Friday, February 28, 2014

இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..

       பாபாவிடம் வேண்டிக்கொள்ளுகிறோம், நமக்குப்பரிகாரம் கிடைக்க அவர் அருள் செய்கிறார். எவ்வளவு ஆர்வமாக வேண்டிக்கொள்ளுகிறோமோ, அந்தளவுக்குப்பலன் கிடைக்கிறது. பலன் கிடைத்தபிறகு, நாம் நமது பகவானை மறந்துவிடுகிறோம். அவரது நேர்த்திக் கடனை தள்ளி வைத்துவிடுகிறோம்.
     இதை நன்றி மறந்த நிலை என்பதா? நேரமில்லை என்பதா?வேறு ஏதேனும் சொல்லிக்கொள்ளலாமா? இந்த மாதிரி ஒரு நிலை ஒரு பக்தனுக்கு ஏற்பட்டது.
     வேண்டுதல் வைத்தான், நிறைவேறிவிட்டது. நாளைக்கு நாளைக்கு எனத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஏன்? நேரமில்லை என்றா? நன்றி மறந்தானா? இல்லை.. அவனுக்கு பகவானைத் தரிசிக்கச் செல்லும அளவுக்குப் பண வசதியில்லை. இந்தப் பணத்தைச்சேமித்துக்கொண்டு பகவானைத் தரிசிக்கச் செல்வேன் என அவன் முடிவு செய்து, பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தான்.
     யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆபத்து மிக்க உச்சி மலைக்கோட்டையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் குடும்பத்தில் ஈடுபட்டிருப்பவன் தனது தலை வாயிலை கடந்து போவது மிகவும் கடினம் என்கிறது நமது சத்சரித்திரம்.
     நிறைய பக்தர்கள் ஒரு விக்ஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அதாவது ‘சோல்கர் மாதிரி கோரிக்கை நிறைவேறும் வரை காபியில் சர்க்கரை சேர்க்கமாட்டேன், விரும்பிய பொருளைத் தொட மாட்டேன் என்று சொல்வார்கள்.பாபாவிடம் வேண்டிக்கொள்ளும்போது சோல்கர் அப்படி ஒரு வேண்டுதலை வைக்கவே இல்லை. சத்சரித்திரத்தை நன்றாக கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.
     ‘‘உம்முடைய கிருபையால் பரீட்சையில் நான் வெற்றி பெற்றுவிட்டுவிட்டால், உமது பாதங்களை தரிசனம் செய்வதற்கு சீரடிக்கு வந்து உம்முடைய நாமத்தை சொல்லிக் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னடைய நிர்த்தாரணமான தீர்மானம்’’ என்றுதான் வேண்டிக்கொண்டார்.
     ‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி, கெஞ்சி, பக்தியுடனும், விசுவாசத்துடனும் கைநீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
     பிறகு, தேநீரில் சர்க்கரை கலக்காமல் நேர்ந்து கொண்டது எப்போது? தனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது. ஆனால் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாகத்தான் அவர் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்தார்.
     நீங்கள் துவக்கத்திலேயே சர்க்கரை சேர்க்காமல் விலக்கி வைத்து, அல்லது விரும்பி உணவைத்தவிர்த்து பாபாவிடம் வேண்டிக்கொள்கிறீர்கள். இது நல்லதுதான். அதே சமயம், வேண்டுதல் நிறைவேறிவிட்டால், அவருக்குச் செய்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும் முக்கியம்.
     நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும் நான் அறிவேன்! என்று பாபா சோல்கரிடம் மட்டும் கூறவில்லை. உண்மையாகவே, தாமதத்தால் தவிப்பவராக நீங்கள் இருந்தால் உங்களிடமும் கூறுகிறார்.     பாபா சோல்கரிடம் இன்னொரு விக்ஷயத்தையும் கூறினார்.
     ‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி, கெஞ்சி, பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
     வசனத்தை கூர்ந்து கவனித்தால், பாபா எவ்வளவு உள்ளர்த்தத்தோடு கூறியிருக்கிறார் என்பது புரியும். நாம் அவர் முன்னர், அதாவது அவரை மனதில் நிறுத்தி அவரிடம் நமது வேண்டுதல் பற்றி மன்றாடி, கெஞ்சி பக்தியோடு கேட்டுக் கொள்ள வேண்டும்.
     நமது வேண்டுதலை அவர் கேட்பார் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையும், பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைக்க வேண்டும்.
     ஒரு அடியார் சொன்னார்மூ ‘‘ நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது இறைவன் உங்களுக்காக இறங்கி வருவதில்லை. நீங்கள் பிரார்த்தனையால் அவனை நெருங்கி, அவனிடம் ஏறிச் செல்கிறீர்கள்! என்று.
     பாபா மிக அழகாகவும், நேர்த்தியாகவும் ‘‘நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’ என்று கூறியிருக்கிறார்.
     கடவுள் இறங்கிவரமாட்டார், நாம் ஏறிச் செல்ல வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? கடவுளை இறங்கி வரவும், இரங்கி வரவும் செய்யவேண்டும்? அது எப்படி சாத்தியமாகும்? பக்தியால் சாத்தியமாகும். அவர் மீது வைக்கிற நம்பிக்கையால் சாத்தியமாகும்.
     பண்டரிபுரத்துப் புண்டலீகர் பற்றி படித்து இருப்பீர்கள். பகவான் அவனைப் பார்க்க வைகுந்தத்தில் இருந்து வந்தார். வைராக்கியத்தோடு தவம் செய்கிற பக்தர்களைத் தேடி பகவான் வருகிறார்.
     பக்தி என்பது பயத்தால் வரக்கூடாது. அவர் மீது வைக்கிற அன்பால் வரவேண்டும். கடவுள் மீது வைக்கிற ஆழ்ந்த அன்புதான் பக்தி. அந்த பக்தியால் அவர் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதே அது தான் விசுவாசம்.
     உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால், மன்றாடி, கெஞ்சி, அன்பால் விளைந்த பக்தியோடு அவரை நம்பிக் கேட்டுக்கொண்டே இருந்தால் அது அவரை கட்டிப் போட்டு நமக்காக இரவு பகலாக நம் பின்னால் நிற்கவைக்கும்.
     நான் ஒருநாளும் விரதம் இருந்தது கிடையாது, நாட்களை அனுசரித்தது கிடையாது, ராகு காலம், எம கண்டம் பார்த்தது கிடையாது. நட்சத்திரங்களை பார்த்தது கிடையாது, யார் இதைத் தள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்றாலும் அதையும் செய்தது கிடையாது.
     ஏன் எனில், இவையெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது, இறைவர்க்கும் அவசியமில்லை. அவர் என்னிடம் எதிர்பார்ப்பது அவர் மீது ஆழ்ந்த அன்பு, நம்பிக்கை. இதை நான் சரியாகச் செய்கிறேன். அவர் எனக்காக, என்னோடு என் பின்னால் திடமாக நிற்கிறார் என்பதை உணர்கிறேன்.
     எப்படி இவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடிகிறது என்றால், நான் கடந்து வந்த பாதைகள் அப்படிப்பட்டவை. காட்டாறு வெள்ளம்போன்றும், கரடு முரடான முட்கள் நிறைந்த பாதைகள் போன்றும், முட்டுச் சந்து போன்றும் விரக்தியை உண்டாக்கும் வழிகளில் நடந்துவந்தேன். அவர் என்னை எப்படி வழி நடத்தி வந்திருக்கிறார் என்பதை அனுதினமும் அமர்ந்து அசைபோடுவேன்.
     நான் இப்போது ஏதேனும் மீறுதல் செய்யும் போது ‘இறைவா! இன்றைய நிலையை நினைத்து என்னை வெறுக்காதே! அன்றைய நிலையை நினைத்து என் மீது அனுதாபம் கொள்! நாம் தனித்து நடந்த நாட்களில் நமக்குள் நடந்த பரிவர்த்தனைகளை எண்ணி என் மீது கருணை காட்டு.. கிடைத்தற்கு அரிய இந்த மனிதப் பிறவியை மதிப்புள்ளதாக மாற்று என வேண்டிக் கொள்வேன்.
     சில நேரம் சீரடிக்கு ஓடுவேன்.. சில நேரம் சீரடியை சுமந்துகொண்டு வேறு எங்கேனும் திரிவேன். கண்டதைத் தின்பேன், கிடைத்ததைப் பருகுவேன்.. அதற்கு முன்பு, ‘‘பாபா இது உனக்கு, இது எனக்கு!’’ என்பேன்.
     ஏன் என்றால், அவர் சத்சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார்,  ‘நீங்கள் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்கள் இதயமே எனது வாசஸ்தலம். நான் உங்களுக்குள்ளே உறைகிறேன்.
     என்னோடு இருக்கிற சாயிக்கு, நான் உண்பதை தருகிறேன், குடிப்பதைத் தருகிறேன் என்பது இப்படித்தான். சில சமயம், பலரை பாபா என அழைப்பேன். வேலூர் பாபா, நாகராஜ பாபா, பாபா மாஸ்டர்.. இப்படி! இதனால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளேன். அவர்கள் என்ன பாபாவா?  என அவர்களை பிடிக்காதவர்கள் கேட்பார்கள். அல்லது பாபா மீது பக்தியுள்ளவர்கள் கேட்பார்கள்.
     நான் இது பற்றிக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில், வீட்டிலோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் எனது ஆவிர்ப்பாவங்கள் என்கிற வெளிப்பாடுகளே என பாபா கூறியிருக்கிறார்.
     ஆகவே, அவர்களை அப்படி அழைப்பதில் தப்பில்லை என நினைப்பேன். இப்படிப்பட்ட நிலைக்கு அவர் என்னை ஏற்றிக் கொண்டு வந்துவிட்டதால் எனக்கென வேண்டுதல் களை வைப்பது கிடையாது. எனக்கு எது தேவையோ, அவருக்கு எது சம்மதமோ அதை அவர் எனக்குத் தருவார். தராமல் போனாலும் கவலையில்லை.. இதுவே அதிகம்! என நினைப்பேன்.
     ஆனால், உங்களுக்கு அப்படி சொல்லித் தர மாட்டேன். எனது நிலை வேறு, உங்கள் நிலை வேறு. நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும். சாதனை செய்து அவரை அறிந்துகொள்ள வேண்டும்.

     அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள். தீவிரமாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் திடமான நம்பிக்கையும், பக்தியும் உங்களது வேண்டுதலை நிறைவேற்றட்டும். நேர்த்தி செய்யாதீர்கள். செய்தால் அதை தாமதமின்றி நிறைவேற்றுங்கள்.

Thursday, February 27, 2014

சாயியே உண்மையான சாதனம்!


     சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்து கொள்வதே தியானமாகும். அதுவே அவரது தரிசனம். அஞ்ஞானத்திலிருந்தும் காமத்திலிருந்தும் கர்ம வினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்கள் மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள்.


தொகுப்பு் வி. நந்தினி,

எந்தப் பெயரில் தெய்வத்தை வழிபட்டாலும் அதற்குரிய மரியாதையை செலுத்துங்கள்

        சில ஆண்டுகளுக்கு முன்பு நமது பிரார்த்தனை மையத்தில் அனுமன் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தபோதும், சனி தோக்ஷ நிவர்த்தி யாகம் நடத்திய போதெல்லாம் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சாயி பாபாவை ஏற்றுக்கொண்ட ஒருவன் எப்படி மற்ற தெய்வங்களை வணங்கலாம்? இவன் அரை குறையானவன், இவனிடத்திற்குச் செல்ல வேண்டாம், இவனது பத்திரிகையை வாங்க வேண்டாம் என்றார்கள்.
     ஆனால் பாபா அதன் பிறகுதான் பத்திரிகை மற்றும் பிரார்த்தனை மையத்திற்கு ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினார். எனது பெயரை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
     சிட்லப்பாக்கம் விபூதி பாபா ஆலய நிறுவனர் பூஜ்ய  நாகராஜ பாபா அவர்கள் மட்டும்தான், ‘யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே! நீ செய்வது தான் சரி.. நான் கூட இங்கு வருகிற பக்தர்களிடம் சாயி பாபாவுடன் குல தெய்வத்தை வணங்கு, விபூதி பாபாவை வணங்கு என சொல்லி அனுப்புவேன். குல தெய்வ வழிபாடு முக்கிய மானது! என்று கூறுவார்.
     நான் அதை அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தேன். பாபாவே என் குலதெய்வம் என்பேன். பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, அவரவர் குலதெய்வங்கள் என் மனக்கண் முன் நிற்பதை கவனித்தேன்.
     இது என்னுடைய யூகமாக இருக்கலாம் என நினைத்துக் கேட்டால், அவர்கள் அதை உறுதிப்படுத்துவார்கள்.
     ஒரு சாயி பக்தைக்கு 18 ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லை. அவர் என்னிடம் வந்தார். உதியைப் பிரார்த்தித்து அவரிடம் கொடுக்க என் கண்களை மூடியபோது மிகப்பெரிய ஆலமரத்தையும், அதில் ஒரு குழந்தை கிடப்பதையும் கவனித்தேன்.
     என்னவாக இருக்கும் என நினைத்து, அந்தப் பெண்மணியிடம் உங்கள் குலதெய்வம் என்ன எனக் கேட்டேன். முனீஸ்வரன் என்றார்.
     ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் உங்கள் குலதெய்வம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அங்கு சென்று வழிபட்டு அங்கிருந்து உதியை எடுத்துக்கொள்ளுங்கள், குழந்தைப்பேறு வாய்க்கும் எனக் கூறினேன்.
     எங்கள் வீட்டில் அதுபோல ஆலமரம் இல்லை என்று அந்தப் பெண்மணி கூறினார். அப்போது உடனிருந்த அவரது கணவர், எங்கள் பூர்வீகத்தில் இப்படி உள்ளது. ஆனால் அங்கு நான் சென்றது கிடையாது என்றார். போய்தான் வாருங்களேன் என்று கூறி அனுப்பி விட்டேன்.
     சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணி மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இந்த முறை அவர் சோகமாக இருந்தார். என்னவாயிற்று அம்மா எனக் கேட்டபோது, நீங்கள் சொன்னதுபோல எனது பூர்வீகத் திற்குப் போய் குல தெய்வ வழிபாடு செய்தேன். இவ்வளவு காலமாக இல்லாமல் நான் கருவுற்றேன்.
     ஆனால் கரு, கருப்பையில் பதியமாகாமல் கருக்குழாயில் பதியமாகிவிட்டது. இதனால் அதை மருத்துவர்கள் அகற்றி விட்டார்கள் என்றார். கவலையடைய வேண்டாம், குழந்தைப்பேறு எப்படி வாய்க்கும் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்தா யிற்று அல்லவா? மீண்டும் அங்கேயே போய் வேண்டிக்கொள்ளுங்கள் என்றேன்.
     இதுபோன்ற பல விக்ஷயங்களை பரீட்சை செய்தேன். எனக்குள் ஒரு குழப்பம்! பரப்பிரம்மமே பாபாதான். கடவுள் பாபா ஒருவரே அப்படியிருக்க, எதற்காக இப்படிப்பட்ட விக்ஷயங்களை நான் அணுக வேண்டியிருக்கிறது? என்பதுதான் அந்தக் குழப்பம். ஒருவன் பூரணமடைந்துவிட்டால் அவனுக்கு மற்ற எந்த வழிபாடுகளும் தேவைப்படாது. ஆனால், அரைகுறை ஆன்மீகத்தில் இருக்கிறவர்கள் நிச்சயம் தாங்கள் எதை வழிபடுகிறார்களோ அதை மறக்காமல் வழிபட வேண்டும். இதனால்தான் நமது முன்னோர் குல தெய்வம், இஷ்ட தெய்வம் என வைத்தார்கள்.
     எத்தனை பெயர்களில் கும்பிட்டாலும் அவை பல கடவுளாகாது, ஒரே கடவுளின் பல ரூபங்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இது விக்ஷயம் தெரிந்தவர்களுக்கு. விக்ஷயம் தெரியாதவர்கள் அந்தப் பெயரிலேயே வணங்கலாம் என்பதும் ஏற்கக்கூடியதே! இந்தக் கருத்து சரியானதுதானா என பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.
     அப்போதுதான் ஹேமத்பந்த் சத்சரித்திரத்தின் முப்பத்தெட்டாவது அத்தியாயத்தில் 123 – வது வசனத்தில் ‘ஆராதனை செய்ய வேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒரு கணமும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை என்னால் கவனிக்க முடிந்தது.
     அது தொடர்பான சம்பவம் ஒன்றையும் ஹேமட்பந்த் பதிவு செய்திருக்கிறார். (சாயி ராமாயணம் – அத் – 38 - 123 முதல் 146 வசனங்கள் வரை) அந்தப் பகுதியை அப்படியே தருகிறேன்.
     பாபா லெண்டியிலிருந்து திரும்பி வந்து மசூதியில் அமர்ந்த போது பக்தர்கள் தரிசனத்திற்காக கூடினார்கள். பாபாவின் உயர்ந்த பக்தரான நானா சாந்தோர்க்கர் தனது சகலபாடியான பினீவாலே என்பவருடன் வந்திருந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செலுத்திவிட்டு உட்கார்ந்தபோது, பாபா திடீரென கோபம் அடைந்து சாந்தோர்க்கரைப் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்.
     ‘‘நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாட்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா? எனது கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்தபிறகு இந்தக் கதியைத் தான் அடைந்தீரா? , உமது மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்? அனைத்தையும் விவரமாக சொல்லும்’’
     இதைக் கேட்ட நானா தலையை குனிந்தார். பாபாவின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் தவித்தார். பாபா காரணமின்றி யாரையும் புண் படுத்த மாட்டார் என்பதை அறிந்திருந்த அவர், அவரிடமே சினத்திற்கான காரணத்தைக் கூறுமாறு கெஞ்சினார்.
     ‘‘என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்கான கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது. உமது மூளைக்கு என்ன ஆயிற்று? நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தீர்? வழியில் என்ன நடந்தது? எங்காவது வழியில் இறங்கினீரா? நேராக இங்கு வந்தீரா? சின்னதோ, பெரியதோ எதுவாக இருப்பினும் சொல்லும்’’ என பாபா கேட்டார்.
     ‘‘குதிரை வண்டி அமர்த்தியபோது நேராக சீரடிக்கு செல்லவேண்டும் என்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது. தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார். நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, சீரடியில் இருந்து திரும்பி வரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம் என்று சொல்லி அவரைத் தடுத்து விட்டேன். சீரடி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால் பொறுமையிழந்து, தத்தர் தரிசனம் அப்பொழுது வேண்டாம் எனப் புறக்கணித்துவிட்டேன். பிறகு, கோதவரி நதியில் குளித்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறி விட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில் முயற்சி செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப்போட்டேன்.’’
     நானா இப்படி சொன்னதும், பாபா அவரை கண்டித்தார். ‘‘உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதைப் புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக் கொண்டீர். தொழுகைக்கு உரிய தேவரான தத்தர், நீர் எவ்வித பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக் கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால், நான் மகிழ்ச்சியடைவேனா, என்ன?’’ எனக் கேட்டார்.
     ‘‘எல்லாமே நான் என உணர்ந்து கொண்டாய் நானா! நீர் செய்தது சரி’’ என அவரை உற்சாகப் படுத்தாமல் பாபா ஏன் கண்டித்தார்?
     உலக வழக்கை மீறக்கூடாது. முன்னோரின் நிலையை மாற்றக்கூடாது என்பதால் கண்டித்தார். கிருஷ்ண பரமாத்மா பரப்பிரம்மம் என்றாலும், தானே பரம குரு என்ற போதிலும், மனித அவதாரம் செய்த காலத்தில் தானும் ஒரு குருவை சரணடைந்து அவருக்கு வேலை செய்து சிஷ்யராக இருந்தார்.
     முப்பதாவது அத்தியாயத்தில் ஹேமட் பந்த் இன்னும் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார். பாபாவின் இன்னொரு தீவிர பக்தரான சாமாவுக்கு பாபா உணர்த்திய விக்ஷயத்தைக் கேளுங்கள்.
     சாமா பாபாவின் தீவிர பக்தர், பாபாவை ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருங்கியவர். சாமாவின் தாயார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு வேண்டுதல்களை தனது குல தெய்வத்தின் பாதங்களில் சமர்ப்பித்தார். ஒன்று, சாமா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, இந்தக் குழந்தையை உன் பொறுப்பில் ஒப்படைக்கிறேன், குழந்தை சரியாகி விட்டால் அவனை உன் பாதங்களில் கொண்டு வந்துபோடுகிறேன் என்பது ஒன்று. இன்னொன்று அந்தத் தாயாரின் மார்பகங்களில் கட்டி வந்து வேதனைப் படுத்தியபோது, வெள்ளி ஸ்தனங்களை செய்து சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டார்.
     இதை ஜோதிடர் மூலமாக நினைவூட்டப் பெற்ற சாமா, இரண்டு ஸ்தனங்களை செய்து வந்து, பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து, ‘‘என் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டு, என்னை விடுதலை செய்யுங்கள்’’ என வேண்டினார்.
     சாமா பாபாவிடம் என்ன சொன்னார் கேளுங்கள்.  ‘‘நீரே எனது சப்தசிருங்கி (அம்மன்) நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்!’’
     சாமா உண்மையைத்தான் சொன்னார். ஆனால் அதை பாபா ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீ சப்த சிருங்கியின் கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப் பட்ட இந்த ஸ்தனங்களை உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்’’ என்று கூறி விட்டார். (அத்:30, 67-73)
     நானா, சாமா ஆகிய பக்தர்களை விட நாம் பாபாவுக்கு நெருங்கிய பக்தர்களாகிவிட முடியாது. அவர்களுக்கே, அவர்களது முதாதையர் பின்பற்றிய பிற வழக்கங்களைப் புறக்கணிக்க வேண்டாம் என பாபா வலியுறுத்தினார்.
     குல தெய்வத்தால் என்ன நன்மைகள் நமக்குக் கிடைத்துவிடப் போகிறது என எண்ணிக் கொண்டு, பாபாவிடம் இதைப் பற்றி பிரார்த்தித்தேன். அன்றைய கனவில், குல தெய்வம் உனக்கு இருபத்தி இரண்டு விதமான சமத்காரங்களை செய்கிறது என்றார் பாபா.
     அது என்ன என்பதை கேட்கத் தவறிவிட்டேன். என் பிள்ளை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என பள்ளிகளைத் தேடிச் சென்று சேர்ப்பதைப் போல, என்னை தகுதிபடுத்த பாபாவிடம் கொண்டு வந்து சேர்த்ததும் என் குல தெய்வம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
     இந்த நிகழ்வுகளுக்கு பிறகுதான் பத்துப் பைசா செலவில்லாமல், எந்த முயற்சியும் செய்யாமல் குலதெய்வம் நமக்கு அருள்கிறது என்ற உண்மை தெரியவந்தது.

