Showing posts with label மோட்ச மார்க்கம். Show all posts
Showing posts with label மோட்ச மார்க்கம். Show all posts

Friday, June 17, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 3

இனி நான் செய்ய வேண்டுவன:
உயர்ந்த ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு, என்னிலும் தாழ்ந்த ஜாதியான் என்ற நிலையில் தோன்றியிருந்தாலும் குருவே, உன்னிடம் பேதம் பார்க்காமல் என்னிலும் உயர்ந்தவராகவே உணர்கிறேன். எனது ஆசிரமங்களை விட தங்கள் ஆசிரமங்கள், ஆசார பேதங்கள் குறைவானதாக எனக் கருதாமலும், தங்களது எளிமையை அற்பமாக நினைக்காமலும், தங்கள் குலம், கோத்திரம் முதலியவற்றைப் பற்றிக் கருதாமலும் தங்கள் திருவடிகளைச் சரண் அடைந்து தாங்கள் அளிக்கிற ஞானத்தைப் பருகுவேன்.
வித்யையாகிய ஞானத்தைப் பெறுவதற்கு பெரு முயற்சியுள்ளவன், முதன்மையான ஞானத்தை சூத்திரனிடத்தில் இருந்தாகிலும், மோட்ச மார்க்கத்தை சண்டாளனிடத்தில் இருந்தாகிலும், குணவதியான பெண்ணை தாழ்ந்த குலத்திலிருந்தாகிலும் பெறலாம் எனவும், இவற்றால் எவ்வித தோஷங்களும் இல்லை எனவும் மநு தர்மம் கூறியிருப்பது போல ஏற்று, தாங்கள் எந்த வடிவிலிருந்து ஞானத்தை போதித்தாலும் ஏற்கிறேன்.
தத்துவ விசாரணை இல்லாதவர்களிடம் இறைவன் கண் காது மூக்கு முதலியவை உள்ளவன் போலவும், சம்சார தளைகளுக்கு உட்பட்ட படைத்தல் காத்தல் அழித்தல் என்பனவும், முக்குண தோஷம் உள்ளவனாகவும் தெரிகிறான். தத்துவ விசாரணை செய்தவர்களிடம் உருவம் அற்றவனாக எங்கும் நிறைந்த வடிவினராகத்தோன்றுகின்றான். தத்துவ விசாரணை இல்லாத பாமரர்களுக்குத் தூரமாகவும், விசாரணையால் தேடுகிறவர்களுக்கு அருகிலும் தோன்றுகிறான்.
எல்லா ஜீவர்களின் உடலிலும் சாட்சியாய்இருப்பவனாகிய இறைவன், அனைத்திலும் ஆத்மாவாய் வியாபித்து, மாயா பிரபஞ்சத்தில் உள்ளும் புறமுமாக நிறைந்திருக்கிறான். அப்படிப்பட்ட நிறையே இறையே சத்குரு தேவா,உன் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்.
குருவே உன்னைக் குறிக்கிற இந்த இரண்டு எழுத்துக்களில் கு என்பதை இருள் எனக்கூறுகிறார்கள். கு என்றால் வெட்ட வெளியாய் இருப்பது என்றும் அவயவங்கள் ஏதும் இல்லாதது என்றும், ரூபமற்றது என்றும் பொருள் உள்ளதை பிறருக்குப் புரியச் செய்யுங்கள். ரு என்றால் அஞ்ஞானத்தை அழிப்பது என்பதும், பரஞ்சோதி என்றும் பிறர் உணரச் செய்யுங்கள்.
நான் ஆத்ம விசாரணை செய்யும் அளவு தேர்ச்சியுள்ளவனாக என்னை மாற்றுங்கள். விசாரணை செய்யாததால் பந்தமும், விசாரணை செய்வதால் மோட்சமும் உண்டாகும். எனக்கு மோட்ச மார்க்கத்தை அநுக்கிரகம் செய்யுங்கள்.
(தொடரும்)

