Tuesday, May 26, 2015

மாற்றம் உங்களுக்கும் நிச்சயம் உண்டு!



பத்தாண்டுகளுக்கு முன்பு, முற்றிலும் சீரழிந்து, சோர்வுடனும், தன்னம்பிக்கை இல்லாமலும் வாழ்வை நகர்த்தினேன். எடுத்த செயல்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி. எவ்வளவோ அணுகு முறைகளை பின்பற்றியும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் சாயி பாபாவைப் பிடித்துக்கொண்டேன். எனது கப்பல் எவ்வித சிரமமும் இல்லாமல் கரையேறியது.
எனது வெற்றிக் கதையைப் பற்றி இப்போது பகிர்ந்து கொள்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். சாயியைப் பிடித்துக் கொண்டு ஜெயித்த வழியைப் பற்றி எடுத்துக் கூறுகிறேன். எனது அணுகுமுறை உனக்கு உதவியாக இருந்தால் நீயும் ஜெயிக்க முடியும் அல்லவா?
என் மனைவி என்னிடம்,  எதற்காகத் திரும்பத் திரும்ப உன் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறாய்? எந்தப் புத்தகத்தில் எடுத்தாலும் உனது கடந்த காலத்தைப் பற்றியே எழுதுகிறாய். இது தேவையில்லாத ஒன்று என்று குறைபட்டுக் கொள்வாள்.
ஆனால், திரும்பத் திரும்ப எனது பழைய வாழ்க்கையை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், அடிக்கடி அதை எனது வாசகர்களுக்கு நினைவு படுத்தி,  “அப்படியிருந்த நான், இப்படி மாறிவிட்டேன் பாருங்கள்! நீங்களும் ஒருவேளை அப்படியிருந்தால், நிச்சயம் இப்படி மாறிவிடுவீர்கள்!” என்பதை வலியுறுத்துவதற்காகவே கூறுகிறேன்.
எப்போதெல்லாம் தோல்வி பயம் என்னைத் தொட நினைக்கிறதோ, அப்போதெல்லாம், ”நான் அன்றைக்கே உன்னை பாபாவின் சக்தியைக்கொண்டு வீழ்த்தி விட்டேன், இனி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!”  என்று தோல்வி பயத்திடம் சொல்லிக்கொள்வேன்.
அதன்பிறகு அந்த பயம் என்னை விட்டு நீங்கிவிடும்.
தோல்வி என்னை தொடும் முன்பு வரை நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன். அது தொட ஆரம்பித்த பிறகு, கைப்பொருட்களை இழந்து, காட்டுக்குச் சென்ற நள மகாராஜனைப்போல புலம்பும் நிலை ஏற்பட்டது.
உண்ணாத பொழுதுகளும், ஆழ்ந்து உறங்காத இரவுகளும் என் வாழ்வில் அதிகமானது. விலை போகக்கூடத் தயாராகத்தான் இருந்தும் வாங்குவார் யாருமில்லை. அடிமையாய் கிடக்க முன் வந்தும் எஜமானர் கிடைக்கவில்லை.
அற்ற குளத்து அருநீர் பறவைப் போல, வசதி வாய்ப்புகள் வற்றிய பிறகு, நண்பர்களும், உறவுகளும் எப்படித்தான் விலகிப் போகிறார்களோ தெரியவில்லை. என்னோடு பழகியவர், வேண்டியவர் கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாமல் போனதால் நிராதரவாக நின்றிருந்தேன்.
உழைப்பைக் கொடுத்து எத்தனையோ பேர் உயரக் காரணமாக இருந்தேன். உடைமைகளைக்கொடுத்து எத்தனையோ பேரை உயர வைத்தேன்.
பிறரது கைப்பொருளுக்கு ஆசைப்படாமல், கடைசி வரை நண்பர்களாக இருப்போம் என்று சிலரை நண்பர்களாக்கி வைத்திருந்தேன். ஆனால், கஷ்ட காலத்தில், சோதனையான நேரத்தில் யாரும் கைகொடுக்க முன்வரவில்லை. மாறாக,  “அனுபவிக்கட்டும்!”  என்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
புத்தியிருக்கிறது, அறிவும் திறமையும் இருக்கிறது, உழைக்க உடம்பும் தயாராகத்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் தோல்வி ஏன் வந்தது? மற்றவர்களைப் போலவே, ஜெயிக்கலாம் என நினைத்துதான் செயலில் ஈடுபட்டேன். ஆனால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.
முகஸ்துதி செய்கிறவர்களிடம் ஏமாந்ததும், முன்னெச்சரிக்கை இல்லாமல் செயல்பட்டதும் மட்டும் இதற்குக் காரணம் என கூற முடியாது.
”நேரம்தான் காரணம்!”
”உருவாக ஒரு காலம், உருத்தெரியாமல் அழிய ஒரு காலம், வாழ ஒரு காலம்  - தாழ ஒரு காலம்!” எந்த மனிதனும் நிலைத்த புகழோடு வாழ்வதில்லை என்பதையெல்லாம் படித்தால் கதையாகத்தான் தெரியும். வாழ்வில் சந்தித்தால்தானே அனுபவமாக மலர்கிறது!
