, படுக்கையில் விழுந்துகிடக்கிற நேரத்தில் கடவுளை நினைக்க முடியாது. எனவே, இன்றே, இப்போதே குருவை -  கடவுளை தேர்வு செய்யவேண்டிய நேரம். அதை செய்யுங்கள்.



2. பலதேவதைகள்மாயை



நாம் பல தெய்வ வழிபாடு உள்ளவர்கள். இதை விவேகானந்தர்  மறுத்திருக்கிறார். பல பெயர்களில் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்றார் அவர்.



கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் ஒவ்வொரு ஒரு தனிக்கடவுளாக கும்பிடுகிறோம். அவன் நம் மீது கருணையும், பாசமும், பரிவும் உள்ளவன். வெண்ணையை விட மென்மையானவன் என்பதால் அவனை தாயுமானவன் என்கிறோம்.



அம்பாளாக வழிபடுகிறோம். எங்கும் நிறைந்தவன் என்பதால் விஷ்ணுவாக கும்பிடுகிறோம். அவனே படைக்கிறவன் என்பதால் பிரம்மாவாக வழிபடுகிறோம். எதற்கும் முதன்மையானவன் என்பதால் விநாயகராக,  வெற்றியைத் தருவதால் முருகனாக,  செல்வத்தைத் தருவதால் லட்சுமியாக, கல்வியைத் தருவதால் சரஸ்வதியாக வழிபடுகிறோம்.



இறைவனை பெண்ணாக பாவித்து வழிபடுவதன் நோக்கம்.. பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை குணம் அதிகம்..



இரக்க சுபாவம் அதிகம்.. கடுமை முகம் காட்டுவது குறைவு. நம்பினால் உயிரையும் தரும் இயல்பு பெண்ணுக்கு மட்டுமே அதிகம் உண்டு.



எனவே, சுலபமாக அன்பைப்பெறுவதற்காக இறைவனை பெண்ணாக பாவித்து வணங்குகிறோம்.



உடனடியாக உங்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றும்..



சாயி ராம்.. இப்படிச் சொல்கிற நீங்கள்..பரிகாரத்திற்கு இதைச் செய்.. இந்த கடவுளை வழிபடு.. குல தெய்வத்தைக் கும்பிடு என்றெல்லாம் கூறுகிறீர்கள்..



சனிதோக்ஷ யாகம் செய்கிறீர்கள், அது ஏன்? எனக் கேட்கலாம்.



குருவே தெய்வம் என்பதை உணர்ந்தவர்கள் மிகக்குறைவு. என்னை முற்றிலும் அணுகுகிறவர்களுக்கு, நான் இந்த வித்தியாசத்தை உணர்த்தி அவர்களை சாயி பக்தியில் அதாவது குரு பக்தியில் நிலை நிறுத்துவேன்.



ஒன்றில் மனத்தை செலுத்தாமல் அனைத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஓடுகிறவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னால் ஏற்காது. எனவே, அவர்கள் போக்கில் அவர்களை அனுப்பி, படிப்படியாக மாற்ற முயற்சிக்கிறேன்.



முதலில் எல்லா தெய்வத்தையும் கும்பிடு. பிறகு..அவையெல்லாம் ஒன்றே என உணர்ந்திடு. அந்த ஒன்றும் நமது குருவே என்பதைத் தெளிந்திடு..



இதுவே எனது கோட்பாடு. இந்தத் தெளிவு முழுமையாக வந்த பிறகுதான் ஒருவருக்கு ஆணித்தரமாக பாபா மீது நம்பிக்கை வரும். தலையெழுத்து மாறும்.



3. சாஸ்திரஞானம்தேவையில்லாதது..



கடவுளை மனதால் தேட வேண்டும். புத்தகத்தில் தேடக்கூடாது. விஷ்ணு சகஸ்ரநாமத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதால் நீங்கள் விஷ்ணு பக்தர் ஆகி விட முடியுமா?



லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதால் மட்டும் அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகி விடக்கூடுமா? பொருள் தெரியாமல் படிக்கிற எதனாலும் பயன் இல்லை.



மேளங்கள் கூட வித்தியாசத்தைத் தருகின்றன. டும்டும்டும் என்றால் கல்யாணத்திற்கு.. டொண் டொண் டொண் என்றால் கடைசி ஊர்வலத்திற்கு..



ஆனால், பொருள் தெரியாமல் படிக்கிறதால் எதை உணரமுடியும்?



என்ன செய்யலாம்?



மனதில் அந்த இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவனை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால் நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். கடவுள் மீது மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.



4. ஐக்கியபக்திவேண்டும்



இறைவன் எப்போதும் நம்மையே நினைத்துக்கொண்டு இருப்பவன்.. ஆனால், நாமோ அவனைத்தவிர பிறவற்றில் மனதை செலுத்திக் கொண்டு இருப்பவர்கள். இதனால் அவன் மீது நமக்கு அன்பும் வருவதில்லை.. ஐக்கியமும் ஏற்படுவது இல்லை.



நானும் அவனும் மின்சாரமும் மின்கம்பியும் போல.. இரும்பும் காந்தமும் போலடூ மலரும் வாசமும் போல, செடியும் வேரும்போல,  உடம்பும் உயிரும் போல, ஒன்றில் ஒன்று கலந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் பக்தி செலுத்த வேண்டும்.



நான் அப்படித்தான் பக்தி செலுத்துகிறேன்..



ஆனால் என் கஷ்டம் தொடருகிறதே என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், உங்களது பக்தி பொய்யானது என்று பொருள்..



ஐக்கிய உணர்வு வந்துவிட்டால் துன்பமும் இன்பமும் தனித்தனியாகத் தெரியாது. அனைத்தும் சமமாகத் தெரியும். மனம் இறைவனிடம் கெஞ்சிக்கேட்காது.. அதைப் பற்றி நினைக்காமல் நடைபோட ஆரம்பிக்கும்..



சில சமயம், இந்த ஐக்கிய பாவம் நானும் கடவுளும் ஒன்று நினைக்க வைக்கும். உண்மை இதுவானாலும், நாம் இந்த ஜன்மாவில் – சரீரத்தில் -  அஞ்ஞானத்தில் இருக்கிறோம். மாயை வசப்பட்டவர்களாக மயங்கிக்கிடக்கிறோம்.



இந்த நிலையில் நம்மை அவ்வாறு நினைக்கக்கூடாது. அது கர்வமாகும்.



சீதா பிராட்டியாரின் தந்தையார்  ஜனக முனி அனைத்தும் அறிந்தவர். தானே பரப்பிரம்மம் என்பதை அறிந்தவர். இவரது கர்வத்தைப் போக்க ஒருமுறை விநாயகப்பெருமான் தீர்மானித்தார்.



ஒரு பிச்சைக்கார பிராமணர் வடிவில் வந்து, அரசனை சந்தித்து, அரசே எனக்குப் பசிக்கிறது.. சாப்பாடு தரவேண்டும் எனக் கேட்டார்.  தன் மகனை அழைத்து பிராமணருக்கு உணவு தருமாறு கூறினார் ஜனகர். மகனும் பிராமணருக்கு உணவு பரிமாறினார்.  பிராமணரோ பசிக்கிறது.. போடு போடு எனக் கூறி அரசாங்க களஞ்சியத்தில் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டார்.



இந்த விக்ஷயத்தை மன்னரிடம் தெரியபடுத்தி, இனி அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை எனக்கூறினார்கள்.  இவரை எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட வேண்டும் என நினைத்த ஜனகர்,



பிராமணரிடம் வந்து, ஐயா, இங்கு இவ்வளவுதான் முடியும்.. வேறு எங்காவது மிச்சம் மீதியை சாப்பிட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தார்.



பிராமணர், ஒரு பூசாரியின் வீட்டிற்கு வந்து, சாப்பிட ஏதேனும் தாருங்கள் என்றார். நைவேத்தியம் கூட கிடையாது. ஒரு பருக்கையும் இல்லை என அவ்வீட்டார் கூறினார்கள். வேறு என்ன இருக்கிறது பாருங்கள் எனக்கேட்டார் பிள்ளையார்.



பிள்ளையாருக்குப் படைத்ததில் ஒரே ஒரு அருகம் புல் மட்டும் இருக்கிறது என்றார் அந்த பூசாரி.



சரி, அதையாவது கொடு என வாங்கிப்புசித்தார். அவரது பசி அடங்கியது. அது மட்டுமல்ல, ஜனகரின் மிதிலை நகரம் முழுவதும் உடனடியாக செல்வபுரியாக மாறியது.



இந்த மாற்றத்தை அறிந்த ஜனகர், இது எப்படி சாத்தியமாகும் என விசாரித்தார். பக்கத்து வீட்டில் சாப்பிடுகிற பிராமணரால் இது நடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்தார். அவரைப் பார்த்த விநாயகர், ஒருவனுடைய பசியைத்தணிக்கவே முடியாத நீ, எப்படி பரப்பிரம்மம் ஆகமுடியும்? எனக் கேட்டார்.



பரப்பிரம்மம் என்றால் அனைத்தையும் கடந்தது, அனைத்தையும் செய்ய வல்லது என்பது பொருள். நாம் ஜடத்தில் இருப்பதால் பரமாக இயலாது என்பதை உணர்த்தினார்.



ஜனகர் -  தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர, விநாயகர் அவரை வாழ்த்தி மறைந்தார்.



பார்த்தீர்களா? ஐக்கிய பக்தியும் அதிக அறிவும் ஒருவனை கடவுளாக நினைக்க வைத்து, கர்வம் கொள்ள வைத்துவிடுகிறது.



நாம் எப்போதும் கடவுள் பக்தர் என்ற நிலையிலேயே நின்று கொள்வது நல்லது.  நம் தலையெழுத்து மாற, ஐக்கிய பக்தி வேண்டும். கர்வம் கூடாது.



5. இறைவன்புகழைப்பாடவேண்டும்:



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால் இறைவனின் புகழைப்பாட வேண்டும். அதாவது நாம் நம்புகிற நமது குருவின் இயல்பைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்க வேண்டும்.



முதலில் இறைவனாகிய குருவின் இயல்பு -  அவர் செய்த லீலைகள் -  நமக்குச் செய்த அற்புதங்கள் என அவரைப் பற்றி பெருமையாக பிறரிடம் எடுத்துக்கூற வேண்டும். இது இறைவனுக்குச் செய்கிற சேவையாகும்.



இவ்வாறு செய்யும்போது இறைவன் மகிழ்ந்து நம் தலையெழுத்தை மாற்றி விடுவான். நம்மை பிறர் முன்னிலையில் உதாரணமாகவும் வைப்பான்.



 



 



 சாயி வரதராஜன்

எல்லாம் கடந்தவர் பாபா!

DSC_0005



பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.



ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார்.  பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.



பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.



பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை.  ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.



ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.



இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான்,  எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.



பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.



ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.





கு.இராமச்சந்திரன்

அவதார புருஷர்!

25129

நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, 'நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்’ என்றே சொல்லி¬க்கொண்டார்.

அவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.

அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருட்கள் அனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.

அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.

சாயி சத்சரித்திரத்திலிருந்து

Friday, May 30, 2014

பெருங்களத்தூரில் அற்புதம்!

புதுக்கோட்டையிலிருந்து நானும் எனது மனைவியும் சென்னை வந்து பெருங்களத்தூரில் தங்கினோம். எனது மூன்றாவது மகனுக்கு விரைந்து திருமணம் நடக்க பெருங்களத்தூரில் பிரார்த்தனை வைத்தோம்.



பி.ஈ. படித்த வேலை பார்க்கும் பெண் பெருங்களத்தூரில் நிச்சயமாகி திருமணம் நடந்தேறியது. எனது இரண்டாவது மகனுக்கு வீடு கட்ட முயற்சி மேற்கொண்டேன். அந்த கோரிக்கையும் பாபாவின் அருளால் இனிதே நிறைவேறி, பணிகள் துவங்கி யிருக்கின்றன.



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபா பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறார். அந்த அற்புதங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



மா மாயனான பாபா, பெருங்களத்தூரில் செய்கிற அற்புதங்களையும், நாள் தோறும் நிறைவேற்றித் தருகிற பிரார்த்தனைகளையும் என்னைப் போல நீங்களும் அனுபவிக்க வேண்டும்.



கஷ்டத்தில் இருப்பவர்கள் விரைந்து வந்து பலனடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.



ஸ்ரீநிவாச சுந்தரராஜன்,



புதுக்கோட்டை

ஆன்மீக முன்னேற்றம்!

baba2



அது 1914 ம் ஆண்டு. பாபா என்னிடம் பலமுறை பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர், ”உன்னிடம் பணம் இல்லை என்பது தெரியும். ஆனால், நீ யோக வசிஷ்டம் படிக்கிறாய் அல்லவா? அதிலிருந்து கொடு”  என்றார்.



அதாவது நான் யோக வசிஷ்டத்தில் உள்ள நல்ல போதனைகளை படித்து அதை  நெஞ்சில் நிறுத்திக்கொள்வதே நான் அவருக்குக் கொடுக்கும் தட்சணை.



அவர் என் இதயத்திலேயே நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா?



