Tuesday, September 30, 2014

உன்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்!

sai18

”எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்

 

நமக்கு இன்றுள்ள பிரச்சினைகளைவிட நமக்கு ஏற்படுகிற குழப்பங்கள்தான் அதிகம். இந்தக்குழப்பத்திற்குக் காரணம், ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கிற புதிய வாய்ப்புகள், நாம் அறிமுகமாகிற புதிய சூழல்கள். இதனால் இது நல்லதா? அது நல்லதா? என யோசித்து குழம்புகிறோமே தவிர, சரியான முடிவு எடுக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.



இந்த நிலையில் இருக்கிற உன்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்! என்று பாபா கூறுகிறார். சத்சரித்திரம் கூறுகிறதை கேளுங்கள்.



தீட்சித் போன்ற பக்தர்கள் பாபாவுடன் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பக்தர் கேட்டார்: “பாபா, எங்கே போவது?” என்று!



பாபா சொன்னார்: “ மேலே போ!” என்று!



கேள்விக்கேட்டவர் மேலும் பாபாவிடம் கேட்டார்: ”வழி எப்படியிருக்குமோ?”



”பல வழிகள் உள்ளன. சீரடியிலிருந்தும் ஒரு வழி உள்ளது. ஆனால் இந்த வழி கடினமானது. வழியில் ஓநாய் போன்ற மிருகங்களையும் குண்டு குழிகளையும் காண நேரலாம்!” என்றார் பாபா.



உடனே, தீட்சித் குறுக்கிட்டு, ‘ வழிகாட்டி உடனிருந்தால்?” எனக் கேட்டார்.



பாபா, ”அப்பொழுது எந்தவித குழப்பமும் இருக்காது. வழிகாட்டி உன்னை சிங்கம் ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்தும், குண்டு குழிகளில் இருந்தும் காப்பாற்றி சரியான இடத்திற்கு அழைத்துச்செல்வார். அவர் இல்லையென்றால் காட்டில் வழி தவறவும், குழியில் விழவும் கூடும்!” என்றார்.



இந்த சம்பாக்ஷணை, குருவைப் பற்றியது அல்லவா? இது ஆன்மீகத்திற்குத்தானே பொருந்தும் என நினைக்காதீர்கள். பாபா ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல, லவுகீகத்தில் இருப்பவர்களுக்கும் கடவுள்தானே!



நாம் இந்த விக்ஷயத்தை நமது வாழ்க்கையோடு பொருத்தி தியானிக்கலாம்.



மேலே போ!



நாம் குழம்பும்போது, உடனடியாக சோர்ந்து விடுகிறோம். எல்லாம் அவரது அனுமதியோடும், ஆசியோடும் நடக்கிறது என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அடுத்த மாதம் உனக்கு மிகப்பெரிய வேலை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில், இந்த மாதம் செய்கிற வேலையை விட்டுவிடுவது ஆபத்தானது அல்லவா? ஆகவே, இதில் தொடர்ந்து கொண்டே, அந்த வேலையை எதிர்பார்க்கவேண்டும்.



மேலே போ என்ற பாபாவின் வார்த்தைக்கு தொடர்ந்து முன்னேறு என்று பொருள். ஆன்மீகமாக இருந்தாலும் சரி, லவுகீகமாக இருந்தாலும் சரி, முன்னோக்கித்தான் போகவேண்டும். பின்னே திரும்பிப் பார்க்கக்கூடாது. அதுவா? இதுவா என சந்தேகப்படக்கூடாது. தடைகளைத் தாண்டி போய்க்கொண்டே இருக்க வேண்டும்.



”பிறந்த குழந்தை வெளிச்சத்தைப் பார்க்கக்கண்கூசுகிறது என்பதற்காக கண்களை மூடிக் கொண்டே இருந்தால், அதனால் கடைசிவரை உலகத்தைப் பார்க்கவே முடியாமல் போய்விடும். நடக்கும்போது விழுந்துவிடுவோம் என பயந்து படுத்தே கிடந்தால், வாழ்க்கையில் அக்குழந்தையால் நடக்க முடியாமலே போய்விடும்.



குழந்தையாயிருந்தபோதே, நீ உலகத்தை உற்றுப்பார்த்தாய்! அந்தப் பழக்கத்தால் இப்போது உன்னால் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. கால்களில் சக்தியில்லாதபோதே, நடக்கப் பழகினாய்.. அதனால் இப்போது மான் போல துள்ளிக் குதித்து ஓடுகிறாய்..



அறியாப் பருவக் காலத்தில் உன் சக்திக்கு மீறிய விக்ஷயங்களை தைரியமாக எதிர்கொண்டதைப்போலவே, இப்போது எதிர்காலத்தைப் பற்றி அறியாத நிலையில் உள்ளபோதும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். முன்பிருந்த அதே தைரியத்தை வளர்த்துக்கொண்டு பிரச்சினையை எதிர்கொள்ள முடியும்! தொடர்ந்து முன்னேறு! ” என்கிறார் பாபா.



எந்த வழியில் முன்னேறுவது?



போகச் சொல்லிவிட்டார். எந்த வழியில் போவது என்பது அடுத்தக் குழப்பம்.



இதுவரை நான் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்துவிட்டேன்.. பெரும்பாலானவை தோல்வியில் முடிந்துவிட்டன. நான் ஜெயிக்கலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் பலரும் இப்படித்தான் தோற்றுப் போய் விட்டார்கள். ஆகவே, எப்படிப்போவது என்று தெரியவில்லை.



இதற்குத் தீர்வாகத்தான் பாபா சொன்னார்: “பல வழிகள் உள்ளன. சீரடியிலும் ஒரு வழி உள்ளது!”



ஆன்மீகத்தில் வழிகாட்டுவதற்கு பல சத்குரு, குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பினால் உலகியல் வாழ்க்கைக்கும் வழிகாட்டுவார்கள். ராகவேந்திரரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுவார்கள், ரமணரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுதல் வைப்பார்கள். சாயியை நம்புகிறவர்கள் பாபாவிடம் வேண்டுவார்கள் அல்லவா? இப்படி பல வழிகள் இருந்தாலும், பாபாவின் வழியும் உள்ளது. அந்த வழி சுலபமாக இருக்கும் என நினைத்து விடவேண்டாம், கடினமானது என்கிறார் பாபா.



நாம் நினைத்தவுடனே அனைத்தும் நடந்து விட வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்படி நடக்காது.. அதற்கான நேரம் வரவேண்டும், நமது நம்பிக்கை அந்த விக்ஷயத்தில் திடமாக இருக்க வேண்டும். சோதிக்கப்படும்போது தளர்ந்துவிடாமல் அவர் மீது உறுதியாக பாரத்தைப் போடவேண்டும்.



இப்போதுள்ள மனநிலையில் அதெல்லாம் சாத்தியப்படாது.. என்கிறார் பாபா. இது சாத்தியமில்லாவிட்டால் வேறு வழியில் போகலாம் எனச் சென்றாலும், அதுவும் சாத்தியம் ஆகாது. எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்.



நம்பிக்கையை - குருவை மாற்றிக்கொண்டே இருந்தால் எந்தக் காலத்திலும் வெற்றிகிட்டாது. இதனால்தான் பாபா ; “இந்த வழி கடினமானது!” என்றார்.



எச்சரிக்கை தேவை:



வழியில் ஓநாய், சிங்கம் போன்ற மிருகங்கள் இருக்கும்.. குண்டு குழிகள் இருக்கும் என்று பாபா எச்சரிக்கிறார்.



) மிருகங்களிடம் ஜாக்கிரதை



ஓநாய், சிங்கம் என பாபா குறிப்பிடுவது காட்டில் வாழ்கிற மிருகங்கள் அல்ல.. நம்முடனே இருந்து கொண்டு நம்மை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழிப்பதற்காகக் காத்திருக்கிற பகைவர்களை - போட்டியாளர்களை, பொறாமைக்காரர்களைப்பற்றித்தான் அவர் இப்படி எச்சரிக்கிறார்.



பலராக கூட்டு சேர்ந்து நம்மை வீழ்த்த நினைப்பவர்களும் இருக்கிறார்கள், தனியாளாக இருந்து போட்டுக்கொடுத்து நம்மை காட்டித் தந்து வீழ்த்துபவர்களும் இருக்கிறார்கள்.



நமக்கு எதிரிகள் பணியிடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நண்பர்கள் வடிவில், உறவுக்காரர்கள் வடிவில், தெரிந்தவர்கள் வடிவில், சில சமயங்களில் சொந்த இரத்த உறவுகளிலேயே எதிரிகள் தோன்றிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, ஆலோசனை தருகிறவர்கள் என்ற பெயர்களில் புகுந்துகொண்டும் நம்மை அழித்துவிடுவார்கள்.



சாயி பக்தர்கள் என்ற பெயரில் அறிமுகமாகி, எத்தனையோ பேருடைய குடும்பங்களை நாசம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.



நீ யாரை அதிகமாக நம்புகிறாயோ, அவரால் ஏமாற்றப்படுவதும் உண்டு. நீயுமா நண்பா? என ஜூலியஸ் சீசர் கேட்டதைப் போல, எல்லோருடைய வாழ்விலும் இந்த நிகழ்வுகள் உண்டு.



இத்தகைய நபர்களால் இதுவரை நீ பாதிக்கப்பட்டு இருப்பாய்.. இதனால் யாரைப் பார்த்தாலும் அவர்கள் மேல் ஒருவித அச்சம் உனக்கிருக்கும். குழப்பம் நீடிக்கும்..



இப்படிப்பட்ட நபர்கள் உன்னைச் சுற்றியிருக்கும் போது வெற்றி எப்படி வரும்?



உன்னுடைய சக்தியை மீறி, வாழ்வோம் என்ற நம்பிக்கை அற்றுப் போகும்வகையில் உன்னை இந்த விலங்குகள் எதிர்கொள்ளும். அப்போது வெற்றி எங்கிருந்து வரும்?



பாபாவை நம்பினால் மட்டுமே வரும்.



இப்படிப்பட்டவர்கள் யாருமில்லை என நீ நினைத்து நடைபோட்டால் அடுத்த சோதனை ஒன்று காத்திருக்கிறது.. அது குண்டும் குழியும் நிறைந்த வழிகள்..



) வழிகளில் எச்சரிக்கை தேவை்



எதிரிகள் யாருமே இல்லை. ஆனால் இதில் தப்பிவிடலாம் என நம்பிக்கொண்டிருப்போம். நாமே முயன்று தனிவழியொன்றை உருவாக்குவோம்.



மற்றவர்கள் போன பாதைதானே என நினைத்து நாமும் அதில் போகமுயன்று விழுந்துவிடுவோம்.



ஏன் இப்படி?



பாதைகள் எல்லாமே உறுதியானவையோ, தெளிவானவையோ கிடையாது. மலர் போர்த்தப்பட்ட பாதையாக இருந்தாலும் அதன் அடியில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.



ஆர்வத்தால் நாம் ஒன்றில் ஈடுபட்டு பிறகு



அதில் சிக்கிக்கொள்வோம். இதைத் தவிர்க்கத்தான் ”எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர்.



லாபம் வருமென நினைத்தது நட்டத்தில் முடிவதும், கடன் வாங்கி வீடுகட்டி, வட்டிக்காக வீட்டை விற்பதும், நல்லது என நினைத்து செய்து கெட்டதை சம்பாதிப்பதும் போன்ற விக்ஷயங்களே அனைத்தும் குண்டு குழிகளான பாதைகள்.



இத்தகைய விக்ஷயங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத நிலை வந்துவிடும்.



இதெல்லாம் பாபாவின் எச்சரிக்கையில் இருக்கிற விக்ஷயங்கள்.



பிறகு என்ன செய்வது?



வழி காட்டியை வைத்துக்கொள்ள வேண்டும்.



வழிகாட்டியின் அவசியம்:



சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியாது என்பார்கள்.



இதெல்லாம் எதற்காக என்றால், விக்ஷயம் தெரியாத நாம், விக்ஷயம் தெரிந்த நல்லவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக!



மேல் நாடுகளில் மலைச்சறுக்கு, மலை ஏறுதல் போன்றவற்றுக்குச் செல்பவர்கள், தங்களுடன் ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்வார்கள்.



ஏற்கனவே, அந்த வழிகளைப் பற்றிய அறிமுகம் வழிகாட்டிக்கு இருப்பதால், அவர் தன்னுடன் வருகிறவர்கள் வழி தவறிவிடாமல் சரியான வழியை காட்டுவார். அது மட்டுமல்ல, மலையில் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் - எது சுலபமாக கடக்கக் கூடியது? எந்த இடத்தில் மலைப் பாம்பு போன்றவை இருக்கும் என்பன வற்றையெல்லாம் அறிந்திருப்பதால், தன்னுடன் வருபவர்களுக்கு இவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவார்.



