Sunday, July 5, 2015

அளந்து பேசுங்கள்! குடும்பத்தில் நிம்மதி வரும்!

”பல தம்பதியர் ஆண்டுகள் ஆக ஆக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனதால் பிரிந்து வாழ்வதும், உடலால் பிரிந்து வாழ்வதுமாக இருக்கிறார்க்ள. இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்த அன்பு இருப்ப தில்லை. இது தவறானது. வாழப் போவது ஒருமுறை, வாழ்க்கையும் ஒருமுறை. இந்தக் காலத்தில் தவறு களைத் திருத்திக்கொண்டு, பேசிப் புரியவைத்து, புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்-
இப்படி கடந்த நவம்பர் 14 மாத தலையங்கத்தில் சாயி வரதராஜன் மிகவும் வேதனைப்பட்டு கீழ்க்கண்ட வரிகளை தெளிவுபடுத்தியுள்ளார். ஆழமான கருத்துக்கள் சிந்தித்துப் பாருங்கள்.
மாதம்தோறும் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் சந்திக்கின்ற பிரச்சினைகள் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகளே- அதுவும் கடந்த மாதத்தில் குரு நாதர் கூறியதுபோல் மிகமிக அதிகம்.
குடும்பச் சண்டைக்கான காரணமாக காசோ பணமோ முதலில் வராது, வார்த்தைகள்தான். அதுவும் நாம் உச்சரிக்கின்ற அடுத்த கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள். நாம் கோபத்தில் வேகத்தில் வெளிப்படுத்துகிற வார்த்தைகள்தான் தம்பதியருக்குள் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம்.
இந்த வெறும் வார்த்தைகள் பல குடும்பங்களை சீரழித்து, பல தம்பதியரை கோர்ட் வாசல் வரை கொண்டு வந்துள்ளன. ஒரே வீட்டிற்குள் அந்நியர் போல் வாழ வைப்பதும் இந்த வார்த்தைகளே பாபா அன்பை போதிக்கிறார். அன்பாக இருக்கச் சொல்கிறார். தகாத வார்த்தைகளைப் பேசவேண்டாம் என்கிறார். தகாத வார்த்தைகள் பேசுவோரை பன்றிக்கு உதாரணமாகக் கூறுகிறார்.
“நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டும் என்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள், உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் யாரையும் புண்படுத்தி விடாதீர்கள் என்கிறார் தலாய் லாமா. ஆனால், இன்று பலவீடுகளில நடப்பது என்ன?
தம்பதியர் ரணமாகும் வரை ஒருவரையொருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்தால் விசித்திரமே. மனித குலத்தின் அறிவு, ஆற்றல், வளர்ச்சி வளர வளர, விவாகரத்து சதவிகிதமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதற்குக்காரணம் அறிவா? அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தையில் இல்லை ஒவ்வொரு மனிதனின் நடத்தையில் இருக்கிறது.
சாயியின் பக்தர் என்பது நமக்கு ஒரு வரப் பிரசாதம். நாம் பிறரைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை சிந்தித்தீர்களா?
மனைவி தன்னுடைய விக்ஷயத்தில் மிக பொசசிஸ்வாக இருக்க வேண்டும் என்று நிறைய கணவன்மார்கள் எதிர்பார்க்கிறார்கள். மனைவியின் அன்புச் சங்கிலியால் கட்டுண்டு இருக்கவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் தான் மட்டும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இதையே தான் மனைவியும் நினைப்பாள். அதற்கு கணவனின் மனமோ, மனைவியின் மனமோ இடம் கொடாமல் போவதால் அங்கே விரிசலின் ஆரம்பம்.
ஒரு மனிதனின் அடிமனம் எப்போது அதிகமாகக் காயப்படுகிறது தெரியுமா? தன்னை எதிராளி பலமுறை இகழும்போதோ, கசப்பான வார்த்தைகளால் தாக்கும் போதோகூட அல்ல. தன்னை ஒரு பொருட்டாகவே எதிராளி மதிக்காதபோதுதான் மனிதனின் மனதில் ஆழமாக காயம் படுகிறது. அலட்சியமாக இருப்பதுதான் ஒருவர் இன்னொருவருக்குச் செய்யும் அவமானம்.
சற்றே மனதை அமைதிப் படுத்தி யோசித்தால் நாம் செய்கிற தவறுகள் நம் கண் முன்னே தெரியும். அவற்றிலிருந்து நாம் தெளிவு பெறவேண்டும். நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் பாபாவின் படமோ, சிற்பமோ கண்டிப்பாக இருக்கும்.
நீங்கள் அவற்றின் முன்னே உட்கார்ந்து பாபாவின் கண்களை உற்று நோக்கி உங்கள் பிரச்சினைகளைச்சொன்னது உண்டா? அல்லது நமது குருநாதரின் பல நு}ல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஆழமாக படித்ததுண்டா? சத்சரித்திரத்தின் பக்கங்களையோ,அத்தியாயங்களையோ படித்தது உண்டா?
படித்திருந்தால், செய்திருந்தால் இன்நேரம் உங்கள் வீட்டிலுள்ள விரிசல்கள் சரிசெய்யப்பட்டு இருக்கும்.
இனி வார்த்தைகளைப் பேசும்போது கவனமாக இருப்போம். அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...