இராமனையும், கிருஷ்ணரையும் புனிதர்களாகக்கருதினார். ஞானேஸ்வர், துகாராம் போன்ற ஞானிகளையும் வெகுவாக மதித்தார். கடவுளை அடைய நான்குவித மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.



தியானம், கர்மம், ஞானம், பக்தி.



தியானத்தில் ஆசனம், பிராணாயாமம், ஒருமுனைப்படுத்தல், குண்டலினி -  பின் இதன் மூலம் சக்தி பெறுதல். ஆனால் பாபா இதைப் பற்றியெல்லாம் அக்கறை காட்டியதுமில்லை, பிறரைச் செய்யச்சொன்னதும் இல்லை. ஆனால் என்னிடம் ஒருமுறை பிராணாயாமம் செய்கிறவர்கள் எல்லாம் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய என்னிடம் வருவார்கள் என்றார்.





கு.இராமச்சந்திரன்

Thursday, May 29, 2014

உயிர் காத்த பாபா!

25125



எனது மகன் சிவபாஸ்கரன் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்.



நாளுக்கு நாள் அவன் உடல் நலம் குறைந்துகொண்டே வந்தது. உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையும் குறைந்து வந்தது. மருத்துவமனையில் எனது மகனோடு இருந்தபோது, எனது இரண்டாவது மகன் வந்து, வீட்டுக்குப் போகுமாறு என்னை அனுப்பிவிட்டான். வீடு வந்து பாபாவிடம் மன்றாடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.



பத்து  நாட்கள்  பூஜை செய்தேன். அவன் என் மகனில்லை, உங்கள் மகன். நீங்கள் என்ன செய்தாலும் சம்மதம் என்று பாபாவிடம் பொறுப்பை விட்டு விட்டேன். பாபாவின் அற்புதத்தால் எனது மகன் உயிரோடு திரும்பி வந்தான். அது மட்டுமல்ல, அதன் பிறகு அவன் வாழ்வில் நல்ல காலம் பிறந்து, வீடு வாங்கினான். அவனது மகன் பி.ஈ. முடித்தான். குடும்பம் நல்ல நிலையில் உள்ளது.



என் பாபாவின் அற்புதங்களை வார்த்தையாலோ, பேச்சாலோ வர்ணிக்க இயலாது. அவரது கருணை கடலிலும் பெரிது. என் உடல் உயிர் அனைத்தும் அவருக்கே சொந்தம்.



அவருக்கு எனது நமஸ்காரங்கள்.



சகுந்தலா,

சக்திநகர், முடிச்சூர்.

Wednesday, May 28, 2014

தோல்வியை வெற்றியாக்கிய பாபா!

sai-guide-us



என் பெயர் சண்முகம். ஆசிரியராகப் பணிபுரிகிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் வெங்கடேசன் பாபா படம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.



அப்போது மெடிக்கல் வைத்திருந்தேன். அதில் பாபாவை அமர்த்தி வழிபாடு செய்துவந்தேன். டிஆர்பி என்ற தேர்வுக்கு தயாராகி நான்கைந்து முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற இயலவில்லை.



ஐந்தாவது முறை தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்து வருகிற அரசாங்கம் டிஆர்பி தேர்வு முறையை ரத்து செய்துவிடும். ஏற்கனவே உள்ள தொழிலிலும் வருமானம் இல்லை. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.



இச்சூழலில் தேர்வு ஆகாவிட்டால் எதிர்காலம் கஷ்டத் துடன் தொடரும். எனது கஷ்டங்கள் நிவர்த்தியாக வேண்டும் என சாயி பாபாவிடம் வேண்டுதல் வைத்தேன்.



ஒருநாள் இரவு பாபா படத்தைப்பார்த்து எப்படியாவது இம்முறை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என பிரார்த்தித்து மனம் விட்டு அழுதேன். தேர்வு முடிவு வந்தது. எனக்கு அதிர்ச்சி. நான் தேர்வாகவில்லை.



பாபா எனது பிரார்த்தனையை கேட்கவில்லை எனத் தளர்ந்து விரக்தியடைந்து போனேன். ஒரு மாதம் கழித்து இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.



இதில் எனக்கு பாபாவின் அருளால் பணி கிடைத்தது. தோல்வியை வெற்றியாக மாற்றிய பாபா மீது அதிலிருந்து இன்னும் அதிகமான பக்தி ஏற்பட்டது.



எத்தனையோ நிகழ்வுகள் பாபா என்னுடன் இருக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்கிறேன். அவற்றை அனுபவத்தில் மட்டுமே உணரமுடியும். வார்த்தைகளில் எழுத முடியாது.



எப்போதும் பாபா என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு தீவிரமாக இருக்கிறது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றுகிறவர் பாபா.



 சண்முகம் ஆசிரியர்



சின்ன சேலம்.

Tuesday, May 27, 2014

வரன் கொடுத்தார்!

25124



எங்களுக்கு இரண்டு குழந்தைகள். முதலில் பெண், இரண்டாவது பையன். மகளுக்கு வரன் பார்த்து வந்தோம். நல்ல வரனாக அமைவதற்கு பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தோம். எங்கள் வேண்டுதல்படியே, மாப்பிள்ளை குடும்பத்தார் தீவிர சாயி பக்தர்களாக அமைந்தார்கள்.



திருமணம் நல்லமுறையில் நடக்க வேண்டுமே என பிரார்த்தித்தோம். அத்துடன், எனது வேலையிலும் சரிவர சம்பளம் வராத நிலை. என்னால் எந்த வித கடனுக்கும் ஏற்பாடு செய்ய முடியாத நிலை.



பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி பிரார்த்தனை செய்தோம். அவர் செய்த லீலைகளை நினைத்து இன்றளவும் புல்லரிக்கிறது.



நாங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திலிருந்து எல்லாம் எங்களுக்கு பண உதவியாகவும், பொருள் உதவியாகவும் கிடைத்து நல்ல படியாக மகளின் திருமணம் நிறைவேற உதவியது.



அது மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டார் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நாங்கள் என்ன செய்தோமோ அதையே பெரிதாக நினைத்து மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.



மகளுக்கு வரன் பார்க்க துவங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் பாபா என் மகளுக்கு நல்ல மாமனார் -  மாமியாரைத் தாருங்கள் என வேண்டுவேன்.



அவர் இப்போது அவளுக்கு எங்களை விட நல்ல தாய் - தந்தையரையே தந்திருக்கிறார்.



இதற்கு நன்றி சொல்லவும், என் சம்பந்தி வீட்டார் சகல சவுபாக்கியங்களையும் பாபா அருளால் பெற்று வாழவும், உறவுகள் நல்லமுறையில் தொடர அவர் உறுதுணையாக இருக்கவும் பிரார்த்தனை செய்ய ஜனவரியில் சீரடி சென்றுவந்தோம்.



ராஜேஸ்வரி சீனிவாசன்,



மீனம்பாக்கம்., சென்னை

Monday, May 26, 2014

நம்பினால் அருள் செய்வேன்!

DSC_0005



எங்களது வாழ்க்கையில் பாபா எப்படி வந்தார் என்பது நினைவில்லை. எனது மகன் கல்லு}ரியில் சேர அவரிடம் முறையிட்டேன். அவர் சரியான வழியைக் காண்பித்தார்.



எங்கள் இடத்தில் ஒரு பிரச்சினையிருந்தது. அதையும் பாபா சரி செய்தார். பின் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்ந்தேன். வயிற்றில் கட்டியிருந்தது. அறுவை சிகிச்சை நடைபெற்று கர்ப்பப் பையை எடுத்து விட்டார்கள். அடுத்த ஒரு வாரமாக கடுமையான குளிர் காய்ச்சல்.



மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தபோது, கருப்பைப் பகுதியில் இரத்த உறைவு ஏற்பட்டு உள்ளதால் இப்படியாகிறது என்றார்கள். அதோடு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றார்கள்.



”என் அக்கா எனக்கு வேண்டும்!” எனக் கூறி., என் தங்கை மறு அறுவை சிகிச்சைக்கு என்னை கட்டாயப்படுத்தி சேர்த்தாள். எனக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை சாய் ராம் எழுதிக் கொண்டிருந்தாள்.



அறுவை அரங்கினுள் நுழையும் போதிலிருந்து சாயி ராம் என சொல்லிக்கொண்டிருந்தேன். மயக்கம் போடும்போது சாய் எனச் சொன்னது நினைவு இருக்கிறது. தெளிந்து கண் விழித்தபோதும் எனது உதடுகள் சாயிராம் என உச்சரித்தது. அப்போதுதான் சாயி பாபா என்னை இந்த நாமத்தை உச்சரிக்கவைத்தார் என்பதை உணர்ந்தேன்.



எங்களது இல்லத்திற்கு அருகில் இளம் தம்பதியர் இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு குழந்தையில்லை.  கர்ப்பம் ஐந்து மாதம் ஆறு மாதம் என நான்கு முறை ஏற்பட்டு கலைந்து போய்க் கொண்டிருந்தது. அவர் மிகவும் அவதிப்பட்டாள்.



பாபாவை நினைத்து அவரைப் பிடித்துக்கொள்..இந்த முறை கர்ப்பம் கலையாது என ஆறுதல் கூற, அவளும் பாபாவை பிடித்துக்கொண்டாள். மறுபடி கர்ப்பம் தரித்தாள்.. மூன்று மாதமான நிலையில் வயிற்று வலி வந்தது. டாக்டரிடம் காண்பித்த போது, நஞ்சுக் கொடி நார்மலாக இல்லை என்றும், அதிகமாக நடமாடாமல் இருக்குமாறும் கூறினார்கள்.



அவள் அழுத அழுகையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாபாவை கெட்டியாகப் பிடித்துக்கொள். நல்லவிதமாக நடக்கும் என்றேன்.



ஒருமாதம் சென்ற பிறகு மீண்டும் செக் அப் சென்றாள். போகும் போது, இந்தக் குழந்தையும் இல்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது அக்கா.. என்று கூறிவிட்டுச் சென்றாள். போய்..வா.. பாபா கூட இருக்கிறார் எனக் கூறி அனுப்பினேன். போகும்போது உங்கள் கையால் காசு கொடுங்கள் என்றாள். பாபாவை நினைத்துக் கொடுத்தேன்.



செக் அப் முடித்து வந்தவள்.. குழந்தையும் நன்றாக உள்ளது. நஞ்சுக் கொடியும் நன்றாக உள்ளதாக டாக்டர் ஆச்சரியத்துடன் கூறினார் என மகிழ்ந்தாள்.



அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது.. இன்று அக் குழந்தையின் வயது பன்னிரண்டு. குடும்பத்திலிருந்து பிரிந்துபோன ஒரு முதியவருக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சேர்ந்தார் அவர்.



நம்பியவர்களுக்கு பாபாவின் அருள் எப்போதும் உண்டு.



சாந்தி சீனிவாசன்,



காஞ்சீபுரம்

தட்சணை

DSC_0005

 

பாபா பேசும்போது, ஏதோ கதை போல் சொல்வார். உருவகப்படுத்தி சொல்வார். மேம்போக்காக குறிப்பு ஒன்று சொல்வார்.



இது எல்லோருக்கும் தெரியாது. கேட்பவருக்கு அர்த்தம் அற்றது போல் தெரியும். இதற்கு நேரடி அர்த்தமும் கொள்ளக்கூடாது. மிகவும் ஆழ்ந்து யோசித்தால்தான் தெரிய வரும்.



ஒருமுறை ஒருவர் சீரடிக்கு வந்து பாபாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். அவரிடம் ”பாபா பற்றி என்ன நினைக்கிறீர்?”  என்றேன்.



அதற்கு அவர்,  “எப்போதும் காசு பற்றியே (தட்சணை) பேசும் ஒரு ஞானியை நான் இதுவரை கண்டதேயில்லை. என்ன ஞானி இவர்? “  என அலுத்துக்கொண்டார்.



என்னைப் பொறுத்தமட்டில் பாபா காசு காசு என்று சொல்வதெல்லாம் புண்ணியத்தைப் பற்றித்தான்.



தட்சணை புண்ணியத்தைக் குறிக்கும். அகங்காரத்தை அழிக்கும். நல்ல குணத்தை வளர்க்கும். பாபாவின் மகத்துவம் எல்லோருக்கும் தெரியாது.



கு.இராமச்சந்திரன்

Sunday, May 25, 2014

உனது பக்தியே சிறந்த பக்தி!

srisai



காகா சாகேப் தீட்சிதர் தினமும் தவறாது பாகவதம் வாசித்து வந்தார். கூடியிருந்தவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



சாமாவும் காகா மகாஜனி என்ற சாயி பக்தரும் கூட இதை ஆர்வத்துடன் கேட்டனர்.



ஏகநாத பாகவதத்தின் இரண்டாவது அத்தியாயம் வாசிக்கப்பட்டது. அதில் ரிஷப குலத்தில் தோன்றியவர்களான கவி, மூரி, அந்தரிக்‌ஷர், ப்ரபுத்தர், பிப்பலாயனர், ஆவில்ஹோத்ரர், த்ரமீளர், சமஸர், கரபாஜனர் என்ற நவ யோகிகள் பற்றிய பகுதி அது.



