Monday, August 8, 2016

உதவ எனக்கு சித்தம் உண்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். என்னுடைய வீட்டிற்கு பாபா எப்போதோ வந்து விட்டார் என்றாலும் அவரை அடையாளம் தெரிந்துகொள்ள இயலாமல் விட்டுவிட்டேன். எனது மகளின் தீவிர வேண்டுதல் போன்ற நிகழ்வுகளால் அவரிடம் அடைக்கலமானோம்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவரால் நடக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர் எங்களோடு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலியால் பாதிக்கப் பட்டேன். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை.
பாபாவின் உதியை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் அறுவை சிகிச்சை தேவையில்லை, ஊசி போட்டால் போதும் என நினைத்து வலியை நீக்க ஊசி போட்டுக் கொண்டேன். இந்த நிகழ்வு பாபாவின் மீது அதிக பக்தியை ஏற்படுத்திவிட்டது. எப்படி என்கிறீர்களா? ஊசி போட்டு வலி போகும் என நினைத்தால், வலி போவதற்கு பதில் அதிகமாகிவிட்டது. குறையவே இல்லை. இரவு முழுவதும் உறங்காமல் தவித்தேன்.
மறுநாள் பாபாவின் உதியைத் தடவியபடி, பாபா தெரியாமல் தவறு செய்துவிட்டேன், இனி உன் உதியைத் தவிர எதையும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். நம்பவே முடியாதவகையில் வலியை நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு எப்போதாவது வலி வந்துபோகும். பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கு வரும் போதெல்லாம் சாயி வரதராஜனிடம் கூற நினைப்பேன். ஆனால் மறந்துவிடுவேன். ஒருமுறை அவரிடம் கூறிய போது, என்னைத் தொட்டுப் பிரார்த்தனை செய்தார். அடுத்த வினாடியே வலி போய்விட்டது. இன்றுவரை நன்றாக இருக்கிறேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது. எங்களுடைய வயலில் நெல் அறுவடை செய்ய ஆட்களுக்குக் கூறியிருந்தோம். திடீரென்று இரவு பதினோறு மணியளவில் வானம் இடி மின்னலுடன் தூறல் போட ஆரம்பித்தது.
இவ்வளவு நாட்களாக மழையில்லாமல் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் விளைச்சல் எல்லாம் வீணாகி விடுமே என பயந்தேன். உடனே பாபாவிடம், பாபா இந்த மழையை தூறலோடு நிறுத்தி எங்கள் வயலைக் காத்து அருள் செய்யுங்கள். நெல் மற்றும் வைக்கோலை பாதுகாப்பாக வைக்க உதவி செய்யுங்கள், மழை வராமல் காத்து அருளுங்கள் என வேண்டிக் கொண்டேன்.
இந்த நன்மையைச் செய்தால் நன்றிக்கடிதமாக சாயி தரிசனம் புத்தகத்தில் எழுதுவேன். ஒருவேளை அப்படி நடக்காமல் போனாலும் பரவாயில்லை, எது நடந்தாலும் உங்கள் பொறுப்பு. நான் தவறாக வேண்டுதல் செய்திருந் தால் மன்னித்து விடுங்கள் என வேண்டினேன். இந்த வேண்டுதலோடு படுத்தேன். நன்றாக அயந்து உறங்கி அதிகாலையில் எழுந்தேன். மழை தூறலோடு நின்று விட்டிருந்தது. நாங்கள் அறுவடை செய்து நெல், வைக்கோல் அனைத்தையும் மாலை மூன்றரை மணிக்கே வீட்டுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டோம். ஆட்களுக்கு ஊதியம் தந்து அனுப்பிய பிறகு சுமார் நான்கு மணியளவில் வானம் இருண்டது.
இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த மழையை வானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வந்த நாட்களிலும் விட்டுவிட்டு மழை வந்தது. ஆனால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவருடைய பொறுப்பில் விட்டதால் ஒரு நாள் மழையை நிறுத்தி எனது வேண்டுதலை நிறைவேற்றினார் பாபா.
எனக்கு இதைச் செய்யுங்கள் எனக் கேட்காமல், உங்கள் பொறுப்பில் விடுகிறோம். சித்தம் இருந்தால் செய்யுங்கள் என வேண்டுங்கள். உனக்கு என பாபா நன்மையைச் செய்வார்.
ஆர். விஜயா, ஊத்தங்கரை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...