Wednesday, May 31, 2017

மனப்பூர்வமாக உதவி செய்!




உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடீரென தாழும் போதும், விழும்போதும், அழும்போதும், அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே, நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே.

                                                                                                                         ஸ்ரீ சாயி-யின் குரல்.

108 சாயி போற்றி


1.  ஓம்  சாய் நாதா போற்றி ஓம் !

2.   ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா  போற்றி ஓம் !

3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் !

4.  ஓம் பண்டரிபுர விட்டலா போற்றி ஓம் !

5. ஓம் வேங்கட ஸ்மரணா போற்றி ஓம் !   
6. ஓம் கிருஷ்ணா ராமா  சிவா மாருதி போற்றி ஓம் !

7. ஓம் இறைவன் ஒருவனே என்பாய் போற்றி ஓம் !

8. ஓம் பிறவி பிணி தீர்ப்பாய் போற்றி ஓம்

9. ஓம் மதங்களைக் கடந்த மகானே போற்றி ஓம் !

10. ஓம் நாக சாய்  போற்றி ஓம் !

11. ஓம் வேண்டுவோர் துயர் தீர்க்கும் யோகியே போற்றி ஓம் !

12. ஓம் ஷீரடி வாசா சித்தேஸ்வரா போற்றி ஓம் !

13. ஓம் அற்புதங்கள் செய்யும் ஆண்டவா போற்றி ஓம் !

14. ஓம் முக்திக்கு வழி காட்டும் முனிவா போற்றி ஓம் !

15. ஓம் உள்ளத்தின் உள்ளே உறைபவரே போற்றி ஓம் !

16. ஓம் ஆனந்தமயமானவரே  போற்றி ஓம் !

17. ஓம் சரண் அடைந்தோரை காப்பவரே போற்றி ஓம் !

18. ஓம் யாமிருக்க பயம் ஏன் என்பவரே போற்றி ஓம் !

19. ஓம் விஷ்ணு நாம பாராயண பிரியரே போற்றி ஓம் !

20. ஓம் சித்திரத்தில் உயிருடன் பேசும் தெய்வமே போற்றி ஓம் !

21. ஓம் மாயையாய் வீற்றிருப்பவரே போற்றி ஓம் !

22. ஓம் கண்திருஷ்டி பில்லி சூன்யம் தீர்ப்பவரே போற்றி ஓம் !

23. ஓம் பிரம்மஞானம் அளிப்பவரே போற்றி ஓம் !

24. ஓம் குருவார தேவா போற்றி ஓம் !

25.  ஓம் சம்சார பயங்களை போக்குபவரே போற்றி ஓம் !

26. ஓம் துனியின்  உதியே மருந்தென்பாய் போற்றி ஓம் !

27. ஓம் பிரார்த்தனைக்கு இளகுவாய் போற்றி ஓம் !

28. ஓம் எளிமை வடிவானாய்  போற்றி ஓம் !

29. ஓம்  சகல லோக சஞ்சரியே  போற்றி ஓம் !

30. ஓம் முக்காலமும்  உணர்ந்தவரே போற்றி ஓம் !

31. ஓம் மும்மூர்த்தியின்  திரு உருவே போற்றி ஓம் !

32. ஓம் சகல் ஜீவன்களிலும் இருப்பாய் போற்றி ஓம் !

33. ஓம் மூன்றாம் பிறையில்  தருவாய் போற்றி ஓம் !

34. ஓம் முந்தைய வினைகளை அறுப்பவரே போற்றி ஓம் !

35. ஓம் ஓம் சாய் ராம் மந்திரத்தின் சக்தியே போற்றி ஓம் !

36. ஓம்  மத  வேறுபாடுகளை களைந்தாய் போற்றி ஓம் !

37. ஓம்  உண்மை அன்புக்கு மகிழ்பவரே போற்றி ஓம்!

38. ஓம் அன்ன பாபாவே போற்றி ஓம்!