தெய்வ ரூபிகளான அவர்கள் எல்லையற்ற பக்தியுள்ளவர்கள். இவர்கள் ஜனக மகரிஷியின் அரசவைக்கு ஒருமுறை சென்று, இறை அடியார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம் பற்றி போதனை செய்தார்கள்.



கடவுளை வணங்காதவர்கள் சர்வ நாசம் அடைவார்கள் என்றும், எந்த யுகத்திற்கு எப்படி கடவுளை வணங்க வேண்டும் என்றும் அவர்கள் ஜனகருக்கு சொல்லிக் கொடுக்க, இதை ஆச்சரியத்தோடு ஜனகர் கேட்டுக்கொண்டிருந்தார். நவயோகிகளில் கடைசியானவரான கரபாஜனர், கலியுகத்தில் ஹரி பாதத்தையும், குரு பாதத்தையும் மனத்தில் இருத்துவது ஒன்றே பிறவி பயத்தை அழிக்கும் என்று போதித்தார்.



இந்தப் பகுதியை படித்து முடித்த தீட்சிதர், சாமாவை நோக்கி, ”அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானது. மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்!  ஓ, எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவது இல்லை. புகழ் பெற்றவர்களாகிய நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாவிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன?



சத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தார் போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள். அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்கு உண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜன்மம் எடுத்து என்ன பிரயோஜனம்?”  என்று கேட்டார்.



பாபா மீது மிகவும் அன்புள்ள பக்தரான தீட்சிதர் இவ்வாறு சொல்வது சாமாவுக்குப் பிடிக்கவில்லை. சாயியைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்?



அவர் உயிரோடு இருப்பது வீண். சாயி பாதங்களில் அமோகமாக சிரத்தை இருக்கும் போது மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்?



நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாகக் கொண்டது அன்றோ? இறைவன் நாமத்தையும் குருவின் நாமத்தையும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பது பாபா உங்களுக்கு இட்ட கட்டளையல்லவா? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என்றார்.



இதைக் கேட்டு தீட்சிதர் ஆறுதல் அடைந்தார்.



நீங்கள் மற்றவர்களுடைய பக்தியைப் பார்த்தோ, நினைத்தோ கலக்கம் அடையாதீர்கள். எங்கே பக்தியுடன் பாசம் கலந்திருக்கிறதோ, அங்கே பகவான் இருக்கிறான். எங்கே சடங்காச்சாரங்களுடன் அன்பற்றத் தன்மை இருக்கிறதோ, அங்கு இறைவன் இருக்கமாட்டான்.



எனவே, இப்போதுள்ள உங்கள் பக்தியே உயர்வான பக்தி. இதுவே போதுமானது. நீங்கள் முடிந்தவரை எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக்கொண்டிருங்கள். சாயி மீது அன்பு செலுத்துங்கள். சாயியைப் போலவே மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். உங்கள் பாக்கியத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்ற அளவில் நீங்கள் உயர்வீர்கள்.

Saturday, May 24, 2014

பாபாவின் ஆசிர்வாதம் பெற…..

நான் சாய் ராம் கோயிலுக்குப் போகமுடியவில்லை..நேரமே கிடைக்கவில்லை.. பாபா மன்னித்துவிடுங்கள்..என்று வேண்டுகிற ரகமா நீங்கள்?



எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்குப் போவதை நிறுத்த மாட்டேன் என்கிறவரா நீங்கள்?



பாபா பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே தவிர, அவரை பூஜிப்பதிலோ, அவரது கோயிலுக்குச்செல்வதிலோ எனக்கு ஆர்வம் வருவதில்லை என்கிறவரா நீங்கள்?



நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விக்ஷயம்..



உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த வழியில் இறைவனை வணங்கினால் போதும். கோயிலுக்குப் போனால் நல்லது.. போகவில்லை, வீட்டில் அவரது பாடலைக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்..



சத்சரித்திரத்தை சி.டி. போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்..டி.வியில் லைவ்வாக ஆரத்தி பார்த்துக் கொண்டிருந்தேன் என எப்படி அவரை நினைத்தாலும் அவரை வழிபட்டதுதான். எந்த வழியில், என்ன முறையில் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்கிறவர் பாபா.



கண்களை  மூடி தியானிக்க வேண்டா,  ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜிக்க வேண்டா, புனித சரித்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டு பட்டும் படாமல் பாராயணம் செய்யவேண்டா..



பின்னர் என்னதான் செய்வது?



அவர்  நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருங்கள். அது போதும்.. சத்சரித்திரம் நமக்கு ஒரு வழிபாட்டை சொல்லித் தருகிறது.



”நீங்கள் உங்களது உலகக் கடமைகளை செய்து கொண்டோ, கவனித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனதை சாயிக்கும் அவரது கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்..”



சிலர்.. நானும் இப்படித்தான் செய்கிறேன்.. ஆனால் பாபாவை சமயங்களில் நினைக்கமுடியவில்லை என்கிறார்கள். இதைவிட சுலபமான வழியைச் சொல்கிறேன்..



பாபாவின் உருவப் படங்களை சுவரில் மாட்டி வைப்பது, ஸ்டிக்கர்களாக வாங்கி ஆங்காங்கே ஒட்டி வைப்பது, அவரது அருளுரைகளை எழுதி கண்ணில் படும் இடங்களிலும், கைகள் தொடும் இடங்களிலும் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அப்போது அவரது நினைவு வந்துவிடும்.



அதிகாலையில் உறங்கி எழுந்திருக்கும்போதே, பாபாவை நினைத்துக் கொண்டு எழுந்திருங்கள்.. நாள் முழுக்க அவரது நினைவு இருக்கும்.



இந்த நினைவு உங்களது எல்லா  கஷ்டங்களையும் விலக்கி சர்வ மங்களங்களைக் கொண்டு வரும்.

முழு இதயத்தோடு சரணடை!

12



பாபா சொன்னார்:  ”நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்காதீர்.  தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகா பாக்கிய சாலி.”



இந்த வார்த்தைகளை சாயிபாபா உங்களுக்காக சொன்னார்.



என்ன சாயி ராம்- ஒரு இடத்தில் நாமஸ்மரணம் செய்யுங்கள் எனக்கூறுகிறீர்கள். இன்னொரு இடத்தில் அது கூட தேவையில்லை, பக்தி செய்ய வேண்டாம், சடங்குடன் வழிபட வேண்டாம் என்கிறீர்கள்..எதைச் செய்வது? எதை ஏற்றுக்கொள்வது? குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா!  நாம் செய்கிற பக்தி முழுமையானதுதானா? வழிபாட்டை பாபா ஏற்றுக்கொள்கிறாரா? என்று சந்தேகப்படலாம்.



கொஞ்ச நேரம் அவரது நாமத்தை சொல்கிறேன், உடனே மனம் வேறு ஒரு எண்ணத்தை நோக்கிச் சென்றுவிடுவதால் கவனம் சிதைகிறது.  ஒருமையான மன உணர்வு இல்லாமல் இறைவனை மன உணர்வு இல்லாமல் இறைவனை அடைய முடியாது என்பது எனக்கே தெரிவதால், நான் திகைக்கிறேன்.



மாதக் கணக்கில் எனக்கு இந்தப்பிரச்சினை உள்ளது என்று நினைப்பவர்களுக்குக் கூட எளிமையான வழியை சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயம் சொல்லித்தருகிறது.



நீங்கள் ஒரு ஞானியை சரணடைந்துவிடுங்கள். அப்போது மேற்சொன்ன பக்தி, வழிபாடு, நாமஸ்மரணம் ஆகியவை செய்த பலன் கிடைக்கும்.



நீங்கள் ஒரு மகானைச் சென்று சந்திப்பது என்பது, நீங்களாக எடுத்த முடிவு அல்ல. கடவுளின் அருளாகும். கடவுள் உங்களுக்கு நன்மை செய்யத் தீர்மானித்து விட்டால், உடனடியாக ஒரு அடியாரின் நினைவை உண்டாக்கி, அவரைப் போய் பார். உன் பிரச்சினை சரியாகும் அல்லது உனக்குத் தெளிவு கிடைக்கும் என மனதில் எண்ணத்தை தருவார். இப்படி கடவுள் அனுப்பிய பிறகுதான் நாம் ஒருவரைச் சென்று தரிசிக்க முடியும்.



சத்சரித்திரம் குறிப்பிடுகிற ஞானிகள் என்பவர்கள் என்னைப்போன்று பக்தியைப் பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் கிடையாது. நாங்கள் யாரைப் பற்றி கூறுகிறோமோ அவர்கள்...



நான் சாயியைப் பற்றிக் கூறுகிறேன்.. என் நண்பர் பகவான் ரமணரைப் பற்றிக் கூறுவார். இன்னொருவர் மந்த்ராலய மகான் பற்றி சொல்வார். வேறு ஒருவர் பகவான் ராமகிருஷ்ணரைச் சுட்டிக்காட்டுவார்.. விவேகானந்தரைக்காட்டுவார். இவர்கள்தான் மகான்கள், ஞானிகள் என சொல்லப்பட தகுதியானவர்கள்.



நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இவர்தான் பாபா என ஓடி வருகிறீர்கள். காசிலியில் இருந்து சுப்ரமண்யம் சுவாமி கூப்பிட்டால் அவரை தரிசிக்க வேண்டும் என ஓடுகிறீர்கள்..இது தவறு..



என்னிடம் சரணாகதி அடைந்தால், என் சொத்துக்களை எழுதிக்கொடுத்துவிடுவேனா, என்ன? நீங்கள் பட்ட கடனை நான் அடைத்துவிடுவேனா? செய்யமாட்டேன். காசிலி சுவாமி செய்வாரா? யார் ஒருவர் தனது பக்தர் நலனுக்காகத் தியாகம் செய்யாமல் இருக்கிறாரோ அவர் ஞானியல்ல. யார் ஒருவர் தன் பக்தனுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறாரோ அவரே ஞானி. அவர் லட்சத்தில் ஒருவராக -  கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.



தற்போது உள்ளவர்களில் அவர்களை அடையாளம் காண்பது கடினம். அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் வரும்போது நாம் இவரையா நம்பினோம் என நினைத்து வருந்துவோம்.இந்த மாதிரி நிகழக்கூடாது என்பதற்காகத்தான் அப்பழுக்கற்ற மகான்களை இறைவன் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறான்.



நாம் சாயி பக்தர்கள். இறைவன் நமக்கு சாயி என்ற ஞானியை - குருவை நமது வழித்துணையாக அனுப்பியிருக்கிறான்.அவர் என்ன சொல்கிறார்..



உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்க வேண்டாம்..என்கிறார். இப்படிப்பட்ட நினைப்பு, உறுதி எப்போது வரும். அவரை முழுமையாக நம்பினால்தானே வரும்?



அப்படி முழுமையாக நம்புவதற்குத் தயாராகுங்கள் என்றுதான் சொல்லித் தருகிறேன்…எனக்கு சாயியை பிடிக்காது, ராகவேந்திரரை வழிபடுவேன்.. ரமணரைத் தான் கும்பிடுவேன்...இப்படி எதைச் சொன்னாலும் சரி.. அதை மட்டும் செய்யுங்கள்.ஒருவரை தாழ்த்தி, இன்னொரு மகான் பற்றி உயர்த்திப் பேசிட வேண்டாம்.



எங்கள் வீட்டில் எல்லோரது போட்டோவையும் மாட்டி வைத்திருக்கிறேன்.. அவர்களை கும்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வேன் என தத்துவம் பேசாதீர்கள்.யாரேனும் ஒருவரை பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு பெயரை உங்களுடைய மந்திரமாக ஏற்று அதை உச்சரிக்க ஆரம்பியுங்கள்.



ஒருவரை மட்டும் குருவாக ஏற்றுக்கொண்டு முழுமையாக சரண் அடையுங்கள். அப்போது உங்களுக்கு அனைத்தும் சித்தியாகும்.ஒருவரை பிடித்துக்கொண்டு மற்றவரை எப்படி தள்ள முடியும்? அவரும் மகான்தானே என்ற இன்னொரு கேள்வி எழும்பும்.



உனது பார்வைக்கும், சிந்தனைக்கும்தான் அவர்கள் வேறு வேறு பெயர் உள்ள மகான்களாகத்தெரிகிறார்கள். உண்மையில் அவர்கள் தனித்தனியானவர்கள் கிடையாது. ஒரே இறைவன் பல ரூபங்களில் -  பல பெயர்களில் உங்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி வந்திருக்கிறான்.



தகுதிக்கு ஏற்ப பலன் தருவதற்காக எளிய வழியை போதித்து, தன்னிடம் சேர்த்துக்கொள்ள, அவன் இப்படி பல ரூபங்களில் வருகிறான் என்பதை உணருங்கள்.



நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். காரணம், உங்களைப் போல நானும் ஒரு பக்தன். இறைவன் மகான்கள் வடிவில் அமர்ந்து தன்னை நாடி வருவோருக்கு நன்மை செய்கிறான்.அவன் எதிர்பார்ப்பது உங்களிடம் முழுமையான சரணாகதி.



இதைச் செய்வதற்கு தைரியம் தேவை. இந்த தைரியம்,  நம்பிக்கை இருந்தால்தான் வரும். நம்பிக்கை என்பது ஒரே நாளில் வராது.. பொறுமையோடு காத்திருந்தால்தான் வரும்..இதை வைத்துக்கொண்டு செயல்படுங்கள், அனைத்திலும் ஜெயித்தவர்கள் ஆவீர்கள்.



