Wednesday, May 27, 2015

சாயி சப்தாகம் விளக்கம்!



சாயி சத்சரித்திரம் வியாழக் கிழமை படிக்கத்துவங்கினால் அடுத்த வியாழக்கிழமையன்று புத்தகம் முழுவதும் படித்து நிறைவு செய்து, முடிந்த நிவேதனங்களை தயார் செய்து பாபாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா? ஒரு வாரத்தில் புத்தகத்தை எல்லா அத்தியாயங்களையும் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டா? இதன் பின்னணி என்ன? சற்றே விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(ஆர். பாஸ்கரன், பெங்களுர் -  60)
புனித நூல்களை சப்தாகம் எனப்படுகிற ஏழு நாட்கள் பாராயணம் செய்கிற நியதி வடநாடுகளில் காலம் காலமாகப் பின்பற்றப் படுகிற ஒன்றாகும்.
நம் வேண்டுதல் நிறைவேறிட வேண்டுதல் செய்து, தினமும் நித்திய நியமமாக எழுந்து குளித்து, குளிர்ந்த மனத்துடன் இறைவனை மனதில் நிலை நிறுத்தி அவர் முன் அமர்ந்து அவரது புனித நூலை வாசிப்பதே சப்தாகம் செய்வது ஆகும்.
குரு வழிபாடு செய்கிறவர்கள் இந்த முறையைப்பின்பற்றி குருவருளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது பாரம்பரியமாக வருகிற அனுபவ உண்மை. சத்ய நாராயண விரதம் மேற்கொள்கிறவர்கள் அனுசரிக்கிற விதமும் இவ்வாறுதான். இது பற்றி சத்சரித்திரம் 53வது அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
”சப்தாகம் வாசித்துப் புண்ணியம் சம்பாதியுங்கள்.  சாயீ உங்களுடைய மிகப் பிரியமான விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார். பிறவிப் பயமும் ஒழியும். சப்தாகத்தை ஒரு வியாழக்கிழமையன்று ஆரம்பம் செய்யவும். விடியற்காலையில் குளித்த பிறகு நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து    விட்டு பாராயணத்திற்கு உட்காரவும்.
ரம்மியமானதும், விஸ்தீர்ணமானதுமான ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்யவும். அதை வாழைக் கன்றுகள் கட்டியும், பூவாழை இலைகள், பூக்கள், பட்டு வஸ்திரங்கள் இவற்றை உபயோகப்படுத்தியும் அலங்காரம் செய்யவும்.
மண்டபத்தினுள்ளே ஓர் உயரமான ஆசனத்தை வைக்கவும். மண்டபத்தைச் சுற்றி வெவ்வேறு விதமான வண்ண வண்ண கோலங்களைப்போடவும். சத்குருவின் உருவச் சிலை ஒன்றையோ அல்லது அழகிய புகைப்படத்தையோ உயரமான ஆசனத்தின் மீது ஸ்தாபனம் செய்யும். பிரேம உணர்வுடன் வந்தனம் செய்யவும்.
ஸ்ரீ  சாயி சத்சரித்திரம் புத்தகத்தை சீனத்துப்பட்டினால் சுற்றி, சத்குருவின் முன்னே வைக்கவும். படத்திற்கும் புத்தகத்திற்கும் பஞ்சோபசார பூஜை செய்த பின் பாராயணத்தை ஆரம்பிக்கவும்.
அடுத்த எட்டு நாட்களுக்கு விரதம் அனுசரிக்கவும். பால், பழம், வறுத்த தானியம் இவற்றை மட்டும் புசிக்கவும். அல்லது தினமும் ஒரு முறை மட்டும் பகலிலோ இரவிலோ மட்டும் உணவருந்தவும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து சத்குருவின் உருவத்தை மனத்திரைக்குக் கொண்டு வரவும். அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பிய மனத்துடன் சத்சரித்திரத்தை வாசிக்கவும். எட்டு, எட்டு, ஏழு, எட்டு, ஆறு, எட்டு, ஏழு என்கிற கிரமத்தில் அத்தியாயங்களைப் பிரித்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் பாராயணம் செய்யவும். பொருளடக்கத்தை எட்டாவது நாளுக்கு விட்டுவிடவும்.
எட்டாவது நாளில் சப்தாக பாராயணத்தை முடித்து, சாயீ நாராயணனுக்கு நிவேதனம் செய்யவும். பிராமணர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போஜனம் செய்விக்கவும். சக்திக்கு ஏற்றவாறு பிராமணர்களுக்கு தட்சணை அளிக்கவும்.     
வைதீக பிராமணர்களை அழைத்து, இரவில் வேத கோக்ஷம் செய்ய வையுங்கள். சர்க்கரை கலந்த பாலையும் வெகுமானத்தையும் அளித்து அவர்களைத் திருப்தி படுத்துங்கள். முடிவாக சத்குருவின் பாதங்களில் வணங்கி உசிதமான தட்சணையை அர்ப்பணம் செய்யுங்கள்.
இந்தப் பணம் சீரடி சமஸ்தானத்தின் நிதியை வளர்க்கும் பொருட்டு சமஸ்தானத்தின் பொருளாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு செய்தால் சாயி பகவான் மகிழ்ச்சி அடைந்து பக்தர்களுக்கு பசாயதானம் வழங்குவார்.   பிறவி பயம் என்னும் பாம்பை அழிப்பார், மோட்சத்திற்கு வழிகாட்டுவார்”  என எழுதப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிரத்தையோடு இறைவனை எண்ணி வழிபட வேண்டும் என்பதற்காகவே சப்தாகம் ஏற்படுத்தப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வளவு சிரமப்பட்டு விரதம் இருக்காமல், சாதாரணமாக பாபா படத்தின் முன்பு அமர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது. அதே போல நிவேதனங்களை ஏழை எளியவர்களுக்கு அளிப்பது, தட்சணையை சீரடிக்கு அனுப்பாமல் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து அவர்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்வது ஆகியவை உயர்ந்த பயனைத் தரும்.
கடைசியாக எழுதப்பட்டுள்ள விக்ஷயம், சீரடி சமஸ்தானத்தை வளர்க்கும் உத்தியாகும். இப்போது சீரடி வளர்ந்துவிட்டது. ஆகவே, மற்ற உயிர்களுக்கு உதவினாலே அந்தப் பயன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...