Tuesday, February 28, 2017

ஷீரடி சாயி நாதர் கவசம்



மனமுருகி படிப்போர்க்கும்….உள்ளம் தன்னில் வைப்போர்க்கும் …இன்னல்கள் யாவுமின்றி நற்பலன்கள் அனைத்தும் கூடி ஷீரடி சாயி பாபாவின் அருள் எப்பொழுதும் உண்டென்று உணர்த்துமாம.

ஷீரடி நாதனை மனதினுள் இருத்தி
மனதை நாமும் ஒரு நிலைப் படுத்தி
வாழ்க்கை முறையை சரிவர திருத்தி
வேண்டிய யாவையும் அவனிடம் கேட்போம்

உச்சன் தலை முதல் விரல் நுனி வரைக்கும்
ஒவ்வாரு அங்கமும் அவன் இசை பாட
நம்மை மறந்த உலகினில் தவழ
“சாய்”யும் வருவான் நம் உடலுக்குள் நுழைய

துன்பங்கள் யாவையும் ஒரு புறம் தள்ளி
நம் உடம்பில் ஒரு வித தென்றலை வீசி
பரஸ்பரம் அமைதியை நிலவச் செய்து
அவன் வரவை உணர்த்தும் ஒரு வித செயலிது

உயிர்கள் அனைத்திடம் அன்பை செலுத்தி
எல்லோர் இடத்திலும் பாசம் வைத்து 
நல்ல காரியங்கள் நாமும் செய்தால்
நம்முள் பாபா இருப்பதை உணர்வோம்

எங்கும் எதிலும் இருப்பவன் சாயி
பார்க்கும் பொருள்களில் இருப்பவன் சாயி 
உணரும் உணர்வில் இருப்பவன் சாயி
நம் நிழலாய் இருப்பவன் ஷீரடி சாயி

அழைத்த உடனே ஓடியும் வருவான்
என்றும் நம்மை பார்த்துக் கொண்டு இருப்பான்
செய்யும் செய்கையில் ஒளிந்து கொண்டிருப்பான்
அவனே ஷீரடி வாசனாய் இருப்பான்

ஷீரடி மண்ணை தொட்டு வாருங்கள்
அவன் பாதம் தன்னை தொட்டு வணங்குங்கள்
நாமும் அவனுடன் கலந்து விடுவோம்
நம்மை நாமே மறந்து விடுவோம்

அலைபாயும் மனதை அவனிடம் தந்து
மகிழ்ச்சி கடலில் நாமும் மிதந்து
புதுவித தெம்பும் நம்முடன் கலந்து
அவனும் அமர்வான் நம் மனதினில் வந்து

ஷீரடி வாசனின் நாமத்தைச் சொன்னால்
எல்லாச் செய்கையும் நலமாய் முடியும்
அவனை நாமும் மனதால் நினைத்தால்
உடனே வந்து அரவணைத்திடுவான்

அவனே கதி என்று நாமும் இருந்தால் 
வேண்டிய அனைத்தையும் அவனிடம் சொன்னால்
அள்ளிக் கொடுப்பான் நொடியில் வந்து
அவனே எங்கள் சாயி நாதன்

ஜெய ஜெய சாயி
ஓம் ஸ்ரீ சாயி
சற்குரு சாயி
துவாரகா மாயீ

வினைகளை தீர்க்கும் வித்தகன் வருக
குறைகளை கலையும் குருவே வருக
சஞ்சலம் அகற்றிட சீக்கிரம் வருக
எங்கள் பாபா வருக வருக

பாவங்கள் யாவும் பனிபோல் மறையும்
நன்மைகள் எல்லாம் நம்மை நாடும்
எல்லாம் வல்லவன் அவன் பெயர் சொன்னால்
நம்மைக் காத்து நல்லது செய்வான்

ஒருமுறை அவனை நாமும் நினைத்தால்
நம் இல்லம் தேடி அவனும் வருவான்
அவனின் பாதங்கள் நம் வீட்டினுள் படவே
ஜன்ம பலன்களை நாமும் பெறவே