ஜெய் சாய் ராம்.;. 

Friday, May 23, 2014

என்னை நம்பினால் 100 சதவீத வெற்றி கிடைக்கும்!

Image

என் பெயர் அருள் ஜோதி. எனது கணவர் ரவிச்சந்திரன். எங்களுக்கு ஜெயஸ்ரீ மற்றும் நித்யஸ்ரீ_ என்று இரண்டு மகள்கள். எங்கள் நண்பர்கள் மூலம் பாபாவின் பெருமையை கேள்விப்பட்டு, அவரை  வணங்க ஆரம்பித்தோம்.



எனது கணவர் டிப்ளமோ முடித்திருந்தார். பார்ட்டைம் பி.ஈ, படிப்பில் சேர முயற்சித்து வந்தார். அதற்கு பல தடங்கல்கள் இருந்தன. கம்பெனியில் வேலைப்பளு மற்றும் பார்ட் டைம் பி.ஈக்கான போட்டி ஆகியவற்றால் அது தள்ளிப் போனது.



நடக்கிற அனைத்திற்கும் பாபாவே பொறுப்பு என மனதில் திண்ணமாக நினைத்துக்கொண்டு தீவிரமாக முயற்சி செய்தோம். சத்ய பாமா பல்கலைக் கழகத்தில் சீட் கிடைத்தது.



சீட் கிடைத்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் என் கணவருக்கு வேலை போய்விட்டது. இது பாபாவின் சோதனைதான் என உணர்ந்து அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டுவிட்டோம்.



நடக்கிற அனைத்தையும் அனுபவிப்போம் என நினைத்து பாபாவை தியானிக்க ஆரம்பித்தேன். சில நாட்களுக்குள் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அது மட்டுமல்ல, எனது கணவருடைய நெருங்கிய நண்பர் வந்து, தான் நடத்தி வந்த தொழிலை ஏற்று நடத்துமாறு எனது கணவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.



தொழிலில் ஆரம்பத்தில் அனுபவமின்மை காரணமாக சில தோல்விகளும், உறவினர்களை நம்பியதால் சில இழப்புகளும் ஏற்பட்டன.



ஒவ்வாரு முறையும் பாபா எங்களை காப்பாற்றி வழி நடத்திச் சென்றார். இப்போது தடைகள் அனைத்தையும் கடந்து நல்ல நிலையில் எங்கள் தொழில் நடந்துகொண்டிருக்கிறது.



என் கணவருக்கு பி.ஈ சீட் கிடைத்தபிறகு ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக, மீண்டும் புதிய கம்பெனியில் சேர்ந்த பிறகு, தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே நிறைய நேரங்களை அவர் செலவிட வேண்டியிருந்தது. இதனால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.



இதனால் அவரது ஆறாவது செமஸ்டரில் மூன்று செமஸ்டர் பேப்பர் முழுவதும் சேர்த்து எழுத வேண்டிய கட்டாயம். அனைத்தையும் பாபாவிடம் ஒப்படைத்து விட்டு கடினமாக உழைக்க எனது கணவருக்கு உறு துணையாக இருந்தேன்.



என்ன ஆச்சர்யம்!  அனைத்து பேப்பரிலும் வெற்றி என கணவர் சொன்னபோது, கண்கள் ஆனந்த கண்ணீரை  வடித்தது. வாரக் கடைசி மற்றும் சனிக்கிழமை விடுப்பு என கம்பெனியில் எனது கணவர் நிறைய விடுப்பு எடுத்ததால் எங்களால் சீரடி வர இயலவில்லை.



பிஈ முடிந்ததும் சீரடி வருவதாக பாபாவிடம் சொல்லியிருந்தேன். அதன்படி டிசம்பர் 13 - ல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்தது. ஜனவரி 22 – ம் தேதியில் செல்ல முன் பதிவு செய்திருந்தேன்.



என்னை பார்க்கும்போது பி.ஈ டிகிரி வாங்கியிருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல, 18 – ம் தேதியே  தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நூறு சதவிகித வெற்றியுடன் அவரை தரிசிக்கச் சென்றேhம்.



 அருள்ஜோதி ரவிச்சந்திரன்,



மடிப்பாக்கம், சென்னை -  91

எங்கும் நிறைந்தவர் பாபா!

ac821-sridisaibaba



பாபா இந்த பூலோகத்தில் மட்டுமல்ல, மற்ற உலகத்திற்கும், பூலோகத்தில் வெகு தூரத்திற்கும் சென்று வந்துள்ளார். காலை வேளையில் துனியிடம் அமர்ந்திருக்கும்போது, மற்ற பக்தர்களிடம் நேற்று இரவு, தான் எங்கெங்கு சென்றேன், என்ன செய்தேன் என்பது பற்றி சொல்வார். ஆனால் மசூதியிலும் சாவடியிலும் அவரோடு தூங்கியவர்கள் இரவு முழுவதும் பாபா அங்கேயே தூங்கினார் என்பார்கள்.



அந்தந்த இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை, பாபாவுடைய பேச்சுடன் வைத்து சோதித்துப் பார்த்தால் பாபா சொல்வது சரியாக இருக்கும்.



ஒருநாள் சீரடியில் மார்வாடி ஒருவரின் மகன் இறந்து விட்டான். ஈமச்சடங்கு முடித்துவிட்டு சோகத்துடன் மசூதிக்கு வந்தனர். அப்போது பாபா அந்தப் பையன் நதிக்கு அருகில் செல்கிறான், நதியைக் கடந்து விட்டான் என்றார். அவர் குறிப்பிட்டது, நரகத்தின் பக்கத்திலுள்ள வைதாரணி நதியைத்தான்.



பாபா, பக்தர்கள் சூழ்ந்திருக்கும்போது யாராவது ஒருவருக்கான செய்தியைச் சொல்வார். மற்றவருக்குப்புரியாது. ஆனால், யாருக்காக சொல்கிறாரோ அவருக்குத்தெரிந்துவிடும். அப்படித்தான் எனது நான்கு முந்தைய பிறவி பற்றியும், அதில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் கூறினார். எனக்கு மட்டுமே புரிந்தது. அவருடைய சொல்லும் செயலும் நிறைய பேருக்கு நன்மையையே செய்தது.



திடீரென்று என்னிடம், ”நீ எங்கே இருக்கிறாய்?  நான் எங்கே இருக்கிறேன்? இந்த உலகம் எங்கே உள்ளது ” எனக் கேட்பார். சில சமயம், தனது உடலைக் காட்டி, “இதுதான் எனது வீடு. நான் இங்கு இல்லை. எனது குரு மௌர்ஷாத் என்னை எடுத்துச் சென்று விட்டார்” என்பார்.



பெரும் உண்மை என்னவென்றால், சாய் பாபா இன்றும் வாழ்கிறார். அன்று எங்கிருந்தாரோ, இன்றும் அங்கே வாழ்கிறார். அன்றும் வாழ்ந்தார், இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். இவ்வுலகிலும் மற்ற உலகிலும் தனது செயல்பாடு என்ன.. தான் இறந்து போன ஆன்மாவின் விதியை எப்படி கட்டுப்படுத்தினேன் எனக் கூறுவார்.



பாபாவின் வார்த்தைகள் என்றும் பொய்த்தது இல்லை. புரியாத -  அர்த்தமற்ற வார்த்தைகளையும் பேசியதில்லை. இது எல்லோருக்கும் புரியாது, நான் புரிந்துகொண்டேன்.





கு.இராமச்சந்திரன்

Thursday, May 22, 2014

குருவை எப்போது நினைக்க வேண்டும்?

Image

உடல் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருக்கும் போது எப்போதும் குருவை தியானிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.



வயதாகி, நோய்கள் வந்து, பலம் இழந்து பிறரால் கைவிடப்பட்டு நினைவு தடுமாறி, படுக்கையில் விழுந்துகிடக்கிற நேரத்தில் கடவுளை நினைக்க முடியாது. எனவே, இன்றே, இப்போதே குருவை -  கடவுளை தேர்வு செய்யவேண்டிய நேரம். அதை செய்யுங்கள்.

நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்!

birthday



நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்! என்று சத்சரித்திரம் 33 - வது அத்தியாயம் கூறுகிறது. நம்பிக்கை இல்லாமல் கடவுளிடம் அற்புதங்களை பெற நினைப்பது வியர்த்தம், வீணான முயற்சி. அசைக்க முடியாத நம்பிக்கையிருந்தால் அனைத்து விசயங்களும் நம் வசமாகிவிடும்.



பாபாவின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவை மனதில் அழியாத சுவடுகளை பதிக்கும். இந்த அற்புதங்களை நாம் சொந்தமாக்கிட, பாபா ஒரு சாதனத்தை நமக்காகக் கொடுத்திருக்கிறhர்.



அதுதான் அவரது யோக சக்தியால் உருவான துனியிலிருந்து வந்து கொண்டிருக்கிற உதி.  இந்த உதி அனைத்து விக்ஷயங்களையும் நமக்கு சாதகமாக்கிக்கொடுக்கும்.



மந்திரமாவது நீறு என்பார் சம்பந்தப் பெருமான். வல்வினை போக்குவதும், மந்திரமாவதும், நமது வேலைகளை முன் வந்து செயல்படுத்துவதும், அனைத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுவதும் இந்த உதியே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.



பாபாவின் உதி கிடைக்கவில்லை. என்ன செய்வது?



பயப்படவேண்டாம். எதை உதியாக  நம்பிப்  பயன் படுத்தினாலும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. நாசிக் நகரத்தைச் சேர்ந்த ஜனீ என்ற சாயி பக்தர் பாபாவின் அற்புதங்களை நிறைய அனுபவித்தவர்.



ஒருமுறை இவரது  நண்பரை  தேள் கொட்டிவிட்டது.  நண்பர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். ஜனீக்கு உதி கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கி பிரார்த்தனை செய்தார். படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருப்பதை பார்த்தார். அதை உதியாக நினைத்து, ஒரு சிட்டிகை எடுத்து, தேள் கொட்டிய இடத்தில் சாயி நாம மந்திரத்தைச் சொன்னபடியே தடவினார்.



கொட்டுவாயில் சாம்பலைப் பூசிய உடனே, வலியும், வேதனையும் மறைந்தன. கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நம்பிக்கை எப்படியோ, அப்படியே அனுபவம். நம்பியவருக்கு நடராஜா.



சாமா ஒருமுறை கல்யாண் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் தெரிவிக்குமாறு பாந்த்ராவாசி ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார். தகவல் இதுதான்: ”வேறு கிராமத்தில் வசிக்கிற தனது மகள் பிளேக் நோயாலும், காய்ச்சலாலும் அவதிப்படுகிறார். பாபாவிடம் பிரார்த்தனை செய்து இந்தக் கவலையில் இருந்து விடுதலை செய்யவேண்டும்…”



செய்தியைக் கொண்டு போனவர் நானாவை வழியில் தாணே ரயில் நிலையம் அருகில் சந்தித்தார். சாலையில் நின்றவாறே, சாயியை மன்றாடிப் பிரார்த்தித்து, சாலையின் புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்து, தன் மனைவியின் நெற்றியில் இட்டார். பிறகு சென்றுவிட்டார்.



பாந்த்ராவாசி, தன் மகளைப் பார்க்கச் சென்றார். மூன்று நாட்களாக இருந்த கடுமையான காய்ச்சல், தந்தையார்  சென்ற  நாளுக்கு முன்நாள் தான் குறைய  ஆரம்பித்தது என்று தெரிய வந்தது.



பாந்த்ரா வாசி, பின்னோக்கி யோசித்துப் பார்த்தார். அது, நானா தனது மனைவியின் நெற்றியில் புழுதி மண்ணைப் பூசிய நேரத்திலிருந்துதான் அற்புதம் ஆரம்பித்தது என்பது புரிந்தது.



நம்பிக்கை எப்படியோ அனுபவம் அப்படியே பாபா, நானாவுக்கு மட்டும் கடவுள் அல்ல, உங்களுக்கும் கடவுள். அவர்  இப்போதும், எப்போதும் உயிரோடு வாழ்கிற -  உங்களுக்காக வாழ்கிற கடவுள். அவரிடம் அற்புதத்தைக் கேட்டுப் பெறலாம்.

Wednesday, May 21, 2014

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபா -      ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி

அவர் அமர்ந்துள்ள சிம்மாசனம்-      சாந்தி

இரண்டு சாமரங்கள்-     அபேத பக்தி, சகஜ சமாதி

இரண்டு விசிறிகள் - ஆத்மானுபூதி, கைமேல் பலன்

தலைக்கு மேலுள்ள குடை - ஆத்மானுபூதியில் லயித்து இருத்தல்

கட்டியக்காரர் கையிலுள்ள கோல்கள் - சாந்தி, நல்லுணர்வு, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள்- அரசவைப் புலவர்கள்.

அவருக்குப் பின்னால் இருக்கும் பிரபை- சுத்த ஞானத்தின் ஒளி. பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், திரும்பத் திரும்பச் செய்யப்படுகிற தியானம், இறை தரிசனம்-எட்டுப் பிரதான மந்திரிகள்

கழுத்தில் அணியும் மாலைகள் - சாந்தியும், புலன் அடக்கமும்

அவரது பேச்சு- வேதாந்தக் கடல்.

