Thursday, August 31, 2017

தன்னை அறிதல்



பாபாவின் சத்சரித்திரம் அவரை எனக்குக் கடவுளாகக் கற்பிக்கவில்லை. நானாகக் கற்றுக் கொண்டது. உபநிக்ஷத்துக்கள் என்னை இந்த உடலாகக் கற்பிக்காமல் ஆன்மாவாக நான் அளவற்ற சக்தி பெற்ற இறைவனாகக் கற்பித்தது.
ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டவர்கள் அனைவரையும் ஐயப்பனாக நினைப்பதையும், அவரது கோயில்களில் தத்வமசி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் பார்த்தேன். அது நீயே என்ற அந்த விளக்கம் என்னை மாற்றியது. நான் எங்கிருந்து வந்தேன்? என யோசித்து ஒவ்வொன்றாக அலசும்போது, நான் இறைவனாக - இறைவன் நானாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த உடம்பில் இருக்கும் வரை இதற்கு உரிய மாயைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையும் இறைவனாக வெளிப்பட்ட மனிதர்கள் வாழ்விலிருந்து அறிந்துகொண்டேன்.
சுக துக்கம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை எனப் புரிந்துகொண்டேன். நீர் பழத்தில் சாறாகவும், இலையில் சாரமாகவும் இருக்கிறது. உடம்பில் ரத்தமாகவும், சிறுநீராகவும் இருப்பதும் நீர்தான். பாம்பில் விஷமாக இருப்பதும் நீர்தான். பாலாக இருப்பதும், தேனாக இருப்பதும் நீர்தான்.
அது எதனுடன் சேர்கிறதோ அதன் தன்மையை அது அடைந்துவிடுகிறது. அதைப் போலவே, ஆன்மா இருக்கும் இடம், எடுக்கும் பிறவி, வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப மாற்றம் அடைவது தவிர்க்க  முடியாதது. இதற்குக் கடவுளை காரணம் காட்ட முடியாது என உணர்ந்தேன்.
உலகம் இந்த உடம்புக்காக வேலை செய்கிறது. இந்த உடம்போ, தான் நிலைத்திருக்கப் போகிறோம் என்ற நினைப்பில் செயல்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், உடம்பு தன்னை அறியாமலேயே அடுத்து வரப்போகும் உடம்புக்காக வேலை செய்கிறது.
அதனால்தான் இந்த உடம்பு செய்கிற செயலை ஒட்டி அடுத்த ஜென்மம் ஏற்படுவதாக நமது சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அது இப்போது செய்கிற நன்மை தீமைக்கு ஏற்பவே அடுத்த உடம்பு தரப்படுகிறது என்பன போன்ற உண்மைகளை உணர்ந்து கொண்டேன்.
இந்த ஆன்மா எப்போதும் கட்டுண்டு கிடக்கிறது. அதற்கு கதி மோட்சமே கிடையாது. அடுத்த ஜன்மம் இருக்கிறது என்றால், அந்த ஜென்மத்திற்குப் போக வேண்டியதும் இந்த ஆன்மாதானே! ஆகவே, அது கட்டுண்டுதான் கிடக்கிறது.
நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, இயேசு உங்களுக்குக் கடவுளாகவோ, மகானாகவோ தெரிவார். ஆனால் எனக்கோ, அது நானாக, என் ஆன்மாவின் குரலாக நினைப்பேன்.
பைபிளில் இயேசுவைப் பற்றி யோவான் எழுதிய ஒரு பகுதி முதல் அதிகாரத்தில் இருக்கிறது. ”ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை”.  (அத்1 - 1,2,3).
அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் (அத் 1- 14)
இது கிறித்தவர்களுக்கு இயேசுவைப் பற்றிய செய்தி. ஆனால் எனக்கு, இது என் ஆன்மாவின் நிலை பற்றிய செய்தி. ஆதியில் வார்த்தையிருந்தது என்கிறார்கள். என்ன வார்த்தை என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
ஓம் என்கிற ஓங்காரமே அந்த வார்த்தை. அந்த வார்த்தை இறைவனிடத்தில் இருந்தது. அதுவே இறைவனாகவும் இருந்தது. அதுதான் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமாக இருந்தது. அதுவே என் ஆன்மாவாக இருந்தது. இப்போது மனிதனாகவும், மனிதனுக்குள்ளும் இருக்கிறது. நீயும், நானும் ஓங்காரத்தின் சொரூபங்கள். நமக்குள் இருப்பதும் ஓங்காரத்தின் சொரூபம். இது நான் உணர்ந்து கொண்ட விக்ஷயம்.