39. ஓம் இல்லறமும் நல்லறமே என்பாய் போற்றி ஓம் !

40. ஓம் இளமையிலே துறவியானாய் போற்றி ஓம்!

41. ஓம் உலகெல்லாம் உன் நாமமே போற்றி ஓம்!

42. ஓம் தக்ஷிணை பிரியரே போற்றி ஓம்!

43. ஓம் திக்கெட்டும் நீயே போற்றி ஓம்!

44. ஓம் திக்கற்றோருக்கும் நீயே போற்றி ஓம்!

45. ஓம்   சத்சரித சப்தஹத்தில் அருள்வாய் போற்றி ஓம்!

46. ஓம் தன தான்யம் அளிப்பாய் போற்றி ஓம்!

47. ஓம் சிந்தையிலே விந்தை செய்வாய் போற்றி ஓம் !

48. ஓம் கனவிலும் காட்சி அளித்தாய் போற்றி ஓம்!

49. ஓம் நினைவிலும் காட்சி அளிப்பாய் போற்றி ஓம்!

50. ஓம் நீர் ஊற்றி விளக்கேற்றினாய் போற்றி ஓம் !

51. ஓம் த்வரகமாயி தெய்வமே போற்றி ஓம்!

52. ஓம் சாவடியில் சயனிக்கும் சத்குருவே போற்றி ஓம்!

53. ஓம் மகான்களின் தாதையே போற்றி ஓம்!

54. ஓம் ஆனந்த நிலையை அருள்வாய் போற்றி ஓம்!
     
55. ஓம்  நம்பிக்கை பொறுமை காணிக்கையாய் கேட்பாய் போற்றி ஓம்!

56. ஓம் வெங்குசாவின் சீடரே போற்றி ஓம்!

57.  ஓம் பலருக்கும் படியளக்கும் பகவானே போற்றி ஓம்!

58. ஓம் வாக்குபலிதம் தந்திடும் சரஸ்வதியே போற்றி ஓம்!

59. ஓம் வாழ்வாங்கு வாழ வாழ்த்திடுவாய் போற்றி ஓம்!

60. ஓம் உனை மறவா வரம் தருவாய் போற்றி ஓம்!

61. ஓம் கலங்குவோர் மனம் இடர் களைபவரே போற்றி ஓம்!

62. ஓம் குழந்தை வரம் அருளும் குருவே போற்றி ஓம்!

63. ஓம் அன்னையாய் தந்தையாய் ஆதரிக்கும் அருளே போற்றி ஓம்!

64. ஓம் உங்கள் காலடியே எங்கள் ஷிர்டியாம் போற்றி ஓம்!

65. ஓம் ஏறுபடைகொண்டு சிறப்புடன் வாழ வைப்பாய் போற்றி ஓம்!

66. ஓம் காமகுரோத  மதமாச்சர்யம் தீர்ப்பாய் போற்றி ஓம்!

67. ஓம் காசி பிரயாகையை கால்விரலில் காட்டியவரே பொற்றிஒம்!

68. ஓம் தீபங்களை ஏற்றி பாவங்களை போக்கினாய் போற்றி ஓம்!

69. ஓம் தினம் தினம் தியானிப்பவர்க்கு சாய்லக்ஷ்மி  ரூபமானாய் போற்றி ஓம்!

70. ஓம் ஷிரடியே பண்டரிபுரம் என்றாய் போற்றி ஓம்!

71. ஓம் அன்பால் உலகம் முழுவதும் ஒற்றுமை ஆக்கினாய் போற்றி ஓம்!

72. ஓம் ஐந்து ப்ராணங்களை  ஜோதியாய் ஏற்றி வைத்தாய் போற்றி ஓம்!

73. ஓம் ஆரத்தி எடுப்பவரின் ஆறாத்துயர் தீர்ப்பாய் போற்றி ஓம்!