பாபாவின் வார்த்தைகளின் அர்த்தம்

DSC_0005



1914ல் மூர்தாவிலிருந்து காச நோயால் அவதிப்பட்ட ஒரு பணக்கார முதியவர் சீரடி வந்தார். சீரடியில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம். ஆகவே, சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார். இரண்டாம் மாதம் முடிவில் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.



இதைக் கண்ட அவர் வீட்டார், என்னிடம் பாபாவிடம் சென்று உதி வாங்கி வரச் சொன்னார்கள். நானும் பாபாவிடம் கேட்டேன்.  “உதி என்ன செய்யும்? அவன் இந்த உலகை விட்டு செல்வதே நல்லது. சரி, உதி எடுத்துச் செல்!”  என்றார் பாபா. நானும் அவ்வீட்டில் உதியைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், பாபா சொன்னதைச்  சொல்லவில்லை.



ஷாமா பாபாவிடம் வந்து, முதியவர் இறந்து விட்டதைக் கூறினார். உடனே பாபா, அவன் எப்படி இறக்க முடியும்? காலையில் உயிர் பிழைப்பான் என்றார். இதைக் கேட்ட உறவினர்கள் -  முதியவரின் உடலைச்சுற்றி விளக்கேற்றி வைத்தனர். மதியம் வரை பிழைக்கவில்லை. பின் அடக்கம் செய்தனர்.



பாபா பொய் கூறிவிட்டதாக கோபம் கொண்டு உறவினர்கள் குடும்பத்தோடு மூர்தா சென்று விட்டார்கள். மூன்று ஆண்டுகள் சீரடிக்கு வரவேயில்லை.



ஒருநாள் இரவு முதியவரின் உறவினர் கனவு கண்டார். இறந்த முதியவரின் தலையோடு பாபா தோன்றினார். நுரையீரலைத் திறந்து காட்டினார். அழுகியிருந்தது.



”இந்த கொடுமையிலிருந்து நான் அவனை காப்பாற்றினேன்” என்றார் பாபா. பின் அவர்கள் சீரடிக்கு வரஆரம்பித்தனர்.



அவன் எப்படி இறப்பான்? காலையில் பிழைத்துக்கொள்வான் என்பதை தவறாகப் புரிந்துகொண்டனர். அந்த முதியவர் காலையில் மறுபிறவி எடுத்துவிடுவார் என்பதைத்தான் பாபா இப்படி கூறினார். ஆகவே, பாபாவின் எந்த வார்த்தையையும் சரியாக உள்வாங்கி அர்த்தம் காண வேண்டும்.  



கு.இராமச்சந்திரன்

Tuesday, May 20, 2014

குருவை எந்நேரமும் நினைக்கவேண்டும்.

25121



நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால்  குருவைஎந்நேரமும்நினைக்கவேண்டும்.



அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும்.  குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது.



சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.



என் பிரச்சினை இப்படியிருக்கிறது... குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை.



குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.



அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.

பாபா தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார்!

Image

பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவரவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார்.



மனமும் புத்தியும் புலன் உறுப்புகளும் உலக இன்பங்களைத் துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக. இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்கு உரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும். இதைத் தடுக்க இயலாது.



ஆனால், அந்நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.



புலன் இன்பம் துய்க்க வேண்டும் என்கிற சிறிய ஆசை தோன்றும்போதே, பாபா நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம், அந்த இன்பம் துய்ப்பதற்குத் தகுதியுடையதா, தகுதியற்றதா என்கிற கேள்வியை மனத்தில் எழுப்பும்.



தகுதியற்றதும் பொருந்தாததுமான உலக விசயம் சகஜமாகவே நிராகரிக்கப்படும். கெட்ட பழக்கம் உள்ளவன் அதிலிருந்து விடுபடுகிறான். நன்மை அளிக்காத விசய சுகங்களில் இருந்து திரும்பத்திரும்ப வெளியேறும் பயிற்சியினால், மனம் தனக்கு ஒவ்வாத உலக விசயங்களையும் சுகங்களையும் வெறுக்க ஆரம்பிக்கும்.



 



சத்சரித்திரம் - அத்தியாயம் 24

Monday, May 19, 2014

மாறாத நம்பிக்கை!

baba



மனதில் இறைவன் அல்லது குருவின் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவரை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.



எந்த பிரச்சினையாக இருந்தாலும் தெய்வம் அல்லது குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால், நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். இவ்வளவு படித்தும் கஷ்டம் போகவில்லையே என புலம்புவதும் அறிவீனம். கடவுள் மீது என்றும் மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.

என்னிடம் சரணடை!

12



அணுவளவும் நான் எனது என்ற உணர்வின்றி உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்து விடும். உடனே உம்மிடமிருந்து அறியாமை -  மாயை விலகும். சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.



நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்கவருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ஆகவே, பிரசாசை ஏதும் இன்றியே உம்மை சந்திப்பேன்.



நீர் கேட்கலாம், யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய அடையாளங்கள் யாவை? எந்தச் சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காண முடியும் என்று? இப்பொழுது யாரிடம் சென்றுசரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பன பற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும்.



இந்த சிருஷ்டி நானாவிதமமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்க முடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள். அது போலவே, சத்துவம் ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளுணர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ அப்பொருளின் உருவத்தையே உமது இதய வாசியாக அறிவீராக.



பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முள் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியாகிய இறைவனின் அடையாளம். இதை அறிந்து அவனிடம் சரணடைவீராக.



நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளது அனைத்தும் உமது குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது. இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், நான் எங்கும் வியாபித்து இருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பினனர் நீர் என்னில் கலந்து விடுவீர். அன்னியம் என்று ஒன்றில்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.



சத்சரித்திரம் - அத்தியாயம் 44

Sunday, May 18, 2014

பல தேவதைகள் மாயை!

25124

நாம் பல தெய்வ வழிபாடு உள்ளவர்கள். இதை விவேகானந்தர்  மறுத்திருக்கிறார். பல பெயர்களில் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்றார் அவர்.

கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் ஒவ்வொரு ஒரு தனிக்கடவுளாக கும்பிடுகிறோம். அவன் நம் மீது கருணையும், பாசமும், பரிவும் உள்ளவன். வெண்ணையை விட மென்மையானவன் என்பதால் அவனை தாயுமானவன் என்கிறோம்.

அம்பாளாக வழிபடுகிறோம். எங்கும் நிறைந்தவன் என்பதால் விஷ்ணுவாக கும்பிடுகிறோம். அவனே படைக்கிறவன் என்பதால் பிரம்மாவாக வழிபடுகிறோம். எதற்கும் முதன்மையானவன் என்பதால் விநாயகராக,  வெற்றியைத் தருவதால் முருகனாக,  செல்வத்தைத் தருவதால் லட்சுமியாக, கல்வியைத் தருவதால் சரஸ்வதியாக வழிபடுகிறோம்.



இறைவனை பெண்ணாக பாவித்து வழிபடுவதன் நோக்கம்.. பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை குணம் அதிகம்..



இரக்க சுபாவம் அதிகம்.. கடுமை முகம் காட்டுவது குறைவு. நம்பினால் உயிரையும் தரும் இயல்பு பெண்ணுக்கு மட்டுமே அதிகம் உண்டு.



எனவே, சுலபமாக அன்பைப்பெறுவதற்காக இறைவனை பெண்ணாக பாவித்து வணங்குகிறோம்.

எனது தலையில் ஏற்றிக்கொள்கிறேன்!

20143



என்னிடம் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாது சரணடைந்து என்னையே எப்போதும் எவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ, அவரது கடனை எனது தலையில் ஏற்றிக்கொள்கிறேன்.



அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனைத் திருப்பிச் செலுத்துகிறேன். எவர் எனக்கு முதலில் சமர்ப்பணம் செய்யாமல் உணவு உண்பதில்லையோ - பானங்கள் அருந்துவது இல்லையோ, எவர் என்னை திரும்பத் திரும்ப நினைக்கிறாரோ, அவருடைய வசத்தில் நான் வாழ்கிறேன்.



எவர் எனக்குப் பின்னரே  பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, அவரையே நான் எப்போதும் தியானத்தில் வைக்கிறேன். நான் அவருடைய வசத்தில் வாழ்கிறேன்.

Saturday, May 17, 2014

விவேக விளக்கு!

Image

நன்கு விளக்கு ஏற்றி வைக்கப்படாத வீடு வறுமைக்கு அறிகுறியாகும். யாருடைய உள்ளத்தில் விவேக விளக்கு ஏற்றி வைக்கப்படவில்லையோ, அவன் அருள் துறையில் வறியவன் ஆவான். தடை தாண்டாத ஆறு கடல் சேர்வதில்லை. சோர்ந்து போகிற மனிதன் இறைவனை அடைவதில்லை.

பாபாவின் போதனைகள்!

25125

யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.

அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார். நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும், எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.

இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டை யுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாகக் காத்திருக்கிறேன்.

Friday, May 16, 2014

மகான்களுடன் தொடர்பு கொள்!