கூடவே, போகும்போது தான் வைத்துள்ள நாய்களை முன்னால் அனுப்பி, சூழல்களை அறிந்து கொள்வார். புதர்களில் மலைப் பாம்புகள் இருக்கக் கூடும் என்பதால் கற்களை எடுத்து வீசிக்கொண்டே நடக்கவைப்பார்..



அதேபோல, மலை ஏறுகிறவர்களை தன் பின்னால் வரச் சொல்லிவிட்டு, தான் முன்னால் செல்வார். உயிர்போனாலும் தன்னுயிர் போகட்டும், தன்னை நம்பியவர்கள் வாழட்டும் என நினைப்பார். இப்படித்தான் பாபாவும்!



நாம் அவரை முழுமையாக நம்பி, சரணடைந்து விட்டால் சரியான வழியை எளிமையாகத்தெரிவித்து, நமது செயல்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதற்காக நம்முடனேயே இருப்பார். அதுவும் ஜன்ம ஜன்மமாக!



அவர் சரியான வழியைக் காட்டுவதற்கு, நீங்கள் அவருக்கு ஒத்துழைப்பை முழுமையாகத் தாருங்கள்.



வெற்றி பெறுங்கள்.



ஸ்ரீ சாயி வரதராஜன்

Monday, September 29, 2014

சத்குரு சாயியின் உத்தம பக்தர்கள்!

sai59

மனித வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்கதை. மனிதன் ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றை குறைக்கவோ, போக்கவோ முடியும். கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை பற்றிக்கொள்வது. இதனினும் எளிது மகான்களுக்கு எல்லாம் மகானான பாபாவின் பாதங்களைப்பற்றிக் கொள்வது.



சீரடிக்குச் சென்றேன், என் கஷ்டம் தீரவில்லை. உடல் நலமில்லாமல் போய்விட்டது. நகை திருடுபோய்விட்டது. பணத்தைப்பறிகொடுத்தேன். பாபாவை தினமும் வணங்குகிறேன், நினைப்பது நடக்கவில்லை.



இப்படி நிறைய புலம்பல்கள்.. ஒரு காலக்கட்டத் தில் நிறைய பரிகாரம் என்ற பெயரில் பணச் செலவு. அலைச்சல்.. எதுவும் எடுபடுவதில்லை.



இவற்றுக்கு என்னதான் தீர்வு? என ஆழ்ந்து யோசித்தபோது, பாபா வாழ்ந்தபோது அவரிடம் அன்பு கொண்டு பழகிய பக்தர்களின் வாழ்வைப்படிக்க நேர்ந்தது.



அவர்களின் வாழ்க்கையும் அவர்களுக்கு பாபாவின் உபதேசமும், வழிகாட்டுதலும், அவர்களின் சேவையும் எல்லா பிரச்சினை களுக்கும் ஒளி விளக்காக இருந்தது.



அதையே நாம் பின்பற்றினால் நிச்சயம் விடுதலை பெறலாம்.



அதற்காக சாயி பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை இனி தொடர்ந்து படிக்கலாம்.



 



கு. இராமச்சந்திரன்

எப்போதும் காப்பேன்!

sai18



சாயி பக்தையான நான் சென்னையில் வசித்த போது, மும்பையில் இருந்த எனது தந்தையார் கீழே விழுந்து தொடை எலும்பு முறிந்துவிட்டதாக தகவல் வந்தது. அவரை கவனித்துக்கொள்ள ஆள் தேவை என்பதால் நான் அங்கு போக வேண்டிய சூழல்.
என்னிடம் ஒரு ரூபாய்கூட இல்லாத நிலையில், செய்வது அறியாது திகைத்தேன். ஐதராபாத்திலுள்ள என் தங்கை, மும்பை மெயிலுக்கு ஈ டிக்கெட் போட்டுக் கொடுத்தாள். அது வெயிட்டிங் லிஸ்டில் இருந்தது. எனது ஒன்றுவிட்ட சகோதரர் இதை கன்பர்ம் செய்து தருவதாகக் கூறியதால், ரயில் நிலையம் சென்றேன். டி.டியிடம் டிக்கெட்டை காண்பித்தபோது, ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை.
செய்வது அறியாது இரவு 12.30 மணி வரை அங்கு நின்றிருந்தேன். எனது தங்கைக்கு போன் செய்தேன். ஏதேனும் பஸ் பிடித்து ஐதராபாத் வந்துவிட்டால் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸில் மும்பைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினாள்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் ஆட்டோவில் சென்றேன். புறப்பட்ட போது எனக்கு முன்னால் இன்னொரு வண்டியில் பாபா முன்னால் செல்வது தெரிந்தது. தொடர்ந்து நாமஜெபம் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு பஸ் கிடைத்து ஐதராபாத் சென்று அங்கிருந்து மும்பை சென்றேன்.
அதேபோல, எனது தங்கை மகளின் திருமணம் முடிந்து ரயிலில் ஏறும்போது தாங்க முடியாத மூச்சுத்திணறல் வந்தது. ஆனால் அது ஸ்ரீ பாபாவின் கருணையால் சிறிறு நேரத்தில் சரியாகிவிட்டது. இருந்தபோதும், நாலைந்து நாட்களாக சரியாக சாப்பிட முடியாத நிலை தொடர்ந்தது.
இதே நிலையில் நான் சொந்த ஊரான நாக்பூர் வந்து சேர்ந்தேன். நாக்பூர் வந்த மறுநாள் இரவு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு என் மகனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன்.
இரண்டு மூன்று நாட்கள் ஐசியுவில் இருந்தபோது, எனது இரத்த நாளத்தில் இரண்டு அடைப்பு இருப்பது கண்டு பிடித்து ஸ்டண்ட் போட்டனர். மயக்க மருந்து கொடுக்கும்போது மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
நான் சாயி நாமத்தை சொல்லியபடி இருந்தேன். மருத்துவர்கள் சரியான சிகிச்சை செய்து காப்பாற்றினார்கள்.
நான் மத்திய வர்க்கத்துப் பெண் மணி. என்னிடம் சிகிச்சை பெறுவ தற்குக்கூட பணமில்லாத நிலை. இந்த நிலையில் எனது சகோதர சகோதரிகளும், உறவுக்காரர்களும் பணத்தாலும் சரீரத்தாலும் உதவி செய்து என்னைக் காப்பாற்றி அனுப்பினார்கள்.
இதேபோல, சமீபத்தில் என் மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென இரத்த சர்க்கரை அளவு குறைந்து விட்டதால், வேகமாகச் சென்று கொண்டு இருந்த வண்டியிலிருந்து விழுந்தேன். எனக்கு என்னவோ ஆகிவிட்டது என என்னுடைய மகன் பதறிப்போய் வண்டியை நிறுத்திவிட்டு கதறியபடி ஓடிவந்தான்.
எனக்கு சர்க்கரைக் குறைவால் ஏற்பட்ட மயக்கத்தைத் தவிர வேறு எதுவுமே ஆகவில்லை. பாபா எப்படித்தான் என்னைத் தாங்கிப் பிடித்துக்காப்பாற்றினாரோ தெரியாது..
எல்லையில்லாத அவரது கருணையை நினைக்கும்போது கண்களில் இருந்து நீர் கசிகிறது, உடல் புல்லரிக்கிறது. அவரது பக்தராக இருப்பதே கோடி புண்ணியமான செயலாகும்.
கமலா,நாக்பூர்

Sunday, September 28, 2014

உன் வீட்டிற்க்கு வருகிறேன்!

srisai

நீங்கள் என் வீட்டிற்கு வந்து கால் வைத்தால் போதும், என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என பல பக்தர்கள் எப்போதோ பார்க்கிற தங்கள் குருவிடம் வேண்டுவார்கள்.
பாபாவுடன் இருந்துகொண்டே மிகவும் கஷ்டப் பட்டுவந்தவர் மகல்சாபதி. பணம் கொடுத்து உன்னை பெரிய ஆளாக்கிவிடுகிறேன் என்று பாபா பணம் கொடுக்க முன்வரும் போது, வேண்டாம் உங்கள் அருளிருந்தால் போதும் என மறுத்து விட்டவர். இதனாலேயே பல தினங்கள் குடும்பத்தோடு பட்டினியும் கிடந்தவர்.
பாபாவுடன் மசூதியிலும், சாவடியிலும் மாறி மாறி படுத்துக்கொள்வார். இரவு முழுவதும் உறங்காமல் பாபாவின் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அவரது இதயத்துடிப்பை கவனிப்பது மகல்சாபதி வழக்கம்.
பாபா மூன்று நாட்கள் தனது உடலைவிட்டு நீங்கியபோது, அந்த உடலை முற்றிலுமாக பாதுகாத்து வந்தவர். இத்தனைக்கும் மேலாக சீரடிக்கு மட்டுமின்றி உலகத்துக்கு பாபாவை அறிமுகம் செய்துவைத்தவர் அவர்.
அவரது நிலையில் நாமிருந்தால் என்ன நினைப்போம், நான் வேண்டாம் என்றுதான் சொல்வேன்! ஆனால் நீதானே சூழ்நிலை பார்த்து வற்புறுத்தித் தரவேண்டும்.
உனக்காக ஒன்றும் செய்யாதவன் எல்லாம் உன்னிடம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறான், உனக்குப் பெயர் வைத்து, உயிர் காத்து கூடவே இருக்கிற என்னை கஞ்சிக்கில்லாமல் அலைய விட்டுவிட்டாயே! நன்றிகெட்டவனே! என்றெல்லாம் பேசுவோம்.
நமது நிலையைப் பார்க்கிற மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்றால், ராமர் இருக்கும் இடத்தில் மோகம் இருக்காது, மோகம் இருக்குமிடத்தில் ராமர் இருக்கமாட்டார். பகலிருக்கும் இடத்தில் இரவு இருக்காது, இரவு இருந்தால் பகலிருக்காது. இப்படித்தான் சாயி இருக்கும் இடத்தில் கஷ்டம் இருக்க முடியாது! என்பார்கள்.
மகல்சாபதி அப்படிப்பட்ட விதண்டாவாதம் பேசுபவர் கிடையாது. எதிர்பார்ப்பதும் இல்லை. பயந்த சுபாவம்.. மிகுந்த பக்தியுள்ளவர்.
ஒருநாள் பாபா அவரது மனைவியைக் கூப்பிட்டு நான் இன்றைக்கு உன் வீட்டுக்கு வருவேன்..வந்தால் வேண்டாம் என்று என்னை நிராகரித்து விடாதே! எனக் கூறி அனுப்பினார்.
திருமதி மகல்சாபதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பாபா வந்தால் சந்தோக்ஷம்தானே! எதற்காக பாபா இப்படி கூறுகிறார் என நினைத்துக்கொண்டே வீடு போய்விட்டார்.
அன்றைக்கு திருமதி மகல்சாபதியிடம் கூறிய அதே பாபா, இன்றைக்கு உங்களிடம் கூறுகிறார். திருமதி! நான் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறேன்..வந்தால் என்னை நிராகரித்துவிட வேண்டாம்!
பாபா கூறிய சூழலைப் பாருங்கள்.. வீட்டில் வறுமை.. பல நாட்களாகத் தொடர்ந்து பட்டினி..கையில் பத்துப் பைசாகூட கிடையாது.. இந்த நிலையில் பாபா வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? என நிச்சயம் அந்த அம்மாள் கஷ்டப்பட்டு இருப்பாள். நீங்கள் எப்படி?
இன்னும் பிள்ளைக்குத் திருமணமாகவில்லை.கடன் தொல்லை, நிம்மதியில்லை, கணவன் மனைவி இடையே ஒன்றுமையில்லை. வேலையில் பிரச்சினை. இப்படி ஏதாவது ஒன்று உள்ளதா?
பாபா உங்கள் வீட்டுக்கு வருகிறார்..
மகல்சாபதி வீட்டுக்கு அவர் எப்படி வந்தார்? என் வீட்டுக்கு அவர் எப்படி வருவார்?
பாபாவை பார்க்க தீட்சித் என்ற பக்தர் வந்தார். அவர் கையில் உறையிடப்பட்ட கவரில் பத்து ரூபாய் வைத்திருந்தார். அன்று ஏனோ, மகல்சாபதி நினைவில் இருந்த அவர், பாபாவிடம், பாபா இந்த மகல்சாபதி யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதவர். அவரது இந்தப் போக்கால் குடும்பம் வறுமையில் இருக்கிறது, பசி பட்டினியோடு இருக்கிறார்கள்.
நான் இந்தப் பணத்தைக் கொடுத்தால் கவுரவக்குறைச்சலாக நினைப்பான். நீங்கள் தந்ததாகக் கூறி கொடுத்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வான் எனக்கூறினார். உடனே, பாபாவும் சரி என ஒப்புதல் தந்தார். தீட்சித் உடனடியாக மகல்சாபதி வீட்டுக்குச் சென்று பணத்தை அவரது கையில் திணித்து, பாபா தந்துவிட்டு வரச் சொன்னார் எனக் கூறினார்.
அப்போதுதான் மகல்சாபதி மனைவிக்கு புரிந்தது, இதுதான் பாபா நமது வீட்டுக்கு வருவது என்பது!
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.. பாபா என்பவர் ஸ்ரீநிவாசன்.. செல்வத்திற்கு அதிபதி. பிரச்சினைகளுக்குத் தீர்வு.
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்;.