74. ஓம் அருளாசியை பிரசாதமாய் அளிப்பாய் போற்றி ஓம்!

75. ஓம் சுமைகளை ஏற்று பகைமையை போக்குவாய் போற்றி ஓம்!

76. ஓம் கண்ணொளி தந்து காதொலி கேட்கசெய்வாய் போற்றி ஓம்!

77. ஓம் சரணம் அடைவோருக்கு கமலபாதம் காட்டுவாய் போற்றி ஓம்!

78. ஓம் காலை ஆரத்தியில் கருணாமூர்த்தி காட்சி ஆவாய் போற்றி ஓம்!

79. ஓம் நிலையான ஞானம் நிலைக்கசெய்வாய் போற்றி ஓம்!

80. ஓம் சியாமா தாஸ்கனு மகால்ச தாத்ய சத்குருவே போற்றி ஓம்!

81. ஓம் அல்லா ஏசு அன்னை அனைத்தும் ஆனாய் போற்றி ஓம்!

82. ஓம் பக்திக்கேற்ற பலன் அளிப்பாய் போற்றி  ஓம்!

83. ஓம் மனதிற்கேற்ற வாழ்க்கைத்துணை நலம் அளிப்பாய் போற்றி ஓம் !

84. ஓம் எப்பிறவியிலும் உன்னை ஏற்க வைப்பாய் போற்றி ஓம் !

85. ஓம் யாகம் யோகம் ஏதுமின்றி மோட்சம் தரும் குருவே போற்றி ஓம்!

86. ஓம் எல்லா மகான்களும் என் ரூபம் என்பாய் போற்றி ஓம் !

87. ஓம் அன்னதானமே பிறவி நோய் தீர்க்கும் மருந்தென்பாய் போற்றி
                                                                                                                                                ஓம் !

88. ஓம் கூட்டு பிரார்த்தனையில் குலம் வாழ வைப்பாய் போற்றி ஓம் !

89. ஓம் உன்னை போற்றுவோரை உலகம் போற்ற வைப்பாய் போற்றி
                                                                                                                                             ஓம்!

90. ஓம் இசையில் இணைந்து வருவாய் போற்றி ஓம் !

91. ஓம் அன்ன வஸ்திரங்களை அளவின்றி கொடுப்பாய் போற்றி ஓம்!

92. ஓம் கோதாவரி நதி தீரா கோவில் கொண்டாய் போற்றி ஒம்!

93. ஓம் பூட்டி மாளிகை அலங்கரிக்க முரளிதரனானாய் போற்றி ஒம்!

94. ஓம் வியாழ பூஜையில் வல்வினை நீக்கும் வியாழ மூர்த்தியே
                                                                                                                       போற்றி  ஒம்!
95. ஓம் பரந்தாமா பரமேஸ்வரா பரமாச்சார்யா போற்றி ஒம்!

96. ஓம் கண்கண்ட தெய்வமே கணபதியே போற்றி ஒம்!

97. ஓம் பௌர்ணமி பூஜையில் பாவங்களை அழித்து நற்பலன்
                                                                                         அருள்வாய் போற்றி ஒம்!

98. ஓம் பாரிஜாத மலரே கற்பகத்தருவே காமதேனுவே போற்றி ஒம்!

99. ஓம் நவகோள்களால் நன்மையும் நாவன்மையும் பெறவைப்பாய்
                                                                                                         போற்றி ஒம்!

100. ஓம் தன்வினை நோய் தீர்க்கும் தன்வந்த்ரியே போற்றி ஒம்!

101. ஓம் மீனாக்ஷி பக்தனை ஆட்சி செய்தாய் போற்றி ஒம்!

102. ஓம் நம்பினோரை கைவிடாத நாயகனே போற்றி ஒம்!

103. ஓம் ராஜராம நாமமே தாரக மந்திரமென்பாய்   போற்றி ஒம்!

104. ஓம் அன்புக்கு அருள்நல்கும் அறிவே போற்றி ஒம்!