Image





நாம் நம் வயது ஒத்தவர்களுடன் பேசுவதை வெட்டிப் பேச்சு, அரட்டை என்கிறோம். தொழில் ரீதியாகவோ, திரளான மக்களுடன் பேசுவதையோ கூட்டம் என்கிறோம். கலந்து பேசி விவாதிப்பதை விவாதம் என்கிறோம்.
மகான்கள் அல்லது பக்தர்களுடன் இருப்பதையும், இறைவனைப் பற்றிப் பேசுவதையும் சத்சங்கம் என்கிறோம். ஒருவர் வாழ்க்கை மேம்படுவதற்கு சத்சங்கம் மிகவும் அவசியமாகும்.
தெரிந்து நாடினாலும், தெரியாமல் தற்செயலாக வாய்த்தாலும், அதன் நற்பயன் நிச்சயமாகக் கிடைத்து விடும். தெரிந்து நாடும்போது, வலிமையோடு விரைந்து பலன் கிடைக்கும். தெரியாமல் நாடும் போது, காலம் பழுத்தால் பலன் கிடைக்கும்.
சத்சங்கத்தை விரும்பினாலும், விரும்பாமல் போனாலும் அதனுடைய பலன் நிச்சயமாகக் கிடைத்துவிடும்.
இதனால்தான் மகான்களை தரிசிக்கவும், அவர்கள் வாய் வார்த்தைகளை கேட்கவும் முற்காலத்து மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
நல்லவரோ, கெட்டவரோ அனைவரின் இதயத்தினுள்ளும் இறைவன் வாழ்கிறான். ஆனால், சாதுக்களிடம் மட்டும் அவன் செயல்படுகிறான். பிரகாசமாக ஜொலிக்கிறான். அந்த பிரகாசத்தில் நாம் நனையும்போது, நாமும் பிரகாசிப்போம். வெளிச்சத்தில் இருக்கிறவன் தடுமாறமாட்டான். இருட்டோ தடுமாறச் செய்து இடற வைக்கும்.
ஒருவன் எல்லாவற்றையும் அடைய முடியும். ஆனால் சாதுக்களின் தொடர்பை எளிதில் பெற்று விட முடியாது. அது பகவானின் கிருபை இருந்தால் மட்டுமே முடியும்.அதனுடைய பலன் ஒருகாலும் வீணாகாமல் நிகழக்கூடியது என்கிறது நாரத பக்தி சூத்திரம். எல்லாவற்றிலும் மேலானது பெரியார்களாகிய சாதுக்களை சார்ந்து வாழுதல் என்கிறது திருக்குறள்.
கங்கை பாவத்தைப் போக்கும், முழு நிலவு உஷ்ணத்தைப் போக்கும், கற்பகத் தரு வறுமையைப் போக்கும். ஆனால் சாதுக்களின் சேர்க்கை பாவம், தாபம், வறுமை மூன்றையும் போக்கும். இதனால் தான் இறைவனுக்கு சேவை செய்ய முடியாது என நினைப்பவர்கள் அவரது அடியாருக்கு சேவை செய்வதை பாக்கியமாகக் கருதினார்கள்.
பாபாவின் தர்பார் சத்சங்கம் மிகுந்த இடம். இதனால் மக்கள் பெரிய முயற்சி இல்லாமலேயே பரமார்த்திகத்தை அடைந்தார்கள். அதேபோல, சத்சங்கம் நடக்கிற இடங்களில் மக்கள் பிரச்சினை நீங்கியவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது சத்சங்கம் என்பது ஏதோ ஒரு ஆன்மீக சொற்பொழிவு என்பது போலாகிவிட்டது. இதனால் பலன் கிடைப்பது மிகவும் குறைவு. ஒரு குழந்தைக்கு தாய் எப்படி சின்னச் சின்ன விஷயங்களையும் தெளிவு படுத்திச் சொல்வாளோ அப்படி சிறுசிறு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கூறுவதுதான் உண்மையான சத்சங்கம்.
இப்படிப்பட்ட சாதுக்களை அணுகும்போது பணிவாலும், பரிவு மிகுந்த கேள்வியாலும், சேவையாலும் சேவித்து ஞானத்தை அடையவேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.
நாங்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தைப் பற்றி கேள்விப்பட்டு சென்றபோது, பிரார்த்தனை மட்டுமே நடக்கும் என நினைத்தோம். ஆனால், அங்கே, சத்சரித விளக்கம், மக்களுடன் கலந்து பேசுகிற சத்சங்கம் போன்றவை நடப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டோம்.
வெறும் பிரார்த்தனை என்பது உணர்ச்சி இல்லாத நிகழ்வு. இதனால் பலன் கிடைக்காது. மனங்களை இணைத்து நடத்துகிற பிரார்த்தனைக்கு நிச்சயமான பலன்கள் உண்டு. இதை உணர்ந்து, சாயி வரதராஜன் பிரார்த்தனைகளை அற்புதமாகச் செய்கிறார்.
பல ஆண்டுகள் முடியாத பிரச்சினைகள் கூட முடிவுக்கு வந்ததாக, வேண்டுதல் நிறைவேறியதாக மக்கள் கூறுவதும், இறைவனை எப்படியெல்லாம் அணுகலாம் எனக் கேட்டுத் தெளிவு பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள் அங்கு நடப்பதால்தான், அந்த இடம் மிகப்பெரிய அளவுக்குப் புகழ்பெற்றிருக்கிறது என்பது தெரியவந்தது.
நாங்கள் சாயி வரதராஜனிடம் பேசும்போது, அவருக்கு ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் முழுமையான ஞானம் கிடையாது என்பது தெரிய வந்தது. ஆனால், எப்படி இவருக்கு இந்த அருள் சித்தியானது? எனக் கேட்டால், பகவான் மீது வைக்கிற நம்பிக்கையும், தனது உள்ளத்திலிருந்து எழுந்து வருகிற நாமஸ்மரணையுமே இதற்குக்காரணம் என்றார் அவர்.
மிகப்பெரிய அடியார்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களிடம் கூட காணமுடியாத அற்புத ஆற்றல் அவருடைய உடலில் இருந்து இடம் பெயர்வதை உணர முடிந்தது. அவரது கைகளை பிடித்தபோது, அதிலிருந்து வெளிப்பட்டு என் உடலில் ஏறிய அதிர்வலைகள் சற்று திகைக்க வைத்தது.
இதனால்தான் அவர் கைகளைத் தொட்டு ஆசி கூறி தருகிற உதியும், அவர் கை வைத்து ஆசீர்வதிக்கிறவர்களின் நிலையும் நல்ல பலன் தருகிறது என்பது புரிந்தது. இந்த நிலை சாதாரணமாக வராது.
வித்யா போன்ற உபாசனைகள் முடித்தவர்களும், ரெய்கி போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் பெற்ற அரிதான சக்தி, ஒரு பாமரனிடம் இருக்கிறது என்பது பெரிய விக்ஷயம்.
இதை அறிந்தோ, அறியாமலோ, எப்படியோ அங்கு சென்று பலன் பெறுகிறார்கள் மக்கள். இதற்கெல்லாம் பாபாவின் பேரருளே காரணம். இவர் போன்று இன்னும் பலர் ஆன்மீகத்தில் இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு பலன்பெற வேண்டும். இதற்கு அவர்களோடு சத்சங்கம் செய்வது அவசியம். சத்சங்கத்தின் பலன் பற்றி ஒரு கதை உண்டு.
நாரதர் ஒருமுறை கிருஷ்ணனிடம் சத்சங்கத்தின் மேன்மை என்ன எனக் கேட்டார். அதற்கு பகவான், கிழக்கு திசையை நோக்கிச் சென்றால், ஒரு குப்பை மேடு உள்ளது. அங்கேயுள்ள சாணிப் புழுவிடம் உங்கள் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
நாரதர், அந்த இடத்தைஅடைந்து, புழுவைக்கண்டு, கேள்வியைக் கேட்டதும், புழு துடிதுடித்து இறந்துபோனது. அதிர்ந்துபோன நாரதர் விக்ஷயத்தை பகவானிடம் கூறினார். வடக்கு திசையில் பாழடைந்த கோயில் ஒன்றுள்ளது. அங்குள்ள புறாவிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
புறாவிடம் சத்சங்க மேன்மை பற்றி கேள்வி கேட்டார். புறாவும் இறந்தது. மீண்டும் பகவானிடம் வந்தார் நாரதர். இந்த முறை மேற்கு திசைக்கு அனுப்பி, ஒரு கன்று பிறந்திருக்கிறது. அதனிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
நாரதர் சென்று கன்றிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதும், கன்றுஇறந்துபோனது. நாரதர் வருத்தத்துடன் பகவானிடம் வந்தார்.
பகவான், நாரதரே வருத்தப்படாதீர்கள். தெற்கு திசையில் ஓர் அரசன் இருக்கிறான், அவனுக்கு இன்று ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் கேட்டால் சந்தேகம் தீரும் என்றார்.
நாரதர் பயந்துபோனார். குழந்தையும் இறந்து போனால், அரச தண்டனைக்கு ஆளாக நேரிடும் என வருந்தினார். பகவான், அவரைத்தேற்றி இந்த முறை அப்படி எதுவும் நடக்காது என அனுப்பி வைத்தார்.
நாரதர், அந்தக் குழந்தையிடம் வந்து, “குழந்தாய்! சத்சங்கத்தால் எப்படிப்பட்ட பயன் ஏற்படுகிறது?” எனக் கேட்டார்.
குழந்தை தொட்டிலை விட்டு அனைவரும் ஆச்சரியப்படும் படி இறங்கியது. ”பிரபோ, நான்தான் குப்பை மேட்டில் இருந்த சாணிப் புழு. தங்கள் தரிசன பாக்கியத்தால் புறாவாகி, மீண்டும் தங்கள் தரிசனத்தால் கன்றாகி, அங்கும் தங்கள் தரிசனம் கிடைக்கப்பெற்று, இப்போது அரச குமாரனாகப் பிறந்திருக்கிறேன். உங்கள் தரிசனம் இப்போது கிடைத்ததால் நான் தேவருக்கு இணையாகிவிட்டேன். இதுவே தங்கள் சத்சங்கம் விளைவித்த அற்புதம்” என்று கூறியது.
பார்த்தீர்களா? சான்றோர்களின் தொடர்பு ஒருவரை எந்த உயர்நிலைக்கும் மாற்றும். ஆகவே, சான்றோர் தொடர்பை எந்த சூழலிலும் அற்பமாக நினைத்து விட்டுவிடாதீர்கள். உண்மையான சத்சங்கம் பாவிகளை புனிதனாக்கும். புனிதனை தெய்வமாக்கும்.
நீங்கள் தெய்வமாக வேண்டாம், தொல்லைகள் நீங்கி நன்றாக வாழ்ந்தாலே போதும்! அதற்காக மகான்களின் சத்சங்கத்தை நாடி இறையருளைப்பெறுங்கள்.



கட்டுரை பகிர்வு



கோ.வி. ரமணன்,
ரெய்கி மாஸ்டர், கோவை





சாயிதரிசனம் இதழில் வெளிவந்தது



 

சாயி புத்ரன் பதில்கள்

மகனோ, மனைவியோ, நண்பனோ இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது. தாங்கள் மட்டுமே இறுதி வரை எங்களுடன் வருவீர்கள் என்று இறைவனை வேண்டுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

( என். நாகப்பன், திருப்போரூர்)

எல்லோரும் காரண காரியத்தோடு ஒன்று சேர்கிறோம். அதாவது ஒரே குடும்பத்தில் பிறக்கிறோம். காரணம் நிறைவேற என்று காரணம் காட்டி, ஒருவரை இழக்கவும், இழப்பினை ஏற்கவும் நாம் தயாராக இருப்போம். ஆனால், கடவுள் அப்படி அல்லர். எப்போதும் அவர் நம்மை அதிகமாக நேசிப்பவர்.

பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு குட்டிக்கதை:

இளைஞன் ஒருவன் ஒரு சாதுவிடம் ஆத்ம சாதன விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தான். அதன் இடையில் தன் தாய் தந்தையர், தாரம் ஆகியோர் தன்னை அதிகமாக நேசிப்பதாகக் கூறினான்.

இவர்களின் நேசம் உறுதியானது கிடையாது என்றார் சாது. அவரது கூற்றை இளைஞன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நிரூபிக்கச் சொன்னான்.

சாது ஒரு குளிகையைக் கொடுத்து, வீட்டுக்கு சென்றதும் இதை அருந்து. உண்மை உனக்குப்புரியும் என்றார். இளைஞன் அவ்வாறே செய்த சில நேரத்திற்குள் பிணம் போலாகிவிட்டான். பெற்றோரும் பாரியாளும் பரிந்து அழுது கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சாது, இளைஞனை பரிசோதித்து விட்டு, அவனுக்கு உயிர் கொடுக்க முடியும் என்றார்.

எப்படியாவது செய்து அவனை காப்பாற்றுங்கள் என்றனர் அவர்கள். இவன் ஒரு ஏவலால் கொல்லப்பட்டிருக்கிறான். வேறு ஒருவர் இவன் பொருட்டு உயிரைக் கொடுக்க சித்தமாக இருந்தால் ஏவலை போக்கி, இவனுக்குப்பதிலாக அவர் மீது அதை செலுத்திவிடுவேன். இவன் உயிர் பெற்று விடுவான்”  என்றார் சாது.

ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெற்றோரும் மனைவியும் தப்பித்துக்கொண்டனர். செத்தவனைப் போலக்கிடந்தானே தவிர, நடந்த நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தான். அவனது தொண்டைக்குள் இன்னொரு குளிகையை சாது செலுத்தினார். அவன் எழுந்தான். இப்போது தாங்கள் சொன்னது முற்றிலும் மெய் என்று கூறிவிட்டு, அனைவரையும் விடுத்து துறவியாகிவிட்டான்.

Thursday, May 15, 2014

கோபம் தவிர்!

Image

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இதேபோல கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள்.இந்தக் குடி யார் குடியைக் கெடுக்கும் தெரியுமா? நமது வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வதை கெடுத்துவிடும்.

பயப்படாதே! இது நல்ல சகுனம்…

Image

 

என் பெயர்  வித்யா. சென்னையில் வசிக்கிறேன். என் வாழ்வில் 1996ம் ஆண்டு ஒரு மிக பயங்கரமான நிகழ்ச்சியை சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 15. பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். உடனடியாக என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் செய்யச் சொன்னார்கள்.
பார்த்ததில், சினைப்பையில் பெரிய அளவில் கட்டியிருப்பதாகவும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள். அறுவை செய்து கட்டியை பயாப்சிக்கு அனுப்பினார்கள். அதில் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. என் பெற்றோருக்கு இது தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் என்னுடைய சினைப்பையை அகற்றிவிட வேண்டும் என்று கூறினார்கள்.
கட்டி பெரிய அளவில் இருந்ததால் சிறுநீர் கழிக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டேன். பெற்றோருக்கு ஒரே பெண்.
டாக்டர்கள், ”உங்களுக்கு உங்கள் குழந்தை வேண்டுமா? அல்லது உங்கள் குழந்தைக்கு குழந்தை வேண்டுமா?” என்றார்கள்.
என் பெற்றோர், ”எங்கள் குழந்தை உயிருடன் கிடைத்தால் போதும்!” என்றதால், என் சினைப் பை அகற்றப்பட்டு, கீமோதெரபி உட்பட சிகிச்சை நடைபெற்றது.
என் உடலில் செல் எண்ணிக்கைக் குறைந்து மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன். அப்பொழுதுதான் ஒருநாள் என் அம்மா மைலாப்பூர் பாபா கோயிலுக்குச் சென்றார்.
எனது நிலையை நினைத்து மனம் நொந்து பாபா முன் கதறி அழுதார்கள். அப்போது அர்ச்சனை செய்தபோது, தேங்காயில் பூ ஒன்று வந்தது. அம்மா ஒன்றும் புரியாமல் தவிக்க, பக்கத்திலிருந்த ஓர் அம்மா, “ஒன்றும் பயப்படாதீர்கள், இது நல்ல சகுனம். பாபாவிடமிருந்து வந்துள்ளது. உங்கள் மகள் விரைந்து குணம் அடைவாள்” என்று கூறினார்.
அப்போதுதான் பாபாவின் அறிமுகம் அம்மாவுக்கு. மிகவும் சந்தோசமடைந்து மருத்துவமனை வந்தார். அன்று முதல் என் உடல் நிலை தேறியது. அந்த வருடம் எனது பத்தாவது வகுப்புத்தேர்வு. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து மேற்க்கல்வி பயின்றேன்.
என் பெற்றோர், அனைத்து சொத்துக்களையும் இழந்து எனக்கும், எனது படிப்பிற்கும் செலவு செய்துகொண்டிருந்தனர்.
நான் படிப்படியாக பாபாவின் ஆசியாலும், எனது குல தெய்வத்தின் அருளாலும் வாழ்க்கையில் முன்னேறினேன்.
எனது எல்லா பிரச்சினையும் தெரிந்து என்னைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல மனிதரை எனக்குக் கணவராகத் தந்து என்னை ஆசீர்வாதம் செய்திருக்கிறார் என் ஸ்வாமி, என் பாபா.
நான் எம்என்சியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். நாங்கள் இழந்த செல்வங்களையெல்லாம் எங்களுக்குப்பலமடங்கு திருப்பிக் கொடுத்தார். எனக்குக் குழந்தை மட்டும் பெற முடியாது என்று டாக்டர்களே கூறியிருக்கிறார்கள்.
நான் அதனால் கவலை கொள்ளவில்லை. பாபாவுக்கு அனந்தகோடி நமஸ்காரங்களைச் செய்கிறேன். கண்டிப்பாக எனக்கு ஒரு குழந்தையை எப்படியாவது எந்த வகையிலாவது தருவார் என திடமாக நம்புகிறேன்.
நான் பாபாவிடம் வேண்டுவதெல்லாம் இவைதான்:
எனக்கு எந்த வியாதியும் இல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என் பெற்றோரையும், கணவரையும் நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு தீர்க்காயுசையும், திட ஆரோக்கியத்தையும் தந்து, நிறைய நல்ல காரியங்களைச் செய்ய என்னை ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.