Saturday, September 27, 2014

சாயிபுத்ரன் பதில்கள்

green
சாயி பக்தி போதுமானது, எளிதானது என்று எப்படி கூறுகிறீர்கள்?
(எம். சுதா, சென்னை - 15)
சாயி, கண்ணெதிரே உள்ள கங்கா ஜலம் போன்றவர். அவரை எப்படி இழுத்தாலும் உங்கள் இழுப்புக்கு இரங்கி, இறங்கி வருவார். நிதர்சனத்தை - யதார்த்தத்தை சொல்லித்தருவார். எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்வார். இவரைப் போன்று வேறு யாரும் ஆன்மீகத்தை எளிமையாக போதிக்கவில்லை என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.
சாயிபுத்ரன் பதில்கள்
மற்றவர்கள் நிர்ப்பந்தப் படுத்தும்போது எப்படி நடந்து கொள்வீர்கள்?
(கோபால், திருவானைக்கா)
நிர்ப்பந்தப் படுத்துபவரின் தகுதியை அறிந்து, அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப நடந்துகொள்வேன்!
சாயிபுத்ரன் பதில்கள்
நீங்கள் தற்போது ஓர் ஆன்மீக அமைப்பைத் தொடங்கியிருப்பதாக, ஊர் ஊராக கிளைகள் உருவாக்குவதாக சாயி தரிசனத்தில் பார்த்தோம். எங்கள் ஊரில் இப்படியொரு அமைப்பை நிறுவினால் அதனால் எங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தலைமையின் கீழ் செயல்படுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்ன?
( கே. முத்துராமன், திருப்பூர்)
இப்படியொரு கேள்வியை நமது சண்முகம் ஐயா கூட கேட்டிருந்தார்கள். இதுவரை அது பற்றி எதையும் யோசிக்கவில்லை. அவர் போன்ற பெரியவர்களைக் கலந்தாலோசித்து யோசித்து முடிவு செய்ய வேண்டிய விக்ஷயம். இது பற்றி சங்க விதிகளில் சரத்துக்கள் சேர்க்கப்படும்.
சாயி பக்தியை பெரிய அளவில் வளர்க்கும் நோக்கில் இந்த ஆன்மீக அமைப்பு உருவாகிறது. இதன் கீழ் வரும்போது ஒருங்கிணைந்த சாயி பக்தியை ஏற்படுத்த முடியும். காசு பணம் நம்மிடம் கிடையாது. கடவுள் பக்தியைப் பிரச்சாரம் செய்ய ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. நடிகர்களுக்கு மன்றங்கள் உள்ளன, எதற்காக என்று அதை வைப்பவர்களுக்குத் தெரியாது. கடவுள் பெயரிலான அற அமைப்பு உருவாகும்போது சமூகம் சீர்பெறும். மற்ற நற்பணிகளும் செய்யமுடியும்.

Friday, September 26, 2014

சாயிபுத்ரன் பதில்கள்

bless

பாபா சிலையை வீடு வீடாக எடுத்து வந்து வைத்தால் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி சிலர், பாபா சிலையை வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்களே, உண்மையில் பிரச்சினை தீருமா?

(ஆர். ராதா, சென்னை - 83)

நிச்சயமாக சிலையை எடுத்துச் சென்று பூஜை செய்வது போல நடிக்கிறவரின் பிரச்சினை தீரும். இப்படிப்பட்டோர் பின்னால் போகிறவர்களுக்கு பாவம் சேரும்.

சாயிபுத்ரன் பதில்கள்

எனக்கு பாபாவிடம் பக்தி ஏற்பட்டு, காலப் போக்கில் காணாமல் போய்விட்டது. திட நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. இது ஏன்?

(ஜி. குமார், செங்கல்பட்டு)

சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதனமாக பக்தி இருக்கும் வரை திடநம்பிக்கை வராது.ஆர்வத்தின் காரணமாக பக்தி செலுத்தினா லும், கோயிலில் முக்கியஸ்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பினாலும் பக்தி பாதியில் முடிந்துவிடும்.

Thursday, September 25, 2014

சாயி புத்ரன் பதில்கள்

sai59

குருவை எப்போது வணங்க வேண்டும்?  எப்படி வணங்கவேண்டும்?

( கே. ராமலிங்கம், மாமல்லபுரம்)

குருவை பக்தி வந்த பிறகு வணங்க வேண்டும். பக்தி வராமல் ஒருவரை குருவாக வணங்கும்போது அவர் மீது சந்தேகம் வந்துவிடும். பக்தி வந்த பிறகு வணங்கினால் குருவின் மீது சந்தேகம் எழாது. குருவை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும்.

meekkudi

இப்போதெல்லாம் பாபாவை ஈக்கள் போல மக்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களே!  எப்படி?

(ஏ. அன்பு மணி, பெங்களூர்)

பாபா செய்யும் அற்புதங்கள்தான் காரணம். ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைப்பதில்லை. காரணம், பலர் ஈக்கள் போல இருக்கிறார்களே தவிர, தேனீக்கள் போல இருப்பதில்லை. ஈக்கள் நல்லதிலும் கெட்டதிலும் வாயை வைக்கும். தேனீ போல நல்லதில் மட்டும் வாயை வைக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பக்கத்தில் இருந்து உதவி செய்கிறார்.

sairam

ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற சக்திகளைப் பற்றி சொல்லுங்களேன்?

(ஆர். பிரபு, கடலூர்)

கண்டவுடன் அறிந்துகொள்ளுதல், ஞான சக்தி, அறிந்து கொண்ட பொருளை அடைய விரும்புவது இச்சா சக்தி.  அதனைஅடைய வேண்டிய முயற்சிகளை செய்வது கிரியா சக்தி.

Tuesday, September 23, 2014

நல்ல வழி !

Tamil-Daily-News-Paper_80376398564_zps15f1b712

என் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தீர நல்ல வழி ஒன்றை சொல்லுங்களேன்?

(எஸ். ஜமுனா, சென்னைடூ42)

செலவில்லாமல் நாமஸ்மரணை செய்துவிட்டு அமர்ந்திருங்கள். பகவான் பார்த்துக் கொள்வான் என்று எளிய பரிகாரம் சொன்னால் கேட்கமாட்டார்கள். பரிகாரம் என்ற பெயரில் பல லட்சங்களை கறந்து கொள்ளுங்கள் என்று வழிப்பறிக்காரர்களைக் கூப்பிட்டு கதவை திறந்துவிடுவார்கள். நீங்கள் நாமஸ்மரணை செய்யுங்கள் போதும். பிரச்சினை, கஷ்டம் தீர்த்து, மோட்சம் அளிப்பதில் கலியுகத்தில் இதைவிடச் சிறந்த பரிகார வழி வேறு எதுவும் கிடையாது.

வியாச பகவான் சொன்னார்: “கலி காலத்தில் பிறக்கப் போகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பகவானின் நாமஸ்மரணையை மட்டுமே செய்தால் போதும், முக்தி பெற்றுவிடுவார்கள்!” என்று. அவர் வாழ்ந்த யுகத்தில் தவம் செய்தாக வேண்டும்.

Monday, September 22, 2014

நம் சமயத்தின் சிறப்பு என்ன?

devotees

நம் சமயத்தின் சிறப்பு என்ன?

(கே. பிரசன்னா, சென்னை - 106)

முதலும், முடிவுமற்ற -  சாசுவதமான சமயம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான வாழ்வியல் கோட்பாடுகளின் அடைப்படையில் உருவானது நமது சமயம். எது நன்மை, எது தீமை என்றெல்லாம் பகுத்துப் பார்க்கிற உணர்வுகளால் நமது சமயம் உருவாக்கப்பட்டு, விதிகளாக எழுதப்பட்டு காலம் காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது.

யாரோ ஒருவர் உருவாக்கிய கோட்பாட்டினால் அவரை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல நம் சமயம். நமக்கு கோட்பாடுகள்தான் முக்கியமே தவிர, அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர் அல்லர்.

வாழ்வியல் கோட்பாடுகளாகப் பார்ப்பதால்தான் ராமன், கிருஷ்ணன், புத்தர், இயேசு, சாயி பாபா, அம்மா என எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு உங்களால் அனைவரையும் சமமாகப்பார்க்க முடிகிறது.

Sunday, September 21, 2014

அற்புதம் நடந்தது!

sai18



போன நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் எங்கள் வீட்டு அருகிலிருந்த  ஸ்பீட் பிரேக்கில் தடுக்கி விழுந்து விட்டேன். வலி தாங்காமல் துடித்த என்னை, எனது மகன் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.  வயதான தாயாரை எதற்காக தனியாக அனுப்பி வைத்தீர்? என டாக்டர் என் மகனை சத்தம் போட்டார். எக்ஸ் டூ ரே எடுத்துப்பார்த்தார். எலும்பு அகலமாக உடைந்து விரிந்திருக்கிறது, நரம்பு துண்டாகி உள்ளது. அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போது கட்டு போட்டு அனுப்புகிறேன், பிறகு வந்து பாருங்கள் என அனுப்பி வைத்தார்.  துக்கம் தாளாமல் பாபாவிடம் வருந்தி அழ ஆரம்பித்தேன்.



மானசீகமாக,  பெருங்களத்தூரிலிருந்து பாபா எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் நீக்கி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். . எனக்கும் அற்புதத்தைச் செய்தாக வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்தனை செய்தேன்.



என் முழங்காலில் வலியில்லாமலும், அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமலும் நான் குணமாக வேண்டும், இந்த அற்புதத்தை சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதவேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.



பாபா உனது நாமத்தை இலட்சம் முறை சொல்கிறேன் என்று உறுதி கூறி நாம ஜெபம் செய்தேன். எனது பிரார்த்தனையை சாயி வரதராஜன் அவர்களிடம் தெரிவித்தபோது, ஆபரேக்ஷன் இல்லாமல் குணமாகி விடுவீர்கள் அம்மா, கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.



அவர் சொன்னதைப் போலவே ஆபரேக்ஷன் இல்லாமலேயே நான் குணமடைந்துவிட்டேன். இப்போது நல்ல முறையில் நடக்கிறேன். என் பிரார்த்தனையைக் கேட்ட பாபாவுக்கு நன்றி.



எம். பத்மாவதி, கோயமுத்தூர்

Saturday, September 20, 2014

சாயி புத்ரன் பதில்கள்

vanamali

வனமாலி என்பதற்கு என்ன பொருள்?

(ஜி. முரளி, சென்னை)

பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைக்கு வன மாலை என்று பொருள். இதை அணிந்தவர் (மகா விஷ்ணு) வனமாலி.

சாயி புத்ரன் பதில்கள்

அஷ்டபந்தன பூசை என்பது என்ன?

(ஏ. செந்தில், பள்ளிப்பட்டு)

புதுமனை புகுவிழாவின்போது வீட்டின் எட்டு திசைகளிலும் அந்தந்த திசைக்குரிய திக்குப் பாலர்களின் பெயர்களைக் கூறி இரண்டிரண்டு பூக்களைப் போட்டு பூஜை செய்வது அஷ்டபந்தன பூஜை எனப்படும்.

சாயி புத்ரன் பதில்கள்

இறந்தவர்களை தெற்கு நோக்கி வைப்பது ஏன்?

(என். பாலு, காஞ்சிபுரம்)

தெற்கு திசை எமனுக்கு உரியது.  இறந்தவர் தலையை தெற்கு திசையில் வைத்து அந்த உடலை எமனுக்கு அர்ப்பணிப்பதாகச் செய்வதுதான் இறந்தவரின் தலையை தென் திசையில் வைத்துக் கிடத்துவதன் பொருள்.

Friday, September 19, 2014

எங்கள் வீடு மகான்கள் வந்து அருள் பாலித்த வீடு!

25128

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே என்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றுவேன். அவர்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று நமது சமர்த்த சத்குரு சாயி பாபா வாக்களித்தபடி இன்றும் நிறைவேற்றி வருகிறார்.



அதை அனுபவப்பூர்வமாகவும்,  ஸ்ரீ  சாயி தரிசனம் மூலமாகவும் புரிந்துகொள்ளலாம். பக்தர்களால் நினைக்கப்படும் சாயியின் ஓர் அம்சமாக, மற்றவர்களுக்காகவே தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்,



நம்மிடையே மனித உருவில் நடமாடிக் கொண்டு இருப்பவர் நம் மானசீக குரு  ஸ்ரீ  சாயி வரதராஜன்.  எனக்கு புதுப்பெருங்களத்தூர் வந்து பாபாவிடமும் சாயி வரதராஜனிடமும் ஆசி பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வர முடிவதில்லை.



