Thursday, August 7, 2014

தீப பூஜை !

kvilakku

 

ஞாயிறு:-


ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.


திங்கள் :-


திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணை கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.


செவ்வாய்:-


செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.


புதன்:-
புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணை தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.


வியாழன்:-


வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணை கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.


வெள்ளி:-


வெள்ளிக் கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசே ஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.


சனி:-


சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபத்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்.

Wednesday, August 6, 2014

பிரகலாதனின் பக்தி ...

Lord Narasimha Ugra



இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை

Tuesday, August 5, 2014

வள்ளலாரைத் தீண்டி இறந்த பாம்பு!

VALLALAR

வள்ளலார் சில காலம் அப்பாசாமி செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு சமயம் மாலை வேளையில் அன்பர்களோடு செட்டியாரின் வாழைத் தோட்டத்தில் உலாவச் சென்றார். வள்ளலார் சிறிது நேரம் வாழைத் தோட்டத்தின் அழகைக் கண்டு ரசித்து அதைச் சுற்றி வந்து ஒரு வாழை மரத்தடியில் வந்து நின்றார். அப்போது ஒரு நல்ல பாம்பு வள்ளலாரின் தலையில் தீண்டியது. இதைக் கண்டு பதைத்த செட்டியாரிடம் வள்ளலார், “பதைக்க வேண்டாம். மருந்தாகும் திருநீற்றைக் கொண்டு இதை குணமாக்கலாம் என்று கூறி தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் திருநீற்றைப் பூசினார். பெருமானைத் தீண்டிய பாம்பு கீழே இறந்து விழுந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் அதிசயித்து நின்றனர்

உங்களுக்கு அதாவது தெரிந்ததோ?

arjun

ஒரு முறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதை வாசித்துக் கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலி செய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்குபுறமாக இருந்து கீதை வாசிக்க விட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு கீதையை யாரோ தவறாக வாசிப்பது காதில் விழுந்தது.
அவர் அருகில் சென்று கேட்டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாக தெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் தவறாக வாசிக்கிறீர்கள்?" என்றார் சைதன்யர் .
அதற்கு அவர் சொன்னார்.., "கீதையை திறந்ததும். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் நிற்கிறார்களே சுவாமி..! அதை காணும்போது என் உடல் நடுங்குகிறது..! என் நா தழு தழுக்கிறது..! கண்ணீர் பெருகி ஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்ன செய்வேன் பிரபு..?" என கண்ணீர்விட்டார்.
திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்யர் கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?" வெட்கி தலைகுனிந்தனர் அவரை கேலி செய்தவர்கள்.
இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது கண்ணீர் விடும் மிகஉயர்ந்த ஒரு உன்னதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடம் இல்லை. இந்த சரணா கதியை அடைந்தவர்களை யாரும்_வெல்லவோ, தோற்கடிக்கவோ முடியாது

Sunday, August 3, 2014

கடவுளின் கதை கேளுங்க ............