புண்ணிய ஷேத்திரம் ஷீரடி தானே
பாபா வசிப்பதும் ஷீரடி தானே 
நம்மை அழைப்பதும் ஷீரடி தானே
புனிதப் பயணம் ஷீரடி தானே

நோய் நொடிகளை அறவே அகற்ற
எவ்வித இன்னலும் அண்டாதிருக்க
அவனும் தருவான் தக்க மருந்தை
அதுவே உதி என்று பெயரும் பெறுமே

கோதுமை மாவின் மகிமையை சொன்னவன்
அதனின் மூலம் ஊரைக் காத்தவன்
தெய்வப் பிறவியாய் நம்முடன் கலந்தவன்
அவனே எங்கள் சாயி ஆனவன்

ஒவ்வொரு நொடியும் நம்முடன் இருப்பான்
உடலில் ஓடும் உதிரத்தில் இருப்பான்
உணர்ச்சிப் பிழம்பில் கலந்து இருப்பான்
பேசும் சொற்களில் இனிமையாய் இருப்பான்

குருவின் மகிமையை சொன்னதும் அவன்தான்
குருவாய் என்றும் ஆனவன் அவன்தான்
பக்தியுடனே நாமும் சொல்வோம்
சற்குரு சாயி என்று பாடுவோம்

பாபா என்றால் மன பாரம் குறையும்
பாபா என்றால் மலர்ச்சி பொங்கும்
பாபா என்றால் மனமது மயங்கும்
பாபா என்றால் சகலமும் அடங்கும்

ஜென்ம ஜென்மமாய் பந்தத்தில் இருப்பான்
உயிருனுள் மூச்சாய் கலந்தும் இருப்பான்
நீரில் எரியும் விளக்கிலும் இருப்பான்
எங்கள் சாயி அனைத்திலும் இருப்பான்

அவனின் புகழை என்றும் போற்றுவோம்
அவனின் நாமம் சொல்லி மகிழுவோம்
அகிலத்தைப் படைத்த அவனை வணங்குவோம்
சாயி நாதா என்று சொல்லுவோம் 

சாந்த முகத்துடன் என்றும் இருப்பான்
புன்னகை தவழ நம்மைப் பார்ப்பான்
விழிகளில் கருணையை தேக்கி வைப்பான்
அன்புக் கரங்களால் நம்மை அணைப்பான்

அவனைப் பற்றிய கீதம் படித்து
பலவகை ஆரத்தி நாமும் எடுத்து
வியாழக்கிழமை விரதம் இருந்து
மனதால் அவனை தியானம் செய்வோம்

ஆதியும் அந்தமும் எல்லாம் அவனே
வாழ்க்கையில் நிகழும் சகலமும் அவனே
உலகை இயக்கும் சக்தியும் அவனே
எங்கள் ஷீரடி வாசனும் அவனே

தூய உள்ளத்தில் வந்து அமர்வான்
நல்ல எண்ணத்தில் ஒன்றி இருப்பான்
அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டால்
மனதினில் ஆனந்த தாண்டவம் ஆடுவான்

பிறவிப் பயனை புரிந்திடச் செய்வான்
ஆனந்தம் என்றும் கிடைத்திடச் செய்வான்
கவலைகள் அற்ற வாழ்க்கையை தருவான்
ஷீரடி வாசா என்றால் வருவான்

உடனே சொல்வோம் அவனின் பெயரை
விரைந்து பெறுவோம் நற்பலன்கள் பலவும்
அவன் பாதம் தொட்டு வணங்கி வருவோம்
நம்மை அவனுள் என்றும் காண்போம்

இதனைப் படித்தால் புண்ணியம் பெறுவீர்
சகல சௌபாக்கியம் அனைத்தையும் பெறுவீர்
வாழ்வில் என்றும் நிம்மதி பெறுவீர்
பாபா என்றால் மன அமைதியும் பெறுவீர்

சாயி சரணம் சாயி சரணம்
எங்கள் பாபா சரணம் சரணம்
ஷீரடி வாசா சரணம் சரணம்
சற்குரு சாயி சரணம் சரணம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...