Thursday, June 27, 2013

நில்! கவனி! சொல்!-2




நேற்றைய தொடர்ச்சி
கவனி
நீங்கள் எவ்வளவோ பேசுகிறீர்கள்.. நான் அதற்கு    குரல் கொடுத்து பதில் கூறுகிறேனா?  மவுனமாக கவனித்து, தேவைக்கேற்பவே பதில் கூறுகிறேன். பல நேரங்களில் நான் பேசுவதில்லை, கவனிக்கிறேன். காரணம் என்ன?  உன் வார்த்தையால் நீ சிக்கிக்கொள்ள மாட்டாயா? அதை வைத்து உன்னை பிடித்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிற கிரகங்கள் என்னிடம் வேண்டிக் கொள்வதுதான்.
பதிலுக்குப் பேசாமல் மவுனமாக அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டிருந்தால், எதிராளி அதிகமாகப் பேசமாட்டார். அதனால் உனக்கு நன்மையே நடக்கும். ஒருவர் பேசும்போது அவர் வாயை மட்டும் பார்க்காதே.. கண்களைப் பார்.. அவரது உடம்பைப் பார்.. ஏனெனில் உடம்பும் பேசும்.
உடம்பு பேசுமா?
உடம்பும் பேசும்.
ஒருவர் பேசும்போது அல்லது அவரது உடம்பு பேசும்போது நாம் கவனித்தால் அதிலிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவர் நிற்கிற தோரணை, நடக்கிற தோரணை, பார்க்கிற தோரணை போன்ற பல நிலைகளை வைத்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை கணிக்கலாம்.
ஒருவன் நிற்கிற தோரணை அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காட்டும், நிமிர்ந்து நிற்பவன் அஞ்சாநெஞ்சன், குனிந்து நிற்பவன் கோழை, பின் கை கட்டுபவன் எச்சரிக்கையானவன், கும்பிடு போடுகிறவன் காரியவாதி, நேரே நின்று பேசுபவன் நிஜமாக உரையாடுகிறவன், திரும்பிக் கொண்டு பேசுகிறவன் புறக்கணிக்கிறவன் என அறியலாம்.
கடுத்தது காட்டும் முகம், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனநிலையை முகமும், கண்களும் வெளிப்படுத்தும். இப்படித்தான் கால்கள், கைகள் வெளிப்படுத்தும். பயத்தால் உடல் நடுங்கும்.. கோபத்தால் உடல் குலுங்கும்.. இரத்தம் சூடேறும்.. இவை மன நிலையை காட்டும் விஷயங்கள். பேசும்போது தலை தாழ்ந்தால் அவர் கூச்சப்படுகிறார், வேறு பக்கம் பார்த்தால் அவர் உங்களது பேச்சை விரும்பவில்லை.. பேசும்போது உறங்குகிறார், அல்லது கொட்டாவி விடுகிறார் என்றால் சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள் என்று அர்த்தம். முக பாவணைகளை வைத்தும் அவரது மனநிலையைப் படிக்கலாம்.
உங்களைப் பார்த்ததும் கண்கள் துடித்தாலோ, அதிலிருந்து கண்ணீர் திரண்டு வந்தாலோ அவர் மிகவும் அன்பாக இருக்கிறார்.. அனல் மூச்சை வெளியிட்டால், மூக்கு துடித்தால் கோபத்தோடு இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
நம் எதிரில் இருப்பவர் பேசுவதைப் பார்த்தே நமது கண்கள் நம்மை 95 சதவிகிதம் பதில் பேசத்தூண்டுகிறது. மற்றபடி கேட்டல் உணர்தல், நுகர்தல் மூலம் பேசுவது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே நம்மிடம் உள்ளது. உண்மையில், நாம் நிறைய விஷயங்களைத் தவறவிடுகிறோம்.
ஒருவர் நிற்றல், நடத்தல், கவனித்தல், சைகை செய்தல், முகபாவனை போன்றவற்றின் மூலம்தான் மிக அதிகமாக பிறருடன் தொடர்பு கொள்கிறார். அதன் அளவு 55 சதம். வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தால் பிறருடன் அவர் பகிர்ந்து கொள்வதும், வெறும் வார்த்தைகளை அவர் பேசுவதும் இதை விடக் குறைவுதான்.
மனிதர் ஆடைகளால் பேசுகிறார்கள். பகட்டான ஆடைகள் ஒருவரது டாம்பீகத்தை, செல்வத்தை, நாகரீகத்தை, இன்ன பிறவற்றைப் பேசுகின்றன. இதனால்தான் ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்.