     நீங்கள் அனைத்தையும் கடந்த சாயி பக்தரானால் சாயியைத் தவிர வேறு எந்த ரூபத்தையும் மனதில் நிறுத்தாதீர்கள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கிருப்பது நமது சாயியே என்பதை உணர்ந்து நமஸ்காரம் செய்யுங்கள். முழுமை அடையாதவர், எந்தப் பெயரில் தெய்வத்தை வழிபட்டாலும் அதற்குரிய மரியாதையை செலுத்தி வழிபடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் நல்லது..

Wednesday, February 26, 2014

எங்கும் நிறைந்த பாபா

கபர்தேயின் மனைவி சீரடியில் நைவேத்யம் செய்து பாபாவுக்கு படைப்பதோடு, அவரை தன் அறைக்கு வந்து உணவு உண்ணுமாறு கேட்டுக் கொள்வார். பாபாவும் வருவதாகச் சொல்வார். ஆனால் ஒருநாள் கூட போனதில்லை.
     ஒருநாள் அவள் பாபாவுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது ஒரு நாய் வந்தது. அந்த நாயைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அசுத்தமானது, நோய்க் கிருமிகளைப் பரப்பக்கூடியது என நினைத்து அந்த நாயின் மீது எரிந்துகொண்டிருந்த விறகுக் கட்டையைத் தூக்கிப் போட்டாள். நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.
     கபர்தேயின் மனைவி உணவு தயாரித்துக்கொண்டு மசூதிக்குச் சென்று படைத்தாள். பிறகு வழக்கம் போல, பாபாவை தன்னிடத்திற்கு வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள்.
     ஐயோ, அம்மா! இன்று நான் வந்திருந்தேன். நீ என்னை கொள்ளிக் கட்டையால் அல்லவா அடித்துத்துரத்தினாய்? என்றார் பாபா.

                அந்தம்மாள் பாபாவின் எங்கும் நிறை தன்மையை உணர்ந்ததோடு, தன் செயலுக்கு வெட்கப்பட்டு வருந்தினாள்.

எங்கே தீர்வு உடனே கிடைக்கும் எனத் தேடி ஓடாதே!

