Thursday, July 31, 2014

அற்புதங்கள்!

sairam

நானா (பாபாவின் பக்தர்); பாபா,தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]



பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை.இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அது ஒழுங்கின்மை,குழப்பம் விளைவிக்கும்.



நானா: அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்"என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?



பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன.நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

Wednesday, July 30, 2014

நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும்!

foursai

இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே.இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார். அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.மனம் சந்தேகங்களால் அலைபாய்ந்து, சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மை கொண்டு வந்தார் என்று நினைக்கும். அந்தச் சூழ்நிலையில்தான் நம்பிக்கை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள் தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான நம்பிக்கை வேரூன்றும் வழி இதுவே. சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!

Tuesday, July 29, 2014

பாபாவின் நிழற்படம்

25124

ஸ்ரீ சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரை நேரிடையாக தரிசனம் செய்வதற்கு சமானம் என்னும் கருத்தை விளக்கும் கதை.



பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர் ஒருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டிக்குச் சென்றார். அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும், அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,- "இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்"
பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார், என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். பாபா சிர்டியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை.நானோ சிர்டிக்கு வருவது இதுதான் முதல் தடவை.பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது. பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது. பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும் தாயன்பும் புரிந்தது.
இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே. அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும், பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!



ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.அனைத்தையும் இயல்பாகவே அறியும் பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.

Monday, July 28, 2014

நிலையான துணை!

baba6

மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.



"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.



ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.



இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?

Sunday, July 27, 2014

புத்திரபாக்கியம் அருளும் பாபா!

a9055-shirdi-sai-ananda-bliss-mandala

ஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை. 1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்குச் செல்லவில்லை. 1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சீரடிக்கு பாபாவிடம் வந்தார்.



பாபா: என்ன! திமிறு ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.



தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரபேறு அருளினார்.

Saturday, July 26, 2014

மகா புண்ணியசாலி!

3ac3f-shirdi_sai_baba-shamadhi-1

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராயிருந்தும், ஜோலியை (பிச்சைக்காக துண்டை மடித்து கையேந்தும் பொருளாக பயன்படுத்துதல்) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாகச் சென்றார்.



யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, "ஒ மகளே எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி. ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில் வாயிலாகச் சென்றார். பாஜி, சாம்பார், பால்,மோர் போன்ற திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது. ஆனால், சாதத்தையோ,சோள ரொட்டியையோ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார்.



விதவிதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்து சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ஜோலியில் வந்து விழுந்த உணவை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதை பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவை உணர்வை இழந்து விட்டது போலும்!



ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புவார். திருப்தியும் அடைவார். பிச்சையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை. விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்க கிளம்புவார். சில நாட்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்.



இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும், நாய்களும் சுதந்திரமாக உணவு உண்டன.



பூனைகளையும், நாய்களையும்கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவரது வாழ்க்கை புனிதமானது.



 ஸ்ரீமத் சாயி இராமாயணம். அத்தியாயம் 8.

Friday, July 25, 2014

பரிட்சை!

e419f-shirdi_saibaba

காகா சாஹேபின் (பிராம்மணர்) முறை வந்தது. அவர் நல்ல "தங்கம்" தான் என்பதில் ஐய்யமில்லை இருந்தாலும் பரீட்சிக்கப்பட வேண்டும். கத்தி ஒன்றை அவரிடம் கொடுத்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.



காகாவின் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா "நிறுத்து, எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாய் இருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.



காகா சாஹேப் கீழ்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார், "தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் கருதவில்லை.பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும், மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்"
பின்னர் காகா விடம் இருந்து கத்தி திரும்பப் பெறப்பட்டது. ஆடு தாமாகவே இறந்து விட்டது.




  • ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 23

Thursday, July 24, 2014

சிற்றெறும்பின் காலில்..

sai29

பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின் ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என்பார்.



நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.



அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.



 

Wednesday, July 23, 2014

வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்!

meekkudi

எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?



என்னுடைய கதைகளை மட்டும் கேட்டால்கூடப் போதும்,வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிப்பேன்.



பக்தியுடன் என்னுடைய லீலைகளை செவிமடியுங்கள்;கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள்; பிரதிபலித்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியை பெறுவீர்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

இன்பமும் துன்பமும்

ac821-sridisaibaba

இன்பமும் துன்பமும் மாயையே. இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது. அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான். ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி, ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன; ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும், வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன. பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்; முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர். அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே, அதாவது பசி தீர்வது. ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான். இவருடைய நோக்கமும் ஒன்றே, அதாவது உடலை மறைத்துக் கொள்வது. இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது. இது மாயையின் தோற்றம், அழிவைத் தரக்கூடியது. மனதில் சுகம், துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது, அவற்றிற்கு இடம் கொடுக்காதே, எதிர்த்து நில். அது முற்றிலும் மாயையே.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Tuesday, July 22, 2014

சமாதி மந்திர்

green

மனிதன் எத்தனையோ விஷயங்களை முன்கூட்டித்திட்டமிடுகிறான். சில நேரம் நண்பர்கள், உறவினர்கள், வல்லுனர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்கவும் செய்கிறான்.



மனித முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் தெய்வ அருளும் கூடி வரும்போது எண்ணியது எண்ணியபடி அமையும். மனிதன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தெய்வ சங்கல்பத்தின்படிதான் செயல்கள் நிகழும் என்பது மனிதனுக்கு காலம் கற்றுத் தரும் பாடம். காலம் கடந்த பின்னரே இதை நாம் புரிந்து கொள்கிறோம்.



ஷீரடியில் ஒரு மாளிகையைக் கட்டிய பாபுசாகேப் புட்டி, அதன் நடுவில் ஒரு மேடை அமைத்து அதில் முரளிதரனின் சிலையை வைக்க பாபாவின் சம்மதம் வேண்டினார். பாபாவும் அதற்கு சம்மதித்து, "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார். தான் கட்டி முடித்த மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்த புட்டி, மிகவும் மனம் மகிழ்ந்தார். ஆனால் 'நடக்கப் போவது என்ன?' என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.



சாயிபாபா, தான் உடலைத் துறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தார். புட்டியின் மாளிகையைத் தனது சமாதிக் கோவிலாகத் தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, புட்டியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த பாபா, அங்கு முரளிதரனாக தானே வரப்போவதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில்தான், "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார்.

எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு!

20144

பாபா: நானா (பாபாவின் நெருங்கிய பக்தர்), எனக்கு பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.



அதன் பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து, பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா:பாபா உட்கொள்ளுங்கள்.



பாபா சற்று நேரம் தாமதித்தார். போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.



பாபா: நல்லது, இந்த தட்டுகளை எடுத்துச் செல்.



நானா: அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி? தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்? கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் , நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன். நானும் உண்ணமாட்டேன்.



பாபா: ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டு வந்த போளியை சாப்பிட்டு விட்டேன். பிடிவாதம் வேண்டாம். தட்டுகளை எடுத்துச் சென்று, உணவு உட்கொள்.



நானா சிணுங்கியவாறு மீண்டும் சாவடிக்குச் சென்று விட்டார். மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.