அனுபவப் பகிர்வு
வித்யா, சென்னை - 4



 

சாயிபுத்ரன் பதில்கள்

25129

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்கிறார்களே இதற்குப் பொருள் என்ன?
( கே. சரவணன், சென்னை - 63)
எளியோர் என யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள். நாளைக்கு அவர்கள் உயர்வடைந்து, நாம் தாழ்கிற நிலை உண்டானால் சிரமப்பட வேண்டிருக்கும் என்ற பொருளில் இதைச்சொல்லியிருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனை - அதாவது ஆவின் நெய். பூனை - பூவின் நெய் (தேன்) எனப் பிரித்துப் படிக்கவேண்டும். உடலை வளர்க்க நெய் கலந்து உண்பார்கள். நெய் கலந்து உண்ணும் வசதியான வாழ்க்கைக்கு ஒரு காலம் இருப்பதைப் போல, பூ நெய்யைத் தேட வேண்டிய ஒரு காலமும் உண்டு. அதாவது நோய் வந்து விட்டால் மருந்துகளை தேனில் குழைத்துக்கொடுப்பார்கள். இந்த மருந்துகள் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்த முடியாத காலமும் வரும்.
உடம்பை வளர்ப்பவர்களே, ஒரு நாள் நோயும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்பது இதற்குப் பொருள்.

Wednesday, May 14, 2014

இரவும் பகலும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

Image





சத்சரித்திரத்தில் பாபா நான் இரவும் பகலும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
பகவான் பக்த ஸ்மரணை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது எப்படி சாத்தியமாகும்?
ஒரு பசு, வயிறு முட்ட புல்லைத் தின்று நீர் அருந்தியது. மடி கணக்க ஆரம்பித்தது.. உடனடியாக தன் கன்றைத் தேடி வீடு திரும்பியது. அப்போதுதான் தெரிகிறது பசு சாப்பிட்டது தனக்காக அல்ல, தன் கன்றுக்காக என்று.
ஒரு அப்பா மிக முயன்று சம்பாதித்தார். தனது சம்பாத்தியத்தையெல்லாம் தன் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார். அப்பா இவ்வளவு தூரம் உழைத்தது அவருக்காக அல்ல நமக்காக என பிள்ளைகள் உணர்ந்தார்கள்.
பசுவும், ஒரு மனிதனும் தான் உருவாக்காத ஒன்றுக்கு, தானொரு காரணியாக மட்டுமே இருந்துகொண்டு செய்யும் போது, இந்த உடம்பை உருவாக்கி,அதற்குள் உயிரையும் ஆன்மாவையும் திணித்து வைத்திருக்கிற, உண்மையான தந்தையாகிய பகவான் எப்படி உன்னை மறக்க முடியும்?
பாண்டவருக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்ற தர்மம் தெரிந்தவன் திருதராஷ்டிரன். அதன்படியே தந்தானா? என்றால், இல்லை. பிறர் வற்புறுத்தலாலும், பிறருக்கு அஞ்சியும் தன் தம்பிப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாலும் அவன் மனம் முழுவதும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தது.
குந்திக்கு கண்ணனை யார் என்றே தெரியாது. விஷயம் வெளியாகி, அவன் தனது அண்ணன் பிள்ளை என்பதையும், பலசாலி, புத்திசாலி என்பதையும் அறிந்த பிறகு, அவனிடம், ”கண்ணா, எனக்கு எப்போதும் கஷ்டத்தையே கொடு.. அப்போதுதான் நான் உன்னை மறக்காமல் இருப்பேன். நீயும் என்னோடு இருப்பாய்” என்று கேட்டாள்.
இந்த வரத்தை அவள் தன் பிள்ளைகளுக்காகக் கேட்டாள். கண்ணன் தன்னோடு இருந்தால், தன் பிள்ளைகளுக்கு எந்தத் துன்பமும் வராது என்ற கணக்கும், கண்ணன் தன்னை நம்பிய யாருக்கும் துன்பம் தரமாட்டான் என்ற தெளிவும் அவளுக்குள் இருந்தது..
அதனால், கண்ணனை தன் பிள்ளைகளோடு இருக்க, இப்படி வரம் கேட்டாள். பலரது திறமைகளைப் பயன்படுத்தி ராஜாவாக மாறிவிட்ட ஒருவன், தனக்குப் பிறகு வாரிசை நியமிக்க விரும்பினான்.
அவன் பிள்ளைகள் புத்தியில்லாதவர்கள், பலமில்லாதவர்கள். இந்நிலையில் நாட்டைக் காப்பாற்ற வெளியிலிருந்து ஒரு திறமை சாலியைத்தான் நியாயமாகத் தேர்வு செய்யவேண்டும். ஆனால் செய்வானா? செய்யமாட்டான். தன் இடத்திற்குத் தன் பிள்ளைதான் வரவேண்டும். திறமைசாலிகள் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பான்.
நம் காலத்திற்கு வருவோமே.. சில அரசியல்வாதிகள் கட்சியை ஆரம்பிக்கும் போது, என் குடும்பத்தார் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்.. பொது மக்கள்தான் அப்பதவிக்கு வரவேண்டும் என்பார்கள்.
கட்சி வளர்ந்த பிறகு? எப்படியாவது தன் பிள்ளைகளை அதனுள் புகுத்தி அவர்கள்தான் இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் போலக் காட்டி, தலைமைப்பொறுப்புக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆன்மீகத்திலும் இப்படித்தான்.
ஆக, எல்லாவற்றிலும் இப்படித்தான் நடக்கும். இதுதான் மனித இயல்பு. ஏன் இப்படி?
ஏனென்றால், ”அப்பாவாகி விட்டவர்கள் எப்போதும் தன் பிள்ளைகளையே நினைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்காகவே அனைத்தையும் செய்கிறார்கள்”
மனிதர்கள் என்பவர்கள் இறைவனின் பிம்பங்கள் என்பார்கள். பிம்பங்களே இப்படி நினைக்கும்போது நிஜமான அப்பாவாகிய கடவுள் நினைப்பது எவ்வளவு அதிகம்?
பகவான் தன் படைப்புகளை ஸ்மரணம் செய்கிறான். அதாவது தான் படைத்த உயிர்களை எப்போதும் நினைத்து துதிக் கிறான்,போற்றுகிறான்..அவற்றின் பெயர்களையே திரும்பத் திரும்பச்சொல்கிறான் என எங்கும் கூறப்படவில்லை. மாறாக, பக்த ஸ்மரணம் செய்கிறான் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது சும்மா இருப்பவனின் பெயரை அவன் ஸ்மரணம் செய்வதில்லை.
யார் ஒருவன் தன்னை மறக்காமல், தன் மீது அன்பு செலுத்தி, பக்தி வளர்க்கிறானோ, அவன் நினைவாகவே இருப்பதோடு, அவனது பெயரை மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறான்.
தாணே மாவட்டத்தில் டகாணூ என்ற இடத்தைச்சேர்ந்த பி.வி. தேவ் என்பவர், பாபாவை தனது இல்லத்துக்கு வருமாறு அன்புடன் அழைத்தார். அப்போது பாபா என்ன சொன்னார் பாருங்கள்:
”என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ, அவனிடம் ஓடிச் சென்று நானே வெளிப்படையாகக் கலந்து கொள்கிறேன்.”
பாபா, கருணாம்ருதச் சாகரம். ஒருவனை எப்போதும் சாகாமல் காக்கிற அம்ருதமாகிய கருணைக் கடல். தன் பிள்ளை தன்னை எந்த நிலையில் வைத்துக் கும்பிடுகிறான்.. எப்படி துதிக்கிறான்.. எவ்வளவு காலம் விரதம் இருந்தான்? என்னை விட்டு எவ்வளவு தூரம் பிரிந்துபோனான்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.
தாய் ஆமையைப் போல, தன் பக்தன் மீது கண்ணை வைத்து, எப்போதும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்.
தன்னைச் சுற்றி திரைபோட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை கஷ்டம், கவலை என்று கதறும்போதெல்லாம், பயப்படாதே..அதெல்லாம் ஒன்றுமில்லை. நானிருக்கிறேன் என்று நாம் சொல்வதில்லையா?
அப்படித்தான், நமது கடவுளும் நாம் சோதனை, வேதனை, பிரச்சினை எனத் துடிக்கும்போதெல் லாம், இதெல்லாம் இயல்பாக நடக்கிற விளையாட்டுக்கள்தான்.. பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று கூறுகிறான்.
நமது புண்ணிய காலம் மேலெழுந்து வரும் போதும், நாம் கஷ்டத்தால் அமுக்கப்படும்போதும் அவன் உடனடியாகக் கைதூக்கி விடுகிறான்.
பாபாவிடமிருந்து நன்மை பெறுபவன் எப்படி இருக்க வேண்டும் என்றால், தீட்சித்தைப் போல இருக்கவேண்டும்.
அவர் தூய பிராமணர். உயிர்க்கொலை செய்யாதவர், இரக்கமே வடிவானவர். அப்படிப்பட்டவரிடம், பாபா கத்தியைக் கொடுத்து, இந்த ஆட்டை வெட்டு என்று சொன்னபோது, தயங்காமல் வெட்ட முனைந்தார்.
”இதெல்லாம் சரியா தப்பா எனத் தெரியாது. தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டம். எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தை தியானிக்கிறோம். காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. குருவின் கட்டளைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியுடனும் பணிவுடனும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னார்.



சாயி புத்ரன் பதில்கள்

11

அடியார்கள் வீழ்வதும், பக்தர்கள் நிலைப்பதும் எதனால் ஏற்படுகிறது?

(கோவை கீதாஞ்சலி, கோவை)

அடியார்கள் தாங்கள் மேம்பட்டவர்கள், அனைத்தையும் கடந்தவர்கள், பகவானுக்கு நெருங்கிய உரிமையுடையவர்கள், அவனை அறிந்தவர்கள் என்றெல்லாம் நினைத்து, கர்வம் கொள்ளுவது சகஜம். அவர்களுடைய வித்யாகர்வம் என்கிற இத்தகைய மமதையின் காரணமாக வீழ்ந்துவிடுகிறார்கள்.

அவர்களால் வழி நடத்தப்படுகிற பக்தர்கள் எப்போதும் இறைவன் நினைவுடனும், நாமஸ்மரணை செய்தும் பக்தி செலுத்துவார்கள். இப்படிப்பட்ட பக்தியினால் எப்போதும் இறைவன் பாதத்தில் லயித்திருப்பார்கள். இதனால் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

Tuesday, May 13, 2014

பாபாவை வழிகாட்டச் சொல்லுங்கள்!

Image





ஜி.கே. நார்கே. இவர் பாபாவின் பெரும் பணக்கார அடியவரான நாக்பூரைச் சேர்ந்த பூட்டியின் மருமகன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்றவர். புவியியல் துறையிலும், ரசாயனத் துறையிலும் பேராசிரியர்.  நரசிம்மசுவாமி இவரைச் சந்தித்து அவரின் அனுபவங்களைப்பற்றி கேட்ட போது, அது ரகசியம் எனக் கூற மறுத்து விட்டார். எதைப் பெற்றாயோ, அது ரகசியமாகவே இருக்கட்டும் என கபீர் சொன்னதை நினைவுபடுத்தினார். பாபாவிடம் பெற்ற அனுபவத்தைக் கூற முயன்றாலே தன் வாய் தானாகவே மூடிக்கொள்கிறது என்றார்.



பாபா பற்றி மேலெழுந்த வாரியாக சொல்லிவிட்டுப் போய் விடலாம். ஆனால் பொய்யும், புரட்டும் நிறைந்த உலகில் உண்மையைக் கூறுவது அவசியம் எனறு கூறி தான் பாபாவிடம் பெற்ற அனுபவத்தை உண்மையான அனுபவத்தை சுவாமியிடம் கூறினார்.



பாபா, ஒரு தெய்வீகப் புருக்ஷர். கடவுளின் அவதாரம். தினந்தோறும் வீட்டிலேயே வழிபடும் ஒரு தெய்வமாகவே அவரைக் கருதினேன். ஆகா என்ன ஒளி மிகுந்த கண்கள்!  அவரின் செயல்பாடும், சக்தியும் அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்தன. இப்படிப்பட்டவரை நான் எப்படி சந்தித்தேன்!