105. ஓம் ராதாகிருஷ்ணா சீத்தாராமா லஷ்மிநாராயணா போற்றி ஒம்!

106. ஓம் ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீரெங்கா போற்றி ஒம்!

107. ஓம் சிவரூபா ஹரிஹரா சுப்ரமண்யா போற்றி ஒம்!

108. ஓம் சகலமும் சத்குரு சாய் ரூபமே போற்றி ஒம்!🙏🏻

ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்



அதிகாலை நேரங்களில் நாம் காணும் கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று சொல்லப்படுகிறது.  அம்மாதிரி இருக்கலாம்.  ஆனால் பாபாவின் கனவுகட்குக் காலநியதியில்லை.  நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால்:
ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை ஷீர்டிக்கு அழைத்து வருமாறு கூறினார்.  அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார்.  அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார். 

அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்தபோது, பாபா அவர் கனவில் தோன்றி உடனே ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும்படியாக அனுப்பியிருந்தார்.  அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்தபோது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது.  தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்.  பின் இருவரும் ஷீர்டி திரும்பினர்.  குஷால்சந்த் பாபாவைக் கண்டார்.  அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.  பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

பாபாவின் குழந்தை


யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாகப் பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையும் பாபாவே ஏற்பார்.
பாபாவே கூறியுள்ளபடி,  " ஒருவன் காண்பது என்னை,  என்னை மட்டுமே,  எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் அவன் கொள்ளத் தேவையில்லை ".
பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. 
தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி  அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும், பலருக்கு பாபாவிடம் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. 
உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வாய். பாபாவிடம் இந்தக் கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

Tuesday, May 30, 2017

தியானம் செய்வீராக!

என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல்  இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும்  அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.
இப்பிரபஞ்சமென்னும்  மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்? விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய  நிஜசொரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய   பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மகிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ  கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தங்களிலிருந்து  விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.

பாபா கூறினார், " நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.
ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது எங்ஙனம் தியானம் செய்ய இயலும்.?? இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக."

பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்


 
பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவு கண்டார்.  அதில் பாபா தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  காட்சியில் அவர் ஒரு மஹந்த் (மஹான்) ஆகத் தோன்றினார்.  ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியார்.  பாபாவைச் சென்றுப் பார்க்க எண்ணினார்.  ஆனால் அவரது விலாசத்தை அறியார்.  என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை.  ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் அவனே செய்கிறான்.  இந்த விஷயத்தி்லும் அதுவே நடந்தது.

அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துகொண்டிருக்குபோது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் ராம்லால் கண்டார்.  அவர் கனவில் கண்ட மஹானின் உருவாம்சங்கள் இப்படத்துடன் மிகப்பொருத்தமாக ஒன்றின.  விசாரித்ததில் அவர் ஷீர்டியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார்.  ஷீர்டிக்கு உடனே சென்றார்.  தனது இறுதிக்காலம்வரை அங்கேயே தங்கினார். 

தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா ஷீர்டிக்குத் தமது அடியவர்களைக் கொணர்ந்தார்.  அவர்களின் ஆத்மார்த்த, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

ஸ்ரீ சாயியைப் பணிக 

Monday, May 29, 2017

சரணாகதி!

 மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால், பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார்.
 " நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் " என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது. 
நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். சில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தப்படுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மன உறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.

சாயியே துணை!

*பகவான் நமக்குத்தரும் சோதனைகள் அனைத்தும் நம்முள்  தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மட்டுமே. அவ்வாறு சோதனைகளை அளித்துக்கொண்டே நம்மை அவர் காப்பாற்றுவார்.

*நாம் அறிந்தும் அறியாமலும் பேச்சின் மூலமும் கேட்பதின் மூலமும் செய்துள்ள பாவங்கள் , ஸாயிநாதரை ஸ்மரிப்பதின் மூலம் முற்றிலும் அகலும்.