குரோம்பேட்டை ரமா அம்மையார் என்னிடம் அடிக்கடி கேட்கிற ஒரு கேள்வி!
     ‘உங்களிடம் எல்லா இறை சக்தியும் இருக்கும் போது பக்தர்களை எதற்காக அங்கே செல்லுங்கள், இங்கே செல்லுங்கள் என அலைக்கழிக்கிறீர்கள்? இது சரியா? அதை விட நீங்களே இதை குணப்படுத்திவிடலாமே! என்பார்.
     வேதங்கள், சாத்திரம், உபநிக்ஷத்துக்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களில் புலமையுள்ள நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் பார்க்கப் போவது இல்லை, அப்படி யிருந்தும் உங்கள் பிரச்சினை ஏன் சரியாவது இல்லை?
     நமது கர்மாவை நாம் அனுபவித்தே தீரவேண்டும்! அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. என்னிடம் வருவோர், தங்கள் லவுகீகத்தின் நலன் கருதியே வருகிறார்கள். என்னையும் அதிலேயே தங்கவைத்துவிடுகிறார்கள். என்னை உணராதவர்கள் என்னிடம் வருகிறார்கள், நான் விரும்பாததை என்னிடம் கேட்கிறார்கள் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனாலும், இவர்களை தாண்டி என்னால் போக முடியவில்லை.
     பயந்தோடவும் முடியாமல், மேலே நடக்கவும் முடியாமல் வழுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறேன். ஆனால், ஒரு நாள் நிச்சயம் ஆன்ம அனுபூதியை அடைந்தே தீருவேன்.
     என்னையே நம்பி என்பால் லயமாகிற பக்தனின் தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று பாபா கூறுவாரே, அதுபோல, என் மனதில் உள்ள பக்தனுக்காக நான் இரவு பகலாக பிரார்த்தனை செய்துகொள்வேன்!’’ என்று கூறுவேன். யாரையும் அலைக் கழிப்பது கிடையாது. நான் சொல்வதை அவர்கள் ஏற்கப் போவதுமில்லை. பகட்டாகவும், உணர்வு அல்லாமல் உடையிலும், உடலிலும் ஆன்மீகச் சின்னங்களை தரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை நம்பி ஏமாறுவதே இந்த மக்களின் வாடிக்கை.
     அவர்களிடம், ‘பாபாவை நம்பி காத்திரு, அவர் உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பார் என்றால், கேட்பது இல்லை. அதனாலேயே அவர்களை அனுப்புகிறேன். கர்மாவை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றால் கடவுளும் குருவும் எதற்காக?
     கர்மா என்பது கடந்த காலத்தில் பயன்கள். போன ஜென்மத்தில் நாம் செய்தவற்றின் விளைவுகளை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம். பள்ளியில் நன்றாகப் படித்தவன் கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.
     அவனோடு பள்ளிக்கு வந்த இன்னொருவன் ரோட்டில் இளநீர் விற்கிறான். காரணம் என்ன? இருவரும் பள்ளிக்கு வந்தார்கள், ஒருவன் படித்தான், இன்னொருவன் வந்து போனான்.. அவ்வளவுதான். அன்று படித்த பலனை இன்று அவன் அனுபவிக்கிறான், படிக்காததன் பலனை இவன் இன்று அனுபவிக்கிறான். இதுதான் கர்ம பலன்.
     விவரம் தெரியாமல் விட்டுவிட்டேன், மன்னித்து என்னை கலெக்டர் ஆக்கு கடவுளே என்றால், கடவுள் என்ன செய்ய முடியும்? மகனே! உனக்கு தகுதியில்லை. வயதுமில்லை.. அதையெல்லாம் கடந்துவிட்டாய்.. வேண்டுமானால், உனக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து உன்னை பாதுகாக்கிறேன்.. உன் பிள்ளைகளை உருவாக்கு.. அவர்களை கலெக்டர் ஆக்கி, உன்னை கலெக்டரின் தந்தையாராக ஆக்குகிறேன்.. என்பான். இதுதானே நியாயமானது.
     எத்தனையோ அற்புதத்தை செய்கிற கடவுள் இதை செய்யக்கூடாதா எனக் கேட்கலாம்..நமக்கு அவர் நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தார். நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதைப் பொறுத்து நம் கர்மா தீர்மானிக்கப்படுகிறது. நன்மையும் தீமையும், நல்லதும் கெட்டதும் நம்மிடம்தான் இருக்கிறதே தவிர, கடவுளுக்கும் இதற்கும் சிறிதும் தொடர்பேயில்லை.
     உனக்கு இன்றைக்கு லீவு தருகிறேன். உன் லீவு நாளில் வந்து வேலையைச் செய்துகொடு என்று அலுவலகத்தில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
     அப்படித்தான்.. இன்றைக்கு குருவருளால் உங்கள் கர்மா தள்ளிப்போடப்படலாம். ஆனால் ஒரு நாள் அதை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும். குருவும் கடவுளும் உங்கள் சுமைகளைச் சுமக்க உதவி செய்து இளைப்பாற்றுவார்கள். சுமை தெரியாமல் உங்களை நடக்கவைப்பார்கள். அடுத்தஜென்மத்திற்காக உங்களை தயார் செய்வார்கள்.
     அப்படியானால், என்னைப் பார்க்க வந்தாலும், யாரைப் பார்க்க வேண்டும் என்றாலும், உடனடியாக மாயா ஜாலத்தை எதிர்பார்க்கக்கூடாது. நம்மில் ஏற்படுகிற மாற்றம் நமக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து மாற்றத்தை முதலில் உங்கள் மனதில் கொண்டு வரவேண்டும்.
     சென்னை கொளத்தூரிலிருந்து ஒரு சாயி பக்தை என்னை நம்பி வந்தார். அவரது இரு வயது குழந்தையைக் கூட ஒருநாளும் அவர் கொஞ்சியதே கிடையாது, கணவருடன் அன்பாக இருந்ததில்லை. ஐந்து வருடங்களாக குடும்பத்தில் நிம்மதி என்பது சிறிதும் இல்லை.. என்று வந்தார். ஏதோ பூர்வ கடன் என்பதைப் போல, அவர்களுக்காகப் பிரார்த்தித்து அவர்களுக்கு உதியைக் கொடுத்து அனுப்பினேன்.
     ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அந்தப் பிரச்சினைகளின் பாதிப்புகள் ஒரே மாதத்திற்குள் என்னை ஆட்டி வைத்தது. அந்த மகளின் கடந்த கால அறிகுறிகள் அனைத்தும் என் உடலில் ஏற்றப்பட்டது. இது கடவுளால் மாற்றப்பட்ட விக்ஷயம். அவர் என்னை குருவாக முழு மனத்தோடு மதிப்பதால் அவருக்குக் கிடைத்த நன்மை.
     எல்லாருக்கும் இப்படி நடக்குமா என்றால், அது எனக்குத் தெரியாது. அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது அது. வின்னி சிட்லூரி அம்மையார் எழுதிய பாபாவின் ருணானுபந்தம் என்ற புத்தகத்தில் ஒரு தகவலை குறிப்பிட்டிருக்கிறார்.
     பாபா தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒருவர் பாலகிருஷ்ண கேசவ் வைத்யா. ரத்னகிரி மாவட்டத்தில் ராஜபூர் நகரத்திற்கு அருகேயுள்ள பாட்காவோன் என்ற கிராமத்தில் வசித்தவர். ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆன்மீகத்தை போதித்த இவரை, அந்தப் பகுதி மக்கள் மிகவும் மதித்துப் போற்றினார்கள். பல மக்கள் இவரை பேய் ஓட்டுபவர் என்றே சொன்னார்கள். இவரும் பாபாவும் சம காலத்தவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே கிடையாது.
     இந்தக் காலக்கட்டத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு பேய் பிடித்து மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்னென்னவோ செய்தும் ஒன்றும் முடியவில்லை. பாதிக்கப்பட்டவரை கயிற்றால் கட்டிவைக்கவேண்டிய நிலை. இந்த நிலையுடன் அவரை சீரடிக்கு அழைத்து வந்தார்கள். அவரைப் பார்த்ததும், அரே.. மிகவும் சக்தி வாய்ந்த பேய் இவரைப் பிடித்திருக்கிறது. என்னால் இதை ஒன்றும் செய்யமுடியாது. பாட்காவோனில் உள்ள தாதா மகராஜீடம் அழைத்துச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்லுங்கள் என்றார்.
     அந்தக் குடும்பத்தார் பதினைந்து நாட்கள் பயணம் செய்து பாட்காவோனை அடைந்து பாபா குறிப்பிட்ட நபரைப் பற்றி விசாரித்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியம்!
     அவர் சந்நியாசிக்கு உரிய எந்த வித உடையும் உடுத்தாமல் சாதாரணமாக இருந்தார். பாபா அனுப்பிய விவரத்தைச் சொன்னார்கள். அந்த நோயாளியை எட்டு நாட்கள் தங்கவைத்து பேயை ஓட்டினார் பால கிருஷ்ணா.
     ஒரு சமயம் சில பக்தர்கள் பாட்காவோனுக்கு சென்று பால கிருஷ்ணா மகராiஜ தரிசித்த பிறகு சீரடிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தார்கள். இதை அறிந்த பால கிருஷ்ணா, வெள்ளிச் சரிகை போட்ட ஒரு துணியைக் கொடுத்து, இதை பாபாவிடம் சேர்த்துவிடுங்கள். நமஸ்காரம் செய்யுங்கள். ஆனால் எதைப் பற்றியும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அனுப்பினார்.
     அந்த பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்தத் துணியை பாபாவின் கைகளில் வைத்தார்கள். இதைப்பெற்றுக்கொண்ட பாபா, மகிழ்ச்சியால் நடனமாடத்தொடங்கினார். மசூதியில் இருந்தவர்களிடம், என் பாலா எனக்காக வெள்ளிச் சரிகை போட்ட தோதியை அனுப்பியிருக்கிறான் என்று மகிழ்ச்சியோடு கூவியபடியே அதை தலையில் கட்டிக் கொண்டார்.’’
     இந்த விக்ஷயத்தை கவனியுங்கள். பாபா மிகவும் சக்தி வாய்ந்தவர். எல்லா தேவர்களும் கைவிட்ட போதிலும் கைவிடாதவர் பாபா. அவர் எதற்காக இன்னொருவரிடம் அனுப்பவேண்டும்? இவரே பேய் ஓடச்செய்திருக்கலாம் அல்லவா? நாம் சில விக்ஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாமே பாபா.. எல்லோருமே பாபா. இதில் பேதம் கூடாது. அடுத்து, யாருக்கு எங்கு நடக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடக்கும்.
     நரசிம்ம சுவாமிஜீ பகவான் ரமணரிடமோ, உபாசினி மகராஜீயிடமோ இருந்திருக்கலாம். பாபாவிடம் போகக் காரணம் ஒன்று இருந்ததல்லவா? அப்படித்தான் மக்கள் போவதற்கும், அனுப்பப்படுவதற்கும் காரணம் நிச்சயமாக இருக்கும்.
     எனக்குத் தெரிந்த ஒரு பிரமுகர் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்தார். அதைப் பற்றி ஒருவர் குறிப்பிடும்பொழுது, எங்கெல்லாம் இப்படி அற்புதம் நடக்கிறது எனக் கேள்விப்படுகிறாரோ அங்கெல்லாம் ஓடுவதிலே இவருக்கு நிகர் யாரும் கிடையாது என்றார். இவரைப் போல, பலர் இப்பொழுதெல்லாம் நிறைய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
     அவர்கள் தீர்வு எங்கே உடனே கிடைக்கும் எனத் தேடுவதி லேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். என்னிடம் வந்தார்கள், சரியானார்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஏனெனில், நான் மாயை வசப்பட்ட மனிதன். என் எதிர்காலம் என்னவென்றே தெரியாதவன். எனக்கு எப்போது நல்லது நடக்கும் என்பதில் நிச்சயம் தெரியாதபோது, பிறருக்கு என்னால்தான் எல்லாம் நடந்தது எனக்கூறக்கூடாது.
     ஒருவருக்கு எப்போது அனுகூலமான நேரம் அமைகிறதோ, பகவான் அருள் பூரணமாகக்கிடைக்கிறதோ, அப்பொழுது அவர்கள் ஒருவரிடம் செல்வார்கள். எனவே, அவரை விடுவிப்பது இறையருளே தவிர, நமது தெய்வீக சக்தியல்ல.