பாபா: நானா! நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய். இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது!என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா! 'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா! அவ்வளவுதானா?
இதோபார், நான் எறும்பு உருவிலும் உண்கிறேன். மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன். எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன். உன் போளியை வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன்..அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.



நானா: தாங்கள் இப்படிக் கூறினாலும், என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்ன செய்யட்டும்?எனக்கு புரிய வைத்தீர்களானால், நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன். சாப்பிடுகிறேன்.



அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது. அது பாபா தனது அந்தராத்மா எனவும், ஆகவே எல்லோரினுள்ளும், எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்தியது.



பாபா: நானா, நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ, அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்) உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

Monday, July 21, 2014

பொறாமை

2e761-02-sai-baba-020409

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ,செல்வாக்கோ கிட்டி விட்டால்,நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம்.அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது?ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே? நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என எண்ணுவோமே? அல்லது அதே நலம் நாமும் பெறுவோம், அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்? ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

போட்டியும் போராட்டமும்

14

உலகம் தோன்றிய நாள் முதல் போட்டியும் போராட்டமும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகி விட்டன. உண்மையை எதிர்த்து பொய்மை போராடுவதும், நன்மையை எதிர்த்து தீமை போராடுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. இந்தப் போராட்டங்களின் தொடக்கத்தில் தீய சக்திகளின் கைகளே வலுப்பெற்று ஓங்கி இருப்பது போல் ஒவ்வொரு முறையும் தோன்றுவது உண்டு.  ஆனால், எப்போதும் இறுதியில் வெற்றி பெறுபவை, உண்மையும் நன்மையுமே என்பது கடந்த கால வரலாறு கற்றுத் தரும் பாடமாகும். 



ஷீரடியில், சாயிபாபாவுக்கும் மொஹித்தின் தாம்போலிருக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தைக் காண கிராம மக்கள் பெருந்திரளாகக் கூடி இருந்தனர்.  அவ்வப்போது கைதட்டியும் உரக்க குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். பாபாவே வெற்றி பெறுவார் என்று வெளிப்படையாகப் பலர் கூறினார். மொஹித்தின் தாம்போலியின் ஆதரவாளர்கள் சிலர் அதை வன்மையாக மறுத்தனர்.  ஒரு பக்கம், அவர்களிடையே விவாதம் வலுத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் உக்கிரமான சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. அதன் முடிவு - மொஹித்தின் தாம்போலிக்குச் சாதகமாக அமைந்தது. சாயிபாபாவின் ஆதரவாளர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். ஆனால், பாபாவோ எப்போதும் போல் புன்முறுவல் பூத்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Sunday, July 20, 2014

அற்புதமான சக்தி!

DSC_0005

ஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம்,செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம், ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை.எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ,அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்?இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!



மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

இறை நாம மகிமை!

nagasai



இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும். ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும். அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும். ஸ்மரணை செய்ய வேண்டும். கலியுகத்தில் இறைநாமத்தைத் தவிர்த்து, தருணோபாயம் வேறொன்றுமில்லை. அது ஒன்றே அடைக்கலம்.



ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

Saturday, July 19, 2014

ஞானம்!

a9fae-img_0450

விதிக்கப்பட்ட, விதிக்கபடாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்? அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்? போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.



ஸ்ரீ சாயி இராமாயணம் .

கவசமாய் நான் இருக்கிறேன்!

5abe19fa-5480-4823-8a4a-c0f6a0b73e23_S_secvpf.gif



உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன். பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன். இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்? பயமற்று இருங்கள்! ஏக்கம் ஏன்? எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்? என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள். கவலை ஏன்? எனக்காகவே கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.



ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

Friday, July 18, 2014

கருணாமூர்த்தி!

sai15



நான்கு புருஷார்த்தங்களில் (அறம்,பொருள், இன்பம்,மோட்சம்) கடை நிலை மோட்சம். ஆயினும் அதுவும் குரு பாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாத தீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.



"இந்த பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கைவையும். சீக்கிரமே நீர் பேறு பெற்றவர் ஆவீர்"



                                                                                                                                                                        ஸ்ரீஷிர்டிசாய்பாபா.

எந்த துன்பமும் இருக்காது

25121



இந்த சராசர சிருஷ்டியனைத்திலும், உள்ளும் புறமும் நானே நிறைந்துள்ளேன். உங்கள் செயல்கள் அனைத்தும் எனக்குத் தெளிவாகத் தெரியும்.இதை எப்போதும் மறக்காமலிருங்கள்..
நான் உங்கள் இதயத்துள் வசிப்பவன். என்னை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு எந்த துன்பமும் இருக்காது. என்னை மறந்தவர்கள் மாத்திரம் மாயையின் சவுக்கடிகளை ஏற்பார்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அந்த ஏழு நாட்கள்!

flower

மகான் ஏகநாதரிடம் பக்தர் ஒருவர், ""சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?'' என்று கேட்டார்.
ஏகநாதர் அவரிடம்,"" என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!'' என்றார்.
""ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?'' என்றார் பக்தர்.
""ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்'' என்றார் ஏகநாதர்.
இதைக் கேட்டு, ""சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?' என்று அதிர்ந்தார்.
""ஆம்..'' என்றார் ஏகநாதர்.
பீதியடைந்த பக்தரும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஒருவாரம் கடந்தது.
""இன்று தான் கடைசிநாள். ஒருமுறை மீண்டும் ஏகநாதரை தரிசிக்கலாம்,'' என்று புறப்பட்டார்.
கண்ணீர் மல்கியபடி, ""சுவாமி'' என்று பாதத்தில் விழுந்தார்.
""இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவம் செய்தாய்?'' என்றார் ஏகநாதர்.
""பாவமா! எப்படி செய்ய முடியும். கடவுளின் நினைவைத் தவிர வேறில்லையே!'' என அழுதார்.
""பார்த்தாயா! மரணம் வந்து விட்டது என்று தெரிந்ததும், உன் மனம் எப்படி மாறி விட்டதென்று! கடவுளைத் தவிர வேறு நினைப்பே இல்லாமல் போய் விட்டதல்லவா! மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன். உனக்கு ஆயுள் இன்னும் இருக்கிறது,'' என்று சொல்லி கட்டி அணைத்தார்.

 

நன்றி: முகநூல்

Thursday, July 17, 2014

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்

5788d-shirdi-sai-baba-wallpaper-eye-sai

எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபாவத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார் .அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

பாரத்தை நானே சுமக்கிறேன்.

481814_398481726895486_719640326_n



இந்த சராசர சிருஷ்டியனைத்திலும், உள்ளும் புறமும் நானே நிறைந்துள்ளேன். உங்கள் செயல்கள் அனைத்தும் எனக்குத் தெளிவாகத் தெரியும்.இதை எப்போதும் மறக்காமலிருங்கள்..
நான் உங்கள் இதயத்துள் வசிப்பவன். என்னை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு எந்த துன்பமும் இருக்காது. என்னை மறந்தவர்கள் மாத்திரம் மாயையின் சவுக்கடிகளை ஏற்பார்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Wednesday, July 16, 2014

சமநிலை பார்வை

sai18



நண்பனையும், விரோதியையும் சரிசமமாகவே பாருங்கள்.



எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள்.



எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள்.



அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சமநிலையில் இருந்து பாருங்கள்.



 

 ஷிர்டி சாய்பாபா

மாயை!

