Friday, July 3, 2015

பாரபட்சம் ஏன்?

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான இருக்க இடம் தேடி எத்தனையோ மக்கள் அலைகிறார்கள். இறைவன் ஏன் பாரபட்சத்துடன் பலரை இப்படி விட்டிருக்கிறான்?
(கே. கோகுல்நாத், பெங்களூர்)
இருக்க இடம் -  இதை பலர், தான் குடியிருப்பதற்கு ஒரு வீடு என நினைக்கிறார்கள். பெரிய வீடு வேண்டும் என்றுதான், எத்தனையோ பேர் பெரிய வீட்டைக் கட்டிவிட்டு நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்.
ஆகவே, இதை வேறுவிதமாகப் பொருள் கொள்ளவேண்டும். ”தான் இன்னொருவர் மனதில் இருக்க இடம் தேவை” என்பதே சரியானது.
ஒருவர் மனதில் இன்னொருவருக்கு இடம் கொடுக்கும்போது பரஸ்பரம் அன்பு அங்கே வளர்கிறது. சமாதானம், நட்பு, உறவு, சமத்துவம் ஆகியவை வளர்கிறது. இதனால் மனிதர்களுக்குள் ஏற்படும் போட்டி பொறாமைகள், களவு, அடுத்துக் கெடுத்தல், ஏற்றத்தாழ்வு பார்த்தல் போன்ற பல விக்ஷயங்களுக்கு இடமில்லாமல் போகிறது. உலகம் முழுவதும் அன்பு மயமாகிறது. சுருக்கமாகச் சொன்னால் உலகமே ஒரு குடும்பமாக மாறுகிறது.
எனவே, இதைத்தான் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக சான்றோர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான் என்பது பழமொழி. இறைவன் இருக்க நமது இதயத்தில் இடம் கொடுத்தால் மடம் என்று சொல்லப்படுகிற அறியாமையை அவன் நீக்கி விடுவான் என்பதே இதற்குப் பொருள்.
ஆகவே, இருக்க இடம் தேவை என்பது, தான் இருக்க இன்னாருவர் மனதில் இடம் வேண்டும் என்பது. அப்போதுதான் வாழ்க்கை என்ற ஒன்று ஆரம்பமாகும். கணவனோ மனைவியோ ஒருவர் மனதில் ஒருவர் இருந்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும். அப்படியல்லாது, வீடு இருந்து ஆள் ஆளுக்குத் தனியாக இருந்தால் அது அடிப்படைத்தேவையல்ல, தனித்தனி நரகம்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...