இந்த உணர்தலோடு வாழ்வது சாத்தியமா? ஒருவன் தன்னை கடவுளாகவே உணர்ந்தாலும் அவன் இறைவனாக நடந்துகொள்ள முடியுமா? என்றால் அதுவும் இல்லை.
எனக்குள் இருக்கிற ஆன்மா இறைவனாக இருந்தாலும், உடலுக்குள் இருப்பதால் அது மனிதனாகக் கருதப்படுகிறது. எனவே மனிதருக்கு உள்ள இயல்புப்படி வாழ வேண்டும் என்ற இயற்கை நியதிக்குக் கட்டுப்படுகிறது. இந்த உணர்தலோடு தான் _ராமச்சந்திரன் வாழ்ந்தார்.  ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்தார். இறை அவதாரங்கள் அனைவரும் வாழ்ந்தார்கள். மாயையால் மறைக்கப்பட்டு மாயையின் வசப்பட்ட மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
நானும் அவ்வாறுதான் வாழ முடியும். மாயைத் தருகிற அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும். எனவே, எனக்காக நான் வேண்டிக்கொள்ளக் கூடாது, என்னைப் போல உணர்தல் இல்லாதவர்கள் இதை உணர்ந்து கொள்ளும் வகையில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
பாபா இதை அழகாகக் கற்றுத் தந்தார். லவுகீக விக்ஷயங்களுக்காக தன்னிடம் வந்தவர்கள் தடை செய்யப்பட்ட போது, அவர்களை என்னிடம் வரத் தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பது போல நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு தந்து அவர்களை சிறிது சிறிதாக மாற்றுவேன் என்று கூறினார்.
தன்னைத்தான் அவர்கள் உணர்ந்து கொள்ளும் வழியை போதிக்க நினைத்தார் அவர். ஆனால், மாயை வசப்பட்ட மனிதர்கள் லவுகீக சுகத்திற்காக மட்டுமே பாபாவை கடவுளாகப் பார்த்தார்கள்.
பாபாவின் முயற்சியை நான் முன்னெடுத்துச்சென்று பார்க்கவேண்டும். அவர்களுக்கு லவுகீக சுகங்களைப் பெற்றுத் தந்து ஆன்மீகத்தில் வழி நடத்த உதவவேண்டும். அவர்கள் மேன்மைக்காக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என நினைத்தேன்.
இந்த எண்ணத்தால் ஈர்க்கப்பட்ட பிறகு, என்னைத் தேடி பலர் வர ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பு சாதாரண மனிதனாக ஒதுக்கப்பட்ட நான், அவர்களால் மகானாகக் கருதப்பட ஆரம்பித்தேன்.
அழியப் போகிற இந்த உடம்புக்குள் இருக்கிற நான் என்னை மகானாக நினைக்காமல் மனிதனாக நினைத்துக் கொள்ளத் துவங்கினேன். என்னை பாதுகாப்பதில் என்னைவிட அதிக அக்கறை செலுத்துவது யாராக இருக்கமுடியும்?
அதைப்போலவே என் மீது பக்தி செலுத்த என்னைத்தவிர வேறு யாராலும் முடியுமா? முடியாது.. எனவே, கிருஷ்ணர் ராமனையும், ராமன் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கியதைப்போல, எனது பூர்ண வடிவமான இறை வடிவத்தை, வணங்கக் கடமைப்பட்ட முதல் பக்தனாக என்னைக்கருதி அதை நடைமுறைப் படுத்தினேன். எனது பூரண ரூபமாக சாயியை ஏற்றுக் கொண்டேன். அவர் முன் குறையுள்ள பக்தனாக தினமும் வணங்கி, வரம் கேட்கிறேன். இதனால் எனது உணர்தல் என்னோடு புதைந்திருக்கிறது. எனக்கு மட்டும் புரிந்திருக்கிறது.
