Tuesday, August 2, 2016

உனக்கு மங்களமாக அமையும்!



சாயி பக்தர் பாபாவை எப்போதும் நினைக்க வேண்டும், அவரை தரிசிக்க வேண்டும், அவரது பாதங்களில் மனதை லயிக்க விட வேண்டும். ஏன் இப்படி செய்ய வேண்டும் என்றால், இந்த மூன்று சாதனங்களும் நம்மை கர்ம வினையின் எல்லாவிதப் பிடிகளில் இருந்தும் விடுவித்து விடும் சக்தி பெற்றிருக்கிறது, எனவே இப்படிச் செய்யவேண்டும்.
நீங்கள் சதா சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருப்பீர்களேயானால் உங்களை ஏழு கடல்களுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்று பாபா கூறியதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
அவருடைய திவ்விய நாமம் நமது பாவங்களைக் கழுவி விடுகிறது. இதை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமானது, எந்த தீர்த்தத்திலும் நீராட வேண்டிய அவசியமில்லை, ஷேத்திரங்களுக்குப் போக வேண்டியதில்லை. எதற்காகப் போகிறோமோ அந்த நோக்கம் பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் நமக்கு நிறைவேறிவிடுகிறது. பகவான் நம்முடனேயே இருப்பான்.
ஒரு பக்தன், சாயியை அன்பு கலந்த பக்தியுடன் வணங்கவேண்டும், அவர் மீது பூரணமான நம்பிக்கையை வைக்க வேண்டும். ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்றால், யாருடைய பாவம் ஒழிந்தனவோ, யாருடைய பூர்வ புண்ய வினைகள் செயல்பட ஆரம்பித்து உள்ளனவோ, யாருக்கு நல்லது நடைபெற உள்ளதோ அவர்கள் என்னை வழிபட ஆரம்பிக்கிறார்கள் என்று பாபா கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பூரண பக்தியுடனும் விசுவாசத்துடனும் என்பால் லயமாகிற பக்தனுடைய எல்லாச் செயல்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே அவரை விடாமல் வணங்க வேண்டும்.
அவரை தரிசிக்கப் போகும்போது அவர் தனது சமாதியிலிருந்து எழுந்துவந்து நம்மை கட்டி அணைத்துக்கொள்கிறார்; நம்மைத்தொடுகிறார்;  முத்தமிடுகிறார். இந்த உணர்வு அவரது உண்மையான பக்தர்களுக்கு ஏற்படுகிற அனுபவமாகும். இந்த அனுபவத்தை நீங்கள் அடையவேண்டும். என் சமாதி என் பக்தருடன் உறவாடும், என் எலும்புகள் அவர்களுடைய நலனை விசாரிக்கும் என பாபா கூறியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, கனடாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும்,சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா என எந்த நாட்டில் இருந்தாலும் உங்களை பாபா தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கால்களில் பக்தி என்கிற நூலைக் கட்டி வைத்திருக்கிறார். அதைக் கொண்டு உங்களை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறார். பொம்மலாட்டக்காரன் கையில் உள்ள பொம்மையைப் போல நீங்கள் அவரால் ஆட்டப்பட வேண்டும். அப்படித்தான் ஆடுகிறீர்கள் என்றாலும் முழுவதும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஆட்டப்பட வேண்டும் என்பதற்காக அவரை வணங்கி வழிபாடு செய்யுங்கள்.
இந்த ஆண்டு முழுவதும் இனி வரும் காலங்கள் யாவிலும் நீங்கள் சிரமமின்றி வாழவேண்டும் என்றால் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் உங்களது எல்லா செயல்களுக்கும் அவர் சூத்திரதாரியாகிவிடுவார். நீங்கள் நினைத்ததும், நினைக்காததும் உங்களுக்குச் சாதகமாக நடக்கும்.
நீங்கள் முழுக்க முழுக்க அவரை சரண் அடைந்து வழிபட ஆரம்பித்துவிட்டால் அவர் உங்களை வழி நடத்துவதை சுலபமாக உணரமுடியும். நமக்கு எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக அவர் வருவதையும்;, நமக்கு முன்னால் செல்வதையும் பக்கத்தில் இருப்பதையும் உணரலாம்.