SAIBabalittle



மாயை மற்றும் அதன் செயல்பாடுகள் இருந்தால் இருக்கட்டுமே.மாயை எனது பாதங்களில் சரணடைந்து என் ஆதீனத்திலேயே இருக்கும்.என்னை எப்போதும் ஸ்மரிக்கின்றவர்களின் அருகில் கூட மாயை வராது. மாயையும் கூட எனது அம்சமே. எனது சேவையிலே மூழ்கி,என்னை சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வராது.என் வார்த்தைகளின் மேல் திடமான விஸ்வாசம் வையுங்கள்.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Tuesday, July 15, 2014

பாபா விரும்புவது

offering2



ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர். பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும். மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும், அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே. பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர். அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும், உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.

தக்ஷிணை

offering

புரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது. எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

Monday, July 14, 2014

கர்மவினை!

25128



பிறவிகள் மாறிக் கொண்டே இருக்கும். தேகம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் கர்மவினை நம் பின்னால் வந்து கொண்டே இருக்கும். மீதமுள்ள கர்மவினைகளில் தான் பிறவிகள் தொடர்கின்றன. அனுபவிக்காமல் கர்மவினை நீங்காது. வேறுவழி இல்லை. அனுபவிக்காமலேயே அதற்கு மாற்று வழி இல்லாதது ஏதாக இருக்குமோ அதை கர்மாவின் உருவமாகவே கருத வேண்டும். ஆனால் இவ்விஷயத்தில் பாபா ஏன் தேவைப்படுகிறார்? தேவை உள்ளது. பாபாவை ஆராதனை செய்து கொண்டிருந்தால், அவரின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால், சாயி சாயி என்று எப்பொழுதும் நீங்கள் ஸ்மரணை செய்து கொண்டிருந்தால், அதன்பலனாக இரும்பு போன்ற கர்மா பஞ்சு போலாகிவிடும். கர்மாவை அனுபவிக்கும் சக்தியை, சக்தியே உருவான ஸ்ரீ சாய் பாபா பிரசாதிப்பார்.

துவாரகாமாயி

04b9d-200px-baba_stone



நானாக இந்த மசூதிக்கு (துவாரகாமாயி) வருகிறேன் என்ற பாவத்துடன் நீங்கள் வருகிறீர்கள்.ஆனால் உண்மையான மர்மம் என்னவென்று தெரியுமா? உங்கள் ருசிக்கு தகுந்த ஏதோ ஒரு சங்கல்பத்தை இம்மசூதியே தோற்றுவிக்கும். அந்த மசூதி மாயி அவ்விதமாக அவர்களை இங்கு அழைத்து வந்து, அவர்கள் விருப்பத்தைப் பக்கத்தில் வைத்து, உபயோகப்படும் தன் விருப்பத்தை நிறைவேற்றிவிடும். இக்காரணத்தால் உலக விருப்பங்கள், பரமார்த்திக லாபத்தை பெறுவது நிகழும்.



ஸ்ரீ சாய் திருவாய்மொழி.

Sunday, July 13, 2014

உபதேசங்கள் எல்லாம் வீண்!

srisaipainting

நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி, உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம், தந்திரம், உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள். விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

வந்தது நானே!

12



மகல்சாபதி (பாபாவின் நெருங்கிய பக்தர்) தமது பல்லக்குடன் ஜேஜுரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே பிளேக் நோய் பரவியிருந்தது. மகல்சாபதியும் அவருடன் வந்த சக பயணிகளும் பல்லக்கை கீழே வைத்தனர்; மிக்க மனவுளைச்சலுடன் மகல்சாபதி பல்லக்கின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் புறம் யாரோ இருப்பது போல் அவருக்கு தோன்றியது. பின்பக்கமாக அவர் திரும்பிய போது, அங்கே பாபாவைக் கண்டார்; ஆனால் அவர் உடனே மறைந்து விட்டார். சகாக்களிடம் பாபா அவர்களுடன் இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் எல்லோருக்கும் துணிவு வந்தது; மேலும் நான்கு தினங்கள் அங்கேயே தங்கினார்கள். ஒருவரையும் பிளேக் நோய் பற்றவில்லை. எல்லோரும் நலமாக திரும்பிச் சென்றனர்.அவர்கள் திரும்பி வந்தபோது,



பாபா: பகத், உமக்கு நல்லதோர் யாத்திரை, நீர் பல்லக்கின் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தீர். அந்த சமயம், நான் அங்கே வந்திருந்தேன்.



இவ்விதமாக தமது அதிசயத்தக்க சக்திகளால் தாம் வாஸ்தவமாகவே அன்று ஜேஜூரியில் இருந்ததை உறுதிப்படுத்தி மகல்சாபதி, பாபாவைக் கண்டது மனப்பிராந்தியோ, மாயையோ அல்ல என்பதையும் தெளிவாக்கினார்.

Saturday, July 12, 2014

நோய் தீர்க்கும் பாபா கோயில்!

meekkudi



திருச்சி மேக்குடி கிராமத்தில் உள்ள பாபா கோயிலின் நிர்வாகி காந்திமதி. திருச்சியின் பிரபல வக்கீலும் தொழிற் சங்கவாதியுமான மீனாட்சிசுந்தரத்தின் மனைவி இவர்.
‘‘1980களில் மகாராஷ்டிராவில் இருந்த எங்க மகளையும் மருமகனையும் பார்க்கப் போன போதுதான் ஷீரடி கோயிலுக்குப் போனோம். என்னவோ ஒரு ஈர்ப்பு... அங்கே அடிக்கடி போகணும்னு தோணிச்சு. அங்கே நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவநேச பாபாவை ஒரு முறை தரிசித்த போது, அவர்தான் பூஜை செய்யப்பட்ட பாபா படம் ஒன்றைக் கொடுத்தார். அதைத் தண்ணீர் பஞ்சமில்லாத ஒரு கிராமத்தில் வைத்து வணங்கச் சொன்னார்.



அப்படிப்பட்ட இடத்தைத் தேட முடியாமல், ஆரம்பத்தில் அதை வீட்டில்தான் வைத்து வணங்கினோம். நண்பர் ஒருவர் தனக்கு மேக்குடி கிராமத்தில் நிலம் இருப்பதாகச் சொல்லி, அங்கேயே கோயில் கட்டலாம் என்றார். முதல் கட்ட வேலைகளை ஆரம்பிச்சோம். அவ்வளவுதான்... மக்களே விரும்பி வந்து உதவிகள் செஞ்சு நினைச்சதை விடப் பெரிய கோயிலா இதைக் கட்டிக் கொடுத்துட்டாங்க. எல்லாம் பாபாவின் செயல்’’ என்கிறார் காந்திமதி.



கீழ்த்தளம், மேல்தளம் என தாராளமாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலில் பிரார்த்தித்தால், பல்வேறு நோய்களும் நீங்குவதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். காலை 5.30 முதல் மதியம் 2.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்இந்தக் கோயில், திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் 18 கி.மீ தொலைவில் விராலிமலைக்கு முன்பு அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 0431-2740808, 94439 79917.

