Showing posts with label ஆன்மீக குறிப்புகள். Show all posts
Showing posts with label ஆன்மீக குறிப்புகள். Show all posts

Monday, June 27, 2016

தீர்த்த யாத்திரை

ஒருவர் பற்றற்று தனியாக தீர்த்த யாத்திரை செய்தால் அவனுக்கு பிரம்மாதி தேவர்கள் வேண்டிய உதவி செய்வார்கள். ஒரு திவ்ய ஷேத்திரத்தில் மரணம் அடைந்தால் அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஒருவன் ஒரு புண்ணியத் தலத்தில் உயிரை விடத் தீர்மானித்து அந்த ஷேத்திரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த பிறகு அங்கு ஜீவன் பிரியாமல் சிறிய பாபத்தின் பலனாய் வேறு இடத்தில் இறந்துவிட்டால், அவன் மறு ஜென்மத்தில் காவிரிக்கரையில் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து,சாஸ்திரங்களிலும் வல்லவனாகத் திகழ்ந்து நல்ல ஒழுக்கத்துடன், தெய்வ, குரு பக்தியோடு வாழ்ந்து இறுதியில் நல்லுலகைச் சேர்வான்.
108 திவ்ய ஷேத்திரங்களில் ஏதாவது ஒன்றுக்கு யாத்திரை செல்கின்றவன் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு கோதானம் செய்கிற பலனை அடைகிறான். ஏதாவது காரணத்தால் பாதியில் வீடு திரும்பினால் அவன் திரும்பிய ஒவ்வொரு அடிக்கும் பசுவைக் கொன்ற பாவம் செய்த தோக்ஷத்தைப் பெறுகிறான்.
ஆதலால் தீர்த்த யாத்திரை முழுமையாகச் செய்து திருத்தலங்களில் பகவத் தியானத்திலும் பாகவத சேவையிலும் செலவிட்டு பிரசாதங்களை பக்தியோடு உண்டு, புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதனால் அவனுடைய இல்லற வாழ்வில் செய்த பாபங்கள் அழிகின்றன.
தீர்த்த யாத்திரை செல்கையில் ஒரு பாவச்செயலைச் செய்தால் அதற்கு விமோசனமே கிடையாது.

Wednesday, May 11, 2016

மஹா தந்திர யுக்தி - ஸ்ரீ கிருஷ்ணன்



மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.
 மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம். எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில்
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்..ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் "வேலை" இருந்திருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
 இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?
 1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...
 அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.
 இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன்திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு சிறு பயணம் .
யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும், சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராடமுடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன்  சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர்* தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது. எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி
செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தினஇரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராகவருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனைநிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன்,கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்என்று சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை தாசி புத்திரன்என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை. இப்பொழுது உங்களுக்குபுரிந்து இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.?  துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி.....

Whatsapp ல் படித்தது.

Thursday, May 5, 2016

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான்.



திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித்  இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான்.

 பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார். கூடவே லக்ஷ்மணனும்.

இதை நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய், வைகுண்டம் போய் கருடனிடம், “இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்றுஎன்கிறார்.

கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். பரமனையே காப்பாற்றியதால் கருடனுக்கு கர்வம் ஏற்பட்டது.

என்ன நாரதரே இராமர் பரம்பொருள் அவரே எல்லாம் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இல்லாவிட்டால் இராமரை யார் காப்பாற்றியிருப்பார்கள்?” என்றார்.

கருடனுக்கு ஏற்பட்டுள்ள கர்வத்தை புரிந்துகொண்ட நாரதர், இந்த சந்தேகத்தை சத்தியலோகம் சென்று பிரம்ம தேவரை கேட்கும்படி ஆலோசனை கூறினார். உடனே சத்தியலோகம் சென்ற கருடன் அங்கு பிரம்மதேவரிடம் கேட்க, பிரம்மதேவரோ நான் சதாசர்வ காலமும் தவத்தில் இருப்பவன் . எனக்கு எப்படி அது பற்றி தெரியும். ஒருவேளை சிவபெருமானிடம் கேட்டுப்பார். எனக்கு தெரிந்து அவர் ஒரு சிறந்த ராம பக்தர். உன் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்!என்றார்.

உடனே கருடன் கயிலாயம் சென்றான். அங்கு சிவபெருமானை பார்க்க, தேவாதி தேவர்களும் ரிஷிகளும் காத்திருக்க, சிவபெருமான் தரிசனத்திற்கு வர தாமதமானது.