யதார்த்தத்தை -  எளிமையாகச் சொல்லவும், வித்தியாசத்தைக் காட்டவும் பாபா கற்றுத் தந்தார். கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை எண்ணி பயப்படாமல் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வதுதான் இயல்பான வாழ்க்கை என்பதை அவர் கற்பித்து, அதில் நடக்கப் பழகினார்.
இந்த உடம்பு செத்த பிறகு எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆகவே, இருக்கிற வரை எவ்வளவு தூரம் முயற்சி செய்ய முடியுமோ அதைச் செய்து பார். எது உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை அறிந்துகொள். அறியாவிட்டால், எது மகிழ்ச்சியைத் தருகிறது என ஆராய்ந்து பார்.. அதில் தயக்கம் காட்டாமல் ஈடுபடு.. அவர் நினைப்பார், இவர் தப்பாகப் பேசுவார் என நினைத்து, யாருக்காகவும் உனது சந்தோக்ஷத்தை இழந்துவிடாதே..
இவ்வாறு போதிக்கப்பட்ட நான், மற்றவர்களின் நன்மையைச் சீர் செய்வதற்காக என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். பக்தியில் மிகப் பழைய முறையான பிரார்த்தனை முறையைக் கையில் எடுக்க வைத்தார். அதிலும் கூட்டுப் பிரார்த்தனை முறையை நடை முறைக்குக்கொண்டு வர வைத்தார். இன்றுவரை இந்த புதிய அணுகுமுறை என்னை -  எனது வழியை மிக வேகமாக உயர்த்தி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் தெரிந்த சாயி பக்தர்கள் மனதில் தனியிடம் பெற வைத்தது.
எல்லாவற்றையும் ஈர்க்கும் திறன் என்னிடம் இருந்தாலும், நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை எல்லாம் நடைமுறைப் படுத்தவேண்டும் என முயற்சிக்கக் கூடாது.
இவ்வாறு முயற்சித்தால் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும். எனக்கு எல்லாம் தெரியும் என்பவனுக்கு உருப்படியாக ஒன்றும் தெரியாது. உனக்கு என்ன தெரியும் என்பதைச் சொல் அதற்கேற்ப வேலை தேடு, வெற்றி பெறுவாய் என்பது பொன்மொழி.
ஆக, அனைத்திலும் ஈடுபட்டு ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் போவதைவிட, ஏதோ ஒன்றைத்தனித்தன்மையுள்ளதாக ஏற்று, அதில் முழு விருப்பத்தையும் செலுத்தி அதை ஈர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம் அல்லவா?
சாயி என்ற கடவுளைத் தனித் தன்மையுள்ளவராக அடையாளம் கண்டு ஏற்றேன். இன்று அவரால் ஈர்க்கப்பட்டு, ஜெயிக்கிறேன், ஜெயிக்க வைக்கப்படுகிறேன். எனது அணுகுமுறையை பல சாயி பாபா ஆலயங்கள் பின்பற்ற வழிவகுத்தது.
இவற்றைப் பற்றியெல்லாம் நான் அவ்வப்போது சொல்லிக் கொண்டே போகிறேன். கேட்டபடியே என்னைப் பின் தொடர்ந்து வா!
சாயி வரதராஜன்.

மந்திரம் தேவையில்லை...




அனுபூதி சித்தர் என்கிற அடியாரை சாயி தரிசனம் வாசகர்களுக்கு நன்கு தெரியும். அம்பாள் உபாசகர். அவர் என்னிடம், ”உங்களை நாடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வர ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் நிறைய அற்புதங்கள் அடையாளங்களைச்செய்யவேண்டும். அதற்குரிய மந்திரங்களைப்பிரயோகம் செய்தால் இது சாத்தியமாகும். நான் சில மந்திரங்களைக் கற்றுத் தருகிறேன்!” எனக் கூறுவார்.
அவர் அமர்ந்திருக்கும்போது யாராவது ஒருவர் வந்து, ”சாயி ராம்! நீங்கள் எனக்கு உதி தந்தீர்கள். பிரச்சினை தீர்ந்தது”  என்றோ,  “குழந்தை பிறந்தது” என்றோ கூறுவார்கள். அப்போது,  “மந்திரமெல்லாம் உனக்கு சரிப்படாது.. என் உதியே போதும் என பாபா கூறுகிறார் பாருங்கள்! எனக் கூறுவேன்.