ஆனால் வீட்டிலிருந்தபடியே, பாபாவை நினைத்துக்கொண்டும், மானசீக குருவான சாயி வரதராஜனை நமஸ்கரித்தும் சாயி நாம ஸ்மரணை செய்து கொண்டே நாளை ஆரம்பிப்பேன். கண் விழித்ததும் அன்றைய நாளை ஆரம்பிக்கும் முன் எனது வாய் தானாகவே சாயி ராம் என்று கூறிய பின்னர்தான் மற்ற ஸ்லோகங்களைக்கூறும். அதன் பிறகே வேலைகளை ஆரம்பிப்பேன்.



சாயி ராம் நாம ஸ்மரணை அந்தளவில் என் இரத்தத்தில் ஊறியிருப்பதற்குக் காரணம் ஸ்ரீ சாயி வரதராஜன்தான். அவருடைய சத்சங்கத்திற்கு என்னால் அதிக அளவு சென்று சேர்ந்துகொள்ள முடிவதில்லை. எனினும் அவருடைய இரண்டு மூன்று சத்சங்கத்தைக் கேட்டிருக்கிறேன். அதுவே என்னை இந்தளவுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்றால், அவரின் தினசரி சத்சங்கங்களில் பங்கேற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.



எளிமையான, ஆடம்பரமில்லாதவராக, எந்த பக்தர் வந்தாலும் அவர்களுக்கு மரியாதைக்கொடுத்து ஆறுதல் அளிப்பவர் அவர் என்பதை அனுபவித்து அறிந்திருக்கிறேன்.



அவர் மூலமாக எங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல என்றாலும், மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக சாயி வரதராஜன் எந்த வீட்டுக்கும்,  யார் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார் என்பதும், தன் சித்தப் போக்கில் போய்க்கொண்டிருப்பார் என்பதும் பலருக்கும் தெரிந்த விக்ஷயம்தான்.



ஒரு சமயம் எனது மாமாவுக்கு முதுகுத் தண்டில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவர் முன்போல நடக்க வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன். அதைத் தொலை பேசியில் சாயி வரதராஜனிடம் தெரிவித்தபோது அழுதே விட்டேன்.



அதுவரை அவரை நேரில் பார்த்திராத போதும் அவர் ஆறுதல்கூறி, பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை என் மாமியிடம் கூறினேன். அவர் புதுப்பெருங்களத்தூர் சென்று, ஸ்ரீ சாயி வரதராஜனிடம், ”நான் உஷாவின் மாமி, என் கணவருக்குத்தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அவர் பழைய நிலைக்கு வர வேண்டும்”  என்று கோரிக்கை வைத்தார்.



அதை செவி கொடுத்து, பாபாவிடம் வேண்டி விபூதி ஜெபித்து அவர் நிச்சயம் விரைவில் நடப்பார் எனக் கூறி ஆசீர்வதித்தார். அதற்கேற்றார் போல், விரைவில் என் மாமா எழுந்து நடக்க ஆரம்பித்தார். சாயி பக்தர்கள் சாயி வரதராஜனை பாபாவாகவே நினைத்துக்கொண்டு (அதில் நானும் ஒருத்தி), அவர் காலடி அவரவர் வீட்டில் பட்டால் வீடே புண்ணிய ஷேத்திரமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைத்து வாழும் ஒரு பக்தரின் நிகழ்ச்சியைக் கூறுகிறேன். அவர் மூலமாக நானும் எங்கள் வீட்டவரும் பாக்கியசாலிகள் ஆனோம்.



எனக்குத் தெரிந்த ஒரு சாயி பக்தர் மிகவும் வயதானவர். மிகவும் முடியாமல், உடம்பு சரியில்லாத தால் அவரும் அவர் மனைவியும் ரொம்ப நாளாகவே சாயி வரதராஜன் நம் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்.



என்னிடம், சாயி வரதராஜனை நம் வீட்டிற்கு வருமாறு பிரார்த்தனை செய்யேன் என்று மிக நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் பாபாவை வேண்டி, இதை தொலை பேசிவாயிலாக சாயி வரதராஜனிடம் தெரிவித்தேன்.



நிலைமையை உணர்ந்துகொண்டு அவர், சரி, நங்க நல்லூர் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டார். இதை நான் நினைத்துக்கூட பார்க்கவே இல்லை. என்ன ஏற்பாடு செய்வது என்பது கூட தெரியவில்லை. அவரிடமே கேட்டபோது, ஒன்றும் செய்ய வேண்டாம், நான் வந்து பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறிவிட்டார்.



எனக்கும் எல்லாம் புதிதானதால், அந்த பக்தர் வீட்டில் பாபாவின் ஒரு சின்ன சிலை வைத்து அதில்



சிறிது பூ வைத்து அலங்கரித்திருந்தார்கள். எனக்குள் ஓர் ஆவல்  ஸ்ரீ சாயி வரதராஜன் வரப்போகிற அந்த பக்தர் வீட்டிலிருந்து நான் வசிக்கும் இடம் மூன்றாம் வீடு. என் தாயாருக்கும் நடக்க முடியாத நிலை. அவருக்கு  ஸ்ரீ  சாயியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அத்தனை வேலை பளுவில் அவர் வருகிறார்.. என் வீட்டிற்கும் வருவாரா? இப்போது வர ஒப்புக்கொண்டதே பெரிய விக்ஷயம்.. அதில் இந்த வேண்டுகோளை ஏற்பாரா என்ற ஐயம். இருந்தும் பாபாவிடம் கூறிவிட்டு, அவரிடம் ஓர் ஐந்து நிமிடமாவது என் வீட்டிற்கு வந்து ஆசி புரிய வேண்டும் என வேண்டினேன்.



ஒரு சாதாரண சாயி பக்தைக்காக மனம் உவந்து எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் ஸ்ரீ பாபா மாஸ்டர் அருணாச்சலம்,  ஸ்ரீ  சாயி கலியன், _ ஸ்ரீ சாயி வீரமணி அவர்களும் வந்து அருள் பாலித்தனர். எனக்கு ஆனந்தத்தில் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.



இன்றும் நினைத்தால் இனிமையாக இருக்கிறது.. எங்கள் வீடு நிஜமாகவே சிறந்த மகான்கள் வந்து அருள் பாலித்த வீடாகக் கருதுகிறேன்.



ஸ்ரீ சாயி வரதராஜன் கீரப்பாக்கம் பாபா கோயில் கட்டுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். முழுக்க முழுக்க அவருடன் இருந்து இந்த சேவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது,



ஆனால் இயலாமையால் முடிந்தவரை வீட்டிலிருந்தே அவருக்காக சேவை செய்கிறேன். அவர் நல்லபடியாக சீக்கிரம் கோயில் கட்ட ஆசி புரிய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறேன்..பாபாவும்  ஸ்ரீ சாயி வரதராஜனும் எனக்கு ஆசி புரிய வேண்டும்.



உஷா ரவிச்சந்திரன்,



நங்கநல்லூர்

Thursday, September 18, 2014

எங்கிருந்தாலும் என்னோடுதான் இருக்கிறாய்!

sai29

ஆலயத்தில் இறைவனைத் தேடுவது ஆரம்ப நிலை பக்தி. தனக்குள்ளேயே இறைவனைத் தேடுவது அடுத்த நிலை பக்தி. தானே இறைவனாக ஆவது மேலான பக்தி.



முதல் நிலை பக்திதான் நம்மில் எல்லோருக்கும் இருக்கும். அடுத்த நிலை வந்துவிட்டால் தனித்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.



தானே பூரணத்துவம் அடைந்தவர்களைத் தேடி, பூரணத்துவம் அடையாதவர்கள் செல்வது வழக்கம். இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறத்தான் செல்வார்கள்.



ஆனால், அமிதாஸ் என்ற பக்தர் பாபாவை தரிசிக்கச்சென்றதற்கு வேறு காரணம் இருந்தது. அவர் தீவிரமான கிருஷ்ண பக்தர். எப்போதும் ஹரிநாமாவைச் சொல்வதும், ஹரி பஜனை செய்வதுமாக இருப்பார். தனது பூஜைக்காக தன்னிடம் எப்போதும் ஒரு கிருஷ்ணர் போட்டோவை வைத்திருப்பார். அவர் தன்னுடைய பஜனையின் போது அந்தப் போட்டோவைப் பார்த்துக் கொள்வார்.



திடீரென அந்த போட்டோவில் கிருஷ்ணர் தெரியாமல் யாரோ ஒரு முஸ்லிம் துறவி தெரிவதை கவனித்தார். பஜனையை விட்டு போட்டோவைப்பார்த்தால் _ கிருஷ்ணர். பஜனை செய்து கொண்டே பார்த்தால் முஸ்லிம் துறவி.. அமிதாசுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..



யார் இந்த துறவி என்பதும் தெரியாமல் பல நாட்கள் தவித்தார். ஒரு வழியாக அவர் சீரடியில் வாழ்கிற பாபா என்பது தெரிந்து, அவரை தரிசிக்க வந்தார்.



பாபாவை தரிசித்த மாத்திரத்தில் கிருஷ்ணரும் இவரும் வேறு வேறு அல்லர் என்பதை உணர்ந்து கொண்டு பாபாவின் அருகிலேயே பல நாட்கள் தங்கினார். பல நாட்கள் பல மாதங்களானது. இதற்காக சீரடியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.



யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அவர்களை பராமரிக்க, அமிதாசைத்தான் அனுப்பி வைப்பார் பாபா. தன் இதமான வார்த்தைகளாலும், மென்மை யான பராமரிப்பாலும் நோயாளிகளை கவனித்துக்கொள்வார் அமிதாஸ்.



அமிதாஸ் குஜராத்தி பிராமணர். சௌராஷ்டிராவில் கேத்வாட் ராஜ்யத்தில் பவ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். கற்பனை வளம் செறிந்த கவிஞர். பஜனையை இயற்றிப்பாடுவதில் கைதேர்ந்தவர். பாபாவுடன் வாழ்ந்தபோது, அவர் பாபாவை பூரணமான பரப்பிரம்மம் என்பதை உணர்ந்தார்.



அதை தனது தாய் மொழியைப் பேசும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நூலாகவும், உரை நூலாகவும் ஆக்கிக் கொடுத்தார். பாபாவின் வாழ்க்கை, அவரது பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு ஆகியவை பற்றி எழுதிய புத்தகத்துக்கு பூரண பரப்பிரம்மா ஸ்ரீ சத்குரு சாயிநாத் மகராஜ்னி என்று பெயர்.



இந்த பிராமணர், ஒரு முறை பாபாவிடம் மெதுவாக ஓர் ஆசையை வெளியிட்டார். அதாவது தான் கடைசி காலத்தில் சீரடியிலேயே இறக்கவேண்டும் என்ற ஆசையைக் கூறினார். அவரது அன்பால் உருகிப்போயிருந்த பாபா சொன்னார். ” நீ எங்கு இறந்தாலும் என்னோடுதான் இருப்பாய்! “ என்றார்.



இவர் சாயிக்கு சேவை செய்த படி சீரடியிலேயே தனது இறுதி மூச்சை நிறுத்தினார். லெண்டிபாக்கில் உள்ள பக்தர்கள் சமாதிகளில் இவருடையதும் ஒன்று . முக்தாராம் சமாதிக்கு அருகில் இவர் சமாதி கொண்டிருக்கிறார்.



நான் என்ற அகந்தையும், சுய நலமும் இறந்து போனால், நாம் எங்கிருந்தாலும் பாபாவுடன்தான் இருப்போம். அவருக்குச் செய்கிற தூய்மையான தொண்டு ஒன்றே நம்மை உலகியல் நிலைகளை தாண்டச் செய்து அவரோடு ஒன்றச் செய்து விடும்.

Wednesday, September 17, 2014

வாழ்க்கையைக் கற்றுக்கொள்!