*நமக்கு என்ன வேண்டுமென்பது நம்மைவிட , பாபாவிற்கு நன்றாகத் தெரியும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர் அறிந்ததே.

*யாருமில்லாத இடத்தில் கூட ஸாயி நம்மை கவனிப்பார் என்பதை அறிந்துகொண்டால் நாம் யாருக்கும் தீங்கு செய்யநினைக்கமாட்டோம்.

ஓம்ஸ்ரீசாய்ராம்

Sunday, May 28, 2017

அன்புக் குழந்தையே!


அன்புக் குழந்தையே!
 நீ என்னை அறியும் முன்பாகவே உன்னை அறிந்திருந்தேன்.உன்னை பற்றிய விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும் . நான் பூர்வத்திற்கும் முந்தியவன்.
மனதைத் தேற்றிக்கொள், கர்மத்தின் தீவிரம் உன்னை பாடாய்ப்படுத்துகிறது. இனி அது நடக்காது ,  நடக்கவும் விடமாட்டேன். உனது துன்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளை கட்டி, பூர்வ காலம் முதல் நிர்மூலமான அனைத்தையும் மீண்டும் எடுத்துத் தந்து தலைமுறை தலைமுறையாக பாழாகிப் போனவைகளை மீண்டும் புதுப்பிப்பேன். இனி உனக்கு நிரந்தரமான வெளிச்சமாக இருப்பேன். நீ சந்தோஷமாக இரு. துக்கத்தை விடு. எத்தனை வந்தாலும் ஒரு நாள் முடியபோகிறது என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்போது நடக்கும் நிகழ்வுகள் நின்றுபோகுமா ? நாளையும் தொடருமா ? என்று ஏன் குழம்புகிறாய். நடந்ததும் நடப்பதுவும் நடக்கப்போவதும் ஆகிய எதுவும் உன் கைகளில் இல்லை. உன்னால் நடந்ததுமில்லை .எதற்குமே பொறுப்பாளியாக இல்லாமல் வெறும் சாட்சியாக உள்ள நீ ஏன் குழம்பிக்கொண்டிருக்கிறாய்? எங்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வுகளை தேடிக்கொண்டு ஓடுவதேன்? உனக்குள்ளேயே என்னை வைத்துக்கொண்டு என்னைத் தேடி ஊர் ஊராக ஓடுவதும் என் பெயரை மறந்து மற்றவற்றை உச்சரிப்பதும் ஏன்? என்னை நினைப்போருக்கு தலைமுறை தலைமுறையாக நான் துணை நிற்பேன். நீ என் பிள்ளை என் தாசன் நான் திரிந்துகொண்டவன்.என்னால் தேர்வு செய்யப்பட்டவன். உன்னை நான் எப்படி கைவிடமுடியும்? இதை யோசித்து பார்........................சாயியின் குரல்

பாபாவின் உறுதிமொழிகள்!


• என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்

• எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால், உனக்கு குபேரனுடைய பொக்கிஷத்தைப்போன்றதை தருவேன்

• என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால், உனக்கு பூரண அருள் கிடைக்கும்

• நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்

• என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால், உன்னை விலை மதிப்பற்றவனாக்கிவிடுவேன்

• நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்

• என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை அடிமைத்தனத்தில்
இருந்து மீட்பேன்

• எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால், உன்னை
விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்

• என் வழியில் நீ நடந்தால், நீ பெரும் புகழ் பெறுவாய் .

• என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால், இந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .

• நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி
விடுவார்கள்

Saturday, May 27, 2017

ஆபத்துகள் பறந்தோடிவிடும் !