உபதேசங்கள் எல்லாம் வீண்

sai18
நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன்.என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு.என் பார்வையை உன்மேல் வைப்பேன்.ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண்.என் பேச்சைகேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள்.என்னையே லட்சியமாகக் கொள்.உனக்கு நிச்சயம் சுபம் விளையும்.என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Friday, July 11, 2014

கோவை நாகசாயி ஆலயம்!

nagasai



கோவை, மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகாமையிலுள்ள சாயி கோயிலின் பின்னணி இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. நரசிம்மசுவாமி ஜி, ஏ.வி.கே சாரி, வரதராஜ ஐயா என்ற மூவர் இணைந்து கோவையில் 1939ம் ஆண்டில் சாயி இயக்கத்தை உருவாக்கி, கோவையில் சாயியின் உன்னதத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். வரதராஜ ஐயா தன்னுடைய நிலத்தைக் கோயில் கட்டுவதற்காக வழங்கினார். ஆரம்பத்தில் சிறிய ஷெட் போட்டு, பாபாவின் படத்தை மட்டுமே வைத்து வணங்கி வந்தனர். பக்தர்கள் ஒரு நாள் பஜனையோடு வணங்கிய போது, பாபாவின் படம்அருகே வந்த ஒரு நாகப்பாம்பு, பஜனைப்பாடலில் மெய்மறந்து ஆடியது. கிட்டத்தட்ட 36 மணி நேரம் அவர் பாதங்களில் ஏறியபடி படமெடுத்து நின்றதாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து அதிசயித்த இந்த சம்பவம் மட்டுமே, இந்தக் கோயிலை இன்று ஒரு ஆச்சரியக் கோயிலாக மாற்றியிருக்கிறது.



இப்போது அழகிய மார்பிள் பாபா, கான்க்ரீட் கோயில், பிராகாரம் என்று விரிந்திருக்கும் கோயிலில் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம், இலவச ஹோமியோபதி சிகிச்சை மையம் என்று எல்லாம் இருக்கிறது. ஷீரடியில் பாபா பயன்படுத்திய சிறு கொம்பு ஒன்றும், இங்கே பக்தர்களை ஆசீர்வதித்து வளம் சேர்க்கிறது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
 ஆலயத்தொடர்புக்கு: 04222440688, 97906 74601

இக்கோயிலைப்பற்றி மேலும் விபரமறிய கீழ்க்காணும் இணைப்புகளில் கிளிக் செய்யவும்

 

http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_18.html

http://www.srinagasai.com/

தாகத்துக்கு நீர் அளித்தீர் பாபா!

sai59

நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஓர் கோடை நாளில் ஹரிச்சந்திரா குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார்; அவரை தாகம் பீடித்தது.அவ்விடத்தில்  சுற்றுமுற்றும் எங்கும் நீர் இல்லை.நானா, "பாபா இங்கிருந்தால், எனக்கு நீர் அளித்திருப்பார்" என கூறிக் கொண்டார்.அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார்.

பாபா : (மசூதியில் அமர்ந்தவாறு) நானாவுக்கு தாகம்.கோடை வெய்யில் கடுமையாக இருக்கிறது.அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா?

அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா பேசுவது புரியாமல் புதிராக இருந்தது.ஆனால் குன்றின் மேலிருந்த நானா ஒரு வேடுவன் மேலிருந்து இறங்கி வருவதைக் கண்டார்.

நானா : வேடுவ,எனக்கு தாகமாக உள்ளது.குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?

வேடுவன்: நீர் உட்கார்ந்திருக்கும் பாறையின் கீழேயே நீர் உள்ளது. 


இவ்வாறு கூறிவிட்டு வேடுவன் சென்றுவிட்டான்.  பாறையை நகர்த்தி விட்டு பார்த்ததில் ஒரு கைநிறைய குடிநீர் காணப்பட்டது.நானா அதைப் பருகினார். பல தினங்களுக்குப் பின் நானா சாந்தோர்க்கர் சீரடிக்குச் சென்றனர்.


பாபா:நானா,நீர் தாகத்துடன் இருந்தீர்.நான் உமக்கு நீர் அளித்தேன்.நீர் குடித்தீரல்லவா ?

Thursday, July 10, 2014

சாயிபாபாவின் ஆரத்தி

3509e-topnews_1301550962_ele

ஆரத்தி எடுப்போம் ஸ்ரீசாயி உமக்கே
ஆரத்தி எடுப்போம் வியாழக்கிழமையுமே
பரமானந்த சுகத்தினை அளிப்பாயே
தயையுடன் எமக்கருள் செய்வாயே
துக்க, சோக, சங்கடம் தீர்த்தருள்வாயே
வாழ்வில் ஆனந்தம் பொங்க அருள்வாயே
என் மனதில் உன்னை நினைத்ததுமே
அக்கணமே வந்து அநுபவம் தந்தாயே
உந்தன் திருஉதி நெற்றியில் இட்டதுமே
அனைத்து தொல்லைகள் தொலைந்தனவே
சாயி நாமமே தினமும் ஜபித்தோமே
நொடியிலும் உம்மை யாம் பிரியோமே
வியாழக்கிழமை உன்னை பூஜித்தோமே
தேவா! உன் கிருபையால் நலம்அடைந்தோமே
ராம, கிருஷ்ண, ஹனுமான் ரூபத்திலே
அழகு தரிசனம் எமக்களிப்பாயே
பல மத முறையில் பூஜித்துமே
பக்தர் குறை கேட்டருள் புரிவாயே
சாயியின் நாமம் வெற்றி நல்கிடுமே
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
சாயிதாஸனின் ஆரத்தி பாடுபவனுமே
சர்வ சுகம், சாந்தி வளம் பெறுவானே.  (ஆரத்தி)

நில், கவனி, செல்!

சாயி பக்தர்களாகிய உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வேண்டும் அது வெளியிலும் தெரியவேண்டும்.

பிறரது நோக்கம் நிறைவேற எங்கெங்கோ ஓடுவார்கள் எதைஎதையோ தேடுவார்கள். ஆனால் நீங்களோ சாயியைத் தவிர வேறு எங்கும் ஓடவும் வேண்டாம், எதையும் தேடவும் வேண்டாம். பாபா சொன்ன விக்ஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனனையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

திட்டமிட வேண்டுமா? வெற்றி பெற வேண்டுமா? கொடுத்தது கிடைக்க வேண்டுமா? குழந்தைப் பேறா? எதுவானால் என்ன? அவற்றைப்பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள். சாயி சாயி என்று சொல்லி, சாயியை அடைவதில் மட்டும் முனைப்புக்காட்டுங்கள். அனைத்தும் தாமாக வரும். பாபா சொன்னது ஆன்மீகத்துக்குத் மட்டுமல்ல, வாழ்வுக்கும் பொருந்தும்.

லவுகீகத்தில் இருந்துதான் ஆன்மீகத்திற்கு பாபா அழைத்துச் செல்கிறார். வெற்றியைத் தராமல் நீங்கள் அவர் பின்னால் போகமாட்டீர்கள். அவராலும் உங்களை அழைத்துச் செல்ல முடியாது என்பது அவருக்கே தெரியும்.

இந்த மசூதியில் அமர்ந்துகொண்டு உண்மையையே பேசுகிறேன், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை. தர்கா என்பது அடக்கம் செய்யப்படுகிற இடம், மசூதி என்பது தொழுகைக்கு உரிய இடம்.