கைலாயத்தில் ஒரு நொடி என்பதன் கணக்கே வேறு. சில நொடிகள் கருடன் காத்திருக்க அதற்குள் பல யுகங்கள் முடிந்திருந்தன.
கருடன் இறுதியில் நந்தியிடம் கெஞ்சினார். நந்தி பகவானே, ஒரு பெரும் சந்தேகத்தை பரமேஸ்வரனிடம் கேட்க வந்திருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் தரச் சொல்லுங்களேன். நான் மட்டுமல்ல இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர் தரிசனதிற்காக காத்திருக்கிறார்கள்என்று கூற, “சுவாமி பூஜையில் இருக்கிறார். அது முடிந்ததும் வருவார்!என்று நந்தி கூற கருடன் திடுக்கிட்டார்.
என்னது சிவபெருமான் பூஜையில் இருக்கிறாரா? முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கே அவருக்காக காத்திருக்க அவர் யாரை பூஜித்துக் கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் ஏற்பட்டது கருடனுக்கு.
அடுத்த கணம் அங்கே பிரத்யட்சமான சிவபெருமான், “கருடா நான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பூஜித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக அழைத்தது ஏனோ?”  கருடனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

சுவாமிஇங்கே முப்பத்துமுக்கோடி தேவர்களும் யுகயுகமாக தங்கள் தரிசனத்திற்கு காத்திருக்க, தாங்களோ ராமனை பூஜித்ததாக சொல்கிறீர்கள். நானோ அவரது மகத்துவம் உணராத பாவியாகிவிட்டேன். என் கர்வம் இத்தோடு ஒழிந்தது.

 இராமபிரானை நாகபாசத்திலிருந்து விடுவித்ததால் தலைக்கனத்தோடு திரிந்தேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மீது எனக்கு மாறாத பக்தி ஏற்பட என்ன செய்யவேண்டும்? அதற்கு அருள் செய்யுங்கள்…” என்று கேட்டுக்கொள்ள, பரமேஸ்வரன், மெலிதாக புன்னகத்தார்.

ஒரு பறவைக்கு மற்றொரு பறவையின் மூலமே ஞானத்தை புகட்டவேண்டுமே என்று திருவுள்ளம் கொண்ட கங்காதரன், “கருடா, அதை என்னால் விளக்க இயலாது. அதற்கு சாதுக்களின் சத்சங்கம் வேண்டும். நீ நேராக கயிலையின் வடக்கே உள்ள நீலாச்சலத்திற்கு செல். அங்கு காகபுசுண்டி ஹரியின் பெருமைகளை இதர ஜீவராசிகளுக்கு கூறிக்கொண்டிருப்பார். அவர் உனக்கு ராமபிரானின் மகத்துவத்தை விளக்குவார்என்று கூறி மறைந்தார்.

கருடனும் நீலாச்சலத்திற்கு சென்று காகபுசுண்டியை வணங்கி, இராமபிரானின் பெருமைகளை கூறுமாறு கேட்டுக்கொள்ள, அவரும் இராமபிரானின் பெருமைகளை விளக்கி, அனைத்தும் இராமபிரான் உருவாக்கிய மாயையே என்று விளக்கி கூறினார்.
சுவாமிஇராமபிரானை விட மகத்துவம் மிக்கவர் அண்ட சராசரத்தில் எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டேன். நன்றி!

இல்லை கருடாஇராமபிரானை விட மகத்துவம் மிக்கது ஒன்று இருக்கிறது….”

என்ன இராமபிரானைவிட மகத்துவம் மிக்கது இருக்கிறதா?” கருடன் ஆச்சரியத்திலும் குழுப்பத்திலும் மூழ்க, “இராமநாமமே அது. இராமனைவிட அவன் நாமத்திற்கு மகத்துவம் அதிகம்!என்றார் காகபுசுண்டி.

கருடனும் தெளிவுபெற்று அது முதல் இராமபக்தியில் சிறந்து விளங்கினார்.

ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே
விஷ்ணு சஹஸ்ர நாமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் கூறிய இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா?

 ராம ராம ராம என்று ஒரு முறை கூறினாலே மகாவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது தான்.
ஸ்ரீ ராம ஜெயம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வி கேட்க்கப்பட்டது.. அதற்கு அவர், "மனிதன் பிறக்கும் பொழுது பெயரில்லாமல் மூச்சு காற்றுடன் பிறக்கின்றான்"
 "இறக்கும்  பொழுது  மூச்சு காற்று இல்லாமல் பெயருடன் இறக்கிறான்."
"மூச்சுகாற்றுக்கும், பெயருக்கும் இருக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கை என்று " பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.. எவ்வளவு அழகான எளிமையான வாழ்க்கை தத்துவம்....

 ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...