25129

அன்புள்ள குழந்தாய்!
பலமுறை உனக்கு புத்தி சொல்லியும் நீ கேட்க மறுக்கிறாய். உன் மகளுக்குத் தற்போதுதான் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். இதற்குள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட குறைகளை கூறுகிறாள்.
நீ, தவறு இழைத்துவிட்டதாக நினைத்து என்னிடம் முறையிடுகிறாய். நீ பார்த்து செய்த கல்யாணம்தானே பாபா, எதற்காக இப்படி என் குழந்தைக்கு நடக்கிறது? என என்னிடம் கேட்கிறாய்.
நீ கலங்குவதைப் பார்த்தால் மாப்பிள்ளை வீட்டார் கொடுமைக்காகவே பிறந்து வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. தவறு என் மீதும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் மீதும் இல்லை. உன் மகள் மீது இருக்கிறது.
கல்யாணம் ஆன இரண்டு மூன்று மாதங்களிலேயே நிறைய பெண்கள் செய்கிற தவறு, தனது கணவன் தனது தாயார் பேச்சை கேட்கிறார், தனது நாத்தனார் பேச்சை மட்டும் கேட்டு, அவர்கள் சொல்கிற படிதான் நடக்கிறார். என்னை கண்டுகொள்வதில்லை.. இதனால் மனம் உடைந்து போகிறேன். மன இறுக்கத்தோடு இருக்கிறேன். ஒரு சாதாரண விருந்தாளி போல அங்கு தங்கியிருக்கிறேன். எனக்கு இவனோடு வாழப்பிடிக்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கையை அவளது கணவன் குடும்பத்தார் கெடுக்கிறார்கள் என்று நினைத்து, மாப்பிள்ளையை அழைத்து பேசுவது, மகளிடம் கூறி பேசவைப்பது என செயல்படத் தொடங்கி பல பெண்களின் பெற்றோர், தங்கள் மகளின் வாழ்வை கெடுத்துவிடுகிறார்கள்.
ஒருவரைப் பற்றிய மதிப்பீடு மூன்று மாதங்களில் மட்டுமே என்ன தெரியவரும்? எடுத்தவுடனே மாமியார் வீட்டில் அரசாட்சி செய்யவேண்டும் என்று நினைப்பதும், கணவன் தான் சொன்னபடியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், வாங்குகிற சம்பளத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் இளம் பெண்ணின் எதிர்பார்ப்பு. இது தவறான எதிர்பார்ப்பு.
நேற்று வந்தவளுக்காக, தன்னை பெற்று வளர்த்தவர்களையும், கூடப் பிறந்தவர்களையும் எந்த ஆண் மகனும் இழந்துவிடத் தயாராக இருக்கமாட்டான். காலம் செல்லச் செல்லத்தான் பெற்றோரையும் தனது சுற்றத்தாரையும் மெல்ல மெல்ல தவிர்த்து மனைவிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிப்பான்.
ஒரு குழந்தை பிறந்த பிறகு அல்லது ஓரிரு ஆண்டுகள் கழிந்த பிறகு மனைவியின் மீது தனிக் கரிசனம் தோன்ற ஆரம்பிக்கும். இதுதான் இயல்பாக நடந்து வருகிற விக்ஷயம். அதுவரை பெண் பொறுமை காக்கவேண்டும்.
பெற்றோராகட்டும், அக்காள் தங்கை போன்ற உறவுகளாகட்டும், தனது மகன் அல்லது தம்பி தன் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விக்ஷயம். இதனால், அவர்கள் இவனிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று நினைப்பதும், தனது கணவனை அடிமையைப் போல வைத்திருக்கிறார்கள் என தானே ஒரு முடிவுக்கு வந்து அதற்காக அவனிடம் சண்டை போடுவதும், பிரச்சினையை வளர்ப்பதும் புதிய மனைவியாக ஒரு வீட்டுக்குப் போன உனது பெண் தன்னுடைய வாழ்வுக்கு தானே வைத்துக்கொள்ளும் உலை ஆகும்.
அக்காவோ, மாமாவோ, அண்ணனோ அல்லது அம்மாவோ யாராக இருந்தாலும் அந்த வீட்டுக்கு உன் மகளை விட முன்னே வந்தவர்கள். அவர்கள் பேச்சை அவன் இன்றுதான் புதிதாகக் கேட்கிறான் என்றில்லை.. ஏற்கனவே கேட்டுக்கொண்டுதான் வந்திருக்கிறான்.. இன்னும் கேட்பான்.. அப்படி கேட்டு நடப்பதுதான் அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் மனைவி பேச்சைக் கேட்டு, வீணாகிப்போய்விட்டான் என்ற பேச்சுக்கு அவன் ஆளாவதோடு, புதிய மனைவியின் கஷ்டத்திற்கும் அவன் காரணமாகிவிடுவான்.
நீ உனது மகளுக்காகப் புலம்புவதைப் போலவே உனது மருமகனின் தாயார் தனது மகளுக்காகப் புலம்பக்கூடாதா? அவளை வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்கக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கப்போகிறது? அவர்கள் இருப்பதால் உன் மகளுக்கு என்ன குறைவு வந்துவிட்டது? எதற்காக அவள் அவர்களை வெறுக்கவேண்டும்..
புதிதாக திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்குப்போகிற மருமகள், அந்தக் குடும்பத்தில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
தனது வீட்டுச் சூழல் வேறு, புதிதாகப் புகுந்து உள்ள வீட்டின் சூழல் வேறு என்பதைப் புரிந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. அப்படி செய்யாமல் தனக்கு ஏற்ப அனைவரும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பதும், திருமணமாகி வந்தவுடனே, தான்தான் புகுந்த வீட்டுக்கு உரிமைக்காரி, மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் போக வேண்டும் என நினைப்பதும் மிகவும் தவறுதலான விக்ஷயமாகும்.
திருமணமான புதிதில் கணவன் மனைவியிடம் நீ யாரையாவது விரும்பியிருக்கிறாயா எனக் கேட்பான். உடனே மனைவி, ஆமாம்.. நாலு பேரை விரும்பினேன்.. தப்பெல்லாம் செய்யவில்லை.. என்னை நாலு பேர் பார்த்தார்கள்.. நான்தான் பார்க்கவில்லை என்பதுபோல எதையேனும் சொல்லி வைத்தால், அது கணவனின் உள்மனதை பாதித்து, மனைவி மீது ஒரு சந்தேகத்தை வளர்க்கக் காரணமாக அமைந்துவிடும்.
பிற்காலத்தில் தன் மனைவி யாரிடமாவது பேசினாலோ, பழகினாலோ கணவன் தவறாக அவளைப் புரிந்துகொண்டு நடத்துவான். வாழ்க்கை கசந்துபோகும். இப்படியே, மனைவி கணவனிடம், திருமணத்திற்கு முந்தையை வாழ்க்கையைப் பற்றி கேட்டுக் கொண்டு, அதை வைத்தே கணவனை குத்திக்காட்டிக்கொண்டிருப்பாள். இதுவும் அவனது மனதை பாதித்து நிறைய பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். ஆகவே, இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட இன்னும் சிரிப்பான விசயம் என்னவெனில், தன் கணவனுக்கு ஆண்மையே இல்லை என்பதுபோல சொல்லிக்கொண்டு சில புதிய பெண்கள், வாழ்க்கையைத் துறந்து தாய் வீடு வந்து விடுகிறார்கள்.
நாலு பேருக்குத் தெரியாமல் வைக்கிற இந்த விக்ஷயத்தை நாலு பேர் அறிய விவாதிக்க வேண்டுமா என நினைக்கலாம்! துவக்கத்தில் எல்லாருக்குமே இப்படித்தான் இருக்கும். அதை பழக்கத்தின் மூலமும், அனுசரணையின் மூலமும் தான் சரி செய்யவேண்டும் என்பதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்வதில்லை.
இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் என்ற உண்மை இளம் பெண்ணுக்குத் தெரியாமல் போவது இயல்பு. ஆனால், பெண்ணைப் பெற்று வளர்த்து இவ்வளவு காலமாகக் குடும்பம் நடத்திய உனக்கும் தெரியாமல் போவதுதான் வேடிக்கை.
நான் உன் மகளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிவிட்டேன், புரிகிற விதத்தில் பேசிப் பார்த்து விட்டேன்..நான் அவளோடு இருப்பதை அவள் உணர மறுக்கிறாள்.. வாழ்க்கையைக் கற்றுத் தருவதை அவள் புரிந்துகொள்ளவில்லை. இதனால் உனது மகளின் எதிர்காலம்தான் கெடப்போகிறது. அதை எச்சரித்துத் தடுக்கவே இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர், குழந்தை பெற்று அது பேசத்தொடங்கிய பிறகு, குழந்தைக்கு நல்ல குருவைத்தேடி அலைகிறார்கள். ஆனால், பிறந்த குழந்தையே பிறருக்கு குருவாக இருப்பதை பலர் அறிவது கிடையாது.
பிறந்த குழந்தையை யார் தூக்கினாலும் பேசாமல் அனைவரிடமும் செல்லும்.. எதையும் காதில் போட்டுக் கொள்ளாது.. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது.. சிறிது வளர்ந்த பிறகு, யார் முதன்மையானவர் என்பதை உணர்ந்து அவர்களிடம் அதிக நெருக்கம் காட்டும். பிழைக்கத் தெரிந்த பிள்ளை, சமயத்திற்கு ஏற்ப அனைவரிடமும் ஒட்டிக்கொள்ளும்...
அவர்கள் ரசிக்கத் தக்க விதத்திலும், ஏற்கத் தக்க விதத்திலும் நடந்துகொள்ள முயற்சிக்கும். ஒவ்வொரு நொடியையும் பிறர் ரசிக்குமாறும்,தனக்கு முக்கியத்துவம் தருமாறும் குழந்தை பார்த்துக்கொள்ளும்.
பிறந்து அறிவு முதிர்ச்சியே இல்லாத ஒரு குழந்தைக்கு இருக்கிற இயற்கை அறிவுகூட, வளர்ந்து திருணமாகி வாழ்க்கைப் பட்ட பல பெண்களுக்கு இருப்பதில்லை என்பது வருத்தமான விக்ஷயம்.. போன உடனேயே மாமியாரைத் தள்ளிவைப்பது, நாத்தனாரைக் கொடுமைக்காரி என்பது, கணவன் விட்டில் பூச்சி போல பெற்றவர்களையும், அவனுக்கு உரியவர்களையும் சுற்றிச் சுற்றி வருகிறான், தனக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது போன்று நடக்கிறார்கள். இது வாழ்க்கைக்கு உகந்தது கிடையாது.
அனைவரது நல்லெண்ணத்தையும் சம்பாதித்த பிறகு, அந்த வீட்டில் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை புதிய பெண் தெரிந்துகொள்ள வேண்டும். கணவனின் சம்பாத்தியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், தான் என்னென்ன சம்பாதிக்க வேண்டும் என்பதை பெண்தான் முன்னதாக முடிவு செய்யவேண்டும்.
தன் மீது நல்ல அபிப்பிராயத்தை கணவன் வீட்டிலிருந்து சம்பாதிக்க வேண்டும்.. பிறரது அன்பை சம்பாதிக்கவேண்டும்.. குடும்பத்தில் மரியாதையை சம்பாதிக்க வேண்டும்.. பிறந்த வீட்டுக்குப் பெருமையை சம்பாதிக்க வேண்டும்..
இப்படி தனது குணத்தாலும் நடத்தையாலும் முதலில் சம்பாத்தியம் செய்த பிறகு, கணவனின் சம்பாத்தியத்தின் மீது கண் வைத்தால் அது உருப்படியாக நம் கைக்கு வரும் என்பதை பெண் புரிந்துகொள்ள வேண்டும்.
மணமான பிறகு கணவன் வீட்டுக்கு வாழப் போகவேண்டும்.. தனது தாய் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக கணவனை வைத்துக்கொண்டு அவன் சம்பாத்தியத்தை முழுமையாக தன்னிடம் தந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.. இது அவனது தன்மானத்திற்கு இழுக்காக முடியும்..
இப்படி ஒவ்வொரு விக்ஷயமாக யோசித்து நடக்க உன் மகளுக்கு புத்தி சொல்லிக் கொடு.மற்றவர்கள் நடந்து கொள்கிற விதத்தைப் பார்த்து மன இறுக்கம் அடையாமல், எதையும் ரிலாக்ஸாக எடுத்துக்கொள்ள கற்றுக் கொடு..
வாழ்க்கை என்பது நீண்ட தூரம் போகவேண்டிய ஒரு பயணம். இதில் நாலும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டால்தான் வாழ்க்கை சுகமாகப் போகும்.
இந்த நாட்டில் மணமாகி வாழ்க்கைப்பட்டுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகிதப் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கையில் பல விக்ஷயங்களைத்தாங்கிக் கொண்டு குடும்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீயும் விதிவிலக்கு அல்லவே-
துன்பத்தில் இன்பம் என்பதுதான் அனைவருக்கும் தரப்பட்ட வாழ்க்கை நியதி.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு, இனி வாழப் போகிற வாழ்க்கை வேறு... புதிய வாழ்க்கைக்கு உன்னை தயார் படுத்திக்கொண்டு புதிய இல்லத்தில் வாழ்க்கைக்காகக் காத்திரு என்று அவளுக்குச் சொல்லிக்கொடு.. அமைதியாக, பொறுமையாக இருந்து அனைத்தையும் சகிப்பதற்கு கற்றுக் கொடு..
உனக்கு முன்னால் அந்த வீட்டுக்குச் சென்று உன் மகள் நன்றாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன். எல்லோரும் உன் மகளைப் போல நல்லவர்கள்தான்.. புரிய வை.
அன்புடன் அப்பா
சாயி பாபா