இந்த மசூதியிலிருந்துகொண்டு என்று பாபா சொல்லும்போது, எந்த மசூதி என திகைக்காதீர்கள். உங்கள் மனதில் அவர் வசிப்பதால் உங்கள் மனமே அவரது மசூதியாகும். நீங்கள் பார்க்கிற அவரது புத்தகத்திலிருந்து, புத்தகம் மூலமாக அவர் உண்மையைப் பேசுகிறார். என்ன பேசுகிறார்?

உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். மனித நிலையைக் கடந்த சத்குருவான நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்கிறார்.

எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம் வேண்டும். உறுதியான நம்பிக்கை வேண்டும். இன்று கிடைக்கும் என்றிரு. இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் என்று எதிர் பார்த்திரு. நாளையும் கிடைக்காவிட்டால் மறுநாள் கிடைக்கும் என எதிர் பார். உனது எதிர்பார்ப்பைத் தாண்டினாலும் கிடைக்காத போது ஒருநாள் கிடைக்கும் என்றிரு…நிச்சயம் கிடைக்கும்.

Wednesday, July 9, 2014

கீரப்பாக்கம் கிரிவலம்!

bigsai



உங்களுடைய ஆசியாலும், கைங்கர்யத்தாலும் வண்டலூர் – கண்டிகை மார்க்கத்தில் அமைந்துள்ள கீரப்பாக்கத்தில் பாபா ஆலயம் எழும்பி வருகிறது. சிவனடியார்கள் சேர்ந்து காசி விஸ்வநாதருக்கு ஓர் ஆலயம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்கள். ஏற்கனவே, மலையில் விநாயகருக்கு ஆலயம் அமைந்து வருகிறது. இதனோடு, சிவாலயம் எழுப்பிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்ற வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில் 12-06-2014 அன்று முதன்முறையாக மாலை வேளையில் கிரிவலம் துவக்கப்பட்டது. கிரிவல யாத்திரையின் போது பல்லக்கு தூக்கி வரப்பட்டது. பாபா ஊர்வலமாக வீதி வீதியாக வந்து மக்களின் ஆரத்தியை ஏற்றுக்கொண்டார்.
12-07-2014 அன்று மாலை கீரப்பாக்கத்தில் கிரிவலம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளலாம். தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
கிரிவலத்திற்கு வருக வருக அன்புடன் அழைக்கிறோம்.

கேட்டதைக் கொடுக்கும் பாபா கோயில்!

sai15



மதுரை வைகை ஆற்றின் மேற்கே திருவேடகத்தில் எழுந்திருக்கும் ஷீரடி சாயி கோயில் கட்டப்பட்டதே ஓர் அதிசயக் கதை என்கிறார் கோயில் நிர்வாகியான வாசுதேவி. ‘‘நாங்க சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்தான். அரசு வேலையில் இருந்த எனக்கு அடிக்கடி ஒரு கனவு வந்தது. அதில், கிழிந்த சட்டையும் திருவோடுமாக யாசகர் தோற்றத்தில் ஒரு பெரியவர் வந்தார். ‘எனக்கு ஒரு வீடு வேண்டும் நாம் ஐக்கியமாக வேண்டும்’ என்று அவர் சொல்ல, நான் பயந்துவிட்டேன். கனவில் வருபவர்களிடம் பணம் கேட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால், ஒரு முறை அந்தப் பெரியவரிடம் பணம் கேட்டேன்.



‘முப்பது நாளில் ஒரு மனிதர் உன்னைத் தேடி வந்து நிலம் கொடுப்பார், மேலும் முப்பது நாளில் கட்டிடம் கட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும்’ என்றார் அவர்.
அவர் சொன்னது போலவே மிகமிகக் குறைந்த விலைக்கு நிலம் ஒன்று எங்கள் வசம் வந்தது. அப்போதுதான் கனவில் வந்தது பாபா என்பதை உணர்ந்தேன். நிலம் வாங்கிய பிறகு, சுற்று வட்டார மக்கள் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய, இந்த அளவு கோயிலாக அது வளர்ந்துவிட்டது’’ என்கிறார் வாசுதேவி. 2008ல் துவங்கி, வெறும் எட்டே மாதங்களில் கட்டப்பட்ட இந்தக் கோயில், 2009ல் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்டது. பணத்துக்கு பணம், ஞானத்துக்கு ஞானம் என்று கேட்டதைக் கொடுக்கும் இந்த பாபா கோயில், காலை 5 முதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு:98421 84942, 98947 41109

ஏன் அங்கெல்லாம்.....

baba2

அடிக்கடி சமாதிகள், சுடுகாடு போன்றவற்றின் பக்கம் நீங்கள் தென்படுவதாகக் கூறுகிறார்கள். இது எதற்காக?

( என். கோசல்ராம், கோவை)

இந்த உலகத்தில் எத்தனையோ ஆண்டுகளை நல்லதற்காகவும், கெட்டதற்காகவும் கழித்து, எத்தனையோ தர்மங்களையும் அதர்மங்களையும் செய்து,  வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் அனைத்தையும் நுகர்ந்து வாழ்ந்த மனிதன் அடங்கிக் கிடக்கும் இடங்களைப் பார்க்கும் போதெல்லாம்,  இதுதான் நாளைக்கு நமது நிலையும். எதற்காக மனமே இப்படி அலைகிறாய்?

எப்படியிருந்தாலும் வாழ்ந்தா லும் தாழ்ந்தாலும் இதுவன்றோ முடிவு? எனக் கேட்டுக் கொள்ளவே சமாதிகள் பக்கம் போவேன்.

பிறரைச் சுடச் சுட பேசுகிற மனமே.. இதோ சுட்ட பின்பு இருக்கும் இடம் தெரியாமல் போகிற இந்த மனிதனும் இப்படித்தான் இருந்தான். எதையும் அவன் வாரிக்கொண்டு போகவில்லை.. இப்படி நீ இருக்கக் கூடாது.. எதிலும் யதார்த்தத்தை நினைத்து வாழ் என என் மனதிற்குச் சொல்வதற்காகவே அந்தப் பக்கம் போவேன்.

ஒரு விக்ஷயம் தெரியுமா உங்களுக்கு? நான் எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பக்கம் நம் ஆள் ஒருவன் இருக்கிறான்.. எங்கே சாமி இந்தப் பக்கம் எனக் கேட்கிறான்? எனக்கு முன்னால் அங்கு அதைத்தேடி வந்திருப்பான் என நினைத்துக்கொள்வேன்.

Tuesday, July 8, 2014

வருக! வருக!

வருக! வருக!

தமிழகத்தில் கேட்டதைக் கொடுக்கும் சாயி!

