Tuesday, July 2, 2013

பிரார்த்தனை செய்.. வேண்டுதல் பலிக்கும்.





நமக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. வேலைகள் உள்ளன. அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு இவ்வளவு தூரம் பிரார்த்தனைக்கு வருவதோ, பத்திரிகையைப் படிப்பதோ, பாபா பற்றிய செய்திஜளை இணையத்தில் தேடி பிடித்து படிக்கிறோம் என்றால், எதன் மூலமாவது நமக்கு விடிவு வந்து விடாதா என்ற எண்ணத்தில்தான்.
பிரார்த்தனைக்கு வருதல் அல்லது சாயி தரிசனம் புத்தகத்தை படித்தல் மூலமாக, ஒருவேளை பாபா நன்மை செய்தாலும் செய்வார் என்ற எண்ணத்தில், இங்கு வருவதும், புத்தகம் படிப்பதுமாக இருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஒருவேளை என்ற வார்த்தையை எடுத்து விட்டு,  ‘நிச்சயமாக இதன் மூலம் பாபா எனக்கு நன்மையைச் செய்வார் என்ற உறுதி உங்கள் மனதில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். இதன் வாயிலாக பாபா நம்மோடு பேசுவதை உணரமுடியும்.
நம்பிக்கையின்றி இறைவனிடம் எதையாவது பெற்றுவிடலாம் என நினைப்பது வீண்.  பிரார்த்தனை செய்கிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது பிரார்த்தனை என்பது இறைவனுக்கு நாம் வழக்கமாக செய்கிற பூசை புனஸ்காரம் போன்ற சடங்கு அல்ல.
நாம் அவரோடு ஏற்படுத்திக் கொள்கிற தொடர்பு. பாபாவுக்குச் செய்கிற அபிஷேகம் எப்படி அவருடைய விக்ரகத்தைத் தூய்மை செய்கிறதோ அப்படித்தான் அவரிடம் நாம் செய்கிற பிரார்த்தனை நமது மனத்தைத் தூய்மை செய்கிறது.
ஒவ்வொரு நாளும் நம்மையறியாமல் அல்லது தேவைக்காக தவறுகளைச் செய்கிறோம்.. அது நமது பாவக்கணக்கில் சேர்கிறது. இந்தப் பாவத்தைப் போக்குவதற்க்கு சுலபமான இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று பிரார்த்தனை
இன்னொன்று நாம ஜெபம்.
நாம ஜெபம் மலை போன்ற பாவங்களையும் அழிக்க வல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, மலை போன்ற நமது தவறுகள், பாவங்கள் அனைத்தும் கழிவதற்கு முதலாவது நாம் ஜெபம் செய்துவிட்டுத்தான் பிரார்த்தனை செய்வதற்குச் செல்ல வேண்டும்.
அடுத்து, மலையை உடைத்து எறிந்துவிட்டாலும் அதில் தூசு தும்புக்கள்
இருக்கும் அல்லவா? அதைத் துடைப்பது போன்றதுதான் பிரார்த்தனை. சுருக்கமாக விளங்கும் வகையில் சொல்லவேண்டும் என்றால், தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துவது போல, மனதை பெருக்கி சுத்தப்படுத்துவது தினமும் நாம் செய்கிற பிரார்த்தனையின் அர்த்தம்..
பிரார்த்தனை செய்வதற்கு முன்னால் சில விஷயங்களை நாம் நிச்சயம் செய்தாக வேண்டும்..அது, நமது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொண்டு மானசீகமாக கடவுளிடம் மன்னிப்புக்கேட்டல். தெரியாமல் செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு அப்பா... என்றோ, ஏதோ என் நேரம்.. உன்னிடம் தவறாகவும், உனக்கு எதிராகவும், என் மனசாட்சிக்கு விரோதமாகவும் நடந்து கொண்டு விட்டேன்.. இனி அப்படி செய்யமாட்டேன்.. முடிந்தவரை நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.. நீயும் என்னை அந்த வழிக்கு கொண்டு செல்லாதே.. என்று நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அவருடன் ஒப்புறவாக வேண்டும்.. அதன் பிறகு பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும்.
பிரார்த்தனை பலிக்குமா? பலிக்காதா என்று சந்தேகப்படக்கூடாது. பாபாவின் அனுமதியில்லாமல் யாரும் அவரது இடத்தில் கால் வைக்கமுடியாது. அவர் சார்ந்த விஷயங்களை கேள்விப்படவோ, அவரைப் பற்றி படிக்க வேண்டுமானாலும் கூட நமக்கு நல்லகாலம் பிறக்காமல் வாய்ப்பு அமையாது..