     இதைப் புரியாத சிலர், எல்லாம் என்னால் நடக்கிறது என சொல்லிக்கொள்வார்கள். நமது கடன் பணி செய்வது, இறைவன் வேலை நமக்கு அருள் செய்வது. அது போதும்.

Tuesday, February 25, 2014

உன் பக்கத்திலேயே இருப்பேன்!

என் பெயர் வி.ராமச்சந்திரன். மனைவி வசந்தி, பிள்ளைகள் காவிய சந்தியா, பாலாஜீஸ்வரன். பல்லாவரத்தில் வசிக்கிறோம். எனக்கு பாபாவை பதினான்கு ஆண்டுகளாக என் மனைவி மூலமாகத் தெரியும். மணமான புதிதில் வி.ஜீ.பி. கடற்கரைக்குச் சென்றபோது, நீலாங்கரையில் ஒரு முஸ்லிம் பெரியவர் கோயில் உள்ளது என அறிந்து அங்கே சென்றுவந்தோம்.
     நாளடைவில் எனக்கு ஏற்பட்ட மதுப்பழக்கம், வீட்டில் தங்காமல் இரவு வேலை என்று கூறிவிட்டு சினிமா செல்வது போன்றவற்றால் எனக்கும் என் மனைவிக்கும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றாள். என்னைத் திருத்த எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவளால் முடியவில்லை. பல முறை அவளை அடிப்பேன்.
     வீட்டருகே இருப்பவர்கள், நீங்கள் மலையனு}ர் சென்றுவந்தால் பிரச்சினை தீரும் எனக் கூறினர். அதையும் என் மனைவி நிறைவேற்றினாள். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை. ஒருமுறை என் மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு காரின் பின்னால் கால் கால் போட்டு ஒரு கையால் ஆசி வழங்கிக்கொண்டிருந்த, பாபாவின் படத்தைப் பார்த்து, தன்னை அறியாமல் அதனருகே சென்று, அதைத் தடவிக்கொண்டே அழுதபடி நின்றிருக்கிறாள்.
     இதை கவனித்த ஒருபெரியவர், ‘‘என்னம்மா, வீட்டில் பிரச்சினையா? எல்லாம் சரியாயிடும் போ, அழாதே!’’  என ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார்.
     வீடு வந்ததும், ‘‘ஒருமுறை ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு முஸ்லிம் பாபா கோயிலுக்குப் போனோமே, அந்தப் படத்தை இன்று ஒரு காரில் பார்த்தேன். அவரும் இந்து சாமிதானாம். அவர் படம் எங்காவது விற்றால் வாங்கி வாருங்கள்’’ என்றாள்.
     அவரது உருவப்படம் வரவில்லை என்றாலும் இந்த நாள் முதல் அவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று முதல் நான் வெளியே சென்றால், பாபா படத்தைப் பார்த்துவிட்டால் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியும், தைரியமும் வருவதை உணர்ந்தேன்.
     அதன் பிறகு மனதார பாபாவை வணங்க ஆரம்பித்தோம். எங்கள் வாழ்க்கையில் லீலைகள் ஆரம்பம் ஆகத் தொடங்கின. வேலை செய்த கம்பெனியில் பிரச்சினை ஏற்பட்டு விலகி வெளியே வந்தேன். பழைய கம்பெனியின் நண்பர்களை சந்தித்து மது அருந்தும் பழக்கத்தை சிறிது சிறிதாக நிறுத்தினார் பாபா. படம் பார்க்கச் செல்வதையும் தடுத்தார்.
     இப்போது நான் படம் பார்த்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. மது அருந்தி ஏழு ஆண்டுகளாகிறது. பாக்கு ஆன்ஸ் பழக்கங்களை விட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. என்னிடமிருந்த கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் பாபா எடுத்தெறிந்தார்.
     மைலாப்பூர் கோயிலுக்குச் சென்றோம். நேரம் ஆகிவிட்டதால் கருவறை கதவை மூடினார்கள். பாபா, உனது உருவத்தையாவது தரிசித்து விட்டுப் போகிறோம் எனப் பார்க்க முயன்றால், கதவை சார்த்தி விட்டார்களே என வருந்தினோம். என்ன காரணத்தாலோ, திரும்பவும் கதவைத் திறந்து சரியாக சார்த்தினார்கள். அந்த இடைவெளியில், மேடையின் கீழ் பாபா அமர்ந்திருப்பதைப் பார்த்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
     சில நாட்கள் கழித்து பாபா படம் வாங்கிச் சென்று வீட்டில் வழிபாட்டைத் துவங்கினோம். வியாழன் அன்று பாபாவுக்கு பூ போடத் தோன்றியது. பூக்கடையில் பூ கேட்டேன். பிறகு மனம் மாறி மாலையை வாங்கிவந்து பாபாவுக்கு சார்த்தினேன்.
     மறுநாள்தான் தெரியும், நான் மாலை போட்ட அன்று பாபாவின் சமாதி நாள் என்ற விவரம். ஒரு முறை எங்கள் கம்பெனி ஆயுத பூஜையின் போது லட்டு தந்தார்கள். சாப்பிட்ட பிறகுதான், பாபாவுக்கு சமர்ப்பிக்காமலும், நினைக்காமலும் சாப்பிட்டதை நினைத்து வருந்தினேன். லட்டை தந்த பேப்பரில் கையைத் துடைக்க எடுத்தபோது, அதில் பாபா படம் இருந்தது. அவரது வாயில் ஒரு துளி லட்டு ஒட்டியிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
     வண்டியில் பாபா ஸ்டிக்கர் ஒட்டியிருப்பேன். என் தம்பி வண்டியிலும் பாபா ஸ்டிக்கர் ஒட்டினேன். அப்போது அவன் என்னை கிண்டல் செய்தான்.
     ‘‘இவன் தெரியாமல் பேசுகிறான், இவனை மன்னித்து விடுங்கள். இவன் போகும்போதும் வரும்போதும் நீங்கள் துணையாக இருங்கள்’’ என பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு என் தம்பியைப் பார்க்க நேர்ந்தது. நான் ஒட்டிய படத்திற்கு பதில் வேறு படத்தை ஒட்டியிருந்தான்.
     நான் ஒட்டிய படம் எங்கே எனக் கேட்டேன். ‘‘வேலையிலிருந்து வரும்போது ஒருநாள், ஒரு லாரி என் வண்டியை அப்படியே அணைத்துவிட்டுச்சென்றது. நானும் வண்டியும் பள்ளித்தில் விழுந்து விட்டோம். வண்டிக்கும் எனக்கும் எந்த சேதமும் படவில்லை. படம்தான் அப்படியே நொறுங்கி விட்டது. பாபாதான் காப்பாற்றினார் என்பதை உணர்ந்து, முன் பக்கமிருந்த பிளாஸ்டிக்கை மாற்றி, புதியதாகப் பொருத்தி அதில் இந்தப் படத்தை ஒட்டியிருக்கிறேன் என்றான்.
     என் மனைவி இரண்டாம் முறையாக கருவுற்ற நேரத்தில், சுகப்பிரசவமாக ஒன்பது வார விரதம் இருந்தேன். கே.கே.நகர் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மனைவி மருத்துவரைப் பார்க்க உள்ளே சென்ற சமயம், வயதான ஒரு பெரியவர் என் பக்கத்தில் வந்து அமர்ந்து புகைப்பிடிக்க ஆரம்பித்தார்.
     வயதாகியும் அறிவில்லையே! வெளியே போய் பிடி எனக்கூறலாமா? என நினைத்த அந்த நேரத்தில் அந்தப் பெரியவர் எழுந்து சென்றுவிட்டார். விரத காலத்தில் கோபப்படாமலும், அவசரப்படாமலும் பொறுமை காக்க பாபா இப்படி செய்தார் என்பதை உணர்ந்தேன்.
     பேருந்து நிலையத்தில் பெரியவர் இருந்தார். அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதோடு, ஒரு பாக்கெட் சிகரெட்டும், தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
     என் மனைவிக்கு இரத்த சோகை ஏற்பட்டிருந்தது. இப்படியிருந்தால் பிரசவ நேரத்தில் சிக்கலாகும். நல்ல பழ வகைகளை சாப்பிடுங்கள், அதற்கு முன்பு பெரிய டாக்டரை பாருங்கள் என்றார் ஒரு டாக்டர்.
     என் மனைவியைப் பரிசோதித்து, அட்மிட் ஆகி இரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு கூறினார்கள். ஒரு மகள் இருப்பதால், வீட்டிலேயே பழ வகைகளை சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்வதாகக் கூறிவிட்டு வந்து விட்டோம்.
     பத்து நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதித்த மருத்துவர், கண்டிப்பாக அட்மிட் ஆகவேண்டும் என்றார். பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள். ஒன்பது இரத்த ஊசி போட்டும், உடலில் இரத்தம் இல்லை. ஊசி போட்டால் மட்டும் போதாது, நீயும் நன்றாக சாப்பிட வேண்டும், கவலைப்படக் கூடாது. பெரிய டாக்டரைப் பார்த்து இன்னும் பத்து ஊசி போடுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் டாக்டர்.
     இதைக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் பத்து நாட்கள் என்றால், குழந்தையை கவனிக்கவே முடியாத நிலை ஏற்படுமே என பயந்தோம். ஆனால் கண்டிப்பாக பத்து நாட்கள் தங்கியாகவேண்டும் என டாக்டர் பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
     பாபா பார்த்துக்கொள்வார் என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீண்டும் பத்து ஊசி என்றால் என்னாவது என நினைத்து பயந்து அழுது கொண்டு இரவு முழுவதும் உறங்காமல் இருந்ததால், விடியற்காலை ஐந்தரை மணியிருக்கும் நன்றாக உறங்கிவிட்டாள். அப்போது அவள் பெயரை ஒரு நர்ஸ் கூப்பிட்டு, உட்காரச் சொல்லி, பத்தாவது ஊசி போட்டுக்கொள் என்று கூறி, ஊசி போட்டுவிட்டுச்சென்றிருக்கிறார். அதன் பிறகு என் மனைவி உறங்கிவிட்டாள்.
     மீண்டும் ஆறரை மணிக்கு நர்ஸ் வந்து, ‘பத்தாவது ஊசியைப் போட்டுக்கொள். ஒன்பது மணிக்கு பெரிய டாக்டரைப் போய் பார்’’ என்றார்.
     ‘இப்போதுதான் வந்து ஒரு நர்ஸ் பத்தாவது ஊசியைப் போட்டார். மீ;ண்டும் கூப்பிடுகிறீர்களே?என என் மனைவி சொன்னபோது, ‘மருந்தும் ஸ்டாக் இருந்திருக்காது, நானும் இப்போதுதான் வருகிறேன், போட்டாச்சு என்று சொல்கிறீர்களே! என்று அந்த நர்ஸ் கேட்டார்.
     ‘இப்போது படுக்கையில் வந்து போட்டார்கள்என்று சொன்னதும், ‘சரி, போய் டாக்டரைப்பாருங்கள் என அனுப்பினார். டாக்டரைப் பார்த்தபோது, ‘என்னம்மா, நேற்று வரை இரத்தமில்லை என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது, இன்றைக்கு போதுமான இரத்தம் இருப்பது தெரிகிறதே. தைரியமாக வீட்டுக்குப் போகலாம். வலியெடுத்தால் வந்து அட்மிட் ஆகிக்கொள் என்று அனுப்பி வைத்தார்.
     பிரசவத்திற்கு மருத்துவமனையில் மனைவியைச்சேர்த்தேன். குழந்தை பெரிதாக வளர்ந்திருக்கிறது. பனிக்குட நீரின் அளவும் குறைந்திருக்கிறது. அறுவை சிகிச்சைதான் செய்து குழந்தையை எடுக்கவேண்டும் என்றார்கள்.
     பாபா கோயிலில் வேண்டிக்கொண்டு,என் மனைவியைப் பார்க்கவந்தேன். அழுது முகமெல்லாம் வீங்கியிருந்தது. கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னேன். பாபா கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்து வந்து தந்தேன்.
     என் மனைவி, டாக்டர் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள் எனக் கூறினாள். ‘ஒரு பருக்கையாவது வாயில் போட்டுக்கொள் என்று கூறி பிரசாதமும் உதியையும் கொடுத்து அனுப்பினேன். என் மனைவிக்கு அறுவை சிகிச்சையில்லாமல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குத்தான் பாலாஜீஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளோம்.