Tuesday, September 16, 2014

கஷ்டத்தைக் கடந்து வா! கடவுள் துணை இருப்பார்!

sai15சீரடி சாயி நாத மகராஜின் தீவிர பக்தர்களில் ஒருவரும், மிகவும் ஆசாரச் சீலருமான தாசகணு மகராஜ் தன் ஆசாரக் கொள்கைகளில் தீவிர பற்றுடையவர்.
குல வழக்கப்படி வெங்காயத்தை முற்றிலும் தனது சாப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தவர். வெங்காயத்திற்கு சிற்றின்பத்தைத் தூண்டும் சக்தி உள்ளது என்பதால் அதை விலக்கி வைத்ததாகக் கூறுவர். ஆனால், சத்குரு சாயிநாதரோ, ஆச்சாரங்களை அதிகமாக மதிப்பவர் அல்ல. அதன்படி நடந்தே ஆக வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்பவரும் அல்ல.
ஒருநாள் பாபா, தாசகணுவிடம் வெங்காயங்களை அதிகமாகக் கொண்ட உணவைத் தயாரிக்கும்படி பணித்தார். அந்த உணவை தனக்குப் பரிமாறும்படி பாபா கேட்டுக்கொண்டார்.
தாசகணுவையும் சிறிது உண்ணுமாறு கூறினார். அதை அவர் உண்ணமாட்டார் என்பது தெரியும் என்றாலும், ஏதோ ஒரு காரணம் கொண்டு பாபா அதனை சாப்பிடுமாறு வற்புறுத்தியதால், அந்த பதார்த்தத்தை சாப்பிடுவது போல பாவனை செய்தார் தாசகணு.
இதனை பாபாவுக்குத் தெரியாமல் செய்ததால், தான் சாப்பிட்டுவிட்டதாக ஆகிவிடும் என அவர் நினைத்தார். ஆனால் எல்லாம் அறிந்த குரு நாதரை ஏமாற்ற முடியுமா? அதனை கண்டு கொண்டு பாபா வலுக்கட்டாயமாக அந்த வெங்காயப் பதார்த்தத்தை தாசகணு சாப்பிட வைத்தார். அதன் பிறகு, பாபா உயிருடன் இருக்கும்வரை வெங்காயத்தை சாப்பிடும் வழக்கத்தை தாசகணு தொடர்ந்திருந்தார்.
பாபாவின் ஒவ்வொரு செய்கையிலும் ஓர் உண்மை பொதிந்திருக்கும் என்பது அவர் அடியவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அடியவர்கள் உள்ளத்தில் எழுந்த கேள்வி, ”பாபா எதற்காக தாசகணுவை வெங்காயம் சாப்பிட வலியுறுத்தினார்?” என்பதே.
ஒருவன் வெங்காயத்தை சாப்பிட்டு அதன் பிறகு சிற்றின்ப ஆசையை அவன் கடந்துவிட்டான் என்றால் அதுதான் அவன் பிறப்பின் பெரிய வெற்றி. அதன் பின்பு அவனுக்கு யாதொரு கெடுதலும் வராது என்று பாபா விளக்கமளித்தார்.
தாசகணுவுக்கு ஒரு முறை, இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான கங்கை - யமுனை சங்கமிக்கும் பிரயாகைக்குச் சென்று புனித நீராடும் ஆவல் ஏற்பட்டது. ஆனால் குரு நாதர் இதை யெல்லாம் அனுமதிக்க மாட்டார் என்பது தாசகணுவுக்குத்தெரியும். இருப்பினும் பாபாவின் அனுமதி பெறாமல் புனித யாத்திரை மேற்கொள்ள முடியாது. ஆகவே,வெகு தயக்கத்துடன் பாபாவிடம் அனுமதி கேட்டார்.
இதைக் கேட்டதும் பாபா புன்சிரிப்புடன், ”புனித நீராட வேண்டும் என்ற உன் ஆவல் எனக்கும் புரிகிறது. அதற்காக நீ அவ்வளவு தூரம் போக வேண்டுமா?” என்று வினவ, தாசகணுவும் போக வேண்டும் என்றார்.
”பிரயாகைக்குச் சென்று புனித நீராட வேண்டும். அவ்வளவு தானே? அந்தப் பிரயாகை இங்கேயே இருக்கிறதே! அப்புறம் எதற்காக நீ அங்கு செல்ல வேண்டும்?” என பாபா கேட்டார்.
தாசகணுவுக்கு பாபாவின் பேச்சு புரியவில்லை. பாபா, “மனதார என்னை நம்பு. பிரயாகை இங்கேயும் இருக்கிறது” என்றார்.
தாசகணுவுக்கு அப்போதுதான் பாபாவின் மகிமையால் ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. பாபா ஏதோ செய்து காண்பிக்கப்போகிறார் என்று உணர்ச்சி வசத்தால், பாபாவின் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.
என்னே ஆச்சர்யம்! பாபாவின் திருப்பாதங்களின் இரு கட்டை விரல்களிலும் இருந்து கங்கையும் யமுனையும் அப்படியே கசியத் தொடங்கின. பக்தர்கள் பிரமித்துப் பார்த்தார்கள். அனைவரும் புனித நீரை தலையில் தெளித்து தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டார்கள். தாசகணுவின் பிரயாகை ஆசை நிறைவேறியது.
தாசகணுவுக்கு ஈசா உபநிடதத்துக்கு உரை எழுதும் ஆசை இருந்தது. ஆனால், அதன் உட்பொருள் முழுவதும் விளங்காமல் இருந்தது. பாபாவிடம் கேட்டு தன் சந்தேகங்களுக்கு தீர்வு காண நினைத்தார். அதற்கு விளக்கம் அளிக்க மறுத்த பாபா, நேராக மும்பையில் உள்ள வில்லேபார்லேக்கு செல். அங்கு காகா தீட்சித்தின் வீடு உள்ளது. அவர் வீட்டு வேலைக்காரி இதற்கான விளக்கத்தை உனக்கு அளிப்பார் என்றார்.
மிகப் பெரிய அறிவு ஜிவிகளுக்கே குழப்பமான இந்த உபநிடதம், ஓர் வேலைக்கார சிறுமிக்கு எப்படி தெரியப் போகிறது என நினைத்து மனக் குழப்பத்துடன் மும்பை சென்றார். காகா சாகேப் தீட்சித் வீட்டில் தங்கி இரவுப் பொழுதை கழித்தார்.
இளம் காலையில் ஓர் அழகான, அற்புதமான பாடல் ஒன்று அவரை துயில் எழுப்பியது. அதைப் பாடிய பெண் ஓர் அழகான புடவையைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல் அது.
அந்தப்பாட்டுக்குச் சொந்தக்காரி யார்? அழகான ஒரு புடவைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல். அந்த அளவுக்கு கற்பனை வளத்துடன் இனிய குரலில் பாடுகிறவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி வெளியே சென்று பார்த்தார்.
வெளியில் கந்தல் துணி அணிந்திருந்த ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அந்த வீட்டு வேலைக்காரியின் சகோதரி என விசாரித்ததில் தெரிந்தது. அழகான புடவைக்காக ஆசைப்பட்டு இவ்வாறு பாடியிருக்க வேண்டும் என நினைத்த தாசகணு, அங்கு வந்த செல்வந்தரிடம் கூறி, அச்சிறுமிக்கு உதவுமாறு கூறியதில், அழகிய புடவை ஒன்று சிறுமிக்குக் கிடைத்தது. அந்த சிறுமியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்த நாளும் வந்தது. அன்றும் அதே சிறுமி அழகிய குரலில் இன்னொடு பாட்டுப் பாடி அசத்தினாள். தாசகணு வெளியே வந்து பார்த்தார். அதே சிறுமி மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தாள். அன்றும் அவள் கந்தல் உடையில்தான் இருந்தாள். புதுப்புடவையை ஏன் கட்டிக் கொள்ளவில்லை?
தாசகணு மனதில் பளிச்சென்ற மின்னல். அதில் தோன்றிய ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போன்ற விளக்கம். அந்தப் பெண்ணுடைய மகிழ்ச்சிக்குக்காரணம் புடவையல்ல. அவள் மனமே.
ஒருவரின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணம் அவர்களது செழுமையோ, வறுமையோ அல்ல. நிலையற்ற அது, வரும் போகும். ஒருவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் தூய உள்ளமும்,. கள்ளம் கபடம் அற்ற பிள்ளைத் தனமுமே.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். அவர் சந்தோக்ஷமாக இருப்பதற்காக நம்மைப் படைத்துள்ளார். ஏதாவது நமக்குச் செய்ய வேண்டும் என்றால், எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே, அனைத்து பாரங்களையும் நம் குரு நாதரிடம், நீயே சத்யம், நீயே நித்யம் - நீயே சர்வமும் என்று நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, அந்தச் சிறுமியைப் போல எப்பொழுதும் உற்சாகத்துடன் இருந்தால், நமக்கு நற்பயன் கிட்டும்.
ஈஸா வாஸ்யத்தின் உட்பொருளும், அதன் விளக்கமும் தாசகணுக்கும் நமக்கும் இப்பொழுது புரிந்துவிட்டது. இதைப் புரிய வைக்க தீர்க்க தரிசனத்துடன் சீரடி வாசன் இங்கே தன்னை அனுப்பியதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் தாசகணு மகராஜ்.
தாசகணுவின் பஜனைப்பாடல்கள் பாபாவை மிகவும் கவர்ந்தவை. அவரை கவி பாடும் கவிச் சக்கரவர்த்தியாகவே பாபா மாற்றிவிட்டார். பாபாவிடம் பக்தி, பரவசம், பற்று இவற்றின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியவர் தாசகணு மகராஜ். அவர் பாபா மீது இயற்றி, பாபா முன்னால் பாடி, பாபாவின் ஆசி பெற்றதுதான் ஸ்ரீ சாயி நாத ஸ்தவன மஞ்சரி.
இந்த நூல் 1918 ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் நாள் பாபாவின் முன்னால் பாடப்பட்டது. பாபா ஆசியளித்தார். அதன் பிறகு 37 நாட்களில் பாபா சமாதியடைந்தார். இன்றும் பாபா சமாதியிலிருந்துகொண்டே பக்தர்களின் எல்லா துயரங்களுக்கும் தீர்வளிக்கிறார் என்பதுதான் உண்மை.. நிதர்சனமான உண்மை.
சாயி குப்புசாமி,
சென்னை - 88

Monday, September 15, 2014

அற்புதமான சக்தி!

bless

ஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம்,செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம்,ஆயினும்,தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை,அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை.எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ,அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்?இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!

மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

என் ஆசி உனக்கு உண்டு!