எனவே, நீங்கள் சாயி பற்றி படிக்கவோ, அவரது ஆலயத்திற்குச் செல்லவோ நேர்கிறது என்றாலே உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது, பாபா உங்களை அழைத்தார் என்பதுதான் பொருள்.
பாபா எதற்காக அழைப்பார்? உங்களுக்கு தரவேண்டிய அருளைத் தருவதற்காகத்தான் அவர் அழைப்பார். அவரது அழைப்பு என்றைக்கும் வீண் போகாது.. எனவே, நம்பிக்கையோடு நீங்கள் அவரிடம் பிரச்சினைகளை முறையிட்டுப்பிரார்த்தனை செய்யலாம்.. அது நிச்சயம் நடக்கும்..
உங்கள் பிரார்த்தனை தள்ளிப் போகிறது என்றால், இதை ஒரு பொருட்டாக நினைக்காதே! அல்லது நீ தவறுதலாக வேண்டுகிறாய் என்று பொருள்..
கண்டிப்பான ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம், தூங்கும் முன்பு நீங்கள் மனதார வேண்டிக்கொண்டால் இறைவன் நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார். நீங்கள் தினமும் அப்படியே வேண்டிக் கொள்ளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் சொன்னான், ‘ஐயா, நான் தினமும் அப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால் கடவுள் என் பிரார்த்தனையை கேட்பதேயில்லை
என்ன வேண்டிக்கொண்டாய்?
பிரார்த்தனையை வெளியே சொன்னால் பலிக்காது என்கிறார்களே
பரவாயில்லை சொல்
சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்
வருத்தப்படமாட்டேன்... சொல்
நீங்கள் இந்தப் பள்ளியை விட்டு மாற்றலாகிப்போகவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.. இதுவரை நடக்கவில்லையேஎன்றான் மாணவன்.
ஓ! அது உன் பிரார்த்தனையில்லை.. என் பிரார்த்தனை என்றார் ஆசிரியர்.
இந்த இருவரது பிரார்த்தனையையும் பாபா கேட்கவில்லை என்றால் அதற்கு காரணம் உள்ளது. கண்டிப்பான ஆசிரியராக இருக்கிறார் என்றால், அவர் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார் என்று அல்லவா பொருள்- அத்தகைய ஆசிரியர் அறிவாளி மாணவர்களுக்கு மட்டும் நெருக்கமானவராக இல்லாமல் பின் தங்கிய மாணவர்களையும் முன்னேற்றும் விதத்தில் குறிப்பாக தன்னை வெறுக்கும் மாணவன் விரும்பும் விதத்தில் அவனை மாற்றுவதற்காக அவர் அங்கேயே இருந்தாக வேண்டும் என்பதால் அந்தப் பிரார்த்தனையை பாபா கேட்கவில்லை...
ஆனால் நாம் அப்படி வேண்டிக் கொள்ளப் போவதில்லை.. நமது பிரச்சினைகள் தீரவேண்டும்.. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்ளப் போகிறோம்.. அதை நிச்சயம் பாபா கேட்பார்..
சரி, பாவத்தைப் போக்க நாம ஜெபம், பிரார்த்தனை என்று சொன்னீர்கள்.. புண்ணியத்தைச்சேர்க்க எதையும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா? பசித்த உயிரினங்களுக்கு, அதாவது விலங்குகளுக்கு வயிறார உணவு கொடுங்கள்.. பசித்தவர் முகம் பார்த்து ஒரு தம்ளர் தண்ணீரையோ, மோரையோ கொடுங்கள்... சுருக்கமாக அன்னதானம் செய்யுங்கள்.. எப்படிப்பட்ட பாவமாக இருந்தாலும் கரைந்து புண்ணியம் உங்கள் கணக்கில் ஏறும்.பாவம் கரைந்தாலும் புண்ணியம் சேர்ந்தாலும் நன்மை உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று பொருள்..
இதோ அவர் உங்கள் இதயவாசல் அருகே நிற்கிறார். அவரை நாம ஜெபத்தோடும், பிரார்த்தனையோடும் அழைத்துவந்து நம் கோரிக்கைகளை கேட்கவைப்போம்.. வேண்டியதை விரைந்து பெறுவோம்.. கருணையே உருவான நம் சாயி மாதா, நாம் வேண்டியதை வேண்டியபடி நிச்சயமாகத் தருவார். நம்மை அவர் ஆசீர்வதிப்பார்.
சாயி வரதராஜன் சத்சங்கத்தில் கேட்டது.
சாயி வீரமணி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...