Saturday, August 1, 2015

நம்பிக்கையுடன் வணங்கு!

கடவுள் என்னவோ சர்வ சக்தியுள்ளவர்தாம். நமது பக்தியில் முதிர்ச்சியில்லாமல் போவதால்தான் நமது வேண்டுதல்கள் கேட்கப்படுவது கிடையாது. இதை உணராத பக்தர்கள், பாபா நமது வேண்டுதலை கேட்கவேயில்லை எனப் புலம்புகிறார்கள்.
சாயி பக்தர்களுக்கெல்லாம் தெரியும், பாபா சிவனது அவதாரம் என்பது. மேலும் நாம் எந்தக் கடவுளை கும்பிடுகிறோமோ, எந்தக் கடவுளை நினைக்கிறோமோ அந்தக் கடவுளாகவே காட்சி அளிப்பவர் பாபா.
சத்சரித்திரத்தை கருத்தூன்றி படித்தோமானால் இதற்கு ஏராளமான காட்சிகள் சொல்லப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நம் பக்தி எந்த அளவுக்கு உண்மையானது, எந்த அளவுக்கு சரணாகதி அடைந்து அவரே கதி என்று இருக்கிறோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ஏனெனில், பெருங்களத்தூர் சீரடி பாபா பிரார்த்தனை மையத்திற்குக் கூட்டுப் பிரார்த்தனைக்கு வருவோரில் ஒரு சிலர், நான் இத்தனை முறை வந்திருக்கிறேன், பாபா எனக்கு ஒன்றும் செய்யவில்லை, என் கோரிக்கை நிறைவேறவில்லை என்றும், சிலர் வந்த வேகத்திலேயே தன் கோரிக்கையை தெரிவித்துக் கூட்டுப் பிரார்த்தனை செய்யச் சொல்லிக் கேட்பதையும் அறியும்போது, பக்தி என்பது அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதா? இல்லை.. நம்பிக்கையின்மை தலை தூக்குகிறதா என சிந்திக்க வைக்கிறது.
நம்பிக்கைதான் மூலதனம், பொறுமை தான் உழைப்பு. இதில் நம்பிக்கை வைத்து பொறுமை இல்லாமல் இருந்தால் எப்படி பலிதம் ஆகும்?
நம்பிக்கை என்ற மூலதனத்தை சேமித்து வைக்காமல் எப்படி பலன் கிடைக்கும்?
பக்தி என்பது சந்தேகம் இல்லாததாக இருக்க வேண்டும். நடக்குமா? நடக்காதா? கிடைக்குமா? கிடைக்காதா? பாபா எப்போதுதான் கருணை காட்டப்போகிறாரோ என்றில்லாமல் உறுதியுடன் பாபாவிடம் இருக்க வேண்டும். சந்தேக பக்தி நன்மை தராது என்பதற்காக கூறப்படும் ஒரு கதையைக் கேளுங்கள்.
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பாவம் செய்கிறோம், அல்லது செய்துவருகிறோம். ஒரு சமயம் மக்கள் பாவங்களில் மூழ்கி மிகவும் அல்லல் பட்டார்கள். அவதிப்பட்டார்கள். கருணைக் கடலான சிவபெருமான் மக்களை பாவங்களில் இருந்து மீட்க எண்ணினார்.
ஒரு உபாயத்தை மேற்கொண்டு,  ஸ்ரீ ருத்ர மந்திரத்தை மக்களுக்காக அருளினார். மக்களும் பாவம் தீர்க்கப்பட  ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஓதி வந்தனர். இதனால் பாவம் நீங்கியது. பாவம் இல்லாமல் போனதால் அவர்களுக்கு இறப்பும் இல்லாமல் போயிற்று. இதனால் நரகம் காலியாயிற்று. எமனுக்கும் வேலையில்லை. எனினும் அவர் பிரம்மாவிடம் சென்று முறையிடத் தவறவில்லை.
பிரபு!  இப்போதெல்லாம் நான் யார் அருகே சென்றாலும், அவர்கள் ருத்ர மந்திரம் கூறியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களின் உயிரைக் கவர இயலவில்லை.
நான் ராஜாவாகஇருந்து என்ன பயன்? எனவே, பதவியைத் துறக்கிறேன் என்றார். பிரம்மா அவரைத் தேற்றி, ”அவரசப்படாதேநான் இரண்டு தூதுவர்களைப் படைத்துத்தருகிறேன், ஒருவர் அச்ரத்தா, மற்றெhருவர் துர்மேதா.
அச்ரத்தா என்றால், நம்பிக்கையின்மை, துர்மேதா என்றால் மோசமான எண்ணங்கள். இவற்றை மந்திரங்கள் கூறுபவர் மீது ஏவி விடு. பிறகு நடக்கிறதைப் பார்  என்றார்.
அதன்படியே இந்த இரண்டு தூதுவர்களும் மந்திரங்களை சொல்பவர்களிடையே சென்று அவர்கள் மனதில் புகுந்தார்கள். இப்போது, அவர்களுக்கு நாம் சொல்லும் இந்த மந்திரத்தால் நமக்கு நற்பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறதா? அல்லது நமக்கே வந்துவிட்ட சக்தியால் கிடைத்துக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் துளிர்விட்டது.
எப்போது சந்தேகமும், அகங்காரமும் வந்து விட்டதோ அப்போதே எமனுக்கும் வேலை எளிதாகப்போய்விட்டது. இந்த இரண்டாலும் மக்கள் மடிய ஆரம்பித்தார்கள். பார்த்தீர்களா? நம்பிக்கை வாழ்க்கையைத் தந்தது, அவநம்பிக்கை மரணத்திற்கு வழி வகுத்தது.
எனவே, சாயி பக்தர்கள் எப்போது வேண்டிக்கொண்டாலும் நமது பிரார்த்தனை நிறைவேறும் வரை பொறுமை காக்கவேண்டும். நம்பிக்கையை தளரவிடக்கூடாது.
வெல்லக்கட்டியைக் கடித்துக் கொண்டிருக்கும் எறும்பைப் போல நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிரார்த்தனை பலிதம் ஆகி, காரியம் ஜெயமாகும்.
சாயி மந்திரத்தை சொல்லும்போதும் உச்சரிக்கும் போதும் ஆத்மார்த்தமாக வாய்விட்டு சொல்ல வேண்டும். மனம் எங்கும் அலைபாயாமல் சாயியே கதி என்று இருக்க வேண்டும். எத்தனை இடர் வந்தாலும், சோதனை வந்தாலும் கால தாமதம் ஆனாலும் நான் உன்னை விடவே மாட்டேன்,
எனக்கு நல்லருள்டூ நற்கதி அருள வேண்டியது நீ.. நீயேதான்! என சாயி ராமிடம் சரணாகதி அடைய வேண்டும். இதைத்தான் சாயி வரதராசனார் இந்த இணைய தளத்தில் தொடர்ந்து வலியுறுத்தி பக்தர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். எனவே, சாயியை வணங்கும்போது நம்பிக்கையுடன் வணங்கு, நல்லதே நடக்கும்.
  சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...