அன்பு குழந்தையே !
என் பெயரை இடைவிடாமல் ஜபித்துக் கொண்டு எல்லா விதமான சங்கடங்களையும் தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தால், எல்லாவிதமான ஆபத்துகளும் பறந்தோடிவிடும். என் நாமத்தின் சக்தி அவ்வளவு மகிமை வாய்ந்தது.
எப்போதெல்லாம் உனக்கு சங்கடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் உனக்கு  என் நினைவு வர வேண்டும். ஏனெனில், அப்போது தானே உனது சங்கடங்கள் விலகும். 
உனக்குத் தேவையான புத்தி அனைத்தையும் நான் கொடுத்து உன்னை விடுதலை செய்து காத்து ரட்சிப்பேன். இதை எப்போதும் உனது மனதில் வைத்துக்கொள். 
இன்றைக்கு என்ன உணர்வில் இருக்கிறாயோ, அதே உணர்வில் என்றும் இருக்கப் பழகு. எந்தவித முயற்சியும் இல்லாமல் உன்னை நான் கரை சேர்த்துவிடுகிறேன். 
என்னிடம் திடமான நம்பிக்கை வைத்தாலே போதும், எல்லாம் தானே கிடைக்கும் என்பதில் தளர்வடையா நம்பிக்கைக் கொள்.எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் உனக்கு நன்மை தருவதற்கே ஏற்பட்டது என நம்பு.!

என் அன்பு குழந்தையே!


என் அன்பு குழந்தையே!
ஏன் இப்படி இருக்கிறாய், எதற்கு எடுத்தாலும் புலம்பலும் அழுகையும், ஏன் உன் சாய்அப்பா மீது உனக்கு நம்பிக்கை இல்லையா , உன் எல்லா பிரச்சனையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் ,  பிறகு உன்னை எப்படி நான் கைவிடுவேன். ஏன் இந்த நடுக்கம்.
ஒரு பிரச்சனை என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறாய். அதே நேரத்தில் இது நன்றாக நடக்குமா, நம் சாய் அப்பா நமக்கு இதை நிறைவேற்றி தருவார்களா என்றும் யோசித்து சந்தேகப்படுகிறாய். இது  ஏன்?
 இவ்வளவு நாள்  உன் எல்லா பிரச்சனைகளுக்கும் உனக்கு தீர்வை நானே கொடுத்தேன்.  இப்போழுது உள்ள பிரச்சனைகட்கும் தீர்வை கொடுக்க மாட்டேனா?  ஏன் இப்படி நீயே உன்னை காயப்படுத்தி கஷ்டபடுத்துகிறாய், முதலில் உன் சாய் அப்பா உனக்கான அனைத்தையும் சரியாக்குவர் என்று உனக்குள் சொல்லி கொள் நிச்சயம் என்னை உயிராய் நினைக்கும் என் பிள்ளையான உன்னை கைவிட மாட்டேன் ,உனக்குள் இப்போது எல்லாம் இழந்ததைப் போன்று ஒரு தோற்றம், போராட சக்தி இல்லாதது போல் வலு இழந்து இருப்பது போன்று உணர்கிறாய், இப்போது உள்ள சூழ்நிலைகள் உனக்குள் இருந்த நம்பிக்கை  என்னும் கண்னை மறைக்கின்றது, நீ தளராதே இதை விட மோசமான சூழ்நிலை வந்த போது கூட நீ அசரவில்லை ,ஆனால் இப்போது உன்னைச் சுற்றி நீ அன்பானவர்கள் என்று நினைக்கும் நபர்கள் உனக்கு யதார்த்தமாக கூறினாலும் அதை ஏன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறாய், உன் மீது உள்ள உரிமையில் தானே கூறுகிறார்கள் ,அது உன்னை கஷ்டப்படுத்தினாலும் அதை ஏற்றுக் கொள் , அதில் ஏதும் தவறில்லை, விட்டுகொடுத்து போவதில் ஒரு மனநிறைவு கிடைக்கும் அதை நீ கண்டிப்பாக உணர்வாய் , ஏன் சாய்அப்பா நான் இப்படி இருக்கிறேன் என்று என்னிடம் வேண்டுகிறாய், நிச்சயம் உன் சூழ்நிலைகளும் உனக்கான நேரமும் தான் உன்னை இப்படி சிந்திக்க வைக்கிறது , இதில் உன் தவறு இல்லை, நீ வீணாக எல்லாவற்றையும் நினைத்து உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, உனக்கு தேவையான அனைத்தும் விரைவில் உன்னை தேடி வரும் , அப்பா நீங்கள் இப்படித்தான் சொல்கின்றீர்கள் , ஆனால் எதுவும் மாறவில்லையே என்று தானே நினைக்கிறாய், உனக்கான நல்ல நேரம் வரும் என்று நான் நம்பிக்கையாய் கூறுகிறேன் , அது போலவே நீயும் நினை உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நிச்சயம் எல்லாம் சுகமாகிவிடும்,
உன்னை எல்லாரும் தனியாக விட்டுவிட்டார்கள் என்று நினைத்து புழம்புகிறாய், யாரும் இவ்வுலகில் தனியாக இல்லை, எல்லாருக்கும் இந்த உலகம் என்பது பொதுவானது, யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதே அது உன்னை ஏமாற்றத்தில் தள்ளி இந்த நிலைமையில் தள்ளி இருக்கிறது, உனக்காக யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உன் உயிராய் நீ மரியாதை செலுத்தும் உன் சாய் அப்பா துணை எப்போதும் உனக்கு உண்டு , என் பிள்ளையான நீ என்னை நினைத்த மறு நிமிடமே உன் அருகில் நான் நிற்பேன், உன் தாயாக தந்தையாக நான் எப்போதும் இருப்பேன்.
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Friday, May 26, 2017