     இதுபோன்று எண்ணற்ற அற்புதங்களை எங்கள் வாழ்க்கையில் செய்து எங்களைக் காப்பாற்றி வருகிறார் பாபா.

Monday, February 24, 2014

உதியே உனக்கு தேவையான மருந்து

என் பெயர் தென்னரசு. சைதாப்பேட்டையில் உள்ள தி பாத்திமா மேல் நிலைப் பள்ளியில் பணிபுரிகிறேன். நானும் என் மனைவி விமலாவும் சாயிபாபாவிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவர்கள். எது நடந்தாலும் அது பாபாவின் விருப்பமே என நினைத்துக்கொள்வோம்.
     வியாழன் தோறும் சைதா சாயிபாயா அல்லது புதுப்பெருங்களத்தூர் அல்லது தி.நகர் அல்லது கூடுவாஞ்சேரி பாபா கோயிலுக்குச் செல்வோம்.
     கடந்த ஏப்ரல் இறுதியில் என் இடது கண் பார்வை மங்கலாகவும் ஏதோ கருப்பு நிற நிழல் தடுப்பது போல் தோன்றி மாற்றுச் சான்றிதழ் எழுத முடியாமல் தவித்து,  ஒரு வழியாக எழுதியும் முடித்து விட்டேன்.
     ஆறு மாதங்களுக்கு முன் கண்புரை உள்ளதாக சென்னை மருத்துவமனை ஒன்றில் கூறினார்கள். எனவே, இரு கண்களிலுள்ள புரையை மே மாத விடுப்பின் போது நீக்க முடிவு செய்தேன்.
     பாண்டி அரவிந்தர் கண் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில் கண்புரையோடு இடது கண்ணில் பார்வை நரம்புகள் துண்டிக்கப்பட்டு சிதறியும், இரத்தம் உறைந்தும் இருப்பது தெரிய வந்தது.
     முதலில் கண் பார்வை ஏற்பட, பார்வை நரம்புகளை சரிசெய்ய இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். செலவு முப்பதாயிரமாகும் என்றனர். மனம் வருந்தினேன். மே ஐந்தாம் நாள் புதுப்பெருங்களத்தூர் சாயி பாபா கோயிலுக்கு வந்து உதி பெற்றுக்கொண்டு, எனக்கு அறுவை சிகிச்சை ஒரே முறையில் நடக்கவேண்டும், நல்லபடியாக முடியவேண்டும் என பிரார்த்தித்தேன். என் பிரச்சினை நல்லபடியாக முடிந்தால் நம் பெருங் களத்தூர் பாபாவுக்கு நன்றி செலுத்தி, காணிக்கையாக 2500 ரூபாய் செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன்.
     மே எட்டாம் தேதி, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் கண்களைப் பரிசோதித்து ஒரே முறை அறுவை சிகிச்சை செய்தால் போதும் என்றார். நான் சாயியின் பெயரை இரவு பகலாக உச்சரித்துக் கொண்டிருந்தேன். அவரது போட்டோ மற்றும் என் குல தெய்வம் கொண்டேஸ்வரி அம்மன் போட்டோ ஆகியவற்றை மட்டும் வைத்திருந்தேன்.
     பெருங்களத்தூர் பாபா கோயிலில் பெற்ற உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு தண்ணீரில் குழைத்து குடித்தேன். அதன் பிறகு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை நன்றாக முடிந்தது. அறுவைக்குப் பிறகு வலியே ஏற்படவில்லை.
     பாபாவை எங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். எப்பொழுதும் அவர் பெயரை உச்சரிப்பேன். பாபா என் கோரிக்கைக்கு செவி சாய்த்தார் என எண்ணும் போது என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
     காணிக்கையை செலுத்த நேராகக் கோயிலுக்கு வந்து காணிக்கையைச் செலுத்தினேன். பாபா ஒரு சர்வ வியாபி என்பதையும், உதியே மருந்து என்பதையும் உண்மை என்று உணர்ந்து கொண்டேன். இன்னும் என் இரு கோரிக்கைகளை பாபா முன் வைத்துள்ளேன். அதனை விரைவில் முடித்துத் தர வேண்டிக் காத்திருக்கிறேன்.
தென்னரசு,
அனந்தபுரம்,

