Sunday, July 5, 2015

பணிவோடு நடந்துகொள்!

என்னைப் பார்க்கிறவர்கள் முதன்முதலில் முகத்திற்கு நேராகச் சொல்லும் வார்த்தை.. ” சாயி வரதராஜன், நீங்கள் எவ்வளவு பெரிய ஆள். இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே! எப்படி இது சாத்தியமானது? என்பதாகத்தான் இருக்கும்.
உயர உயர தோற்றத்தில் எளிமை வந்துவிட்டது, நடத்தையில் எளிமை வந்துவிட்டது. செய்கையிலும் எளிமை வந்துவிட்டது. இது பாபா எனக்கு அளித்த வரப்பிரசாதம்.
தவிர, நான் எல்லையற்ற சக்தி கொண்டவன் அல்ல. ஆனால் சாயி பாபா பரப்பிரம்மம். எல்லையற்ற சக்தி கொண்டவர். அவர் தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம்.
அப்படிப்பட்ட தெய்வம், தன் பக்தர்களுக்காக இறங்கி வந்து என்ன சொன்னது தெரியுமா?
நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்குக்கடன் பட்டவன். உங்களது தரிசனத்திலேயே திருப்தி அடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு. அங்ங்னமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக்கருதுகிறேன்  இப்படித்தான் பாபா சொன்னார்.
தாழ்மையை கற்றுக் கொள்ள வேண்டும்!
எவ்வளவு என ஆழங்காண முடியாத அந்த இறைவன் தன்னை இந்த அளவுக்குத் தாழ்த்திக்கொண்டிருக்கிறான் என்றால், நாம் நம்மை எந்த அளவுக்குத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். அந்த நினைவு எனக்குத்தாழ்மையைத் தந்திருக்கிறது. சாயி பக்தன் என தன்னை நினைத்துக் கொள்கிறவன் முதலில் பணிவுடைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாபா மாதிரி பணிவோடு நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருநாள் நம்மிடமிருக்கும் உடம்பு உட்பட அனைத்தும் போய்விடும். அன்றைக்கு நம்மை மதிப்பவர் யாருமிருக்கமாட்டார்கள். எனவே, இந்த போலியான மரியாதையைத் தேடி, அதை கவுரமாக நினைத்து நிதர்சனத்தைத் தொலைத்து விடக்கூடாது.
பாகுபாடு பார்க்கக்கூடாது
சாயியின் பெயரால் நடக்கிற என்னுடையதர்பாரில் இதுவரை நான் ஏழை -  பணக்காரன், படித்தவன் -  படிக்காதவன், முதலாளி -  தொழிலாளி, வேண்டியவன் - வேண்டாதவன் எனப்பார்த்ததில்லை. இனியும் பார்க்கமாட்டேன்.
நான் இப்படி யாரையாவது நினைத்தால், பாபாவின் பார்வை வேறு மாதிரியாக இருக்கக்கூடும். ஆகவே, பாபாவுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்ய நான் தயாராக இருப்பதில்லை.
அப்படியிருந்தும் சிலரிடம் மட்டும் நெருக்கமாக இருக்கிறேன் என்றால், அவர்கள் பாபாவிடம் மிக நெருங்கியவர்களாக இருப்பதுதான் காரணம். பிறருக்காகத் தங்களைத் தேய்த்துக் கொள்பவர்கள் என்னிடம் நெருக்கம் காட்டுகிறார்கள், அவ்வளவு தான் விக்ஷயம்.
பாகுபாடு என்பது பெண் கொடுக்கல் வாங்கல் போன்ற விக்ஷயங்களில் மட்டும் இருக்கலாம். அதில் தவறு கிடையாது. மற்றபடி இதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பதால் பாகுபாடு பார்க்கவே வேண்டாம் என்பதை சாயி பக்தன் அறியவேண்டும்.
