Tuesday, May 30, 2017

தியானம் செய்வீராக!

என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல்  இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும்  அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.
இப்பிரபஞ்சமென்னும்  மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்? விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய  நிஜசொரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய   பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மகிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ  கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தங்களிலிருந்து  விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.

பாபா கூறினார், " நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.
ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது எங்ஙனம் தியானம் செய்ய இயலும்.?? இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக."

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...