விழுப்புரம் மாவட்டம்

Sunday, February 23, 2014

என்னை விட்டுப் போகாதே

‘‘என் அன்புக் குழந்தையே! நீ என்னிடம் என்ன குறை கண்டாய், என்னை விட்டு விலகிப் போவதற்கு?  உன்னை ஜன்ம ஜன்மமாய் சிநேகித்து, உன்னோடு உறவு பாராட்டி, பிறவிகள் தோறும் உன்னைத் தொடர்ந்து வருகிற இந்த சத்குரு இப்போது உனக்கு சத்துரு மாதிரி தெரிகிறேனா, குழந்தாய்?
     கஷ்ட காலங்களில் நான் உன்னோடு நடந்தேன், உன்னை விட்டு நீங்காமலும் இருந்தேன். நீ தவறு இழைத்த போதெல்லாம் பிழை பொறுத்தேன், நடு நிலைமை தவறி நீ நடந்த காலங்களில் நான் தலை குனிந்தாலும் உன்னை விட்டு விலகவும் இல்லை உன்னைக் கைவிடவும் இல்லை.
     துரியோதனன் வீட்டுச் சமையலைச் சாப்பிட்ட துரோணரைப் போல, உன் கையால் சாப்பிட்ட நன்றிக்காக உன்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருக்கிறேன்.. இன்னமும் உனக்காக நான்தான் யுத்த களத்தில் நிற்கிறேன். நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லை.. உன் துயரம் அதிகமாகிவிட்டதால் தடுமாற்றத்தில் இருக்கிறாய். நிதானத்திற்கும் உனக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது தெரியுமா?
     நிம்மதிக்கும் உனக்கும் உள்ள தூரத்திற்கு இணையான தூரம். உன்னுடைய எல்லா சக்திகளையும் பிரயோகம் செய்து என்னை காப்பாற்றக் கூடாதா? உன்னை பரப்பிரம்மம் என்கிறார்கள், பரமாத்மா என்கிறார்கள், சர்வ சக்தி உள்ளவர் என்கிறார்கள்.
     என்னைக் காப்பாற்ற முடியாத சக்தி எப்படி சர்வ சக்தியாக இருக்கும்? என மனதில் நினைக்கிறாய்? எனக்கு எப்படி சர்வ சக்தியுள்ளதோ அப்படியே உனக்கு சர்வ தோக்ஷங்களும் உள்ளன. நான் உன்னை காப்பாற்ற நினைத்தாலும் அவை தடுத்து, உன் புத்தியில் கோணலான சிந்தனைகளை உண்டாக்கி நீ பெற வேண்டிய நன்மைகளைப்பெறவிடாமல் செய்து விடுகின்றன.
     பூர்வ கர்மச் சிந்தனைகள் உன் புத்தியில் பதிவாகியிருக்கிறது. ஆகவே நீ புதிது புதிதாக யோசித்தாலும் சுயநலத்திற்காகவே யோசிப்பாய்.. எத்தனை நன்மைகளை நான் உனக்குச் செய்திருந்தாலும் சடுதியில் நன்றி மறந்துவிடுவாய். இவையெல்லாம் உனது பாவத்திற்குக் காரணமாகி, பலன்களைத் தடுக்கிறதே தவிர, நான் காரணமல்ல.
     இந்தப் பக்கீர் பரம தயாளன். அணுகியவர்களுக்கு அனுகூலன். அப்படிப்பட்ட நானா உன் கஷ்டத்திற்கு காரணமாக இருப்பேன். சற்று யோசித்துப் பார் குழந்தாய்”, இப்படி நான் எனது மற்ற மகள்களிடம் சொல்வேன்.
     ஆனால் என் அன்பு மகளே! ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும், வேதனையாலும், வலியாலும் கதறி என்னைப் பெருமாளே பெருமாளே என்று கூவியழைத்துப் பிதற்றுகிறவளே எல்லோருக்கும் அற்புதங்களைச் செய்கிறவரான என் கடவுளே, எனக்கு ஏன் இந்த நிலை? என அந்தரங்கத்தில் புலம்பி, எல்லாம் கர்மவினை என உனக்குள்ளேயே விடை கண்டுபிடித்து, வெளியில் எதையும் காட்டாமல் செல்லுகிற என் செல்லக்குழந்தையே! என் கண்மணியே! இதோ உனக்கு நறுமணத் தைலம் கொண்டு வருகிறேன்.
     அப்பா, இந்தத் தைலத்தைப் பூசிக்கொண்டால் எனது உடலின் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் போய்விடுமா? சஞ்சலங்கள் தீர்ந்துவிடுமா? என உள்ளுக்குள் உள்ள என்னிடம் கேட்காதே. இதைப்பூசிக்கொண்டால் உன் மனம் இதமாகிவிடும்.
     சாஸ்திரங்களில் நாட்டமுள்ளவளே, சத்தியத்தில் ஈடுபாடு கொண்டவளே, சகலமும் என்னால் தரப்படுகின்றன என்பதை உணர்ந்தவளே, என் குழந்தாய்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்று உங்கள் அறிஞர் ஒருவர் எழுதிய பாடலை உணர்ந்தவளே, என்னை முழுதும் கற்றவளே! இப்போது நீ சுமக்கிற நோயும், பிரச்சினைகளும் உன் பொருட்டல்ல, பிறர் பொருட்டாகவே உனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
     ஒரு நல்லவரின் பொருட்டு எப்படி எல்லோர்க்கும் அருள் கிடைக்கிறதோ, அப்படியே எல்லோரின் தீவினையின் பலனும் அந்த ஒரு நல்லவரின் மீதே சுமத்தப் படுகிறது என்பதைத் தெரிந்துகொள்.
     எல்லோரும் சுய நலத்தோடு, தன் நோய் போக வேண்டிக்கொள்கிறார்கள்,  தன் பிரச்சினை தீர வேண்டிக்கொள்கிறார்கள். அவை எங்கே போகும்? என்னிடம்தானே வந்து சேரும். அவற்றின் பங்குகள் என் பிள்ளைகளான உங்களிடத்தில் வந்து சேர்கிறது.
     உனக்குப் புரிகிற மாதிரி சொல்லவேண்டும் என்றால், பிறர் நோயைச் சுமக்கும் பக்குவம் உன் போன்ற நல்ல உள்ளங்களுக்கே உள்ளது. ஆகவே, பிறர் நன்மைக்காக, பிறர் சுமையை நான் சுமக்கிறேன்.
     நான் சுமப்பதால் என் பிள்ளையான உனக்கு அதில் பங்கு கிடைத்து நீயும் சுமக்கிறாய். அதாவது, பிறரது சுமைகளை நாம் சுமக்கிறோம். அப்பா, இதுஅநியாயமில்லையா? எனக் கேட்கத்தோன்றும்.
     அம்மா! எந்தத் தாவரத்தையும் பார். அவை மழை, வெயில், பனி என பலவித கால மாற்றத்தால் துன்பப்பட்டு நீரையும், சக்தியையும் சேர்த்தாலும் தமக்கென வாழாது, பிறருக்காகவே வாழ்கின்றன.
     அதுபோலவே, நல்லவர்கள் மட்டுமே பிறருக்கு என வாழத் தகுதி படைத்தவர்களாக உள்ளார்கள். உனக்கு அந்தத் தகுதி உள்ளது. அதனால்தான் உனக்கு இப்பிறவி வழங்கப்பட்டுள்ளது.
     அப்பா, இந்தத் தகுதியை எனக்கு எப்போது வைத்தாய்? ஏன் வைத்தாய்? என்று கேட்கலாம். பிறவிகள் தோறும் கர்மவினைகளால் அவதிப்படுகிற ஆன்மாவை ஈடேற்றுவதற்காக, வினைகளை களைவதற்காக பூர்வ வினைக்கேற்ற உயிராக, அது பிறக்கிற குலம், குடும்பம், இடம், காலம் என சேர்ப்பித்து வைக்கிறேன்.
     நான் விரும்புகிற ஆன்மா அனைத்தையும் பெண்ணாக சிருஷ்டித்து அங்கே அனுப்புகிறேன். இப்படித்தான், உனது ஆன்மா இந்த உடலுக்குள் சேரும் முன்னரே அந்தத் தகுதியை வைத்தேன்.
     ஏன் வைத்தேன் என்றால், நான் உனக்கு மறைபொருட்களை கற்பித்ததும், எல்லாம் மாயை என விளங்க வைத்ததும் நீ சுகப்பட அல்ல, பிறர் சுகப்பட நீ பயன்பட வேண்டும் என்பதற்காக. மகளே, முதுமை என்பது நோய்களின் தலைவாசல். அதை எல்லோரும் கடந்துபோக வேண்டும். நோய்கள் என்பவை கர்மப் பலன்களை ஈடு செய்பவை. இந்த உடலோ கேவலம் மண்ணுக்குச்சொந்தம். மண்ணாய் மண்ணில் கலக்கப் போகிற ஒன்றை மலை போல் நம்பித் திரிகிறவர்கள் மூடர்கள். நீயோ எனது அறிவு மதி.
     அப்பா, நீங்கள் போதிப்பதைப் பார்த்தால் என் நோயை குணமாக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே என நினைக்கிறாய்.
     என் மகளே! நீ விரும்பினால் நான் உன்னை முற்றிலும் அந்த நோயிலிருந்து குணமாக்குவேன். நீ அதை விரும்பமாட்டாயே! நான் என்ன விரும்புகிறேனோ, அது உன்னில் நடக்கட்டும் என்று தானே விரும்புவாய். ஆகவே, இந்த நோயை ஒரு பொருட்டாக நினைத்துக் கலங்காமல், என்னையே தியானம் செய். வலியின் மத்தியில் சுகமாய் நான் உனக்குத் தரிசனம் தருவேன்.
     என் குழந்தையே! உனக்குச் சில ரகசியங்களை சொல்கிறேன், கேள்! பெண் ஜென்மத்தைப் பாவப்பட்ட ஜென்மம் என்கிறார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? பாவம் ‘பட்ட அதாவது அற்றுப் போன ஜென்மம் என்பது பொருள். மரம் பட்டுவிட்டது என்றால், அது உயிரோடு இல்லை என்பதல்லவா உண்மை.