Thursday, June 16, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 2



வழிபாடும் நோக்கமும்
வழிபாடுகளை நான்கு விதமாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை: புறவழிபாடு, அக வழிபாடு, புற - அக வழிபாடு, அக-புற வழிபாடு. விக்ரஹத்தில் இறைவனை பூசிப்பது புற வழிபாடு, மனதில் தியானிப்பது அகவழிபாடு, விக்ரஹத்திலும் மனதிலுமாக பூஜிப்பது புற அக வழிபாடு, தியானநிலையிலிருந்து இறங்கி வந்து சிலையில் இறைவனை வழிபடுவது அக புற வழிபாடு எனக் கூறலாம்.
இந்த வழிபாடுகளின் நோக்கம் ஆன்மாவை அறிந்து முக்தி பெறுதல். இதற்கு முக்கியத் தேவை தத்துவ விசாரணை. ஒரு குழந்தை எப்படி தான் பார்க்கிற அனைத்தையும் தொட்டு அறிந்து தெளிகிறதோ அப்படி அனைத்தையும் விசாரித்து அறிந்துகொள்வது ஆத்ம மோட்சம் பெற முக்கியத் தேவையாகும்.
இவ்விஷயத்தில் ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒருவர் தேவைப்படுகிறார், அவரே குரு. அவர் மூலமாக அடைய வேண்டிய விஷயங்களை மனதிலும் பிறர் வாக்கு வழியிலும் தெளிவு செய்யும் நிலையில் சத்குரு என்றாகிறார். அதாவது அவரே இறைவனாக- அன்னை தந்தையாக, பந்துவாக- அனைத்துமாக ஆகிறார் என்பதாம்.
இதுவரை சாயி பாபாவை சத்குரு என அறிந்தும் லவுகீக விஷயங்களாக சார்ந்திருந்த நிலையிலிருந்து ஞான மார்க்கம் போதிக்கும் நிலைக்கு நாம் பார்க்கலாம்.
இது எல்லோருக்கும் சாத்தியமாகுமா எனில், சம்சாரத்திலிருப்பவர்களுக்கும், உலக விஷய பற்று உடையவர்களுக்கும், இறை ஞானத்தின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கும், விஷயத்தைப்புரியாமல் குழப்பம் அடைகிறவர்களுக்கும் இது சாத்தியப்பட்டு வராது.
என்னிடம் கேள்வி கேட்காமல் தன்னிடமே கேள்வி கேட்டுத் தெளிவைப் பெற முயல்வோர் பயனடையவே இப்புதிய பகுதி. தன்னிடமே கேள்வி கேட்டு பதில் அறியத் தொடங்குவதற்குப்பெயர்தான் தத்துவ விசாரணை. இதைச் செய்யச் செய்யத்தான் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். உணராதவர் விசாரணை செய்யும்போது ஆன்மிக முன்னேற்றத் தடையும் ஏற்படும்.
உங்களுக்கு எதுவரை ஜீரணிக்க முடியுமோ அதுவரை இதைத் தருகிறேன். பெற்று ஒரு படி மேலே வந்துவிடுங்கள்.
சத்குரு வணக்கம்
ஸச்சிதா நந்தரூபாய வ்யாபிநே பரமாத்மநே
நமஸ்ரீ குருநாதாய ப்ரகாஸாநந்த மூர்த்தயே!
யேநசே த யதாஹீதம் சித்தம் சே தயதே நரஹ
ஜாக்ரத் ஸ்வப்ந ஸஷூப்த்யாதி தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!
சத்-சித்-ஆனந்த வடிவம் உள்ளவனும் எங்கும் நிறைந்திருப்பவனும், சதாநந்தனும், பரமாத்ம வடிவினனும் ஆகிய ஸ்ரீ சத்குரு ஸ்வாமியை வணங்குகிறேன்.