 என் மாமனார், தாய், மனைவி எல்லோரும் பாபாவின் பக்தர்கள். இவர்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபட்டனர். 1905ம் ஆண்டு எம். ஏ. பட்டம் பெற்றேன் .  1907 -  1909 ல் கல்கத்தாவில் புவியியல் துறையில் பயிற்சி பெற்றேன்.



1909- ம் ஆண்டு இந்திய அரசால் மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டு புவியியல், சுரங்கத்துறையில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றேன். 1912-ல் இந்தியா திரும்பினேன். என் மாமனார், தாய், மனைவி அடிக்கடி சீரடி சென்று வந்தார்கள். என்னையும் போகச் சொன்னார்கள்.



சாயிபாபா விரும்பினால் நான் போவேன் எனக் கூறினேன். பாபாவிடம் கேட்டு அனுமதி பெற்று சீரடி சென்று பாபாவை தரிசிக்கச் சொன்னார்கள். நான் 1913 ஏப்ரல் மாதம் சீரடி சென்றேன்.



மாதவ்ராவ் தேஷ்பாண்டே என்னை அழைத்துச் சென்று பாபாவுக்கு அறிமுகப்படுத்தினார்.



”என்னஷாமா? இவனையா எனக்கு அறிமுகப்படுத்துகிறாய்? இவனை எனக்கு முப்பது தலைமுறையாகத் தெரியும் ! ‘என்றார் பாபா.



இதைக்கேட்டு நான் அதிர்ந்துவிட்டேன். முற்பிறவி பற்றி பாபாவுக்கு எத்தனை ஞானம்! என ஆச்சரியப்பட்டேன்.



Image                                       பாபா, சில சமயம் என் தாயைப் பார்த்து, துள்ளி குதிப்பார். அவ்வளவு சந்தோசம்! அதன் விவரம் பாபா மட்டும் அறிவார். பாபாவைப் பார்த்தவுடன் என்னைக் கவர்ந்தவை அவரது கண்கள் தாம். அவை என் இதயத்தைத் துளைத்துச் சென்றன.

   அடுத்தது, அவர் சாவடியில் அமர்ந்திருந்த நிலை. நானும் பாபாவின் ஆரத்தியில் கலந்து கொண்டேன். சிறு சிறு சேவைகள் செய்தேன். ஒரு ஆரத்தியின் போது, பாபா கோபப்பட்டார். ஆவேசப்பட்டார். காரணமே இல்லாமல் சபித்தார். இவரென்ன பைத்தியமா? என எண்ணினேன். ஆரத்திமுடிந்தது. அன்று மாலை பாபாவிடம் வந்தேன். காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். என் தலையை லேசாகத்தட்டி,  “நான் பைத்தியமில்லை”என்றார் பாபா.



நான் திடுக்கிட்டேன். மதிய ஆரத்தியின் போது நான் நினைத்ததை அறிந்து கொண்டார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவர் என்னுள்ளே உள்ளார். எனது ஆத்மாவின் தலைவன், எங்கும் நிறைந்திருப்பவர். பாபாவிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஆகவே, எண்ணுவதை எல்லாம் நல்லதாகவே எண்ணுங்கள். உங்களுக்கு நல்லதைச் செய்வார்.



நான் நிறைய முறை பாபாவை சோதித்து உள்ளேன். நான் என்ன நினைக்கிறேனோ, அதை அப்படியே பேசினார். அப்போதுதான் உணர்ந்தேன்,



அவரே என் தெய்வம் என-! எல்லாம் அறிந்தவர்.  எல்லாவற்றையும் பார்ப்பவர். தனது எண்ணப்படி ஒவ்வொருவரையும் உருவாக்கினார். அவரை மீறி எதுவும் நடக்காது. எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவரின் தீர்க்க தரிசனம் வியக்கத்தக்கது.



1913ம் ஆண்டு, என்னிடம் பாபா,  “உன் மாமனார் சீரடியில் மாளிகை ஒன்று கட்டுவார். அதில் நீ பொறுப்பு வகிப்பாய்”  என்றார். 1915 - 16ல் என் மாமனார், மாளிகை கட்டினார். அதுதான் பாபாவின் சமாதி மந்திர். 1918 -  19 க்குப் பின் நான் அந்த சமாதி மந்திர் நிர்வாகத்தில் ஒரு தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றேன்.



நான் நன்கு படித்திருந்தேன். ஆனால் சரியாக வேலை கிடையாது. கிடைத்த வேலையிலும் வெகு நாட்கள் நீடிக்க முடியவில்லை. முதன் முதலாக சீரடி சென்ற போது மூன்று நான்கு நாட்கள் மட்டுமே தங்கினேன். பின் வேலை விஷயமாக பர்மா சென்றேன். அங்கும் மூன்று மாதங்கள்தான் வேலை.



பின் நாக்பூர் திரும்பினேன். பின் சீரடி வந்தேன், அங்கு நான்கு மாதங்கள் மனைவியோடு தங்கிய பின் நாக்பூர் திரும்பினேன். ஷாமா என்னை சீரடிக்கு வரும்படி கடிதம் எழுதினார். சென்றேன். 13 மாதங்கள் தங்கினேன்.



வேலையில்லாத பட்டதாரி. கவலைப்படவில்லை. பாபாவைப் பார்த்து பக்கிரி வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது என எண்ணினேன்.



1914ம் ஆண்டு பாபாவிடம் நிறைய அங்கிகள் இருந்தன. அதை எல்லோருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஒன்று கொடுத்தார். விசேச நாட்களிலும், பஜனையின் போதும் போட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன். பாபா அங்கி கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். என்னைக் கூப்பிட்டு, ”நார்கே! வருத்தப்படாதே. உனக்கு அங்கி கொடுக்க கடவுள் அனுமதிக்கவில்லை” என்றார்.



இப்போதும் என் மனதைப் படித்தறிந்தார். நான் படித்தவன், கல்யாணம் ஆனவன். ஆனால் வேலையில்லாதவன். சம்பாதிக்காதவன். என் அண்னைக்கு ஒரே கவலை. என் தாயும், உறவினர்களும் நார்கே வேலைக்காக கல்கத்தா, பர்மா என அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு நல்ல வேலையாகப் பார்த்து சொந்த ஊருக்கு அல்லது சீரடிக்கு அருகாமையிலோ அமைத்துக் கொடுங்கள் என பாபாவிடம் வேண்டினர். பாபாவும் அவனுக்குப் பூனாவில் வேலை கிடைக்கும் என்றார்.



சில சமயம் எனக்கு ஒரே நேரத்தில் வேலைக்கான அழைப்பு நிறைய வரும். நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் சிறு குழந்தை தன் தாயையே நம்பி இருப்பது போல், நான் பாபாவையே நம்பி அவரிடம் ஒவ்வொரு முறையும் வழி காட்ட வேண்டுவேன். ஆனால், அவரின் வழி முறை அலாதியானது. வேலை, கல்கத்தா அல்லது பர்மாவிலா என்றால்.. பாபா “பூனா போ” என்பார். ஒவ்வொரு முறையும் அவர் பூனாவை சேர்த்துக் கொள்வார்.



எனக்கு ஒரு முறை காசியில் பேராசிரியர் வேலைக்கும் பர்மாவில் உயர்பதவிக்கும் வாய்ப்பு வந்தது. பாபாவிடம் கேட்டபோது,  “பர்மாபோ!  பூனா போ”  என்றார்.



எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. நான் ஒரு புவியியல் சுரங்கப்பொறியாளன். பூனாவில் இதற்கான வாய்ப்பே இல்லை. பின் ஏன் பாபா இப்படி சொல்கிறார் என சிரித்துக்கொள்வேன். என்  எதிர்காலம் எப்படி என அவருக்குத்தான் தெரியும்.



1916ல் வெகுகாலம் கழித்து சீரடி வந்தேன். அன்று பாபாவுக்கு யார் என்ன என்ன சேவை செய்கிறார்கள் என கேட்டேன். வாமன்ராவ் படேல் என்கிற வக்கீல் பாபாவுக்காக யாசிக்கச் செல்வார் என்றார்கள். எனக்குள் ஒரு எண்ணம்!  அடடா, நாம் ஏன் யாசிக்கக்கூடாது? என எண்ணிக்கொண்டு, கோட், சூட், தொப்பி, காலில் காலணியோடு பாபாவிடம் சென்றேன்.



இன்று பாபாவுக்காக யாசிக்க வாமன்ராவை அனுப்பலாமா? என மூன்று முறை கேட்டார்கள். பாபா என்னைக் காட்டி, நார்கேவை அனுப்பு என்றார்.



நான் அப்படியே யாசிக்கச் சென்றேன். நான்கு மாதங்கள் பாபாவுக்காக யாசித்தேன். இதன் காரணம், யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். எனது ஆசையை பாபா பூர்த்தி செய்துவிட்டார்.



ஒவ்வொரு முறையும் பாபா என்னுள்ளே இருந்து எனது ஆசையைப் பூர்த்தி செய்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவரே என் அந்தர்யாமி. பாபாவுக்காக யாசிப்பதை அவர் வெகு சிலருக்கே அனுமதி தந்தார்.



1917ல் பூனா பொறியியல்கல்லூரிக்கு புவியியல் துறைக்குப் பேராசிரியர் தேவை என அறிவிப்பு வந்தது. விண்ணப்பிக்கலாமா என பாபாவிடம் கேட்டேன். விண்ணப்பிக்குமாறு கூறினார். பூனா சென்றேன், விண்ணப்பித்தேன். வேலைக்கு நிறைய பேர் விண்ணப்பித்து இருந்தனர். நிறைய சிபாரிசு வேறு! ஆகவே, எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.



நான் சீரடியை விட்டுப் புறப்பட்டவுடன்அங்கே இருந்தவர்களிடம், ”நார்கே எங்கே?”  என்று பாபா கேட்டுள்ளார்.



“வேலை விஷயமாக பூனா சென்றுள்ளார்” என்று சொல்லியுள்ளனர். உடனே பாபா, ”கடவுள் ஆசீர்வதிப்பார்” என்றாராம்.



மீண்டும் பாபா, ”நார்கேக்கு குழந்தைகள் உண்டா?” எனக் கேட்டாராம். குழந்தைகள் இறந்து விட்டன என்ற போது. பாபா, கடவுள் ஆசீர்வதிப்பார் என்றாராம்.



பாபா ஜெயித்து விட்டார். அன்று என் வேலை பற்றி பாபா, பூனா என்று சொன்னபோது நான் உள்ளுக்குள் சிரித்தேன். என் அறியாமை. நிறைய விண்ணப்பங்கள், பலத்த சிபாரிசு. பூனா பொறியியல் வேலை எனக்குக் கிடைக்காது என சந்தேகப்பட்டேன். 1918ல் புனா கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்து விட்டது. என்னுள்ளே நான் நெகிழ்ந்து விட்டேன்.



1919ம் ஆண்டு அந்த வேலை நிரந்தரமாகிவிட்டது. பாபாவிடம் என் தாயார், என்ன பிரார்த்தித்தார்? என் மகனுக்கு சீரடிக்குப் பக்கத்திலோ, சொந்த ஊருக்குப் பக்கத்திலோ வேலை அமைய வேண்டும் என்றார். அப்படியே சீரடிக்குப் பக்கம் பூனாவிலே வேலை கிடைத்துவிட்டது. என் தாயின் ஆசையையும் பூர்த்தி செய்துவிட்டார்.



அது மட்டுமல்ல, இதுவரை பிறந்த குழந்தைகள் இறந்தன. இதற்குப்பின் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எல்லோரும் நன்றாகவே உள்ளனர். இவையெல்லாம் பாபாவின் ஆசீர்வாதம் இல்லாமல் நடந்திருக்க முடியுமா?



பாபாவிடம் யாராவது உதவி, பாதுகாப்பு என்று கேட்டால், கேட்பவர் தகுதிக்கு ஏற்ப தன்னையே மாற்றிக்கொண்டு நன்மை செய்தவர். செய்கிறவர். அவரைப்பற்றி மேம்போக்காக அறிந்தவர்க்கு எல்லாம் இது தெரியாது. ஆழ்ந்து நோக்கினால் பாபாவின் அற்புதம் புரியும்.



என்னுடைய பழக்கம் என்னவென்றால், எதையும் கலந்துநோக்கி, சீர்தூக்கிப்பார்த்து நியாயம் சொல்வேன். இதை கவனித்த பாபா, என்னை புத்திசாலிஎன்றார்.



சில சமயம் தவறு நேரும்போது என்னை சுத்த சோம்பேறி என்பார். யாராவது சரியான முறையில் கேள்வி கேட்டால், அவரை அடக்காமல் சரியான பதில் சொல்வார்.



அவரது சொல்லும் செயலும் அர்த்தம் பொதிந்தவை என்பது எனக்கு நன்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை, அவர் எனது சரியான ஆசையை சரியாகவே நிறைவேற்றினார்.



யாருக்கு எது உகந்தது என அறிந்து அதை தப்பாமல் செய்திடுவார். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நடக்கும்.



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:



ஒவ்வொரு முறையும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும் பாபாவிடம் வழிகாட்டச் சொன்னேன் அல்லவா? அப்படியே நீங்களும் கேட்டால் வழிகாட்டுவார். நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கிறது.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...