foursai

சத்சரித்திரம் 11ம் அத்தியாயம் பல வழிகளில் சிறப்புடையது. சத்சரிதம் முழுவதையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் இந்த ஒரு அத்தியாயத்தை முழுமையான மனத்துடன் பாராயணம் செய்தால், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என்பது பலருடைய அனுபவமாக இருக்கிறது.
அத்தியாயத்தின் கடைசிப் பாராவுக்கு முன் பாராவில், “தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்” என்று சொக்கலிங்கம் சுப்பிரமணியன் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். இந்த வரிகளைப்படிக்கும்போது, பைபிளில் சொல்லப்பட்ட ”எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி” என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
கடவுள் தீயவர்களை அழிக்க அவதரித்து வருகிறார். ஆனால், குருமார்களான ஞானியர், தீயவர்களைத் திருத்தவே அவதரிக்கிறார்கள். அவர்களுக்கு நல்லவர் கெட்டவர் என்ற பேதம் ஏதும் கிடையாது.
பாபா அப்படிப்பட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கடவுள். பாபாவிடம் வருகிற யாராக இருந்தாலும், அவர்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கஷ்ட நிலையிலிருந்து நீங்கி, சுகத்தை அடைகிறார்கள். கெட்டவர்களாக இருந்தாலும் படிப்படியாக நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள்.
படித்தவர் - படிக்காதவர், பக்தியுள்ளவர் - பக்தி இல்லாதவர், நல்லவர் - கெட்டவர், மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், தீண்டத்தக்கவர் - தீண்டத்தகாதவர், சிறியோர் - பெரியோர், அரசன் - ஆண்டி, பாகவதர் - பாமரர், மனிதர் - மற்ற விலங்கு என எந்த வேறுபாடும் பார்க்காதவர் நமது சாயி பாபா.
நீங்கள் இப்போது எந்த நிலையிலிருந்தாலும் பயப்பட வேண்டாம். அவரை சரணடைந்து விட்டால் போதும், எந்த மனிதனையும் ஆசீர் வதிக்கிற கரங்களை உடையவராக நமது பாபா இருக்கிறார். ஒரே ஒரு விக்ஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். பாபாவை கும்பிட்டால் கஷ்டம் போய் விடும் என்ற நினைப்பு தவறானது. அதை மட்டும் கவனிக்க வேண்டும்.
ஏன்? எப்படி?
கும்பிடுகிற எல்லோரும் நம்பிக்கையோடு கும்பிடுவது கிடையாது. நம்புகிற எவரும் முழு மனதுடன் நம்புவதும் கிடையாது. முழு மனதுடன் நம்புகிறேன் என்று கூறுபவர்கள் அவரையே முழுமையாக சரண் அடைவதும் கிடையாது.
சரண் அடைந்துவிட்டேன் என்பவர்கள், இது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் இருப்பதில்லை.
பணிய வேண்டும்!
சாயி பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதலில் பணிய வேண்டும். பணிதல் என்றால், பணிவுடன் இருத்தல் என்றே பொருள் கொள்ளலாம். நாம் நல்ல வசதி படைத்தவராக இருக்கலாம், மக்களால் மதிக்கப்படுகிறவராகவோ, போற்றப்படுகிறவராகவோ இருக்கலாம்.. மெத்தப் படித்த ஞானியாக இருக்கலாம்.. இந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்கலாம்..
தன் நிலையை எண்ணி கர்வப்படாமல், கடவுள் முன்னால் சர்வ சாதாரணமாக வீழ்ந்து பணிய வேண்டும். நம்முடைய இந்த நிலைக்கு அவர்தான் காரணம்.. அவர் முன் என்றால், விக்கிரகத்தின் முன்பு வீழ்ந்து பணிதல் என்று பொருள் அல்ல.. அவர் அனைத்து படைப்புயிர்களிலும் வியாபித்து இருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைவரிடமும் பணிவோடு இருக்க வேண்டும்.
சரணாகதி அடைய வேண்டும்!
சரணம் என்றால் பாதம் என்று பொருள். உங்கள் பாதமே கதி..என்று வீழ்ந்து விடுவதற்குத்தான் சரணாகதி என்று பொருள். இவ்வாறு வீழ்ந்து விட்ட பிறகு, எப்போது தூக்கி விடுவீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? என்றெல்லாம் எந்த விதமான கேள்வியையும் கேட்கவே கூடாது.
நான் அவர் கையில் ஒரு கருவி. அவருக்கு நான் அடிமை.. அவரது ஏவலாள்.. அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும் என அவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுப் பேசாமல்; அவரது நாமாவைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
அவரது பாதுகாப்பை நாட வேண்டும்!
நாம் இன்றைக்கு நலமோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் பகவானின் பாதுகாப்பு நமக்கு இருப்பதால்தான் என்பதே உண்மை.
இயற்கையால், மனிதர்களால், விலங்குகளால், அமானுஷ்யங்களால், கிரகங்களால் எப்போதும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. இவை எந்த நிலையிலும் நம்மை தொல்லை தராமல் இருப்பதற்காக நாம் அவரது பாதுகாப்பை நாட வேண்டும்.
ஒரு மனிதனுக்கு பாதுகாப்பு என்பது இறைவனுடைய திருநாமம். அது எப்போதும் அவனது நாவில் இருக்குமானால், எந்த நிலையிலும் அவன் காப்பாற்றப்படுவான்.
பாபா என்ற பெயர் மட்டுமல்ல, வேறு எந்தப்பெயரை நித்தியப் பாராயணமாக மனதில் பதித்திருந்தாலும், அதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் அது கவசமாக நம்மை காப்பாற்றும்.
தபோல்கர் ஓர் உதாரணம்!
பாபா தபோல்கரைப் பற்றிக் கூறியதையும், தபோல்கர் பாபாவையும் வாக்கை நம்பியதையும் தியானிக்கலாம். தபோல்கர் பாபாவை தரிசிக்க வந்தபோது, அவருடன் வந்திருந்த அண்ணா சிஞ்சணீகர் என்ற பக்தர், தபோல்கருக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அப்போது பாபா என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள்:
”அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும். ஆனால் அவர் என்னுடைய சேவையில் இறங்க வேண்டும். இறங்கினால் சுகமான வாழ்க்கை நடத்துவார். அவருடைய உணவுத்தட்டு என்றும் நிறைந்திருக்கும். உயிருள்ள வரையில் காலி ஆகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடை விடாது என் பாதுகாப்பை நாடுவாரேயானால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.”
என்னை சந்திக்க வரும் ஓய்வு பெற்றவர்களில் பலர், இன்னும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். ”ஏதேனும் வேலை கிடைக்க, அனுக்கிரகம் செய்ய, பிரார்த்தனை செய்யுங்கள்” என்பார்கள்.
உண்மையாகவே, அவர்களுக்குப் பிரார்த்தனை செய்கிற அதே வேளையில், பரிதாபப்படவும் செய்வேன்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், தங்களை முதியவர்களாக நினைத்துக்கொள்கிற பலர், வயதாகிவிட்டதாக தங்களுக்குள்ளேயே முடிவு செய்து, வீட்டில் முடங்கிவிடுகிறார்கள்.
இதனால், குடும்பத்தில் அவர்களுக்கு இருந்த பழைய அந்தஸ்து பறிக்கப்பட்டு, பிள்ளைகள் வசம் தரப்படுகிறது. பிள்ளைகள் ஏன், மனைவி கூட, இவரை வேண்டாத விருந்தாளி போல பார்க்கிற நிலை பல வீடுகளில் உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு, பகவான் என்ன வேலை தரமுடியும்?
எந்த வேலையை வேண்டுமானாலும் தரலாம். முதுமை என்பதற்கு இயலாமை என்று பொருள் கிடையாது, அனுபவம் என்று பொருள். அந்த அனுபவத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அப்படி சாதிக்க விரும்புவோர் முதலில் பாபாவின் சேவையைச் செய்யவேண்டும்.
அனைத்தையும் இழந்து சாயி பாபாவை சரணடைந்த காலஞ் சென்ற சின்மயா நகர் வடிவேலன் அவர்கள், சாயியைச் சரணடைந்து, அவர் சேவையை செய்து அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொண்டே வந்தார். ஆனால் என்ன காரணமோ, பாபா அவரை தம்மிடம் அழைத்துக் கொண்டார்.
அண்ணாநகரில் வசிக்கிற சண்முகம், சாயி தொண்டை முதன்மையாக நினைத்துச் செய்கிறார். இதனால் விளைந்த பலன், அனைத்து செல்வங்களையும் இழந்து, கஷ்டப்பட்ட நிலை மாறி, பழைய நிலைக்கு மீண்டும் வந்துவிட்டார்.
சென்னை சாலி கிராமத்தில் பார்வதி பவன் என்ற ஹோட்டல் முதலாளி தோத்தாத்ரி அவர்கள், வாரம் தோறும் மற்றவர்கள் மலைக்கும் அளவுக்கு தனது ஹோட்டலிலேயே சாயி சேவை செய்கிறார். இதன் விளைவு? பெருத்த நட்டத்திலிருந்து மீண்டு, இன்று பல புதிய நிறுவனங்களுக்கு உரிமையாளராகிக் கொண்டு வருகிறார்.
இந்தியன் வங்கிக் கிளை ஒன்றின் மேலாளரான வெங்கட்ராமன் என்ற சாயி பக்தர், சதா சாயி நாமம் சொல்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு விட்டார். அவருடைய தேவைகள் அனைத்தையும் இன்று பாபா கவனிக்கிறார்.
இப்படி நிறைய பேரை உதாரணமாகக் கூறலாம். உங்களில் யாரேனும் கேட்கலாம்.. ”சாமி, நானும் தான் சாயியைக் கும்பிடுகிறேன்.. ஆனால் இன்னும் கஷ்டப்படுகிறேனே? அது ஏன்? என்று.
பாபா சொன்ன அந்த வார்த்தையை மீண்டும் சொல்லிப் பாருங்கள்.. நீங்கள் அவரது சேவையில் இறங்கவேண்டும். அவரிடம் முழு விசுவாசத்துடன் இடைவிடாது, அவருடைய பாதுகாப்பை நாட வேண்டும்.. இப்படி செய்தால்தான் உங்கள் பிரச்சினை போகும்.
பாபாவுக்குச் சேவை செய்வதாக சொல்லி, அவரது கஜானாவிலிருந்து கொள்ளை அடிப்பதும், ஏமாற்று வேலை செய்வதும் சேவை ஆகாது. ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். அடுத்து, பாபா மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். என்ன நடந்தாலும் சாயி பார்த்துக் கொள்வார் என எண்ண வேண்டும். அந்த நிலையில் பாபாவின் பாதுகாப்பைக் கோரிப் பெற வேண்டும். இதில் கவனமாக இருந்தால், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
பாபாவை எப்படி விசுவாசிக்க வேண்டும்?
இறைவனை வணங்காதவர்களையும், நாமத்தைச் சொல்லாதவர்களையும், நம்பிக்கையும் பக்தியும் இல்லாதவர்களையும், பஜனை பாடாதவர்களையும், இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள். அத்தகைய ஞானிகளின் சிகரம் சாயி என்பதை முழுமையாக நம்பவேண்டும்.
சிலை, யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்கு உரிய புனிதமான ஏழு பொருட்களுக்கும், இயற்கை சக்திகளுக்கும், மனிதர்களுக்கும் மேலானவர் குரு ராஜர். வேறு எதிலும் மனதை சிதறவிடாது ஒரு முகமாக அவரை வழிபட வேண்டும் என்பதை அறிந்து அவரை வழிபட வேண்டும்.
ஆத்மாவுக்கு இதமானதை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியைக் கொடுத்தது வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையா விடின் அவனுடைய வாழ்க்கையே வீண் என்பதை உணர்ந்து அவரை வணங்க வேண்டும்.
சாயியின் காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகிறதோ, அப்பொழுதெல்லாம் சாயீ கண் முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்துவிடுவார். கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும் போதும், சாப்பிடும்போதும் அவர் உம்முன் தோன்றுவர். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனே இருப்பார் என்கிற சத்சரித வாக்கை முழுமையாக நம்பி, அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் நிச்சயம் என் ஆசீர்வாதம் உனக்கு உண்டு என்பார் பாபா.

Thursday, August 7, 2014

தீப பூஜை !

kvilakku

 

ஞாயிறு:-


ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.


திங்கள் :-


திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணை கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.


செவ்வாய்:-


செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.


புதன்:-
புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணை தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.


வியாழன்:-


வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணை கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.


வெள்ளி:-


வெள்ளிக் கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசே ஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.


சனி:-


சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபத்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்.

Wednesday, August 6, 2014

பிரகலாதனின் பக்தி ...

Lord Narasimha Ugra



இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை

Tuesday, August 5, 2014

வள்ளலாரைத் தீண்டி இறந்த பாம்பு!

VALLALAR

வள்ளலார் சில காலம் அப்பாசாமி செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு சமயம் மாலை வேளையில் அன்பர்களோடு செட்டியாரின் வாழைத் தோட்டத்தில் உலாவச் சென்றார். வள்ளலார் சிறிது நேரம் வாழைத் தோட்டத்தின் அழகைக் கண்டு ரசித்து அதைச் சுற்றி வந்து ஒரு வாழை மரத்தடியில் வந்து நின்றார். அப்போது ஒரு நல்ல பாம்பு வள்ளலாரின் தலையில் தீண்டியது. இதைக் கண்டு பதைத்த செட்டியாரிடம் வள்ளலார், “பதைக்க வேண்டாம். மருந்தாகும் திருநீற்றைக் கொண்டு இதை குணமாக்கலாம் என்று கூறி தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் திருநீற்றைப் பூசினார். பெருமானைத் தீண்டிய பாம்பு கீழே இறந்து விழுந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் அதிசயித்து நின்றனர்

உங்களுக்கு அதாவது தெரிந்ததோ?

arjun

ஒரு முறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். அங்கே தினமும் ஒருவர் தவறான சுலோக உச்சரிப்பில் கீதை வாசித்துக் கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலி செய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என அறிந்த ஆலய பொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்குபுறமாக இருந்து கீதை வாசிக்க விட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு கீதையை யாரோ தவறாக வாசிப்பது காதில் விழுந்தது.
அவர் அருகில் சென்று கேட்டார்.., "உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாக தெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் தவறாக வாசிக்கிறீர்கள்?" என்றார் சைதன்யர் .
அதற்கு அவர் சொன்னார்.., "கீதையை திறந்ததும். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தேரில் நிற்கிறார்களே சுவாமி..! அதை காணும்போது என் உடல் நடுங்குகிறது..! என் நா தழு தழுக்கிறது..! கண்ணீர் பெருகி ஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்ன செய்வேன் பிரபு..?" என கண்ணீர்விட்டார்.
திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்யர் கேட்டார்.. "உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?" வெட்கி தலைகுனிந்தனர் அவரை கேலி செய்தவர்கள்.
இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது கண்ணீர் விடும் மிகஉயர்ந்த ஒரு உன்னதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடம் இல்லை. இந்த சரணா கதியை அடைந்தவர்களை யாரும்_வெல்லவோ, தோற்கடிக்கவோ முடியாது