ram



ராமபிரான் வசிஷ்டரின் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அங்கே அனந்தன் என்ற வேலைக்காரன் இருந்தான். அவன் ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமற்ற சேவை செய்து வந்தான்.
ராமனின் எழுத்தாணியை கூராக்கிக் கொடுப்பான். வில்லின் நாண்களை சரிசெய்வான். பூஜைக்காக மலர் பறித்து தருவான். இருவரும் இணைபிரியா நண்பர்களாயினர்.
ஒருநாள், அனந்தன் பூப்பறிக்க போயிருந்த நேரத்தில், வசிஷ்டர் ராமனிடம், ""ராமா! உன் படிப்பு முடிந்தது. ஊருக்கு கிளம்பு,'' என்றார். ராமனும் சென்று விட்டார்.
அனந்தன் திரும்பி வந்தான். மற்றவர்கள் என்றால் என்ன செய்திருப்பார்கள்? இத்தனை நாள் பழகிய நண்பன் சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டானே என்று கோபித்திருப்பார்கள். ஆனால், அனந்தனோ, ""ஐயோ! ராமா! நீ கிளம்பும்போது,
என்னால் உன் அருகில் இருக்க முடியவில்லையே. உன்னை இனி எப்போது காண்பேன்,'' என புலம்பித் தீர்த்தான்.
நாளாக ஆக, ராமனின் பிரிவை அவனால் தாங்க முடியவில்லை. அரண்மனைக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்றதும், ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் காட்டிற்கு தாடகை வதத்திற்கு புறப்பட்டு சென்ற தகவல் கிடைத்தது.
அவன் விஸ்வாமித்திரரை மனதுக்குள் திட்டினான். "சிறுவன் என்றும் பாராமல் ராமனைக் காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாரே' என பதறினான்.
ராமனைத் தேடி காட்டிற்கே போய்விட்டான். "ராமா! ராமா!' என புலம்பித் திரிந்தான். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணீர் வழிய, "ராம் ராம் ராம் ராம்' என சொல்லிக்கொண்டே அமர்ந்து விட்டான். காலப்போக்கில், அவனைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்து விட்டது.
இதற்குள் ராமனுக்கு திருமணமாகி, சீதை கடத்தி மீட்கப்பட்டு, அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. சில முனிவர்கள், புற்று இருந்த இடத்தைக் கடந்து அயோத்தி சென்ற போது, புற்றுக்குள் இருந்து "ராம்...ராம்' என்ற குரல் கேட்கவே, புற்றை இடித்துப் பார்த்தனர். உள்ளே தாடி மீசையுடன் ஒருவர் இருந்தார். நடந்ததை அறிந்தனர். அவரது ராமபக்தியை மெச்சிய அவர்கள், ராமனிடம் அழைத்து சென்றனர்.
ராமன் பட்டாபிஷேகத்திற்காக மேடை நோக்கி நடந்த போது, அவரைப் பார்த்து விட்ட அனந்தன், "டேய் ராமா' என அழைத்தான்.



""அரசரை மரியாதையில்லாமல் பேசுகிறாயா?'' என்ற காவலர்கள் அவனை உதைக்க ஓடினர். அனந்தனை அடையாளம் கண்டு கொண்ட ராமன், காவலர்களைத் தடுத்து, ""அனந்தா! நீயா இப்படி ஆகி விட்டாய். உன்னிடம் சொல்லாமல் வந்ததற்காக என்னை மன்னித்துக் கொள்,'' என்றார் பணிவுடன்.
அருகில் நின்ற ஆஞ்சநேயர், "ராமா! என்னைப் போலவே இவரும் தங்கள் மீது அதீத பக்தி பூண்டுள்ளார். இவருக்கு தகுந்த மரியாதை செய்ய வேண்டும்' என்றார். ராமனும் அனந்தனை வாரியணைத்து ஆசி அருளினார்.
பின்னர் வசிஷ்டரிடம், "குருவே! என் தந்தை இருந்திருந்தால் என்னை "டேய்' என உரிமையுடன் அழைத்திருப்பார். இப்போது இவன் என்னை அதே முறையில் அழைத்தான். எனவே, இவனை என் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்க அனுமதி வேண்டும்' என்றார் ராமன்.
வசிஷ்டரும் சம்மதம் தெரிவித்தார். ராமன் தனது சிம்மாசனத்தில், அனந்தனை அமர வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றார். கூடியிருந்தவர்களின் கண்கள் பனித்தன. அனந்தனோ மெய்மறந்து விட்டார். பின்பே ராமன் பட்டம் ஏற்றார். எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நிஜநட்பு என்றும் தொடரும்.