மென்மையாகத் தொடுவதும், வன்மையாகத் தொடுவதும் மனநிலையை வெளிப்படுத்துவது. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை கூர்ந்து நோக்கக் கற்றுக்கொள். இந்தக் கவனிப்புகள் எல்லாம் சாதாரண கவனிப்பு மட்டுமே. ஒருவர் உன்னோடு பேச வருகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள். அதற்கேற்பப் பேசப் பழகு.
என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எதிர்பால் நண்பராக இருந்தால் எப்போதும் ஒரு அடி தள்ளியே இரு. வயதானவராக இருந்தாலும், இளைய வயதுள்ளவராக இருந்தாலும்கூட அப்படியே செய்.. அது உன்னை எல்லா நிலைகளில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ளும். இல்லாவிட்டால் உன்னை தர்ம சங்கடத்தில் தள்ளி, மனநிம்மதியைக் கொடுத்து வருத்தப்பட வைத்துவிடும்.
உனக்கு எனது அருள் இருக்கிறது என்பதற்காக அதை வெளியே காட்டிக்கொள்ளவோ, அல்லது பிறரை அருளை நாடவோ கூட தனியாகச் செல்வது நல்லதல்ல. கூட்டத்தோடு சென்றாலும் அவர்கள் கவனம் உன் மேல் படாதபடி பார்த்துக்கொள்..சில தாந்தீரிகவாதிகள் மீது மரியாதைக் காட்டிப்பேசினால்கூட, நள்ளிரவு நேரத்தில் போன் செய்து, உன்னிடம் தவறான முறையில் பேசுவார்கள். அவர்களிடம் கேட்டால், நானல்ல, என்னை இயக்குகிற யட்சிணிகள் அவ்வாறு பேசச் சொல்கின்றன என்பார்கள். இத்தகைய துணிகரமான பாவிகளிடமிருந்து உன்னை எப்போதும் காத்துக்கொள்ள, நீ அவர்கள் நோக்கத்தை கவனிக்க வேண்டியது அவசியம். இப்படித்தான் மகளே! ஒவ்வொன்றையும் எச்சரிக்கையாக கவனித்து நடந்துகொள்.

                                           இதன் தொடர்ச்சி நாளை

Wednesday, June 26, 2013

நில்! கவனி! சொல்!



ஸ்ரீ சாயியின் குரல்

என் அன்புக் குழந்தாய்!
சமீப காலமாக உனக்கு ஏற்பட்டு வருகிற சில கசப்பான அனுபவங்களை நினைத்து வருத்தப்பட்டு வருகிறாய்.. உனக்கு மேலிருப்பவர்கள் உன்னை நிந்திப்பதும், உன்னைக் கேவலப்படுத்துவதும், உன் வாயைப் பிடுங்கிக்கொண்டு அதைக் குற்றமாகப்பேசுவதும் தொடர்கதைகளாகிக் கொண்டு வருகின்றன. இதனால் நீ கலங்குகிறாய் அல்லவா?
வீட்டில் உன்னை கண்டபடி கடிந்துகொண்டு வாசலில் தள்ளி வைப்பதையும், வழியின்றி நீ திகைத்து நிற்பதையும் கண்டு  பரிதவிக்கிறேன்.
இதோ நான் கற்றுத் தரும் சில விஷயங்கள் உனக்கு ஆறுதலாகவும் தெளிவாகவும் இருக்கும். நீ நடக்க வேண்டிய வழிகளை போதிக்கும். என் வழியைப் பின்பற்று.. உன் கப்பல் எந்த சேதாரமும் இல்லாமல் கரை சேரும்.
முதலில் உன் வாய்க்குக் கடிவாளம் போடு்
உனது வார்த்தைகள் உன்னைப் பற்றி பிறருக்கு அடையாளம் காட்டக்கூடியவை. வார்த்தைகளால் இந்த உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது. போரும், சமாதானமும், சண்டையும், சந்தோஷமும், இன்பமும் துன்பமும் இந்த வார்த்தைகளால்தான் வருகின்றன.
எனவே, நீ வார்த்தைகளைச் சொல்வதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதல் ஆலோசனை. இதற்காக நான் மூன்று மந்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன். அவை நில், கவனி, சொல்! என்பவை.
நில் என்பதற்கு நிதானித்தல் என்று பொருள். கவனி என்பதற்கு பிறரை பேசவிட்டு கவனிப்பது மட்டுமின்றி, அவரது உடலின் பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்பது என்பது பொருள்.  சொல் என்பது அதற்குப் பிறகு நீ பேச வந்ததை உடனே சொல்லாமல் அவர்கள் விரும்பம் விதத்தில் பேசு என்பது பொருள். இவற்றை சரியாகக் கடைப்பிடித்தால் உனக்கு சிக்கல்கள் வராது.
