Thursday, January 24, 2013

ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்!



     மும்பையில் பாக் தீவிரவாதிகள் நிகழ்த்திய அட்டூழியத்தில் பல பொன்னான உயிர்கள் பறி போன நிகழ்வுகளின் சுவடுகள் மனதினை விட்டு நீங்காத நிலையிலேயே, கடந்த வருடம் மோசமான நிகழ்வுகளான பூனா பேக்கரி குண்டு வெடிப்பு, குஜராத் தந்தேவாடாவில் நடந்த ஜாதிக்கலவரம், ஏர் இந்தியா விமான விபத்து, ஜாந்த்ராவில் நடந்த கொடூரமான மனித சாவுகள் இவை எல்லாம் என் உள்ளத்தைக் கலக்கியது.

     பலர் தங்களது உறவினர்கள், குடும்பத்தார், நண்பர்களுக்காகத் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அடுத்து என்ன நேரிடப்போகிறதோ என்று என் உதடுகள் துடித்தன.  இன்று காலையில் பார்த்த எத்தனயோ பேர்களை மாலை பார்க்க முடியுமா என்ற அச்சம் என்னுள் எழுந்தது.  எனக்கு வியர்த்துக் கொட்டியது.

     என்னுடைய பூஜையறையில் பாபாவின் முன்னால் நின்று பாபா இதற்க்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா என்று புலம்பினேன்.

     இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது எப்படி நம்மை நாம் உணர்வது, வாழ்க்கை லட்சியத்தை அடைவது என்பன போன்ற சந்தேகங்கள் என்னுள் எழுந்தன.

     நம் நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என எல்லோரும் தமது பணியினை செவ்வனே ஆற்றி வருகிறார்கள். அதே சமயம் வீட்டில் இருக்கும் நாம், நம்மைப் போன்ற நண்பர்கள், உறவினர்கள், வீட்டு மனைவிமார்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்ன செய்ய முடிகிறது? நம்மால் ஏதும் செய்ய இயலாதா?

     இப்படி எண்ணிக் கொண்டிருக்கும்போது என்னுடைய மகன் பூட்ஸ் மாட்டிக்கொண்டு கல்லூரிக்குச் சென்றான்.  அவன் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும் என்று பாபாவிடம் வேண்டினேன்.  உடனே என்னையறியாமல் இன்னொரு பிரார்த்தனை என் உள்ளத்திலிருந்து வெளியே வந்தது. ‘இந்த உலகத்தில் எந்த இடத்திலிருந்தாவது எந்த ஒரு மனிதனாவது தங்களுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்க்கு நலமாக திரும்பவேண்டும்!’ என்று வேண்டினேன்.

     யாருக்கும் எதுவும் நேரிடக்கூடாது, பிரார்த்தனை ஒரு நல்ல வழி என்று உடனேயே பாபா உணர்த்தினார். நமக்காக பிரார்த்தனை செய்யாமல் எல்லோருக்குமாகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற அந்த உணர்த்துதல் என்னுள் உதயமானது.  லோகா சமஸ்தா சுகினோபவந்து.

     இப்படியொரு பிரார்த்தனை செய்யும் போது நம்மைச் சார்ந்தவர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் இந்தப் பிரார்த்தனை சென்று சேரும். இதை அலையுண்டாக்கும் பிரார்த்தனை என்று சொல்லலாம்.  ஒரு கல்லை நாம் தண்ணீரில் போட்டால் அலையலையாக ஏற்பட்டு அது எப்படி பரவுகிறதோ அப்படித்தான் பிரார்த்தனையின் வலிமையும் இருக்கும்.

