Tuesday, August 4, 2015

நமக்குள் பூர்வ பந்தம் உள்ளது

ஒரு மனிதனின் உயர்வுக்குக் காரணம் அவனிடம் உள்ள பணிவுடைமை. இதை அணிந்து கொண்டுவிட்டால் அதன் பிறகு நமது உயர்வை தடுத்து நிறுத்தவே முடியாது என்பார் குருஜீ.
சமீபத்தில் பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒரு நண்பர், சாயி ராம்! நீங்கள் பத்திரிகையில் பணி புரிந்தீர்களா? பல புத்தகங்களை எழுதியுள்ளீர்களா? நம்பவே முடியவில்லையே- பெரிய அறிவாளி, மகான் என்று பலர் உங்களை சொல்கிறார்கள், ஆனால் நீங்களோ, கொத்தனாருக்கு உதவியாளர் போல செங்கல், மணல் சுமக்கிறீர்கள், பார்க்க படித்தவர் போலவே தெரியவில்லையே!”  எனக் கேட்டார். (அந்த நேரத்தில் தன் வீட்டில் நடந்த வேலைக்கு சித்தாள்களுடன் வேலை செய்து கொண்டிருந்தார் சாயி வரதராஜன்.)
”அறிவாளி என்றாலும், மகான் என்றாலும் சாதாரண மக்களை விட்டு விலகியிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அது நமக்குப் பொருந்தி வராது. காரணம், நான் அறிவாளியுமில்லை, மகானும் இல்லை. நீங்கள் சொல்வதைப் போல எடுத்துக்கொண்டாலும் இதில் அறிவை பயன்படுத்துகிறேன். எப்படியென்றால், உயர்ந்த பரப்பிரம்மமாகிய கடவுள், பாபா என்ற பெயரில் தாழ்ந்த ஜன்மமாகிய எனக்கு சரிசமமாக இறங்கி வந்திருக்கும்போது, நான் என்னை பெரிய மனிதனாக நினைத்துக் கொள்வதும், காட்டிக் கொள்வதும் அறிவுப்பூர்வனமானது அல்ல.
என்னிடம் வேலைக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் பூர்வத்தில் என்னுடன் இருந்தவர்கள். அவர்கள் என்னிடம் வாங்கிய வேலையை இப்போது திருப்பி செலுத்த வந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களை நேசித்து அவர்களோடு நானும் ஒருவனாக இருக்க வேண்டும்..இதையெல்லாம் அவர்களிடம் சொன்னால் விளங்கிக் கொள்வார்களா?
விளங்கிக் கொண்ட நான், கடவுள் தந்த இந்த மறு வாய்ப்பை எனது அறிவால் பயன்படுத்துகிறேன். அதுமட்டுமல்ல, வேலை என்னுடையது. ஆகவே, அவர்கள் செய்யட்டும் என நான் பேசாமல் இருந்தால் வேலை மெதுவாக நடக்கும். நானும் சேர்ந்து செய்யும்போது அது துரிதமாக மாறும்.
பிறரை வேலை வாங்க இது வழி வகுக்கிறது.
பூர்வ ஜென்மங்களில் சம்பந்தத்தினால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரை ஒருவர் தழுவுவோம்.
சுகத்தையும், பூரணமான திருப்தியையும் அனுபவிப்போம். ( அத்: 19- 150)
இன்னொரு விக்ஷயம், அவர்கள் எத்தனை இடத்திற்கு வேலைக்குச் சென்றாலும் என்னை நினைக்காமல் அவர்களால் வேலை செய்ய முடியாது. இதற்காகவும் செய்கிறேன் என்றார்.
அடுத்து, நான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. சம்பளம் கொடுக்கும்போது, இவ்வளவு ரூபாயை வாங்கிக் கொள்கிறார்களே என என் மனம் சஞ்சலப் படும். அந்த வேலையில் உள்ள கஷ்டத்தை ஒரு நிமிடம் அனுபவித்துப் பார்க்கும் போது அவர்களுக்கு தருவது நியாயமானதுதான் என என் மனம் ஒப்புக் கொள்ளும். இதற்காகவும், எனக்காக வேலை செய்பவர்களுடன் வேலையைப்பகிர்ந்து கொள்கிறேன்.. இதில் உயர்வு தாழ்வு என்பது எனக்கு கிடையாது!”  என்றேன்.
படித்தவர் போலக் காட்டிக் கொள்வதால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை. தேவையும் இல்லை. உண்மையான படிப்பு பிறரது மனதைப் படிப்பது.. உண்மை சேவை பிறருடன் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்வது..இதை சரியாகச் செய்கிறேன்..
இதுபோன்ற விக்ஷயங்களால் நானாக நினைத்தாலும் என் மேல் டாம்பீகமும் பகட்டும் வந்து ஒட்டிக்கொள்ளமாட்டேன் என்கிறது!”  என்றார் அவர்.
சில பக்தர்கள் அவருக்குப் பாத பூஜை செய்தும், வயதில் மூத்தவர்களும் பாதம் பணிந்து செல்வதை பார்த்து ஒருமுறை இப்படி அனுமதிப்பது சரியா என ஒரு பக்தர் அவரிடம் கேட்டார்.
என்னைவிட அனைத்திலும் உயர்ந்தவர்களான சாயி பக்தர்கள் குனிந்து நமஸ்காரம் தெரிவிக்கும் போதும், பாத பூஜை செய்யும்போதும் மனம் குறுகிப் போகும். அவர்கள் என்னை நமஸ்காரம் செய்து, எனக்கு பாத பூஜை செய்யவில்லை, எனக்குள் இருக்கிற பாபாவுக்கு செய்கிறார்கள். கல்லிலே கடவுளைப் பார்க்கிறோமே, அப்படி என்னுள் கடவுளைப் பார்க்கிறார்கள். இது உருவ வழிபாட்டின் ஒரு வகை தானே தவிர வேறில்லை.