நில்
உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உள்ளத்தில் ஒன்று உதட்டில் வேறொன்று வைத்துப்பேசுகிறார்கள். இந்த கபடம் தெரியாமல் எதையோ பேசி சிக்கிக் கொள்கிறாய். எதைக் காக்க முடியாவிட்டாலும் உனது நாக்கை மட்டுமாவது காத்துக்கொள். இல்லா விட்டால் சொல் குற்றத்தில் சிக்கிக்கொண்டு துன்பப்படுவாய் என்பார் வள்ளுவர்.
ஒரு மனிதனின் வாழ்வும் தாழ்வும், உயர்வும் மேன்மையும், வீழ்ச்சியும் மாட்சியும் அவனது நாவில் தான் குடியிருக்கின்றன. அந்த நாக்கிலிருந்து வரும் வார்த்தையை வைத்தே இவற்றை அவர்கள் எடை போடுகிறார்கள்.
ஒருவரிடம் நட்பு கொள்வதும் பகைமை கொள்வதும், உயர்வான மதிப்பைப் பெறுவதும், இகழ்ச்சியடைவதும்கூட இந்த நாக்கினால்தான் வருகிறது. எனவேதான் ஒருமுறை பேசுவதற்கு முன்பு பலமுறை யோசனை செய் என்றார்கள். எதைக் கொட்டினாலும் அள்ளிவிடலாம், வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியாது.
வில்லில் இருந்து சென்று அம்பும், வாயிலிருந்து சென்ற சொல்லும் இலக்கை தாக்காமல் விடாது. அதைத் திரும்பப் பெறவும் முடியாது. தீயினால் சுட்டாலும் புண்ணாகி ஆறிவிடும், நாக்கினால் சுட்டுவிட்டால் ஆறவே ஆறாது.
சொல்லாத சொல்லுக்கு நீ முதலாளி.. சொன்ன சொல் உனக்கு முதலாளி. இப்படி பல விஷயங்கள் சொல்லைப் பற்றி இருக்கின்றன. எனவே, அதைப்பற்றி பேசுவதற்கு முன்பும் நிதானம் தேவை.
நாம் பேசுவதற்கு மட்டும்தான் நிதானம் தேவை என்றில்லை. பிறர் பேசுவதையும் நிதானமாகக்கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறர் பேசும்போது, குறுக்கே பேசுவது, வார்த்தைக்கு வார்த்தை எதிர்வார்த்தை பேசுவது, எதிரில் பேசுபவர் முழுவதும் கேளாமல் உடனே பதில் கூறுவது,  எரிச்சல் அடைவது போன்றவற்றைச்செய்யாமல், எதிரில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்பதை முழுமையாகக் கேட்கவேண்டும்.
நான்கூட உன்னிடம் பலவழிகளில் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நீ அதை கவனிப்பதில்லை. மாறாக, நீ மட்டுமே என்னிடம் பேசுவதாக நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.
எனக்கு நைவேத்தியம் வைத்தது, என் கோயில் செலவுக்குப் பணம் அனுப்பியது, உதவி செய்தது என எல்லாவற்றையும் என்னை உன் உள்ளே வைத்துக்கொண்டே சொல்லிக் காட்டுகிறாய்.. இதனால் உனக்கு எந்தப் பலனும் இல்லை.. நீ பத்து லட்ச ரூபாயைக் கூட தந்திருக்கலாம், உன் சொத்துக்களைக்கூட எனக்கு எழுதி வைத்திருக்கலாம். அதை வெளியே சொல்லும் போது,  ஷேர் மார்க்கெட் சரிந்ததைப் போல புண்ணியம் அனைத்தும் சரிந்து விடுகிறது அல்லவா? இதை எண்ணிப் பார்க்காமலேயே எதையும் பேசுகிறாய்..
இனிமேல் நீ யாரிடம் பேசினாலும், பேசுவதற்கு முன்பு இதைப் பேசலாமா? வேண்டாமா என்பதை பலமுறை யோசனை செய்.. புறங்கூறுதல் அதாவது ஒருவரைப் பற்றி பின்னால் பேசுவது, பிறரைத் தூற்றி எதிரில் இருப்பவரை புகழ்ந்து பேசுவது, காரியத்தை சாதித்துக் கொள்ள நயந்து பேசுவது போன்றவற்றை விட்டுவிடு.