12c55-shirdiblink



மதுரை டி.பி.கே மெயின் ரோட்டை ஒட்டிய ஆண்டாள்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாயிபாபா திருக்கோயிலின் வரலாறு,  இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. 1942களில் ராஜமன்னார், சூர்யநாராயணன் என்ற இரு நண்பர்கள் மதுரையில் கட்டிய சாயி கோயில், அவர்களின் இறப்புக்குப் பின் பொலிவிழந்து விட்டது. பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே ராஜமன்னார் குடும்ப உறுப்பினரான ஸீனத் என்ற பெண் தலைமையில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு, 2006ல் மதுரை ஆண்டாள்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இன்றைய கோயில்.
விசேஷ தினமான வியாழக்கிழமைகளில் மாத்திரம் 20 ஆயிரம் பக்தர்கள் குவிகிறார்கள் இங்கே. ‘‘இங்குள்ள பாபா கேட்டதைக் கொடுப்பார். எதையும் குணமாக்குவார்’’ என்கிறார்கள் அவர்கள். ‘‘இந்தக் கோயிலில் ஆன்மிகத்தோடு ஏழைகளுக்காக மருத்துவ உதவி, கல்வி உதவி, மற்றும் முதியோர் சேவைகளும் செய்யப்படுகிறது’’ என்கிறார் கோயில் டிரஸ்ட் செயலாளரான டாக்டர் பிரபு.
காலை 6 முதல் 1 மணி வரையிலும் மாலை 5 முதல் 9 மணி வரையிலும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும் இக் கோயிலில், தினமும் பிரசாதமும் வியாழன் தோறும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஆலயத் தொடர்புக்கு: 9842150201

நாம் எப்போது கடவுளாகலாம்?

trimurthi

எல்லா மனிதரும் மும்மூர்த்திகளின் அம்சம்தான் என்கிறார் எனது நண்பர். இது எப்படி எனக் கூறமுடியுமா? அடுத்து, நாம் எப்போது கடவுளாகலாம்?

( ஆ.குணசேகரன், செங்கம்)

மூவித குணங்கள், செயல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவர்களாக இருக்கிறோம். எந்த ஒன்றையும் உருவாக்கவும், காக்கவும், அதனைப் போக்கவும்கூடிய சக்தி நம்மிடம் மட்டுமே உள்ளது.

ஆகவே, நாம் மும்மூர்த்திகளின் அம்சம் என்பது உண்மை. அன்பே சிவம் என்கிறோம். அந்த அன்பை உருவாக்கி, காத்துக்கொள்ளும்போது நாம் கடவுள் ஆகிறோம்.

 

 

Monday, July 7, 2014

என்னில் கலந்துவிடுவீர்

என்னில் கலந்துவிடுவீர்


images (1)

அணுப் பிரமாணமும் 'நான்,எனது' என்ற உணர்வின்றி,உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும்.உடனே உம்மிடமிருந்து அறியாமை-மாயை விலகும்.எங்கோ சென்று சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து,அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால்,உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும்.நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால்,நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும்.பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர்.அன்னியம் என்று ஒன்று இல்லை என்று உணர்வை அனுபவிப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


 

மகான்களின் சமாதி தரிசனம் சரியா?

475ef-saibaba

கடவுளின் ஆலயங்களுக்குச்செல்லாமல், மகான்களின் சமாதிக்கு செல்வது கடவுளை அவமானப்படுத்துகிற செயல் அல்லவா?

( பெ. மீனா, சென்னை - 40)

நிச்சயம் இல்லை. பூமிக்கு வருகிற தேவர்கள் மீண்டும் தம் இருப்பிடத் திற்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால், மகான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே பிரம்ம ஸ்திதி அடைந்து விடுவார்கள். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையாது.

எனவே உடனடி பலன் பெறுவதற்காக பக்தர்கள் இறைவனைவிட மகான்களை நாடுகிறார்கள். இதில் தப்பொன்றும் இல்லை.

 

 

Sunday, July 6, 2014

கர்ம வினை எப்படி தோன்றுகிறது?

16364-shirdisaibaba4



கர்ம வினை எப்படி தோன்றுகிறது? எல்லாம் முந்தைய வினைப்படி நடக்கிறது என்றால், இந்த ஜன்மத்திற்கு ஏதும் நடக்காதா?



எண்ணம். அதன் வெளிப்பாடான சொல், செயல் காரணமாக கர்ம வினை தோன்றுகிறது. வேலைக்கு சம்பளம், ஓய்வின் போது ஓய்வூதியம் போன்றதுதான் கர்மப் பலன். வினையின்போது ஒரு பலனும், இந்த பிறவியைத் தவிர்த்து மறு பிறவிக்கு மாறும்போது அடுத்த பலனும் வரும்.



எனது இந்த ஜென்மத்துப் பலன்களுக்கு பரிசாக அடுத்த ஜென்மத்தில் பறவை அல்லது விலங்குப்பிறவி அமைந்தால் அதிலும் இந்த கர்ம வினை வேலை செய்யுமா? விலங்கு நிலையிலிருந்து மனிதப்பிறவி எப்படி வாய்க்கும்?



கண்டிப்பாக, விலங்குப் பிறவியின் போதும் இந்த கர்மவினை செயலாற்றும். காக்கை தனக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும். இப்படி பறவைகளும், விலங்குகளும் நடக்கின்றன. தன் தேவைக்குப் போக மீதியை பறவையோ விலங்கோ சேர்த்து வைக்காது. தான் பாவம் செய்கிறோம் என்ற உணர்வில்லாமல், உயிர் பிழைக்க உணவு என்ற இயல்பில் அவை செயல்படும். சில விலங்குகள் பிறர் வாழ தன் உயிரைத்தியாகம் செய்யும். இவையெல்லாம் புண்ணியக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.



சில விலங்குகளோ, பறவைகளோ, எறும்பு, ஈ போன்றவையோ, கோயில் அல்லது மகான்களின் சங்கமம் செயல்படுகிற இடங்களுக்கு செல்வதும், அங்கே உயிர் துறப்பது போன்றவையும் நடக்கும்.



இந்தப் புண்ணிய பலன்கள் அவைகளின் கணக்கில் சேரும்.



வேர் வலிக்க நீரை உறிஞ்சி, இலையாக, காயாக, கனியாகத் தந்து, கல்லடியும், காலடியும் பட்டு, கடைசியில் வெட்டுப்படவும் நேருகிற மரம், முந்தைய பாவம் கழிந்து,மேல் நிலைக்கு வரும்.



மாங்காய் விதை போட்டால் மாஞ்செடி முளைக்கும், மஞ்சள் விதை போட்டால் மஞ்சள்தான் முளைக்கும். மாற்றி முளைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான். அப்படியிருக்க, மனிதன் மட்டும் எப்படி மற்ற விலங்குகளாகவும், மற்ற உயிரினங்கள் மானுட ஜென்மமாகவும் பிறக்கமுடியும்?



இது சில கிறித்தவர்கள் சொல்கிற வாதம் போன்றிருக்கிறது. அடிப்படை தெரியாமல் இப்படி பேசுவார்கள். நன்றாக விளங்கிக்கொள்.



உடல் – உயிர் -  ஆன்மா இந்த மூன்றும் சேர்ந்தது வாழ்வு. உடலை இயக்கி ஆன்மாவை தக்க வைக்கிற சக்தியே உயிர். இந்த இரண்டையும் மூடிப்பாதுகாக்கிற பாண்டம் தான் உடம்பு.



மனித உடம்பில் போடப்படுகிற உடல் உயிர் மனிதனாக மாறுகிறது, மாங்காய்க்குள் போட்டால் மாஞ்செடியாக மாறுகிறது. போடப்படுகிற பொருள்தான் விக்ஷயமே தவிர, எதில் போடப்படுகிறது என்பது விக்ஷயமல்ல.



உடம்பு இந்த உலகத்திலேயே குப்பையாகப் போடப்படும். மண்ணில் மறுசுழற்சியாக மாறும் என நினைக்காதீர்கள். மண்ணாகப் போகும். உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த உயிரும் சக்தியிழந்து விரையமாகப் போகும். எஞ்சிய ஆன்மா இறைவனிடம் போகும். அது, தனது செயலுக்கும், இறைவனின் கருத்துக்கும் ஏற்ப, வேறு வித பாண்டங்களில் ஏதேனும் ஒன்றில் லயமாகும்.