Sunday, August 3, 2014

கடவுளின் கதை கேளுங்க ............

ram



ராமபிரான் வசிஷ்டரின் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அங்கே அனந்தன் என்ற வேலைக்காரன் இருந்தான். அவன் ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமற்ற சேவை செய்து வந்தான்.
ராமனின் எழுத்தாணியை கூராக்கிக் கொடுப்பான். வில்லின் நாண்களை சரிசெய்வான். பூஜைக்காக மலர் பறித்து தருவான். இருவரும் இணைபிரியா நண்பர்களாயினர்.
ஒருநாள், அனந்தன் பூப்பறிக்க போயிருந்த நேரத்தில், வசிஷ்டர் ராமனிடம், ""ராமா! உன் படிப்பு முடிந்தது. ஊருக்கு கிளம்பு,'' என்றார். ராமனும் சென்று விட்டார்.
அனந்தன் திரும்பி வந்தான். மற்றவர்கள் என்றால் என்ன செய்திருப்பார்கள்? இத்தனை நாள் பழகிய நண்பன் சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டானே என்று கோபித்திருப்பார்கள். ஆனால், அனந்தனோ, ""ஐயோ! ராமா! நீ கிளம்பும்போது,
என்னால் உன் அருகில் இருக்க முடியவில்லையே. உன்னை இனி எப்போது காண்பேன்,'' என புலம்பித் தீர்த்தான்.
நாளாக ஆக, ராமனின் பிரிவை அவனால் தாங்க முடியவில்லை. அரண்மனைக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்றதும், ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் காட்டிற்கு தாடகை வதத்திற்கு புறப்பட்டு சென்ற தகவல் கிடைத்தது.
அவன் விஸ்வாமித்திரரை மனதுக்குள் திட்டினான். "சிறுவன் என்றும் பாராமல் ராமனைக் காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாரே' என பதறினான்.
ராமனைத் தேடி காட்டிற்கே போய்விட்டான். "ராமா! ராமா!' என புலம்பித் திரிந்தான். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணீர் வழிய, "ராம் ராம் ராம் ராம்' என சொல்லிக்கொண்டே அமர்ந்து விட்டான். காலப்போக்கில், அவனைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்து விட்டது.
இதற்குள் ராமனுக்கு திருமணமாகி, சீதை கடத்தி மீட்கப்பட்டு, அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. சில முனிவர்கள், புற்று இருந்த இடத்தைக் கடந்து அயோத்தி சென்ற போது, புற்றுக்குள் இருந்து "ராம்...ராம்' என்ற குரல் கேட்கவே, புற்றை இடித்துப் பார்த்தனர். உள்ளே தாடி மீசையுடன் ஒருவர் இருந்தார். நடந்ததை அறிந்தனர். அவரது ராமபக்தியை மெச்சிய அவர்கள், ராமனிடம் அழைத்து சென்றனர்.
ராமன் பட்டாபிஷேகத்திற்காக மேடை நோக்கி நடந்த போது, அவரைப் பார்த்து விட்ட அனந்தன், "டேய் ராமா' என அழைத்தான்.



""அரசரை மரியாதையில்லாமல் பேசுகிறாயா?'' என்ற காவலர்கள் அவனை உதைக்க ஓடினர். அனந்தனை அடையாளம் கண்டு கொண்ட ராமன், காவலர்களைத் தடுத்து, ""அனந்தா! நீயா இப்படி ஆகி விட்டாய். உன்னிடம் சொல்லாமல் வந்ததற்காக என்னை மன்னித்துக் கொள்,'' என்றார் பணிவுடன்.
அருகில் நின்ற ஆஞ்சநேயர், "ராமா! என்னைப் போலவே இவரும் தங்கள் மீது அதீத பக்தி பூண்டுள்ளார். இவருக்கு தகுந்த மரியாதை செய்ய வேண்டும்' என்றார். ராமனும் அனந்தனை வாரியணைத்து ஆசி அருளினார்.
பின்னர் வசிஷ்டரிடம், "குருவே! என் தந்தை இருந்திருந்தால் என்னை "டேய்' என உரிமையுடன் அழைத்திருப்பார். இப்போது இவன் என்னை அதே முறையில் அழைத்தான். எனவே, இவனை என் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்க அனுமதி வேண்டும்' என்றார் ராமன்.
வசிஷ்டரும் சம்மதம் தெரிவித்தார். ராமன் தனது சிம்மாசனத்தில், அனந்தனை அமர வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றார். கூடியிருந்தவர்களின் கண்கள் பனித்தன. அனந்தனோ மெய்மறந்து விட்டார். பின்பே ராமன் பட்டம் ஏற்றார். எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நிஜநட்பு என்றும் தொடரும்.

எல்லாம் உனக்காக!

god

 

சீடன் ஒருவன், ""குருவே! கடவுளை அடைய நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?'' என கேட்டான்.
குரு அவனிடம், ""வேகமாக ஓடு! ஆனால், அதற்கு முன் கடவுளே! உனக்கா கவே ஓடுகிறேன் என்று எண்ணிக் கொள்,'' என்றார்.
""என்ன குருவே! கடவுளை அடைய வழி கேட்டால் ஓடச் சொல்கிறீர்களே! ஏன் உட்கார்ந்து கொண்டு ஏதாவது செய்ய வழியில்லையா?'' என்றான்.
""ஏன் இல்லை? தாராளமாகச் செய்யலாம். ஆனால், உட்காருவதற்கும் நிபந்தனை உண்டு. கடவுளே! உனக்காகவே உட்காருகிறேன் என்ற எண்ணியபடி உட்கார். அவ்வளவு தான்!'' என்றார்.
""ஓடிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தால் போதுமா? ஜபம், தவம் ஏதும் தேவையில்லையா?'' என்று கேட்டான்.
""தாராளமாய் செய்யலாம். ஆனால், ஒன்றை நினைவில் வை. கடவுளே! இவற்றையும் உனக்காகவே செய்கிறேன் என்று சொல்,'' என்றார் குருநாதர்.
"" அப்படியானால், கடவுளுக்காக இதைச் செய்கிறேன் என்னும் கருத்து தான் இங்கு முக்கியமாகிறது. செயலை விட கடவுளுக்கு அர்ப்பணம் என்பது தான் முக்கியமா?'' என்றான் சீடன்.
""செயலும் அவசியம் தான். செயல் இல்லாவிட்டால், மனதில் இவ்வகை பாவனையே தோன்றாது. எப்போது எண்ணமும், செயலும் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் எதுவும் முழுமையடையும். கடவுள் விஷயத்தில் இது மிக மிக அவசியம்,'' என்றார் குரு.

Friday, August 1, 2014

பாவ மன்னிப்பு எப்படி கிடைக்கும். ?

pulaal

என்னுடைய நண்பர் நிறைய அன்னதானம் செய்வார். நிறைய கடவுள் பக்தி உள்ளவர், அதே நேரத்தில் கோழி , ஆடு போன்ற வாயில்லா உயிர்களை கொன்று அதன் இறைச்சியைக் கொண்டு விருந்து படைத்து தானும் உண்பார். அவரை ஊர் மக்கள் அனைவரும் அன்னதான பிரபு என்று அன்புடன் மதிக்கத் தக்கவராக இருந்தார் .
வாரம் தவறாமல் சர்ச்சு, மசூதி, கோவில் போன்ற இடங்களுக்கு சென்று இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு வழிபாடு செய்து வருவார்.
ஒருநாள் தொழில் சம்பத்தமாக அவருக்கும் அவர் நண்பருக்கும் சண்டை வந்து அவர் தன்னுடைய நண்பரைக் கொலை செய்து விட்டார் . அவரை காவல் துறை கைது செய்து நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள் .
அங்கே கொலைக் குற்றத்திற்கான வாதம் நடந்து கொண்டு இருந்தது. அவருடைய வக்கீல் சொன்னார் . ”ஐயா அவர் நிறைய அன்னதானம் செய்பவர் மக்களிடம் நிறைய மதிப்புள்ளவர். பாவ மன்னிப்புக்காக தினமும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டு உள்ளவர் ஆதலால் இந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து அவரை விடுதலை செய்து விடுங்கள்.” என்றார்
அதற்கு நீதிபதி , “நீங்கள் சொல்லியபடி அவரை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை . அவர் செய்த கொலைக் குற்றத்திற்கு உண்டான தண்டனை, அவருக்கு தூக்கு தண்டனைதான்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நாம் தினமும் வாயில்லாத உயிர்களைக் கொன்று அதன் புலாலை உண்டு உடம்பை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுத்து விடுவாரா ?
ஊரில் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இறைவன் படைத்த உயிர்களை கொன்று தின்றுவிட்டு இறைவனிடம் சென்று பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் கொடுக்க மாட்டார் .
கொல்லான் புலாலை மறுத்தானை

எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்.

இது தெய்வத்திருமறை சிந்திக்கவும் .

 

நன்றி: முகநூல்

Thursday, July 31, 2014

அற்புதங்கள்!

sairam

நானா (பாபாவின் பக்தர்); பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]



பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.



நானா: அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?



பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

Wednesday, July 30, 2014

நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்!

foursai

இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே.இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார். அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சந்தேகங்களால் அலைபாய்ந்து, சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டு வந்தார் என்று நினைக்கும். அந்தச் சூழ்நிலையில்தான் நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள் தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே. சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!

Tuesday, July 29, 2014

பாபாவின் நிழற்படம்

25124

ஸ்ரீ சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதை.



பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டிக்குச் சென்றார். அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,- "இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்"
பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். பாபா சிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை.நானோ சிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை.பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும் தாயன்பும் புரிந்தது.
இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!



ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.அனைத்தையும் இயல்பாகவே அறியும் பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.

Monday, July 28, 2014

நிலையான துணை!

baba6

மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.



"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.



ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.



இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?

Sunday, July 27, 2014

புத்திரபாக்கியம் அருளும் பாபா!

a9055-shirdi-sai-ananda-bliss-mandala

ஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை. 1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்குச் செல்லவில்லை. 1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சீரடிக்கு பாபாவிடம் வந்தார்.



பாபா: என்ன! திமிறு ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.



தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரபேறு அருளினார்.

Saturday, July 26, 2014

மகா புண்ணியசாலி!

3ac3f-shirdi_sai_baba-shamadhi-1

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராயிருந்தும், ஜோலியை (பிச்சைக்காக துண்டை மடித்து கையேந்தும் பொருளாக பயன்படுத்துதல்) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாகச் சென்றார்.



யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, "ஒ மகளே எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி. ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில் வாயிலாகச் சென்றார். பாஜி, சாம்பார், பால்,மோர் போன்ற திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது. ஆனால், சாதத்தையோ,சோள ரொட்டியையோ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார்.



விதவிதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்து சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ஜோலியில் வந்து விழுந்த உணவை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதை பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவை உணர்வை இழந்து விட்டது போலும்!



ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புவார். திருப்தியும் அடைவார். பிச்சையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை. விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்க கிளம்புவார். சில நாட்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்.



இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும், நாய்களும் சுதந்திரமாக உணவு உண்டன.



பூனைகளையும், நாய்களையும்கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவரது வாழ்க்கை புனிதமானது.



 ஸ்ரீமத் சாயி இராமாயணம். அத்தியாயம் 8.

Friday, July 25, 2014

பரிட்சை!

e419f-shirdi_saibaba

காகா சாஹேபின் (பிராம்மணர்) முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்பட வேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.



காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.



காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"
பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.




  • ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23

Thursday, July 24, 2014

சிற்றெறும்பின் காலில்..

sai29

பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின் ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என்பார்.



நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.



அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.



 

Wednesday, July 23, 2014

வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்!

meekkudi

எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?



என்னுடைய கதைகளை மட்டும் கேட்டால்கூடப் போதும்,வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பேன்.



பக்தியுடன் என்னுடைய லீலைகளை செவிமடியுங்கள்;கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள்; பிரதிபலித்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியை பெறுவீர்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

இன்பமும் துன்பமும்

ac821-sridisaibaba

இன்பமும் துன்பமும் மாயையே. இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது. அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான். ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி, ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன; ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும், வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன. பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்; முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர். அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே, அதாவது பசி தீர்வது. ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான். இவருடைய நோக்கமும் ஒன்றே, அதாவது உடலை மறைத்துக் கொள்வது. இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது. இது மாயையின் தோற்றம், அழிவைத் தரக்கூடியது. மனதில் சுகம், துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது, அவற்றிற்கு இடம் கொடுக்காதே, எதிர்த்து நில். அது முற்றிலும் மாயையே.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...