Wednesday, December 4, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து-2


      'நான் அது இல்லை; அது நான் இல்லை; பர பிரம்மத்தி­ருந்து நான் வேறுபட்டவன்’ என்ற பேதபுத்தி எவனுக்கு இருக்கிறதோ அவன் எப்பொழுதுமே மரணத்தின் பிடியில் வாழ்கிறான். 
      பிறப்பை இறப்பு தொடர்கிறது; மறுபடியும் பிறவி ஏற்படுகிறது. ஜனனமரணச் சக்கரம் அவனை முடிவேயில்லாமல் விரட்டுகிறது. 
பெருமுயற்சி எடுத்துச் செய்யவேண்டியவையான யாகமும் தவமும் தானமும் அளிக்கக்கூடிய சொர்க்கத்தில், ஸ்ரீமன் நாராயணனை நினைப்பதற்கு வாய்ப்பில்லையெனில், அந்த சொர்க்கத்தினுள் புகுவதில் அர்த்தம் என்னவோ.
      கேவலம் சுகபோகத்தை மட்டும் அளிக்கும் இடமாக இருந்தால் நமக்கு சொர்க்கம் வேண்டா. எங்கு கோவிந்த நாம சங்கீர்த்தனம் இல்லையோ அவ்விடத்தில் நமக்கென்ன வேலை? 
      சொர்க்கத்திற்குப் போனாலும் நரகத்திற்குப் போனாலும் இன்பதுன்ப அனுபவங்களில் பேதம் ஏதுமில்லை. இந்திரனானாலும் கழுதையானாலும் புலனின்ப அனுபவம் ஒன்றுதான். 
      இந்திரன் நந்தவன சுகத்தில் புரள்கிறான்; கழுதை குப்பைமேட்டு சுகத்தில் புரள்கிறது. ஆனாலும், சுகம் என்ற நோக்கில் பார்க்கும்போது இரண்டிற்கும் சிறிதளவும் பேதம் இல்லை. 
        புண்ணியக் கணக்கு தீர்ந்தவுடன் எங்கிருந்து கீழே விழுந்துவிடுவோமோ, அங்கே செல்வதற்கு எக்காரணத்திற்காகப் பிரயத்தனம் செய்யவேண்டும்? 
         ஒரு கல்பகாலம் வாழக்கூடிய பிரம்மலோகத்திற்கு என்ன பெருமை? அற்ப ஆயுளாக இருப்பினும் பூலோக வாழ்க்கையே சிறந்ததன்றோ. குறுகிய ஆயுளாக இருந்தபோதிலும், ஈசுவர அர்ப்பணமாக ஒருகணம் வினையாற்றினாலும் அபயம்  கிடைக்கிறது. ஹரியின் கதையையும் குருவின் கதையையும், வர்ணித்தும் ஆடியும் பாடியும் இறைவனைத் தொழும் பக்தர்கள் இல்லாத இடம் எதற்கு உபயோகம்?
 
முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஐக்கியமானவை என்ற விஞ்ஞானமே, என்றும் அழியாத உன்னதமான பேற்றை அளிக்கக்கூடியது. இதைப் பெறுவதற்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தைவிட பூலோகமே சிறந்த இடம்.
 
       உடலாலும் வாக்காலும் மனத்தாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும் பணிவுடனும் குருவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்.
 
      இவ்வாறு குருவிடம் சரணடைந்த பிறகு சம்சார பயம்பற்றிப் பேச்சுண்டோ? மொத்தமாகக் களைந்துவிட அவர் இருக்கும்போது, உலகவாழ்வின் விசாரங்களைப்பற்றி என்ன விசாரம். மாயையும் அஞ்ஞானமும் எங்கு வாசம் செய்கின்றனவோ, அங்கே பிள்ளைகுட்டிகளையும் மாடுகன்றுகளையும்பற்றிய பாசமும் உலகவாழ்வுபற்றிய கவலைகளும் இரவுபகலாக ஓய்வின்றி இருக்கும். நல்ல விஷயங்களைப்பற்றிய சிந்தனை சிறிதளவும் இராது.
 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...