ஆனால் தனிமையில் பாபாவிடம், ”பாபா எனக்கு மந்திரத்தைச் சொல்லித் தாருங்கள்” எனக் கேட்பேன்.
சாயி பாபா எந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து இத்தகைய அற்புத சக்தியைப் பெற்று இருப்பார் என யோசிப்பேன். எந்த மந்திரமும் அவருக்கு சக்தியைத் தந்திட வாய்ப்பில்லை. மனதின் உறுதியும், தன்னை அறிந்துகொண்ட விதமும் தான் அவருக்கு இறைத்தன்மையை அளித்தது என முடிவு செய்தேன்.
மனதிற்கு உறுதி வரவேண்டும் என்றால் அதை ஓரிடத்தில் கட்டி வைக்கவேண்டும். அதைக் கட்டும் கயிராகத்தான் முன்னோர்கள் மந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். நமோ நாராயணாய என்பதும், ராம ராம என்பதும்,சிவ சிவ என்பதும், சரவண பவ என்பதும் மந்திரம். இந்த நாமாக்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதை திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது அது பலன் தர ஆரம்பிக்கிறது.
பாபா, எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதும், அனைத்தும் நமது கைவசமாகும் எனக் கூறியிருக்கிறார். ஆகவே, அவரது பெயரே ஒரு தீவிரமான மந்திரம் என்ற முடிவுக்கு வந்தேன்.
இவ்வாறே கபீரின் வாழ்க்கையைப் படித்தால், முஸ்லீமான அவர், ராம ராம என்ற வார்த்தைகளை இடைவிடாமல் சொல்லிச் சொல்லியே மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்தார்.
நூலை வானத்தில் விட்டெறிந்து அந்த நூலின் மீது ஏறிச் சென்று அதன் நுனியில் உட்காரவும், நினைத்த உருவை எடுக்கவும் அவர் செய்தார். எனவே, நாமத்திற்குப் பலன் உண்டு.
அப்பர் பெருமான் ”சிவாய நம”  எனக் கூறியே, கடலில் கல்லைக் கட்டி வீழ்த்தியபோதும் மிதந்தார். ஆக, நாமத்திற்குச் சக்தியுண்டு. அதில் நமக்கு ஈர்ப்புதான் இருக்கவேண்டும். இரண்டு நாட்கள் சாயி சாயி என்றும், அடுத்த இரண்டு நாட்கள் ராம ராம என்றும் கூறுவதால் பலனில்லை. எந்த ஒன்றை தேர்வு செய்கிறோமோ அதின்மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்தி அதையே பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி பிடிப்பதற்குப் பெயர்தான் ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு வந்துவிட்டால் உங்களுக்கு அனைத்தும் கைவசமாகிவிடும்.
இதை உணர்ந்த பிறகு, நாம ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். இடைவிடாத நாம ஜெபம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. பெரிய அளவில் என்னை மாற்றியது.
யாரையெல்லாம் மகான்கள் என எண்ணி ஓடிக்கொண்டிருந்தேனோ, அவர்கள் என் பெயரைக் கேட்டதும் வியப்பும், அச்சமும், பொறாமையும் கொள்ளும் அளவுக்கு அந்த மாற்றம் இருக்கிறது.
புரியாத விக்ஷயங்களை நாம ஜெபம் எனக்குப் புரிய வைத்தது. நான் படித்து அறிந்திராத உபநிக்ஷத்துகளில் இருந்து செய்திகளை நான் எழுதியிருப்பதை, அந்த உபநிக்ஷத்துக்களைப் படித்த பிறகு, அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.
பாபா, எனக்கு மறைபொருளை விளக்கியிருக்கிறார் எனத் தெளிந்தேன். இதனால் அந்த நாமத்தின் மீது மேலும் ஈர்ப்பு ஏற்பட்டது. நாயன்மார் பதிகம் பாடியது தமிழில். அவர்கள் பிரயோகித்த மந்திரம் என்ற பதிகத்தை நாம் பாடினால் நன்மை தருவதில்லை. காரணம் என்ன?
அவர்களின் மனத்தின் திடம், நம்பிக்கை, தெளிவு.  ஆகவே, நான் அவர்களைப் போல மாறவேண்டும் என முடிவு செய்தேன்


சாயி வரதராஜன்
 
சாயி வரதராஜன்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...