உண்மையை உள்ளபடி சொல், பொய்யைச் சொல்லும் அவசியம் வருவதைத் தவிர்த்துவிடு..பிறர் உன்னை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பிறரை அதிகமாக உன்னிடம் பேசவிடாதே- நீயும் பிறரிடம் சிக்கிக் கொள்வதைப் போல பேச்சை விட்டுவிடாதே!
மனைவியே கணவனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கிக் கொள்வதும், மனைவி அல்லாது பிற மாது சகவாசம் உள்ளவர்கள் தங்கள் சொத்துக்களை இழப்பதும், தெரிந்தவர்கள், நண்பர்கள் என ஜாமீன் நின்று அனைத்தையும் இழப்பதும், எதற்கும் முன் நின்று வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்வதும் உனக்கு வேண்டாத வேலைகள்.
என்னிடம்கூட வேண்டிக்கொள்ளும்போது நான் இதைச் செய்கிறேன், நீ எனக்கு இதைச் செய் என பொருத்தனை செய்யாதே! அப்படி செய்தால், நான் உன்னை சோதிப்பேன்..
அரிச்சந்திரன் சிக்கிக் கொண்டதைப் போலவும், தர்மன் காட்டுக்குப் போனதைப் போலவும் நீ சிக்கி அல்லல் படுவாய்.. இப்படிச் சொல்லாமல், இரக்கம் உள்ள தந்தையே எனக்கு இதைச் செய் என்று சொல், போதும்! நீ வேண்டியதை நான் செய்வேன். அதன் பிறகு உனக்கு மனம் இருந்தால் எனக்கு சேவை செய்.. இல்லாவிட்டால் விட்டுவிடு..
இன்றிலிருந்து வார்த்தைகளை வெளியே அதிகம் கொட்டாதே! சரியா?
                                                                                                  மீண்டும் நாளை சந்திப்போமா!

பஞ்சமா பாவம் போக்கும் அன்னதானம்




 
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலே செய்கிற பாவங்கள் எண்ணற்றவை. இந்த பாவங்களில் ஐந்து விதமான பாவங்கள் மிகக்கொடுமையானவை என்கின்றன நமது சாஸ்திரங்கள்.
இந்த உலகத்தில் பிறக்கிற அனைத்தும் வாழ்வதற்கு உரிமை உள்ளவை. ஆனால் அவற்றுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. பெரியது சிறியதைக் கொல்வதும், சிறியது தன்னிலும் சிறியதைக் கொல்வதும் காலம் காலமாக இருந்து வருகிற நிதர்சனம். வலியவர் எளியவரை வீழ்த்துவதும், வலியவரை தேவர் வீழ்த்துவதும் நம்மிடையே கண்கூடு.
வாழ்வதற்காகப் பிறப்பெடுத்த உயிரிகளை நாம் நமது அன்றாடச் செயல்பாடுகளால் கொன்றுவிடுகிறேhம். அதிலும் கண்ணுக்குத் தெரியாமல் கொல்வது என்பது அதிகமாக நடக்கிற செயல்கள். இத்தகைய செயல்கள் ஐந்து விதங்களால் விளைவதாக அந்தக்காலத்தில் கூறினார்கள்.
அவை உலக்கை, உரல், அம்மி, அடுப்பு, நீர்ப்பாத்திரம், துடைப்பம் இவைகளால் வேலை செய்யும்போது சிறிய உயிரினங்களுக்கு இம்சை உண்டாகிறது.இவற்றை பஞ்சசுனா தோக்ஷம் என்றார்கள். இத்தகைய தோஷமும் ஒருவர் வாழ்க்கையை பாதிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து.
கண்டநீ பேஷணீ கல்லி உதகும்பி சமார்ஜநீ
பஞ்சஸுநாக்ருஹஸ்தஸ்ய தாபிஸ் ஸ்வர்க்கம் ந விந்ததி
இப்போதெல்லாம் எல்லாம் மின்மயமாகிவிட்டது. உரலும் உலக்கையும் செய்த பாவங்களைவிட இப்போது கிரைண்டர், மிக்சி செய்கிறது. அந்தக் காலத்தில் இதையே பாவம் என்று கருதி பரிகாரங்கள் பலவற்றைச் செய்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் அதிகமாகச் செய்கிற நாம், எவ்வளவாகப் பரிகாரங்களைத் தேட வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பாவங்கள் தொலைய பல வழிகளை நமது முன்னோர்கள் வகுத்திருந்தார்கள். இவை நம் அன்றாட வாழ்வில் செய்ய முடிகிற, செய்ய வேண்டிய வேள்விகள் அல்லது யக்ஞம் ஆகும்.  இவற்றையும் ஐந்தாகப் பிரித்து பஞ்ச யக்ஞம் என்றார்கள். அவை பிரம்ம யக்ஞம், பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், பூதா யக்ஞம், மனுஷ்ய யக்ஞம்.