சாயி பக்தையின் கேள்வியும் பாபாவின் பதிலும்



என் கணவர் ஓர் ஆண்டுக்கு முன்னால் புற்று நோயினால் இறந்து போனார். அவர் குணமாக வேண்டுமென்று பாபாவிடம் இரவும், பகலும் வேண்டிக் கொண்டோம். ஆனால், பாபா ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை?  பாபா மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன்.

பதில் : பாபா தன்  பூதஉடலை விட்டுச் செல்லும்முன், அவரது அடியவர்கள் இவ்வுலகில் மேலும் வாழும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தானும் ஒருநாள் இந்த உடலை விட்டுப் போகத்தான் வேண்டுமென்ற உண்மையை பாபா எடுத்துக் கூறினார். உடலுடன் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் உடலை விட்டுப் போகத்தான் வேண்டும். இன்ன முறைப்படி இறப்பு நிகழும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது 'பிராரப்தம்' (முன் வினை) என்று அழைக்கப்படும். முந்தைய பிறவி கர்ம வினைகளைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னின்ன காரியங்களை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது. இது நிறைவேறியவுடன் அம்மனிதன் உடலை விட்டுப் போக வேண்டியவனாகிறான். ஆத்மாவிற்கு எக்காரியத்திற்க்கும், எந்தவிதத்திலும் உடல் பயன்படாத போது, ஆத்மா அவ்வுடலை விட்டு விலகி அக்காரியங்களை முடிப்பதற்குத் தகுதியான வேறு உடலினுள் புகுகிறது. இந்த இயற்கை நியதி, நல்லவர், கெட்டவர், ஆஸ்திகர், நாஸ்திகர் என எல்லோரிடத்திலும் பாரபட்சமின்றி செயல்படுகிறது. உங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆனால் பிரிந்துபோன ஆத்மாவுக்கு அமைதிகிட்ட, தொடர்ந்து பாபாவை வேண்டிக்கொள்ளுங்கள். இன்பம், துன்பம் இரண்டிலும் பாபாவை பாருங்கள். எந்த வித எதிர்ப்பார்ப்பும், வேண்டுதலும் இல்லாது பாபாவை நேசியுங்கள். பாபா உங்களுக்கு எல்லா வலிகளையும் தாங்கும் சக்தியை கொடுப்பார்.