ஒருவரை ஒருவர் தொடும் போதுகூட அவர்களுக்குள் உள்ள சக்தி பரிமாற்றம் ஆகும். மின்சாரத்தைத் தொடும்போது ஏற்படுவது போன்றது.. யார் அதிக புண்ணியசாலியோ அவரிடமிருந்து புண்ணியமும், யார் கர்மசாலியோ அவரிடமிருந்து கர்ம பலனும் பரிமாற்றமாகும்.
என்னைத் தொடும்போது, என்னிடமிருந்து புண்ணிய பலன்கள் போகின்றன. இவற்றைத் தெரிந்துதான் அனுமதிக்கிறேன். யார் நமது கால்களை சேவித்தாலும் நம்மிடம் உள்ள புண்ணியம் புறப்பட்டுப் போகிறது. ஆகவே, அவர்களுக்கு நிச்சயப்பலன் உண்டு. நமக்கு அவர்களிடம் இருக்கும் பாவப் பலன்கள் வந்து சேரும்.. ஆகவே, புண்ணியத்தைத் தந்து பாவத்தைப் பெற்றுக்கொள்ள இதை அனுமதிக் கிறேன்.. ஒருவர் சேர்க்கிற புண்ணியத்தை இறைவன் கரைப்பதற்கு வைக்கிற விக்ஷயங்களாகவும் இவை உள்ளன.
தீயோரை நாடி, பாவம் செய்யப் பதுங்கிப் பதுங்கி நடந்த கால்கள் இறைவனை நாடிச் சென்று புண்ணியம் தேடிக் கொள்கிறது. இறையடியார்களை நாடிச்சென்று புண்ணியத்தைச் சம்பாதிக்கிறது.
இறைவனது ஆலயத்திலும், அவனது நினைவிலும் காத்திருந்து புண்ணியத்தைச் சம்பாதிக்கிறது. இந்த புண்ணியத்தையெல்லாம் கரைக்கவே இப்படி பிறரால் சேவை பெறும் நிலையை இறைவன் வைத்துவிடுகிறான்.
இதைக் கண்டு மமதை வந்துவிட்டால், பிறகு இழிவு பின்னாலேயே வரும். மேலும் மேலும் புண்ணியத்தைச் சேர்த்தால் பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.
”உங்களுக்குப் பாவம் சேர்வதால் பாதிப்புகள் வராதா? இது அவரிடம் கேட்கும் அடுத்த கேள்வி.
”வரத்தான் செய்கிறது.. கங்காவில் குளிப்பதால் கங்கா அசுத்தமாகிறது. ஆனால் அதைப் பற்றி அது நினைத்துக்கூட பார்க்காமல் தனது வழியே போய்க் கொண்டிருக்கிறது. சுத்தமா? அசுத்தமா என்பது பற்றி கங்கைக்கு கவலையில்லை. அதில் குளிப்பவருக்குத்தான் கவலை. நான் ஆன்மா.. எனவே, நான் அசுத்தமாவது இல்லை. அசுத்தமனைத்தும் இந்த உடலுக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல.. என்பதில்  தெளிவாக இருக்க வேண்டும். நான் தெளிவாக இருக்கிறேன். உலக ரீதியாக நிறைய பேர் வாழ ஆசைப் படுகிறார்கள். நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். அறுபது வயதில் பட வேண்டிய அவஸ்தைகளும், இன்ப துன்பங்களும் முப்பது வயதுக்குள் வந்து போய்விட்டன.
இந்தக் கட்டை என்றேனும் ஒரு நாள் விழுந்து விடப் போகிறது. விழுந்த பிறகு யாருக்கும் நன்மை கிடையாது. விழுவதற்குள் இது நாள்தோறும் பெறுகிற புண்ணியப் பலன்கள் மற்றவர்களுக்குப் போய்ச் சேரட்டுமே என நினைத்துக் கொள்வேன்.
மற்றவர்கள் புறவழிபாடு மற்றும் உலகம் சார்ந்த விக்ஷயங்களை வழிபாட்டில் புகுத்தி அது சரி இது தவறு எனக் கூறுவார்கள். அதில் கவனம் செலுத்துகிறார்கள். நானோ, சாஸ்திரங்கள் கூறும் நுணுக்கங்களில் கவனம் செலுத்தி நன்மை பெறுவதை மட்டும் யோசிக்கிறேன். சாஸ்திரங்கள் கூறும் மேன்மையை, நன்மையை பாமர மக்கள் அனுபவிக்க இந்த உடலைப் பயன் படுத்திக் கொள்கிறேன்.
இப்படியெல்லாம் பிறருக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? இது எனது கேள்வி?
எல்லாம் பூர்வ விதிப்படியே நடக்கிறது என்ற தெளிவு.  எதுவும் புதிது கிடையாது, பழையவற்றின் தொடர்ச்சி.  பூர்வ ஜென்மங்களில் சம்பந்தத்தினால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரை ஒருவர் தழுவுவோம். சுகத்தையும், பூரணமான திருப்தியையும் அனுபவிப்போம். என்று சத்சரித்திரம் கூறுகிறது அல்லவா? அந்த சத்திய வார்த்தையை நிறைவேற்றிடத்தான்..
இதுதான் குருதேவர் பதில்.
 ரமணி சேகரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...