நம்பிக்கை வேண்டும்
அடுத்து, நான் பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கிறது என உயர்வாகச் சொல்வார்கள். நான் பிரார்த்தனை செய்து அது நடக்காமல் போனவர்களும் இருப்பார்களே? ஆகவே, எனது பிரார்த்தனையால் நடக்கிறது என்பதோ, பாபாவின் சர்வ சக்தியால் நடக்கிறது என்பதோகூட தவறான கருத்தாகும்.
அவரவருக்கு பாபாமீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, பக்தி இருக்கிறதோ, சரணாகதியினுடைய அளவு எவ்வளவோ அவற்றைப்பொறுத்தே நன்மைகளும் அற்புதங்களும் நடக்கும்.
இயேசு கூட, நான் உன்னைக் காப்பாற்றினேன் எனக் கூறாமல், உனது விசுவாசம் உன்னை ரட்சித்தது எனக் கூறியிருக்கிறார். ஆகவே.  உங்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய பிரார்த்தனையின் வெற்றியும் இருக்கிறது எனக் கூறுவேன்.
ஒரு அம்மா சமீபத்தில் தனது மகன் தன் பேச்சைக்கேட்காமல், அவன் விருப்பத்திற்கு வேறு யாரையோ விரும்புகிறான். இதனால் எனக்கு உறக்கமே இல்லை எனக் கூறி பிரார்த்தனைக்கு வந்தார். பிரார்த்தனை செய்து அனுப்பினேன். அடுத்த வாரம் வந்தவர், நீங்கள் உதி கொடுத்து, எதுவும் நடக்கவில்லை. அதே பயம், எப்போது என்ன நடக்குமோ என்ற கவலையால் உறக்கமே வரவில்லை எனக் கூறி, இந்த முறை நன்றாகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
அவருக்கு நம்பிக்கை இல்லை. அதனால் உதி பலன் தரவில்லை. ”பாபாவே நேராக இறங்கி வந்து வரம் கொடுத்தாலும் இந்த நம்பிக்கையில்லாமல்  போனால் எதுவும் நடக்காதுஎன்றேன்.
கண்ணீரோடு உருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு தனிப்பலனே கிடைக்கும். அதில் சிறிதும் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டாம். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றவேண்டும் ஒரு கட்சித் தலைவரின் விருப்பத்திற்கு மாறாக எந்தத் தொண்டனும் நடக்கமாட்டான். சாதாரண கட்சித் தலைவருக்கே இந்த மரியாதை என்றால், கடவுளிடம் நாம் எப்படியிருக்க வேண்டும். இறைவன் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவரது அடிச்சுவட்டை பின்பற்றவேண்டும்!
பாபாவினுடைய அடிச்சுவட்டைப்பின்பற்றி நடக்க முயற்சி செய்தால் போதும், நடக்கிற அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார். பாபாவின் அடிச்சுவட்டைப் பின் பற்றுபவன், பாபா போல எளிமை, பற்றின்மை, நம்பிக்கை, பொறுமை உட்பட நற்குணங்களுடன் வாழ்வது என்பதை லட்சியமாக்க வேண்டும்.
நன்றி கூறவேண்டும்
ஒவ்வொரு நொடியும் அவரது தயவால்தான் நாம் பிழைக்கிறோம். ஒவ்வொரு நிகழ்வையும் அவர்தான் நமக்காக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எனக்கு அற்புதம் செய்கிறார் பாபா எனக் கூறும் பக்தர், எனக்கு அற்புதமே செய்யவில்லை என நினைக்கிற பக்தர் என யாராக இருந்தாலும், இன்றைய நாளைக்காணச் செய்த உங்கள் அருளுக்காக நன்றி பாபா எனக் கூறவேண்டும்.
நான் இதையெல்லாம் செய்வதால் அவர் என்னை ஆளுகிறார். அவருடைய ஆளுகையின் கீழ் நான் கவலையின்றித் திரிகிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...