     பொதுவாகவே காலையில் எழுந்ததும், இன்றைய தினம் நன்றாக , இருக்கவேண்டும்.  வீட்டில் உள்ளவர்கள், முதியவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும், கணவனுக்கு வேலையில் டென்ஷன் இல்லாமல் இருக்கவேண்டும் என்று இப்படி பலப்பல எண்ணுகிறோமே, இது போன்ற பிரார்த்தனையை கொஞ்சம் விரிவுபடுத்தினால் அதாவது உலகத்தில் உள்ள எல்லோருக்கான பிரார்த்தனையாக மலரும்.  வெளிநாட்டில் வேலை செய்யும்  நம் குழந்தைக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போதே, அந்த நாட்டில் வாழும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

     தினசரி ஒவ்வொரு வேளையும் சாப்பிட ஆரம்பிக்கும்போது பாபாவினை மனதில் நினைத்து, இந்த பூவுலகத்தில் வாழும் அனைத்து ஜீவ ராசிகட்கும் போதிய ஆகாரம் கிடைக்கவேண்டும் என பிரார்த்தனை செய்யலாம். இப்படியே ஒவ்வொன்றுக்கும் பிரார்த்தனை செய்யலாம். இரவு உறங்கும் முன் முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், மருத்துவ மனையில் இருப்போர் போன்றவர்களுக்காக பாபாவிடம் முறையிட்டு இவர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என பிரார்த்தனை செய்யலாம்.  இந்தப் பிரார்த்தனை நமது இதயத்திலிருந்து எழுந்து வருவதாக இருக்கவேண்டும். இப்படி தொடர்ந்து செய்வோமானால் நம்மையறியாமலேயே நமது இதயத்திலிருந்து அலாதியான சக்தி நம்முள் எழுந்து நம்மை எழுப்பும். இதன் விளைவாக நலிந்தோர் குணமடைய வாய்ப்புண்டு.
  நீல் டொனால்ட் வால்ச் (Neale Donald Walsch) தனது புத்தகமான ஹேப்பியர் தென் காட் (Happier Than God: Turn Ordinary Life into an Extraordinary Experience (February 28, 2008) ISBN 978-1-57174-576-7) என்ற புத்தகத்தின் வாயிலாக என்ன சொல்கிறார் என்றால், நாம் எந்தவிதமான பிரார்த்தனை  வைத்தாலும், அதை இயற்கை ஏற்றுக்கொள்ளும். அதாவது ததாஸ்து என்று சொல்லும். ததாஸ்து என்றால் அங்கனமே ஆகட்டும் என்று பொருள். ஆகையால் நாம் பிரார்த்தனை செய்யும்போது வார்த்தைகளை நன்கு தேர்வு செய்யவேண்டும். எதிர்மறை வார்த்தைகளை, தேவையற்ற வார்த்தைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

  இன்றைக்கு விபத்து ஏதும் நேரிடக்கூடாது என பிரார்த்தனை செய்யாமல், இன்றைக்கு அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி செய்யும் போது இயற்கை அங்கனமே ஆகட்டும் என்று சொல்லும். இதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.  இயற்கை வேண்டாம் கூடாது என்ற எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாது.

  எதிர்மறை அல்லது கெட்ட விஷயங்களை அழிக்க வேண்டும் என்றால் நமது பிரார்த்தனையில் நேரடியான பாசிட்டிவ்வான வார்த்தைகளைப் பயன்படுத்தவேண்டும்.  அப்போது பாபா நமக்கு உதவி செய்வார்.  பாகுபாடற்ற பிரார்த்தனையின் மூலம் நாம் அனைவரும் ஒருவரே, நமக்குள் பேதமில்லை, நம்முள் இருப்பவர் ஒருவரே என்ற எண்ணம் தோன்றும்.  சாயி “நான் எல்லோர் உள்ளத்திலும், எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறேன்” என அடிக்கடி கூறுவார்.  ஆகவே நாம் பிரார்த்தனையில் பாசிட்டிவ்வான சொற்களையே பயன்படுத்தவேண்டும்.

  இந்த அணுக்கள் எல்லாம் அன்பு, பாசம், நட்பு என்ற வார்த்தைகளில் கூடியுள்ளது.  அதனால் எல்லோருக்கும் சாந்தி, நல்லுணர்வு, ஆசிர்வாதம் கிடைப்பது திண்ணம்,

  ததாஸ்து.

நன்றி:  சாயிலீலா, சுமோனா பாக்ஸி, புதுதில்லி
தமிழில்: வெங்கட்ராயன், ஊத்துக்கோட்டை

நீல் டொனால்ட் வால்ச் (Neale Donald Walsch) பற்றி
 மேலும் அரிய இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...