உதியே மருந்து!


ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், ”பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று!” என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

Thursday, May 25, 2017

சாயியின் வாழ்க்கை



சாயியின் வாழ்க்கை புனிதமானது.  அவரது அன்றாட நடைமுறையொழுக்கம் புனிதமானது.  அவரின் வழிகளும் செயல்களும் விவரிக்க இயலாதவை.  சில நேரங்களில் அவர் பிரம்மானந்தப் பெருநிலையில் (தெய்வீக ஆனந்த நிலையில்) இருந்தார்.  மற்றும் சில சமயங்களில் ஆத்மஞானத்துடன் அடக்கமாய் இருந்தார்.  ஏராளமான பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார்.  முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் அவர் சோம்பலாகவோ, தூக்க மயக்கமாகவோ இருக்கவில்லை.

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்.  அமைதியான நிசப்தமான அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர்.  எவரே அவரின் சொல்லில் அடங்காப் பெருங்குணத்தை விவரிக்க இயலும்?  அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார்.  எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்.  அவர்தம் கூட்டுறவால் நாம் பெரும் ஞானமானது நிரந்தரமாக நம்மிடம் திகழட்டும்.  அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம்.  அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம்.  அவர் நாமத்தை எப்போதும் விரும்புவோம்.

                                                                                                    சாயிசத்சரிதம்-அத்.37

Wednesday, May 24, 2017

கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது!

 என்னதான் சாயி பக்தராக இருந்தாலும் எவருக்கும் இப்படிப்பட்ட  சோர்வு ஏற்படுவது இயல்புதான்.  இந்தச் சோதனை நமக்கு ஏற்படுவது போலவே, சமாதி மந்திரைக் கட்டிக் கொடுத்த பூட்டிக்கும் ஏற்பட்டது.

  அவர்  ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு நானா சாகேப் டெங்கலே என்ற ஜோதிட நண்பர் இருந்தார்.  அவர் சொன்ன பல விஷயங்கள் பூட்டியின் வாழ்க்கையில் பலித்தது.  இதனால், டெங்கலேயை பூட்டி மிகவும் மதித்தார்.

   ஒரு முறை பூட்டியை சந்தித்த டெங்கலே, ‘இன்று உங்களுக்கு கெட்ட காலம்!  எதிர்பாராத பேராபத்து வரப்போகிறது!  எச்சரிக்கையாக இருங்கள்’ என்றார்.  இதைக்கேட்டு பூட்டிக்கு பயம் வந்துவிட்டது.  என்ன செய்வதென்றே தெரியாமல் மசூதிக்கு வந்தார்.

     அங்கிருந்த பாபா, ‘அந்த டெங்கலே என்ன சொன்னான்? அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.

     அன்று முழுக்க பாபாவின் பாதுகாப்பில் இருந்த பூட்டி கழிவறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அதைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்து கம்புகளை தேடினார்.  ஒரு பெரிய தடியினை எடுத்துக்கொண்டு வந்து பார்க்கும் போது அந்தப் பாம்பு மாயமாக மறைந்து போயிருந்தது.

     பூட்டியிடம் நானா சொன்ன பேராபத்து இதுதான் என்றும், இதைப் பற்றித்தான் பாபாவும், ‘அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார் என்பதையும் பூட்டி நன்றாக உணர்ந்து கொண்டார்.

     எத்தகைய கிரக பாதிப்புகள் இருந்தாலும், மரணத்தைத் தருவதாக இருந்தாலும் அவையெல்லாம் நமது சமர்த்த சாயியின் முன்னால் ஒன்றும் இல்லாததாகிவிடும் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்.


"சாய்யியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்".

ஓம் சாய் ராம்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...