அற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள்!

face








ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்



தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

 














bless






ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி 












sairam










ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்
 
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"


 

Saturday, July 5, 2014

இன்று புதிய முயற்சி செய்!

birthday



என் இனிய குழந்தாய்!



எனக்கு தீட்சிதர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். தூய பிராமணரான அவரிடம் ஒருமுறை, ஆட்டை வெட்டுமாறு கூறினேன். தீட்சிதர் கத்தியை எடுத்து ஓர் அரைவட்டம் சுற்றி ஆட்டை வெட்டுவதற்குத் தயாரானார். எப்படியும் ஆட்டை வெட்டிவிடுவார் என்பதால், அவரை தடுத்து அதை விட்டுவிடுமாறு கூறினேன்.



“பிராமணரான நீர் மனதில் இரக்கமின்றி இப்படி நடந்துகொள்ளலாமா?” எனக் கேட்டேன்.



அவர் உடனே கத்தியை கீழே போட்டுவிட்டு, என் பாதங்களை வணங்கி, ”பாபா, தங்களுடைய அமுத மொழியே எனக்கு தர்ம சாஸ்திரம்.. இதைத் தவிர வேறு நீதி வழியும் தெரியாது. இது பற்றி எனக்கு வெட்கமோ அவமானமோ சிறிதும் இல்லை. குருவின் வார்த்தை ஒன்றே என் வாழ்வின் சாரம். அதுவே எனக்கு ஆகமம். குருவின் ஆணையை நிறைவேற்றுவதில் தான் சிஷ்யனுடைய சிஷ்யத் தன்மையே அடங்கி இருக்கிறது. அதுவே எனக்கு ஆபரணம். ஆணையை எவ்விதமாக அவமதித்தாலும் அது இழுக்காகும். சுகத்தைக் கொடுக்குமோ, கஷ்டத்தைக் கொடுக்குமோ என்கிற விளைவைப் பற்றிய பார்வையே எனக்கில்லை. நடப்பதெல்லாம் விதிப்படியே நடக்கும். அதை இறைவனிடம் விட்டு விடுகிறோம்.



எனக்கு ஒன்றுதான் தெரியும். எந்நேரமும் தங்களுடைய நாமத்தை மனத்தில் இருத்துதல், தங்களின் தெய்வீகமான தோற்றத்தை கண்களில் நிலை பெறச் செய்தல், இரவு பகலாகத் தங்கள் ஆணைக்குக் கீழ்படிந்து நடத்தல் ஆகியவையே. அகிம்சை மற்றும் இம்சை எனக்குத் தெரியாது. ஏனெனில் சத்குருவின் பாதங்களே எனக்குத் தாரகம். ஆணை எதற்காக என்று கேட்டு அறியேன், அதன் படி நடக்க வேண்டியதே என் கடமை.



குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது இது செய்யக்கூடிய செயலா? செய்யத் தகாத செயலா? இது விருப்புள்ளதா? வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்புபவன் கடமையில் இருந்து தவறியவன் என்றே நான் அறிகிறேன்.



குருவின் ஆணையை மீறுவது என்பது ஒரு ஜீவனின் வீழ்ந்த நிலையாகும். குரு பாதங்களிலே மனம் நிலைக்க வேண்டும். உயிர் இருந்தாலென்ன போனால் என்ன? குருவின் ஆணையே பிரமாணம். கடைமுடிவுகளை அவரே அறிவார்.



நாங்கள் தங்கள் ஆணைக்கு அடிமைகள். யோக்கியமான செயலா? அயோக்கியமான செயலா என்று கேள்வி எழுப்ப மாட்டோம். தேவையானால் உயிரையும் கொடுத்து குருவின் ஏவலை நிறைவேற்றுவோம்!” என்று சொன்னார்.



அதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால், குரு என்ன சொன்னாலும் மறுக்காமல் செய்யவேண்டும் என்பதை நியதியாக வைத்து இருந்த தீட்சிதரை விட, உன்னை மிக உயர்வான இடத்தில் வைத்து மகிழ்ந்திருந்தேன்.



உன்னை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக சாயி சாயி என்று சொன்னால் போதும் எனக் கூறி வைத்தேன்.. எனக்கு அபிஷேகம் வேண்டாம், ஆரத்தி வேண்டாம், பயமும் வேண்டாம், என் மீது பாசத்தைக் காட்டு என உன் முன் உருகிநின்றேன்.



ஆனால், நான் உன்னிடம் நெருங்க நெருங்க நீ நம்பிக்கை கொள்வதற்கு பதில் நம்பிக்கை இழந்து கொண்டே போகிறாய். என் வார்த்தைகளை நீ அலட்சியப்படுத்துகிறாய்.. அதனால்தான் உன் இஷ்டம் போல கவலைப்படுகிறாய்..



எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன? உன் கையை விட்டு எது போனால் என்ன? இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன? நான் உனக்கு நன்மை செய்யமாட்டேனா? உன்னிடம் நானில்லையா? உன் பிரார்த்தனையை கேட்கமாட்டேனா?



உனக்காக எல்லாவற்றையும் செய்வேன் என ஒரு முறை சொல்லிவிட்டு நான் மனம் மாற மாட்டேன். இதையும் பலமுறை கூறிவிட்டேன்.



நீயோ, திருப்பிப் போடப்படாத ரொட்டியைப்போல அரைவேக்காடாகவே இருக்கிறாய்.. என் மீது முழு நம்பிக்கை வை.. எந்தப் பிரச்சினையையும் உன் சொந்த புத்தியை நம்பி அஹகாதே. என் மீது பாரத்தை வைத்து சாயி சாயி என்று சொல்லியபடி இரு.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.



வாழ்வில் என்ன செய்வது எனத் தெரியாமல் துவண்டுப் போயிருக்கும் இந்த நிலையில், அப்பா என்ன செய்யப் போகிறாரோ என்ற எண்ணம் ஒரு பக்கமும், எப்படியும் எனக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கை ஒரு பக்கமும் உன்னை தாங்கிப் பிடிக்க, முடிவைத் தேடும் படலத்தைத் தள்ளிப்போட்டுவருகிறாய்.



உன்னுடைய பிரச்சினை இப்போதைக்கு உன் குடும்பச் சூழல் இல்லை. யார் உனக்கு வாழ்க்கை தருவார் என நினைத்தாயோ, அவர் உன்னை தள்ளி வைத்து உன்னைப் பிரிந்துவிட்டதால் ஏற்பட்ட சோகம் உன் மன நிலையை ஒவ்வொரு மணித்துளியும் மாற்றிக்கொண்டிருக்கிறது.



இதனால் உன்னை நேசிப்பவர்களைக்கூட நீ வெறுக்கிறாய், எல்லோருக்கும் பாரமாக இருப்பது போல நினைக்கிறாய்.. உன்னை சிறு சொல் சொல்லிப் பேசினாலும் அது உனது இந்த நிலையை குத்திக் காட்டுவதாக நினைக்கிறாய்..



போகும் இடத்திலெல்லாம் மனம் நிலைக்காமல் திரும்பிவந்துவிடுகிறாய்.. இதனால் வாழ்க்கையின் மீது உனக்கு நம்பிக்கைக் குறைந்திருக்கிறது.