எவனது சக்தியினால் ஜட சொரூபமாகிய இந்த மனம் ஆத்ம சொரூபமாகத் தோன்றிச்சகல காரியங்களையும் செய்கிறதோ, எவனது சத்தாமாத்திரத்தினால் ஜீவன் சேதன வடிவமாய் ஜாக்கிரதை, சொப்பன, சுஷூக்தி என்னும் அவஸ்தை போன்ற பல நிலைகளை அடைந்து சகலத்தையும் அனுபவிக்கிறதோ, அப்பேற்பட்ட நிலையைச் சாட்சியாக இருந்து அளித்துக்காக்கிற வடிவினராகிய ஸ்ரீ சத்குருவை வணங்குகிறேன்.
சைதந்யம் ஸாஸ்வதம் ஸாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம்
நாதபிந்து களாதீதம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:
தானே ஒளிரக் கூடியதும், நித்தியமானதும், சாந்தமானதும், ஆகாயத்தை விட அதிகமானதும் எந்த தோஷங்களும் இல்லாததும், நாத பிந்துகள் என்பதற்கும் அதிகமானதும், சைதன்ய வடிவம் உடையதுமாகிய பிரத்யகாத்மா என்னும் ஸ்ரீ சத்குருவாகிய இறைவனை வணங்குகிறேன்.
(இனி சத்குரு போற்றி பற்றிய சுலோகம் இல்லாமல் பொருளை மட்டும் கூறுகிறேன்)
பிரம்மா விஷ்ணு, மகேஸ்வர வடிவினரும், சாட்சாத் பரப்பிரும்மமுமாகிய என் சத்குரு தேவரை வணங்குகிறேன்.
பிரபஞ்சமெல்லாம் வியாபித்து அதையும் கடந்து பரிபூரணமாய் எங்கும் விளங்குகிற பரமாத்மா இப்பேர்பட்டதென்று அதன் லட்சணங்களை உணர்வுப் பூர்வமாய் போதித்து வெளிப்படுத்திய சத்குருவை வணங்குகிறேன். தாவர ஜங்கமத்துள் ஜீவாத்ம சொரூபம் இப்பேற்பட்டது என்றெல்லாம் விவரித்துணர்த்திய சத்குருவை வணங்குகிறேன்.
பரமாத்ம வடிவமாகவும் ஜீவாத்ம வடிவமாயும் இவ்விரண்டும் பேதமற்ற பரப்பிரம்மம் என்றும் போதித்தருளுகிற சத்குருவை வணங்குகிறேன்.
என் சத்குருவே சாயி தேவா! நீயே லோகப்பிரபு, நீயே லோக குரு, என் ஆத்மா சகலத்திலும் வியாபித்துள்ளதை உணர்த்திய பரப்பிரம்மமே உன்னை வணங்குகிறேன்.
எனது இந்த உடலே பிரபஞ்சமாயுள்ளது என்பதையும், நானே சர்வத்திலும் பரிபூரணமாக விளங்குகிறேன் என்பதையும் உணர்த்தி, எனது நிஜ வடிவத்தைக் காட்டியருளிய குரு தேவா, தாங்களே சகல அவதாரங்களாகவும், அவதாரத்திருமேனியுள்ளவராகவும் இருப்பதால் தங்கள் மேன்மையான திருவடிகளை வணங்குகிறேன்.
பிரம்மா முதல் புல்பூண்டு வரை அனைத்தும் பரப்பிரம்ம மயம், நீயோ அந்த பரப்பிரம்மம், பரப்பிரம்மமாகிய நீயே குரு ஸ்வரூபம். அப்படிப்பட்ட உன்னை நமஸ்கரிக்கிறேன்.
வேதங்களாலும் சாஸ்திரங்களாலும், சப்த கோடி மகாமந்திரங்களாலும், யந்திரங்களாலும் அறிய முடியாத பிரம்ம ஞானத்தை உன்னுடைய அருள் பார்வை ஒன்றினாலேயே அளித்து விளங்கச் செய்வதால், மெய்யான இறையே, சத்குருவே நின்னையே வணங்குகிறேன்.
(தொடரும்)

