Saturday, May 30, 2015

எந்த மனிதரையும் ஆசிர்வதிக்கிறார்!

சத்சரித அத்தியாயம் பதினொன்றை எவர் பக்தியுடன் படிக்கிறாரோ அவர் எல்லாக்கேடுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்று சத்சரிதம் தெளிவாகக் கூறுகிறது. நமது குருநாதர் சாயி வரதராஜன் அவர்களும் இதை சத்சங்கத்தில் அடிக்கடி குறிப்பிடுவார். அப்படி என்னதான் பதினொன்றாம் அத்தியாயம் சொல்லுகிறது.
எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருப்பின் வெகு விரைவில் கடவுள் காட்சியைக் காணலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறி, அவாவற்றவராகி இறுதியில் உயர்நிலை எய்துவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
சகுண பிரம்மமாக சாயி இருப்பதால் அவரை வழிபடுவது எளிதாகிறது. சகுண பிரம்மத்தை ஒரு குறிப்பிட்ட காலக் கூறு வரை வணங்கினால் ஒழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியடையாது.
நாம் முன்னேறும்போது அது நம்மை வழிபட இட்டுச் செல்லுகிறது. உருவம், யாக குண்டம் தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்கு உரியவை என்றாலும் சாயியே இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்.
சாயி எல்லையற்ற அளவு மன்னிப்பவராகவும், கோபமற்றவராகவும் நேர்மையாளராகவும், மென்மையாளராகவும், சகிப்புத் தன்மை உடையவராகவும், உவமை கூற முடியாத அளவு திருப்தி உடையவராகவும் இருக்கிறார்.
கங்கை நதி, தான் கடலுக்குச் செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட எல்லா  ஜீவராசிகளுக்கும் குளிர்ச்சி அளித்து, புத்தணர்ச்சியூட்டி, உயிரை அளித்து, பலரது தாகத்தையும் தணிக்கிறது.
அதுபோல், சாயி போன்ற புண்ணிய புருக்ஷர்கள் அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் தருகிறர்கள். கிருஷ்ண பரமாத்மாவும் ஞானி எனது ஆத்மா எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம் என்று கூறியிருக்கிறார்.
சச்சிதானந்தம் (சத்து சித்து ஆனந்தம்) என அறியப்படும் இந்த விவரிக்க முடியாத ஆற்றலின் சக்தியே சீரடியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.
பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார். அவர்கள் விரும்பியபடி தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார். சீரடியில் அவர் வாழ்ந்தது போல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்கும் நிறைத் தன்மையை அவரது பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள். இன்றும் உணர்ந்து வருகிறார்கள்.
பக்தர்கள் விரும்பியபடி பாபாவை வழிபட அனுமதித்தார் என்பதற்கு டாக்டர் பண்டிட்டின் வழிபாடு ஒரு உதாரணமாகும். ஒரு முறை தாத்யா சாகேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் பாபாவுக்கு நெற்றியில் சந்தனம் பூசி வழிபாடு செய்தார். அதுவரை பாபாவுக்கு நெற்றியில் சந்தனம் பூச எவரும் துணிந்ததில்லை. மகல்சாபதி மட்டுமே பாபாவுக்கு கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். பின் எப்படி டாக்டர் பண்டிட் செய்தார்?
பாபா அதற்கு விளக்கம் அளித்தார். டாக்டர் பண்டிட் தம்மை அவரது குருவான காகா புராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஷ்வரைச் சேர்ந்த ரகுநாத் மகராஜ் என்று நம்பி, அவரது குருவுக்குச்செய்வது போலவே செய்தார் எனச் சொன்னார்.
டாக்டர் பண்டிட்டும், தமது குருவாகவே பாபா அமர்ந்திருந்ததால் தாம் நெற்றியில் சந்தனம் பூசியதாகவும் ஆமோதித்தார். தற்பெருமை உடையவர்களையும் மாற்று சிந்தனையாளர்களையும் பாபா ஒருபோதும் உடனடியாக அனுமதிக்க மாட்டார். அவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பார் என்பதற்கு சித்திக் பால்கே நிகழ்வும் ஒரு உதாரணம்.
சித்திக் பால்கே என்ற முகமதிய பெருந்தகையை பாபா ஒன்பது மாதங்கள் வரை மசூதியில் நுழைய அனுமதிக்க வில்லை. பால்கே மிகவும் வருத்தமுற்று சாமா மூலம் பாபாவை தரிசிக்க முயன்றார்.
பாபாவும் கடைசியில் அவரை, ஏன் உன்னை தற்பெருமைப் படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப் போல் பாவனை செய்து கொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகவா கற்றுணர்ந்தாய்? உனது மெக்கா தலயாத்திரை குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? அதனால்தான் என்னை நீ அறியவில்லை என்றார்.
பால்கே தனது தவறை உணர்ந்தவுடன் பாபா ஏற்றுக்கொண்டார். மனிதர்களின் தவறுகளை, பெருமை களை பாபா சரி செய்வது போல் பஞ்சபூதங்களின் மேலும் கட்டுப்பாடு வைத்திருந்தார்.
பயங்கரமான புயல் வீசி, மேகங்கள் கர்ஜித்து இடி மின்னல், மழை வெள்ளமாய் சீரடி தத்தளித்து மக்கள், ஜீவ ஜந்துக்கள் யாவும் அவதியுற்று அல்லல் பட்டபோது பாபா மசூதியிலிருந்து வெளி வந்து புயலை அடக்கி மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தார்.
அதே போன்று மசூதியில் துனியில் நெருப்பு பிரகாசமாக எரிந்தபோதும் பாபா அதன் ஜுவாலையை அடக்கி மக்களுக்கு நிம்மதியைத் தந்தார். எனவே, எல்லையற்ற சக்தியாகத் திகழும் பாபா, தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் ஆசீர்வதிக்கிறார். அவர்களை தண்டிக்காமல், மென்மையாகத் திருத்தி வழி நடத்துகிறார் என இந்த அத்தியாயம் வலியுறுத்திக் கூறுகிறது.
தினந்தோறும் இந்த அத்தியாயத்தை படியுங்கள், நிம்மதியைப் பெறுங்கள்.
ஜெய் சாய் ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...