என்னால் வாழமுடியுமா? வாழவே முடியாது. மானம் போனது, மரியாதை போனது..பாபா என்னை எடுத்துக் கொள் என புலம்புகிறாய்..



உன்னைப் புரிந்துகொள்ளாதவள் உன்னை விட்டுப் போனாள் என்பதை புரிந்துகொண்டு, புது வாழ்க்கையைத் துவங்கு..



எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம் என்றிருந்த பழைய திறமையை, தைரியத்தை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டு வா.. புதிய வாழ்க்கையை உனக்காக நான் வைத்திருக்கிறேன்.. ஆனால் உனது அவநம்பிக்கை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.



என்னை நம்பினால், இன்று முதல் புதிய முயற்சி செய்.. புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இதுவரை தோற்றதையும், நம்பிக்கை இழந்ததையும், மரண விளிம்புக்குச் சென்றதையும் மறந்துவிடு.. வாழ்வதற்கு வா.. உன்னை வசந்தத்திற்கு அழைத்துச்செல்ல நான் காத்திருக்கிறேன்.



என் குழந்தாய்



உன்னை வாழத் தகுதியில்லாத நபர் என நீயே முடிவு செய்துகொள்ளும் நிலைக்கு வந்திருப்பது தவறானது. அதை தள்ளிவிடு. இன்னும் சிறிது காலத்திற்குள் நல்ல சூழலை ஏற்படுத்துவேன்.



உன் போல இன்னொரு குழந்தை இருக்கிறாள்..புரிந்துகொள்ளும் முன்பே விட்டுப் பிரிந்துவிட்டு விவாகரத்துக் கேட்கும் கணவனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..



நான் என்ன பாவம் செய்தேன் என என்னிடம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். பூர்வ கணக்கு தப்பாது.. அது முடிந்துவிட்டது. புதுக் கணக்கைத்தொடங்கு.. வாழ்வதற்கு முடிவு செய்.. நல்ல வசந்த காலம் உனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்கிறேன்.. அவள் காதுகளுக்குக் கேட்கவில்லை.



இன்னொரு குழந்தை, தனது கணவனின் உறவுக்காரர்களால் இன்னல் பட்டு, சொந்த வீட்டில் வந்து நொந்துகொண்டிருக்கிறாள். புரிந்துகொள்ளாத கணவனால் தனது வாழ்க்கையும், பிள்ளையின் வாழ்க்கையும் பறி போனது எனப்புலம்புகிறாள். என்னை நோக்கி தவம் செய்கிறாள்.. விரதமிருக்கிறாள். தனது வாழ்க்கைத் தொலைந்திட யார் யாரோ காரணம் என அவர்கள் மீது கோபமாக வும், வெறுப்பாகவும் இருக்கிறாள்.  இப்படி அவள் நினைப்பதை நான் விரும்புவது கிடையாது. எந்தத்தவறுக்கும் தனது சொந்த புத்தியே காரணம்.



விட்டுக் கொடுத்து வாழவேண்டிய நிலையில் விட்டுக் கொடுக்காமல் போவதும், விட்டுக்கொடுக்கக்கூடாத நேரத்தில் வாயை விட்டு விடுவதுமே பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.



கணவன் மனம் அறிந்து நடந்துகொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ளாமல், என்னை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பிரயோசனம்?



அவளாக உணர்ந்து, தவறுக்கு வருந்தினால்தான் வாழ்க்கை என்பதில் நான் கறாராக இருக்கிறேன்..இப்படியே இன்னொரு குழந்தையிருக்கிறாள்..



அவளது நிலையோ வித்தியாசமானது. கணவன் கை நிறைய சம்பாதிக்கிறான்.. எல்லாம் மனைவிக்கு என்கிறான்.. அணிகலன்களை வாங்கிப் பூட்டுகிறான்.. ஆடம்பரமாக வாழ்வதாக வெளியே காட்டுகிறான்.. ஆனால், உள்ளுக்குள் அவளுக்கு நரகத்தைப் பரிசாகத் தந்திருக்கிறான். நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம்,சொன் னால் குற்றம், சொல்லாமல் விட்டாலும் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்பதும், துளியளவு நிம்மதியில்லாமல் வைத்திருப்பதிலும் அவன் கைதேர்ந்தவனாக இருக்கிறான்..



சின்னச் சின்ன விக்ஷயத்திற்குக்கூட, அவள் மேல் கோபப்பட்டு திட்டுவதும் அடிப்பதும், சொல்லிக்காட்டுவதுமாக அவன் செய்கிற சில்மிக்ஷங்களைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. ஆனால், இவளது நேரத்தை நினைத்து அமைதியாகப் போகிறேன்..



தனது கணவனின் கவுரவம் போய்விடக் கூடாது என்பதில் அக்கறை காட்டுகிற என் மகளின் பெருந்தன்மையை நினைக்காமல், அவள் தன்னை இழிவு படுத்துகிறாள் என்று எண்ணி, சிறியதைப் பெரிதாக்கி மற்றவர்கள் முன்னிலையில் அவளை வெட்கப்படுத்துகிறான். இந்தக் கணவனைத் திருத்துவதற்காக நான் போராட வேண்டியுள்ளது..



இப்படியாக நிறைய விக்ஷயங்களுக்குப் போராட வேண்டியிருப்பதால், குழந்தாய் பிடித்த மில்லாத விக்ஷயங்களை நானே விலக்கி விடுகிறேன்..



உன் விக்ஷயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. எனவே, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை தொடர்ந்து நடத்து.. வெற்றி பெறுவாய்..



அன்புடன் அப்பா



சாயி பாபா

பாபா செய்த அறுவை சிகிச்சை

sai-guide-us
நானா சாஹேப் பாபாவின் மிகப்பெரிய பக்தர்; ஒருமுறை அவருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று டாக்டர்கள் குழு தெரிவித்தது. அவரும் அவ்வாறே தயாரானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளில்; அவர் இருக்கும் அறையின் மேல்தளத்தின் ஓடுகள் சரியத்தொடங்கின, அதில் ஒரு கூர்மையான ஓடு மிகச்சரியாக குப்புறப்படுத்துக் கொண்டிருந்த நானாவின் முதுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து, சிதைத்தது. வழியால் துடித்தார் நானா. டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள்.

கட்டி உடைந்து, ரத்தமும், சீழுமாய் வெளியேறிற்று. டாக்டர்கள் அவசர அவசரமாய் நானாவை சோதித்தார்கள். என்ன ஆச்சரியம்! அறுவை சிகிச்சையே செய்யவேண்டாம் என்று சொன்னது மருத்துவக் குழு.  அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆம். ஏழெட்டு டாக்டர்கள் உத்திரவாதம் தராமல் செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து விழுந்த ஒரு ஓடு செய்துவிட்டது!

சில நாட்கள் சென்றன. நானா  சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவைக் காணச் சென்றார்.

"வா-வா .." என்று அவரை அழைத்த சாயிபாபா, தன் ஆட்காட்டி விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல் பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்னப்பா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா என்ன? இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு சிகிச்சை செய்ததே நான்தான்!" என்று புன்னகைத்தார் ஷிர்டி சாயிபாபா.

பரவசத்தில் நெகிழ்ந்து போனார் நானா சாஹேப்.

ஆமாம். உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாபா உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், உங்கள் மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா. சாயிபாபா. ஷிர்டி சாயிபாபா. - மாண்புமிகு மகான்கள்.





குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...