எல்லாம் உனக்காக!

god

 

சீடன் ஒருவன், ""குருவே! கடவுளை அடைய நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?'' என கேட்டான்.
குரு அவனிடம், ""வேகமாக ஓடு! ஆனால், அதற்கு முன் கடவுளே! உனக்கா கவே ஓடுகிறேன் என்று எண்ணிக் கொள்,'' என்றார்.
""என்ன குருவே! கடவுளை அடைய வழி கேட்டால் ஓடச் சொல்கிறீர்களே! ஏன் உட்கார்ந்து கொண்டு ஏதாவது செய்ய வழியில்லையா?'' என்றான்.
""ஏன் இல்லை? தாராளமாகச் செய்யலாம். ஆனால், உட்காருவதற்கும் நிபந்தனை உண்டு. கடவுளே! உனக்காகவே உட்காருகிறேன் என்ற எண்ணியபடி உட்கார். அவ்வளவு தான்!'' என்றார்.
""ஓடிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தால் போதுமா? ஜபம், தவம் ஏதும் தேவையில்லையா?'' என்று கேட்டான்.
""தாராளமாய் செய்யலாம். ஆனால், ஒன்றை நினைவில் வை. கடவுளே! இவற்றையும் உனக்காகவே செய்கிறேன் என்று சொல்,'' என்றார் குருநாதர்.
"" அப்படியானால், கடவுளுக்காக இதைச் செய்கிறேன் என்னும் கருத்து தான் இங்கு முக்கியமாகிறது. செயலை விட கடவுளுக்கு அர்ப்பணம் என்பது தான் முக்கியமா?'' என்றான் சீடன்.
""செயலும் அவசியம் தான். செயல் இல்லாவிட்டால், மனதில் இவ்வகை பாவனையே தோன்றாது. எப்போது எண்ணமும், செயலும் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் எதுவும் முழுமையடையும். கடவுள் விஷயத்தில் இது மிக மிக அவசியம்,'' என்றார் குரு.

Friday, August 1, 2014

பாவ மன்னிப்பு எப்படி கிடைக்கும். ?

pulaal

என்னுடைய நண்பர் நிறைய அன்னதானம் செய்வார். நிறைய கடவுள் பக்தி உள்ளவர், அதே நேரத்தில் கோழி , ஆடு போன்ற வாயில்லா உயிர்களை கொன்று அதன் இறைச்சியைக் கொண்டு விருந்து படைத்து தானும் உண்பார். அவரை ஊர் மக்கள் அனைவரும் அன்னதான பிரபு என்று அன்புடன் மதிக்கத் தக்கவராக இருந்தார் .
வாரம் தவறாமல் சர்ச்சு, மசூதி, கோவில் போன்ற இடங்களுக்கு சென்று இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு வழிபாடு செய்து வருவார்.
ஒருநாள் தொழில் சம்பத்தமாக அவருக்கும் அவர் நண்பருக்கும் சண்டை வந்து அவர் தன்னுடைய நண்பரைக் கொலை செய்து விட்டார் . அவரை காவல் துறை கைது செய்து நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள் .
அங்கே கொலைக் குற்றத்திற்கான வாதம் நடந்து கொண்டு இருந்தது. அவருடைய வக்கீல் சொன்னார் . ”ஐயா அவர் நிறைய அன்னதானம் செய்பவர் மக்களிடம் நிறைய மதிப்புள்ளவர். பாவ மன்னிப்புக்காக தினமும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டு உள்ளவர் ஆதலால் இந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து அவரை விடுதலை செய்து விடுங்கள்.” என்றார்
அதற்கு நீதிபதி , “நீங்கள் சொல்லியபடி அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை . அவர் செய்த கொலைக் குற்றத்திற்கு உண்டான தண்டனை, அவருக்கு தூக்கு தண்டனைதான்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நாம் தினமும் வாயில்லாத உயிர்களைக் கொன்று அதன் புலாலை உண்டு உடம்பை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுத்து விடுவாரா ?
ஊரில் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இறைவன் படைத்த உயிர்களை கொன்று தின்றுவிட்டு இறைவனிடம் சென்று பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுக்க மாட்டார் .
கொல்லான் புலாலை மறுத்தானை

எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்.

இது தெய்வத்திருமறை சிந்திக்கவும் .

 

நன்றி: முகநூல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...