பிரம்ம யக்ஞம் என்பது தினமும் வேதத்தைப் பாராயணம் செய்வது. இறைவனுக்கு உணவினை சமர்ப்பித்துவிட்டு உண்பது. எதற்காக வேதத்தைப் பாராயணம் செய்யவேண்டும் என்றால், இந்த உலகம் நிலையில்லாதது, இந்த உலகத்தில் நான் வாழும்போது எனக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது. அவற்றின் மீது நான் கருணை காட்டவேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக.
 பித்ரு யக்ஞம் என்பது நமது குடும்ப முன்னோர், குலதெய்வம் ஆகியவற்றை வணங்கி, அவர்களுக்கு தர்ப்பணம், சமர்ப்பணம் செய்து வேண்டிக்கொள்வது. என்னால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்களை மன்னித்து என் குடும்பம் நன்றாக உதவி செய் என வேண்டிக் கொள்வதன் பொருட்டு நாம் இதைச் செய்கிறோம்.
தேவ யக்ஞம் என்பது தேவர்களுக்கானது. நாம் நன்றாக வாழவும், நம்மைச் சுற்றியுள்ளவை அனைத்தும் வாழவும் மழை தேவை, சரியான அளவு வெயில் தேவை, காற்று தேவை.. இப்படி ஒவ்வொரு தேவைக்கும் நாம் ஒரு கடவுளை ஆராதிக்கிறோம். அந்தக் கடவுள்கள் தினமும் உண்ண வேண்டும், அவ்வாறு அவர்கள் நம்மிடம் சாப்பிட்டால் மன மகிழ்ச்சியடைந்து நமக்கு நல்லதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இதன் பொருட்டே தேவ யக்ஞம் செய்கிறோம். ஓமம் வளர்த்து அதில் வரும் புகையையும், பிரசாதங்களையும் அவிர்ப்பாகமாகத் தருகிறோம்.
பூத யக்ஞம் என்றால் பூதங்களில் சேர்க்கையால் உருவாகியிருக்கிற நம்மை விட தாழ்ந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு தருதல்.
மனுஷ்ய யக்ஞம் என்றால், வீடு தேடி வரும் அந்நியரை உபசரித்து அவருக்கு உணவிடுதல். அந்நியர்  ரூபத்தில் இறைவனே வருவார் என்பது நம் மக்களின் அனுபவம்.
இவையெல்லாம் நாம் செய்த பாவங்களைக் கரைத்துப் புண்ணியத்தை நமக்குச் சேர்ப்பதற்காகவே என்று முன்னோர்கள் வகுத்திருந்தார்கள்.
இதற்காக அவர்கள் ஊர்த் திருவிழா, அமாவாசை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்கள். இதை யோசித்துப் பார்த்தால் நமக்கே புரியம்.
நாம் நமக்கு விருப்பமான ஒரு தெய்வ வடிவில் கடவுளை கும்பிடுகிறோம். இந்தக்கடவுள்தான் நம் இஷ்ட தெய்வம். பெரும்பாலும் நாம்
இஷ்ட தெய்வ வழிபாட்டின் மூலமாகவே யக்ஞங்களைச் செய்கிறோம்.
நமது அன்றாட வழிபாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தின் முன் நின்று ஸ்லோகம் சொல்லுவோம். எந்த சுலோகம் சொன்னாலும் ஓம் என்ற பதத்தைச் சேர்த்துச் சொல்வோம். இது ஓங்காரம், வேதத்தின் சாரம். இதுவே கடவுள். இதை நாம் சொல்லித் துதிக்கும் போது இறைவனை திருப்தி செய்கிறோம். எனவே இது பிரம்ம யக்ஞம்.
இஷ்ட தெய்வத்தின் முன் வெறும் வாயால் மட்டும் துதிப்போமா? நமக்கு விருப்பமான கனி வகைகளை அல்லது பிரசாதம் படைப்போம். இதை இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டுவோம். இவ்வாறு இறைவனுக்கு போடப்படும் படையலை நம் இஷ்ட தெய்வத்திற்குப் போடுவது தேவ யக்ஞம்.
