Monday, February 25, 2013

உனக்குப் புதுவாழ்வு தருவேன்!





கிழக்காசியாவில் ராணுவ மருத்துவமனையில் பணி செய்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து, நோயினால் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு,
நிராதரவான நிலையில் நின்ற ஒரு பக்தருக்கு சாயி எப்படி அனுக்கிரகம்
செய்தார் என்பதை அவரது வாய் மொழியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

 கடந்த 2012 ம்  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவு. மனதை இனம் புரியாத ஒரு பாரம் அழுத்திக்கொண்டு இருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.  கடந்த காலங்களை திரும்பிப் பார்த்தபடி படுக்கையில் படுத்திருந்தேன். அறுபது வயதைத்தாண்டிய இத்தனை காலமும் துன்பங்களையே அனுபவித்திருக்கிறேன்.   என்னால் பலனடைந்த, வேண்டாத உறவுகள் மற்றும் தகாத நண்பர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்து விட்டேன்.
அவையெல்லாம் போனால் போகட்டும். ஆனால்,  போனால் திரும்பி வராத, எனது குழந்தையை இழந்தது பெரிய இழப்பு. போதாக்குறைக்கு ஓடி ஆடி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் தளர்ந்து போகும் வகையில் இப்போது ஒரு காலையும் இழந்து இனி என்ன செய்யப் போகிறேன், எப்படி வாழப் போகிறேன் என்ற கவலை என்னைத்துரத்த ஆரம்பித்து, ஓட முடியாமல் படுக்கையில் முடங்கிக் கிடந்தேன்.
எனது வாழ்க்கையை மருத்துவ உதவியாளராக ஆரம்பித்தேன். திடீரென மாரடைப்பு வருகிறவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துவருதல், விபத்தின்போது முதலுதவி தருதல், தேசியப் பேரிடர் மற்றும் வன்முறைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெறச் செய்தல் போன்ற  சேவைகளை மனம் உவந்து செய்துகொண்டிருந்தேன்.
பூனாவில் உள்ள எக்ஸைடு பேட்டரிகளைத் தயாரிக்கும் குளோரைடு நிறுவனத்தில் கம்பவுண்டர் பணி கிடைத்து அங்கு பணி செய்துவந்தேன். அங்கிருந்தபடி வெளிநாட்டில் வேலைக்கும் முயற்சி செய்தேன். மஸ்கட்டிலுள்ள பிரிட்டிஷ் மருத்துவமனையில் கம்பவுண்டர் பணிக்கு தேர்வு பெற்று, மஸ்கட் சென்று முப்பத்தோறு ஆண்டுகள் ராணுவ மருத்துவமனை யில் பணி செய்தேன். நோய் வாய்ப்பட்ட அல்லது காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை உதவிகளைச் செய்வது என் பணி. கை நிறைய சம்பளம் தந்தார்கள். அதில் என் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்ததுதான் நான் அடைந்த பலன். மற்றபடி, உறவுகள் என்று சொல்லிக்கொண்ட சிலரும், நண்பர்கள் என சேர்ந்து கொண்ட சிலரும் என்னை முழுவதுமாக ஏமாற்றி என் சம்பாத்தியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
முப்பத்தோறு ஆண்டுகள் கழித்து நான் இந்தியா வந்த பிறகு, அனைத்தையும் இழந்து, என் கடைசி மகளின் திருமணத்திற்காக இருந்த ஒரு வீட்டையும் விற்கவேண்டியிருந்தது. இப்போது எதுவும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு, ஏதாவது வேலை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறேன்.  சம்பாதித்த அனைத்தையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கை இழந்ததில்லை. பாண்டிச்சேரியில் குடியேறிய பிறகு, எனக்குத்தெரிந்த மருத்துவ உதவியாளர் சேவையை தொடர்கிறேன்.
வயதான முதியவர்கள் பாத்ரூம் போன்ற இடங்களில் வழுக்கி விழுந்து அடிபட நேர்ந்தால் இடுப்பு எலும்பு முறிந்துவிடும். அப்படிப்பட்ட நிலையில் படுத்தப் படுக்கையாகி விடுவார்கள். படுக்கைப்புண் வந்து, உடலெல்லாம் புண்ணாகும்.  சரியான முறையில் கவனிக்காவிட்டால், புண் நாற்றமெடுத்து சுகாதாரக் கேடும், உயிர் போகும் ஆபத்தும் ஏற்படும்.  இதைத் தடுக்க, உரிய முறையில் டிரஸ்ஸிங் செய்யவேண்டும். இந்த சேவையில் நான் தனிப் பயிற்சி பெற்று இருந்ததால் என்னை தெரிந்தவர்கள் அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மூலம் ஓரளவுக்கு வருவாய் வந்துகொண்டிருந்தது.
சமீபத்தில்கூட படுக்கைப் புண் வந்து பாதிக்கப்பட்ட வயோதிகர் ஒருவருக்கு டிரஸ்ஸிங் செய்யச்சென்றேன். இனி பிழைக்கமாட்டார் என்ற அளவுக்கு பாதிப்பு இருந்தது. அவருக்கு பதிமூன்று முறை டிரஸ்ஸிங் செய்தேன். ஒரு டிரஸ்ஸிங் விலை 350 ரூபாய். அவர் படுப்பதற்காக புதிய வித படுக்கை ஒன்றை சிபாரிசு செய்தேன். அதையும் அவரது குடும்பத்தார் வாங்கிக் கொடுத்தார்கள். அந்த முதியவர் இப்போது நலமாக இருக்கிறார்.
இப்படியொரு நிறைவான சேவை செய்து கொண்டு காலம் கழிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு நோய் ஒரு எதிரியாக வந்தது. தொடையிலிருந்து காலுக்குச் செல்லும் இரத்தக் குழாயில் ஐந்து இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. காலுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டம் தடைப்பட்டதால், கால் அழுக ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட பகுதியை நீக்காவிட்டால் முழு உறுப்பையும் எடுக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட காலை எடுத்துவிட சம்மதித்தேன்.
ஒரு கை போயிருந்தாலும், கால்களால் நடந்து சென்று ஏதேனும் வேலை செய்திருப்பேன்.  கால் போய்விட்டதால் நடக்க முடியாத நிலைக்குத்தள்ளப் பட்டுவிட்டேன். இனி வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என தடுமாற்றம்!
முன்னாள் ராணுவத்தினருக்கு அரசாங்கம் மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவது வழக்கம். எனக்கும் இதை அளித்தால் அதன் உதவியோடு நடமாடலாம் என அதற்காக விண்ணப்பித்திருந்தேன். வருவாய் இல்லாததால் என் ரேன் கார்டை ஏழைகளுக்கான கார்டாக மாற்றவும் விண்ணப்பித்து இருந்தேன்.
இன்னும் தேவைகள் பல இருந்தன. எல்லாவற்றையும் சுருக்கிக்கொண்டு நானும் என் மனைவியும் வாழவேண்டியிருந்ததால் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தோம். வயதான இந்தக் காலத்தில் உதவுமாறு பாபாவை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.
சரியாகச் சொன்னால் கடந்த ஓராண்டாகத் தான் பாபாவைத் தெரியும். அதுவும் அறுவை சிகிச்சை செய்து காலை நீக்க, ஆபரேன் தியேட்டருக்குள் போகும்போது, என்னுடன் வந்த என் தங்கையும் தங்கை மகனும் பாபாவை முழுமையாக நம்பு என்று சொன்னார்கள்.
இதன் தொடர்ச்சி நாளை……..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...