இனியாவது நாம் நமது கர்வத்தை விட்டு விட்டு அவரை கபடம் இல்லாத மனத்துடன் வணங்க வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்துடன் மணியடிக்கக் கூடாது. இது அகம்பாவமாகும். அகம்பாவத்துடன் அவரை நான் கும்பிடுகிறேன் என் பக்கத்தில் அவர் இருக்கிறார் என சொல்லிக் கொண்டு மனம் போன போக்கில் போகக்கூடாது. நமது மனதை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்.
நமது மனதில் எளிமை இருக்கவேண்டும், தெளிவு இருக்க வேண்டும், பணிவு இருக்க வேண்டும், நம்பிக்கை இருக்கவேண்டும். அது மட்டுமல்ல அவர் தனது சக்தியை முழுமையாக நம்மிடம் பிரயோகிக்கும் அளவுக்கு நாம்ஒரு குழந்தையைப் போல மாறி விடவேண்டும்.
வளர்ந்த உங்களைத் தூக்கி விளையாட உங்கள் பெற்றோரால் இயலுமா? ஆனால் நீங்கள் குழந்தையாக இருந்தபோது அவர்கள் தூக்கிக் கொஞ்சினார்கள், விளையாட்டுக் காட்டினார்கள், சுமந்து சென்றார்கள் அல்லவா? அப்படியே பாபா உங்களைத் தூக்கி சுமக்க வேண்டும் என்றால் கபடம், ஞ்சனை, பொறாமை, பொய், ஏமாற்றுதல், கள்ளத்தனம் போன்ற குணங்களை விட்டவர்களாக அவரை வழிபட வேண்டும்.
அவருடைய திருநாமத்தையே சொல்லிப் பழக வேண்டும். இதனால் பாவம் போகிறது, நமது கோபம் போகிறது. இன்னல் மறைகிறது, கேடு வருவது தவிர்க்கப்படுகிறது. வேண்டிய அனைத்தும் விரைவில் வந்து கிடைப்பதற்கான சூழல் உண்டாகிறது.
அதுமட்டுமல்ல, அறியாமை மிக்க குணமும், எதையும் அடைந்துவிட வேண்டும் எனத் துடித்து தர்மத்திற்கு மாறாக நடக்கிற குணமும் நம்மை விட்டு அகன்று, மனதில் இரக்கமும் கருணையும் பிறக்க வாழும் நிலை உண்டாகிவிடுகிறது.
நமக்கு எது தேவை என்ற எண்ணம், தேடல் நம்மைவிட்டு நீங்கத் தொடங்கிவிடுகிறது. காரணம், அவை அனைத்தையும் பாபாவே நமக்காகக்கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார். எனவே, நாளையைப் பற்றிய கவலை வேண்டாம் என்ற நிலை உண்மையான பக்தனுக்கு உண்டாகிறது.
எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற தேவை இல்லாத பயம் மறைந்துவிடுகிறது. எல்லாவற்றையும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற தைரியமும் தெளிவும் வந்து விடுகிறது. ஆகவே, நீங்கள் இந்த உணர்வை அனுபவமாகப் பெற  முதலில் சாயி பாபாவை வணங்க வேண்டும்.
இதுவரைக்கும் அவரை இப்படித்தான் கும்பிட்டு வருகிறேன். எனக்கு எதுவும் கிடைத்தபாடில்லை. அவர் எனக்கு எல்லாவற்றையும் சரியாகத் தருகிறார் என்பதை நான் எப்படி புரிந்துகொள்வது? சரியாகத் தரும் வகையில் நான் இருப்பதை எப்படி உணர்ந்து கொள்வது எனக் கேட்பாயானால், கூறுகிறேன் கவனி!
உனது மனம் எதையாவது வேண்டிக் கொண்டே இருக்கிறதா? பரபரக்கிறதா? வரவேண்டியதற்காக ஏங்குகிறதா? போனதற்காக கவலைப்படுகிறதா? சூழ்நிலை மாறும்போது நீ உணர்ச்சி வசப்படுகிறாயா? ஆபத்து அல்லது சங்கட நேரத்தில் மனம் அலைபாய்கிறதா? ஆம் என்று சொன்னால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்று பொருள்.
அடப் போய்யா... பாபா பார்த்துக் கொள்வார் என மனம் தைரியமாக நீ எதிர்கொள்கிற எதைப் பார்த்தும் துச்சமாக நினைக்கிறதா? சித்தம் கலங்காமல் இருக்கிறதா? எது வந்தாலும் பாபா நீயே கதி எனக் கூறுகிறதா? அப்படியானால் நீ பக்குவப்பட்டு விட்டாய் என்று அர்த்தம். மன ஒருமை உனக்கு கை வரப்பட்டுள்ளது. நீ அவரை சரணாகதி அடைந்து இருக்கிறாய். எதற்கும் கவலைப்படாதே அவர் உன்னை வழிநடத்துவார்.
இதையெல்லாம் பின்பற்றி இந்த ஆண்டு முதல் உண்மையான சாயி பக்தராக வாழ முடிவு செய்து கொண்டபிறகு, பாபா என்னை உன்னைப் போல மாற்றுங்கள் என வேண்டுதல் செய். பக்தி தானாக எப்போதும் மனதில் இருக்கும். தவறு செய்யாத அறநெறி வாழ்க்கை அமையும். மனது அலையாது. உடம்புக்கு எதுவும் வராது.  நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும், உன்னைப் பார்த்து நாலுபேர் நல்லவர்களாக மாறுவார்கள்.
வாழ்க நீ! உனது பக்தி வளர்க! ஓங்குக செல்வம்!

ஸ்ரீ சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...