     அப்படியே பாவம் பட்டுவிட்டதென்றால், புனிதமான ஜென்மம் என்றல்லவா பொருள்? இதனால்தான் ஞானிகள் மங்கையராகப் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்.
     பூர்வத்தில் என் மீது பக்தியுள்ளவர்களையும், நற்குணம் உள்ளவர்களையும் காப்பதற்காக நான், அவர்களை கடைசி ஜென்மத்தில் பெண்களாகப்படைப்பிக்கிறேன். அதாவது அந்த ஆன்மாக்களை பெண் உடலில் புகச் செய்கிறேன்.
     பெண் உடல் என்பது போகப் பொருளல்ல. பெறுதற்கு அரிய பொக்கிக்ஷம். அன்பின் தலைநகரம், தியாகத்தின் உறைவிடம். ஆணவங்களும், செருக்கும், உலகில் மண்டிக்கிடக்கும் மற்ற தீய குணங்களனைத்தும் புதைக்கப்படும் புதைவிடம். நல்ல பண்புகளுக்கு இலக்கணம். இத்தகைய உடலை உருவாக்கக் காரணம் என்ன வெனில், இதைக் கொண்டு மற்ற ஆன்மாக்களை ஈடேற்றுவதற்காகவே!
     ஓர் ஆணுக்குப் பசித்தால் பிறருக்கு இல்லாமல் போனாலும் தான் தின்றுவிடுவான். பெண் அப்படி செய்யமாட்டாள். ஆண் தனது கோபத்தையோ, மோகத்தையோ வெளிப்படுத்திவிடுவான். பெண் அப்படி செய்யமாட்டாள். ஆண் சகிக்க மாட்டான், பெண் சகிப்பாள். ஆண் தனது பண்புகளைக் காற்றில் பறக்கவிடுவான், பெண் அப்படி செய்ய மாட்டாள்.
                அதாவது ஆணுக்கு நேர் எதிர் குணம் கொண்டவளாக இருப்பாள். காரணம், ஆணாகப் படைக்கப்பட்ட ஆத்மாவையும் ஈடேற்றும் பொறுப்பை பெண்ணிடம் நான் தந்திருப்பதுதான். இதனால்தான் ஒரு பெண்ணிடம் நான் குடும்பம், குழந்தை, பொறுப்பு, கடமை என அனைத்தையும் ஒப்படைக்கிறேன். அவளை பூதேவியாக்குகிறேன். உன்னைத் தாயாக்குகிறேன்!
                நான் எனது பிரதிநிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனக்குப் பிரியமான ஆன்மாவை அனுப்பி பேரருள் செய்கிறேன். நானே பெண்ணாக இருந்துப் பெரும் சுமைகளைச் சுமக்கிறேன். எனவே, என்னிலிருந்து உன்னை வேறுபடுத்திப் பார்க்காதே.
                நீ சுமப்பதெல்லாம் உனதல்ல, எனது. நீ என்பவள் நீயல்ல, நான். இதை உணர்ந்து கொண்டால், நீ இந்த நோயை என்ன, மரணத்தையும் பிறருக்காகச் சுமக்கத் தயாராகிவிடுவாய்.
                அப்பா, அப்படியானால் எல்லாப் பெண்களுக்கும் மறு ஜென்மம் கிடையாதா? எனக் கேட்கலாம்.
                மகளே, என் மீது பக்தி செய்து, இடையறாது என்னையே தியானிக்கிற எந்தப் பெண்ணுக்கும் மறு ஜென்மம் கிடையாது என்பதை தீர்மானமாக அறிந்து கொள். சதா உலக சுகத்திற்கு மயங்கி, அதைப்பிரதானமாக நினைத்து அதிலேயே தன்னை ஆழ்த்திக் கொள்ளும் எந்தப் பெண்ணும் எனது விருப்பத்திற்கு நேர்மாறானவள், எனது நோக்கத்தை உணராதவள். அவளுக்கு நிச்சயம் மறு பிறப்பும் உண்டு, மறக்கமுடியாத சிட்சைகளும் உண்டு.
                அப்படியன்றி, என்னையே புகலிடமாகக் கொண்டு பக்தி செய்கிறவர்களை பிறக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால்தான் கடைசி காலத்தில் அவர்களுக்கு நோய்களை, பிரச்சினை களை கொடுத்து உணரச் செய்துவிடுகிறேன். வலி பொறுப்பது என்பது கர்மாவை சுமப்பது. அதை கடைசி வரை நாம் தாங்க வேண்டும். வேதனை எல்லாம் உடம்புக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல என்பதை புரிய வைத்துவிடுகிறேன்.
                உலகத்தை உய்விக்க வேண்டும், அதையும் பெண்ணின் மூலமாகவே உய்விக்க வேண்டும் என்பதற்காகவே, நான் விரும்புகிற ஆன்மாவைப் பெண்ணாகப் படைத்திருக்க, பலர் என்னுடைய விருப்பத்தை உணர்வதில்லை. உலகத்தால் இழுக்கப்பட்டுப் போகிறார்கள்.
                பெண்களில் பலர் சுயநலம் உள்ளவர்களாக, மதி கெட்டவர்களாக, சகிப்புத் தன்னை இல்லாதவர்களாக, பண்பு குறைந்தவர்களாக, அடங்காதவர்களாக, எதையும் தானே தீர்மானிக்கும் அகம் பாவம் கொண்டவர்களாக, மனம் போன போக்கில் செல்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பாவத்தை நோயாகச் சுமக்கிறார்கள். இவர்களுக்கு பிறவி உண்டு. ஆனால், நீயோ இவர்களுக்காக நோயைச்சுமக்கிறாய். உனக்குப் பிறவியில்லை.
                அன்பினாலும், தியாகத்தாலும், சகிப்பினாலும் இந்த உலகத்தை நெறிப்படுத்த வேண்டிய சில ஆன்மாக்கள், வாழ்க்கையில் விரக்தியடைந்து, குடும்பப் பிரச்சினையால் மனம் வெதும்பி, என்னை வழிபடுவதாக நினைத்து யோக நிலையை நாடி அலைகிறார்கள். நான் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது, அதுவும் உன்னை பெண்ணாகப் படைத்தது யோகத்தை நாடிப் போவதற்காக அல்ல, இந்த உலகத்திற்கு யோக சூட்சுமத்தை கொடுப்பதற்காக.
     மின்னலைப் போலத்தோன்றி மறையும் கணநேர மகிழ்ச்சியில் திளைத்து, மற்ற நேரங்களில் கஷ்ட நஷ்டங்களை சகித்து குடும்பத்திற்கு மீட்சியை உண்டாக்க வேண்டும், எதிர்காலத்தில் பாவமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் தேர்வு செய்த உத்தம ஆன்மாக்களே பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பாய்.
     நான் பக்தியுள்ள பிரம்மத்தை அறிந்தவர்களான பெண்களின் கூட்டுறவில் கட்டுப்பட்டுக் கிடப்பதும் ஏன் தெரியுமா?  மாசற்ற அவர்கள் மனதிலிருந்து எழுந்து வரும் இனிய கானங்களையும், பஜனைப் பாடல்களையும் கேட்டு மெய் மறந்துவிடுவதால். தாய்மை உணர்விலிருந்து எழுந்து வரும் துதிகளைக் கேட்டு மெய் மறந்துவிடுவதால்தான். பக்தி செய்யும் பெண்களின் நினைவில் கிடக்கிறேன்.
     பக்தியற்றவர்களும், தங்களின் மேன்மையான படைப்பின் உயர்வை அறியாதவர்களுமான பெண்களின் பேச்சில் துயரடைந்து அவர்களை விட்டுத் தள்ளி நிற்கிறேன்.
     சரி, மகளே! நீ எதையோ கேட்கப் போய், நான் எதையோ சொல்லி வந்ததாக நினைக்காதே. உன் படைப்பின் இயல்பு நீ இந்த வேதனையை சுமக்க வேண்டும் என்பது. இதிலிருந்து உனக்கு விடுதலை வேண்டும் என்றால் நிச்சயமாக என் உதியை நம்பி உள்ளுக்குச் சாப்பிட்டு, உறுத்துகிற உடலின் மீது தடவு. நிச்சயமாக நிவாரணம் தருகிறேன்.
     அதே சமயம், உலகத்தில் மேன்மையுள்ள பிறவி உனக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து, உன்னிடமிருக்கிற துவேக்ஷம், பொறாமை, தீய எண்ணம், விரோத மனப்போக்கு, விவகாரம் செய்கிற குணம், பொய், அடுத்தவரை அற்பமாக நினைத்தல் போன்ற குணங்களை எல்லாம் விட்டுவிடு. நான் பூரணப் பிறவி என்கிற எண்ணம் உன் மனதில் வரட்டும். என்னால் இந்த உலகம் உயர்வு அடையப் போகிறது என்கிற பெருமை உனது மனதில் குடிகொள்ளட்டும். நான் அளப்பரிய சக்தி என்பதை அறிந்துகொள்.
     வலிமையான ஆன்மா உனக்குள் இருக்கும்போது, வலுவற்றதும், நிலையற்றதுமான உடலுக்காக எதையும் யாசித்தபடி நிற்காதே! அனைத்தும் உனக்கு மங்களமாகட்டும். நோயின்றி வாழ்வாயாக. அதை விடுத்து, என்னைவிட்டு வேறு எங்கும் போய் அலையாதே.

அன்புடன்

அப்பா சாயி பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...