Wednesday, June 15, 2016

எளிய மோட்ச மார்க்கம் பாகம் 1

எனது அனுபவங்களை சொல்லும்போது அது சிலருக்குக் கேலியாகத் தோன்றும், என் உருவைப் பார்த்தவர்களுக்கு இவனுக்கா இது சித்தியாயிற்று என நினைக்கத் தோன்றும். அதை நீங்களே அனுபவித்தால் உண்மையைப்புரிந்துகொள்ளலாம்.  உதாரணமாக, திரையம்பகேஸ்வரம் சென்ற போது, ஒரு ஜீவ சமாதியில் அமர்ந்தேன். அந்த நேரம் என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போலிருந்தது, துடித்தேன். இதை பிறரிடம் கூறிய போது நம்ப மறுத்தார்கள்.
என்னுடன் வந்திருந்த ஆறுமுகம் என்ற நண்பர் எலக்ட்ரீசியன். பெருங்களத்தூரில்தான் வசிக்கிறார். அவர் எதையும் உணராமல் நம்பமாட்டார். அவர் என்னுடன் அமர்ந்தபோது இதே உணர்வை அடைந்து, சார் இங்கே மின் கசிவு ஏற்பட்டு எர்த் பாஸ் ஆகிறது என்றார். இதைப்பற்றி சீரடிக்கு வா என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கிறேன்.
இதே அனுபவத்தை பிப்ரவரி மாதம் என்னை பார்க்க வந்த கும்பகோணம் வக்கீல் ஒருவர், அதே திரையம்பகேஸ்வரத்தில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வாகக் கூறியபோது, என் மனைவி அருகில் இருந்தாள். நான் அப்போது கூறியதை இப்போதாவது நம்புகிறாயா? எனக் கேட்டேன்.
இதேபோன்று செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள சிரார்த்த பெருமாள் கோயிலுக்குச் சென்று அன்னதானம் சாப்பிட்டபோது, என் தேகம் மறைந்து சதுர்புஜங்களோடு பெருமாள் சாப்பிட்ட காட்சியை அனுபவித்தேன். இதை எழுதியும் இருந்தேன், நம்பத்தான் ஆளில்லை.
15-2-2016 அன்று அதிகாலை இரண்டு மணி அளவில் என் வீட்டு மொட்டை மாடியில் சாயி நாம ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, பாபாவின் கல்யாண குணங்களைப் போற்றிக் கொண்டிருந்தேன். அப்போது உடல் சிலிர்த்தது. பரவச உணர்வு தோன்றியது, அதே போற்றுதல் வார்த்தைகளோடு நடந்தேன், நடப்பது நானல்ல, சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் என்பதை உணர்ந்தேன்.
என்னை நானே பார்த்தேன், கம்பீரமானத்தோற்றத்துடன் சங்கு சக்கரமேந்தி மஞ்சள் பீதாம்பரம் தரித்து நடந்தபடியிருந்தேன். சியாமள ரூபம் என்னுடையது என என்னை நான் தரிசித்தேன். இந்த அனுபவங்கள் கற்பனையல்ல, பாவனையும் அல்ல, உண்மைதான். ஆனால், இது என்னுடைய அனுபவமாக இருக்கும் வரை அது பொய்யான கற்பனையாகத்தோன்றும்.
எனவே, இதை அனைவரும் அல்லது ஆன்மிக ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர் பெற்றுவிட்டால் எனது நிலைப்பாடு மெய்யாகும் எனக் கருதியே, சத்குரு வழிபாட்டின் மேன்மையை சகலருக்கும் போதிக்கும் புதிய முயற்சியில் ஈடுபடுகிறேன்.
இதற்காகத்தான் இந்தப் பகுதியைத் தொடங்கி இருக்கிறேன். கடைநிலை பக்தனான எனக்கே இந்த அனுபவங்கள் என்றால், உயர்நிலை பக்தர்கள் எத்தகைய நிலையை அடைந்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்துப் பிரமிப்பு அடைகிறேன்.
இனி ஞானத்திற்குப் போகலாம், வாருங்கள்.
(தொடரும்)

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...