இலை போட்டுப் படைக்கும்போது தனியிலை போடமாட்டார்கள். மூன்று அல்லது ஐந்து எனப்போடுவார்கள். ஐந்து இலை போடுவதே சரியானது. இவ்வாறு போடப்படும் படையலை சாப்பிடுவோம். நம் மூலம் பித்ருக்கள், குல தெய்வம் சாப்பிடுவதால் இது பித்ரு யக்ஞத்தை நிறைவேற்றுகிறது.
சாப்பிடும் முன்பாக, காகத்திற்கு உணவிடுவோம். நம்மை விடத் தாழ்ந்த உயிருக்கு தருவதால் இது பூத யக்ஞம்.
பண்டிகையின் போது நாம் மட்டுமே சாப்பிடாமல் அந்நிய மனுஷிளையும் அழைத்து உணவு தருவோம். அல்லது வீட்டிற்கு வருவோருக்கு அன்னம் இடுவோம். இதற்குப் பொருள் தெய்வம் மனுஷ ரூபமாக வருகிறது என்பதாகும். இது மனுஷ யக்ஞத்தைச் செய்வதாகும்.
இப்படிப்பட்ட விஷயங்களை நாம் தொடர்ந்து செய்தால் நம் கணக்கிலுள்ள பாவங்கள் அழிந்து புண்ணியம் சேரும்.
சாயி பக்தர்களுக்கு இந்த யக்ஞங்கள் எல்லாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் அப்படி என்றால், யார் ஒருவர் சாயி பக்தராகிறாரோ, அவர் இயல்பாகவே இந்த ஐந்து யக்ஞங்களையும் செய்துகொண்டுதான் இருப்பார்.
எப்போதும் சாயி ராம் சாயி ராம் என்று சொல்லி பிரம்ம யக்ஞத்தை நிறைவேற்றுவார். ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் அன்னதானம் செய்வதன் மூலம் ஒரேயடியாக தேவ,  பித்ரு, மனுஷ யக்ஞத்தையும், விலங்குகளுக்குக் கொடுத்து பூத யக்ஞத்தையும் நிறைவேற்றுவார்.
அன்னதானம் என்ற பெயரில் அவர் அனைத்து உயிரினங்களையும் போஷிப்பார். அன்னமே பிரம்மம், அன்னமே உலகின் ஆதாரம், அன்னமே வாழ்வின் துவக்கம், அன்னமே வாழ்வின் முடிவு என்பதை அறிந்து அனைத்து உயிர்களையும் காக்கும் வகையில் அவர் உணவிடுவார்.
இவ்வாறு அன்னதானமிடும்போது எஞ்சிய உணவுகள் வீசப்படுகின்றன அல்லவா? அவை தாழ்ந்த உயிரினங்களுக்கும் உணவாகப் பயன்படும்.
இப்படி எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்பதால்தான் பாபா அன்னதானத்தை வலியுறுத்தி வைத்துவிட்டுச் சென்றார்.
ராமலிங்க வள்ளலாரும், ஐயப்ப சுவாமியும் அன்னதானத்தை வலியுறுத்தினார்கள். நமது மதம் அன்னதானத்தை பிரதானமாக வலியுறுத்துகிறது.
சமீபத்தில் குரோம்பேட்டை ரமா அம்மையார் பேசும்போது, தொலைக் காட்சி பேட்டியொன்றில் ஓர் அடியார், அன்னதானம் செய்வது தப்பு, அது பிறரை சோம்பேறியாக்குவது என்று குறிப்பிட்டதாக கூறினார்.
இந்த உலகத்தின் ஆதாரமே ஆகாரத்தில்தான் இருக்கிறது. இதனால்தான் அன்னமே பிரம்மம் என்றார்கள். அப்படிப்பட்ட அன்னம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம். சிவன் கல்லுக்குள் உள்ள தேரைக்கும் படியளப்பான் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆகவே, அரைகுறை அடியார்கள் சொல்வதைக்  கேட்டு அன்னதானத்தை நிறுத்திவிடாதீர்கள். உங்களால் முடிந்தளவு தினம் ஒரு காக்கை, குருவி,, எறும்பு என எதற்கேனும் அன்னமிடுங்கள். பசித்தோர் முகம் பாருங்கள். பாபாவின் அனுக்கிரகம் தப்பாமல் கிடைக்கும்.

Tuesday, June 25, 2013

உதி செய்த அற்புதம்



உலகிற்கு எல்லாம் ஆன்மீகச் செல்வத்தை வாரி வழங்கிய நம் பாரத நாட்டில், வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் திருக்கோயில்கள் அதிகம். தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டில் அதிகம்.
தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்னும் புகழ்பெற்றது. அந்தத் தொண்டை நாட்டில் தமிழகத் தலைநகரான சென்னையின் நுழைவாயிலாக அமைந்துள்ள புண்ணிய பூமி பெருங்களத்தூர். தொண்டனூர், பக்தபுரி என்னும் வேறு பெயர்களும் இப்பூமிக்கு உண்டு. பக்தர்களுக்கு பக்தியை ஊட்டித் தொண்டு செய்யும் சான்றோர்கள் நிரம்பிய இந்த ஊரின் கண், சாயி பாபாவின் திருத்தொண்டராக, பக்தராக, பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிற சாயி வரதராஜன் அவர்களால் உருவாக்கப்பட்ட சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையத்தின் ஐந்தாவது ஆண்டு துவக்க விழா மற்றும் சீரடி சாயி பாபா திருவிக்ரஹ பிரதிஷ்டை நாள் விழா ஆகியவை 13-3-2013, மாசி மாதம் 29-ம் தேதி புதன் கிழமையன்று இனிதே நடைபெற்றது. அப்பொழுது ஷீரடி சாயி பாபாவின் உதியின் அற்புதங்கள் என்னும் தலைப்பில் புதுக்கோட்டை ஸ்ரீநிவாச சுந்தரராஜன் ஆற்றிய உரையினை ஸாயி அன்பர்களுக்கு மீண்டும் சமர்ப்பிக்கிறோம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கோதாவரி நதி தீரத்தில் சீரடி என்கிற புண்ணியத் தலத்தில் பாபா நெடுங்காலம் மானுட உருவெடுத்து வாழ்ந்து சமாதியடைந்தார். அஷ்டோத்திரத்தில் ஓம் சர்வாதாராய நம,  ஓம் சம ஸர்வ மத சம்மதாய நம என்றொரு நாமம் சொல்லப் பட்டுள்ளது. சர்வத்திற்கும் ஆதாரமாகவும், சர்வ வழிபாடுகளையும் சம்மதித்து ஏற்பவராகவும் இருப்பவர் சாயி பாபா என்பது இதற்குப் பொருள்.
அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஏற்று, மக்களைக்காப்பவரான சாயி பாபா, ஒரு பாழடைந்த மசூதியில் வாழ்ந்தார். அங்கு துனி என்கிற நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வந்த சாம்பலுக்கு உதி என்று பெயர்.
இதை தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து தருவார். நாள் தோறும் திரண்டு வருகிற பக்தர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உறவினராகவும், தோழனாகவும் ஆகி, ஆசி தந்து அருளினார்.
எப்பொழுதும் ஸப்கா மாலிக் ஏக் ஹை என்றார். ஒருவனே தேவன் என்பதையேச்சொன்னார். கிறித்தவர் அவரை இயேசுவாகவே பார்த்தார்கள். முஸ்லிம்கள் அவரை அல்லா அனுப்பிய அவுலியா என்று போற்றினார்கள். இந்துக்களோ அவரை ஓம்காரப் பொருளாக உணர்ந்தார்கள். இப்படி அனைத்து மதத்தைச்சார்ந்தவர்களும் அவரை தத்தம் வழிபாட்டுக்குரிய தெய்வமாகக் கொண்டாடினார்கள். அனைவர் மீதும் அன்பையும் பாசத்தையும் நாளெல்லாம் பொழிந்தார் பாபா.
தம்மைக் காணவரும் பக்தர்களிடமிருந்து தட்சணைக் கேட்டுப் பெறுவார். அவற்றில் பெரும் பகுதியினை தர்மம் செய்வார். மீதி பணத்திற்கு விறகுக்கட்டைகளை வாங்கி சேமிப்பார். அவர் உண்டாக்கிய அணையாத நெருப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த சாம்பலை எடுத்து, விடை பெறுவதற்காக வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார். தன் அபயக் கரத்தை பக்தர்கள் தலையில் வைத்து ஆசி கூறுவார். நம் எல்லோருக்கும் தலைவர் இறைவனே என்று இறைவன் புகழைப் போற்றுவார்.
பாபா, சிலநேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது உரத்தக் குரலில் வாருங்கள் வாருங்கள் என் மனதில் விளையாடும் இராமா வாருங்கள் ...உதி மூட்டைகளைக் கோணி கோணியாக கொண்டுவந்து தாரும் என்று பாடுவார்.
ஆவோஜி!  ஆவோஜி  ரமதே ராம் ஆவோஜி!
உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!
சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான் அவருடைய கீர்த்தனையிலும் கேலதி மம ஹ்ருதய ராம...  ராமன் என் மனதில் விளையாடுகிறான் என்றே பாடுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இராமனை,  மனத்துக்கு இனியானை என்றே பாடுகிறார். இப்படி சீரடி சாயி பாபா இராமனைப் பார்த்து மகிழ்ச்சியோடு பாடி உதி மூட்டைகளைச் சேர்த்து அன்பர்களுக்கு வாரி வழங்குகிறார். பாபாவின் உதி அநேக அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன. நிகழ்த்தி வருகின்றன. அதில் ஒரு சிலநிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.
தேள்கடிக்கு மருந்தான உதி்
நாசிக்கில் ஓர் சாயி பக்தர்இருந்தார். அவர் பெயர் நாராயண் மோதி ஜனி. அவர் தன் தாயாருடன் பாபாவை தரிசிக்க சீரடிக்கு வந்தார். ஜனியின் தாயாரிடம் பாபா, இனி உன் மகனுக்கு அடிமைவேலை இல்லை. சுய தொழில் செய்வான் என்று ஆசி தந்து உதியும் தந்தார். விரைவிலேயே ஆனந்தாஸ்ரம் என்ற தங்கும் விடுதியைத்துவக்கினார். தொழிலில் லாபம் பெருகி செல்வச் செழிப்பை அடைந்தார். ஸாயி பக்தரின் நண்பர் ஒருவருக்கு தேள் கொட்டிவிட்டது. வலியால் துடிதுடித்துப் போனார். ஸாயி பக்தர் வீடு எங்கும் பாபாவின் உதியைத் தேடினார், கிடைக்கவில்லை. பாபாவின் திருவுருவப் படம் முன் நின்றார். திருவிளக்கு ஏற்றினார். ஊதுபத்தி கொளுத்திவைத்தார்.
மனம் உருகி தன் நண்பருக்குத் தேள் கடி வலி நீங்க மன்றாடி வேண்டினார். ஊது பத்தி எரிந்த சாம்பலை சாயியின் உதியாக எடுத்து நண்பர்க்குத் தேள் கொட்டிய கடி வாயிலும் வலியுள்ள இடங்களிலும் பூசினார். அடுத்த வினாடியே தேள் கொட்டிய வலி நீங்கியது. ஸாயி பக்தரும் அவர் நண்பரும் மகிழ்வெய்தினார்கள்.
ஸாயி பாபாவின் உதி நோய் தீர்க்கும் மருந்து ஆகும்.
ஜாம் நேர் அற்புதம்
நானா சாகேப் சந்தோர்க்கர் என்ற பக்தர் ஜாம்நேர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தார். அவர் மகள் மீனா தாயி நிறைமாத கர்ப்பிணி. பத்தாம் மாதம் பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. நாள் கணக்கில் வலி நீடித்தது. நானா, பாபாவின் கருணையை வேண்டி பிரார்த்தனை செய்தார்.
சீரடியில் இருந்த பாபா, ராம்கீர் புவா என்பவரை நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த ஜாம்நேருக்கு அனுப்பி மீனாதாயிக்கு உதிவர் பாபா. உதியைத் தர ஏற்பாடு செய்தார். பாபா அனுப்பியதாகக் கூறி உதியை மீனாத்தாய்க்கு அளித்தார். மீனாத்தாய் சில நிமிடங்களிலேயே பிரசவித்தாள். பாபாவின் உதியின் மகிமையால் சுகப்பிரசவம் ஆனது.
போக்குவரத்துக்குப் போதிய வசதியில்லாத நேரத்திலும் ரயில் நிலையத்திலிருந்து நானாவின் குதிரை வண்டிக்காரனாக வந்து ராம்கீர்புவாவை நானாவின் வீட்டில் சேர்த்துவிட்டு மறைந்துவிட்டார். தாங்கள் அனுப்பிய குதிரை வண்டிக்காரன் எங்கே என்று நானா கேட்டபோது, தான் யாரையும் அனுப்பவில்லை என்றார் நானா. வந்தது பாபா என அனைவருக்கும் புரிந்துபோனது.
இப்படி பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளமானவை. அவரது உதி நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம்.
பிறப்பு இறப்பு என்ற இருமையைக் கடந்தவர் பாபா. உதியை நெற்றியில் பூசி நீருடன் கலந்து பருகினால் உடற்பிணி நீங்கும். மனப்பிணி மாறும். பிறவிப் பிணி நீங்கும். ஸாயி நாமம் சொல்லி திருவடி பணிந்து உதி அணிந்து அனைவரும் வாழ்க வளமுடன்!
                        
                       சாயி தாசன் ஸ்ரீநிவாச சுந்தரராஜன், புதுக்கோட்டை

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...