இதற்கு முன்புவரை தோற்கிறவர்களைக்கேவலமாகப் பார்த்த நான், இப்போது என்னையே அப்படி பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
யாரையும் அண்டிப் பிழைக்காமல் உழைத்துப்பிழைக்க வேண்டும் என்ற கொள்கை யுடன் வாழ்ந்த நான், உழைக்கவும் வழியில்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது.
எல்லாத் திட்டங்களையும் சரியாகத்தான் போடுகிறோம். எங்கே தவறு நடக்கிறது என்பதை அறியாமல் கோட்டை விட்டு விடுகிறோம். சில நேரங்களில் தவறு நடப்பதை அறிந்தும், வேறு வழியில்லாமல் விட்டு விடுகிறோம்.
சில நேரங்களில் சிறிய விக்ஷயம் தானே.. போகப்போக சரிப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து அஜாக்கிரதையாக நடக்கிறோம். சிறிய ஓட்டை பெரிய கப்பலை கவிழ்ப்பது போல, இதுவும் நம்மை கவிழ்க்கும்போதுதான் நாம் பதறிப் போகிறோம்.
தெரிந்து நடந்தாலும், தெரியாமல் நடந்தாலும் தவறுகள் அனைத்துக்கும் நாம்தான் பொறுப்பு, பிறரைக் குறை சொல்லிப் பயனேதுமில்லை. எப்படியெப்படியோ வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் யதார்த்தம் வேறாக இருக்கிறது. நிஜத்திற்கும் நினைவுகளுக்கும் இடையே நீண்ட இடைவெளியிருக்கிறது. இதனால்தான் நினைத்த எதுவும் நடக்கவேயில்லை என நொந்து கொள்கிறோம். இப்படித்தான் என்னை நானே நொந்துகொண்டேன். சுய பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவு வேலை செய்யவில்லை.
மனைவியின் கடைசி நகை வரை மார்வாடிக்கடைக்குப் போயும், பிரச்சினைகள் தீரவில்லை. தொழிலில் ஏகப்பட்ட நட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சங்களைப் பார்த்த கண்கள், இப்போதைய லட்சணத்தினால் வெகுநேரம் வரை மூடிக் கொண்டிருக்க ஆரம்பித்தது.
இதிலிருந்து தப்பிக்க வழியேயில்லையா? தற்கொலை செய்து கொள்ளலாமா? தவறுகளே செய்யாத பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.
உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று பிறர் ஏற்றி விடும்போது, சரி கடைசியாக முயற்சித்துப் பார்க்க லாம் என இறங்கி, கையை சுட்டுக் கொள்கிறோம். அதன் பிறகு தூண்டி விட்டவர்கள் இருக்க மாட்டார்கள்.. தூண்டிலில் சிக்கிய மீனாக நாம்தான் தவிப்போம்.
நேரம் கெட்டு, நாம் தோற்றுக்கொண்டிருக்கும்போது அமைதியாக இருக்கவேண்டுமே தவிர, அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு, எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. அப்படி செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமிருந்தால், ஓய்வைப் பற்றி நினைக்கவே கூடாது. கடுமையாகப் போராட வேண்டும். இந்த திறனில்லாவிட்டால் பேசாமல் இருப்பது நல்லது.
சிக்கலில் தவித்தபோது ஒரு நண்பர் ”சாயியைப் பிடித்துக்கொள்ளுங்கள். அவரை சோதித்துப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.. நிச்சயமாக ஜெயிப்பீர்கள்!” என்றார்.
எத்தனையோ தெய்வங்களைக்கும்பிட்டுப் பார்த்தாயிற்று.. குறி மேடைகளுக்குப் போய் வந்தாயிற்று.. சாயி மட்டும் எப்படி என்னை காப்பாற்ற முடியும்? என நினைத்தேன். ஆனால், அவரை எப்படியோ பிடித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் அது சாதாரணமான வழியாகத்தான் இருந்தது. அதற்கப்புறம்தான் தெரிகிறது.. சாயி என்பது சாதாரண வழியல்ல. அது தோண்டத்தோண்ட சொக்கத் தங்கக் குவியலாய் இருக்கிற அற்புதப் புதையல் என்பது.
இந்தப் புதையலை அனுபவிக்க ஆரம்பித்தபிறகு, எனது கஷ்டங்கள் விலகின. மானம் மரியாதை மீண்டது. விலகிப் போனவர்கள் விரைந்து வந்து சேர்ந்தார்கள். மீண்டும் புதுப் பொலிவுடன் வாழ்க்கை துவங்கியது.
இந்த மாற்றம் எனது வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. தோற்றவர்கள் வரிசையில் இருந்து நிரந்தரமாக ஜெயித்தவர்கள் வரிசையில் எனக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தப் புதையல் முடிந்துவிடக் கூடியது அல்ல. தோண்டத் தோண்ட வண்டி வண்டியாய் கிடக்கிறது.
”எடுத்துச் செல்வார் யாருமில்லைள” என்று கூப்பிடுகிற புதையல் அது. என்னைப் போல யாரேனும் கஷ்டப்பட்டிருந்தால், வரட்டும் வந்து எடுத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான் இப்போது அதைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேருக்கு பாபாவைத்தெரியும். அவரது அற்புதங்கள் புரியும். ஆனால் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளவோ, அவரைப்பயன்படுத்திக் கொள்ளவோ தெரியாது. நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என் வழிமுறைகள் யதார்த்தமானவை, கஷ்டமில்லாதவை.
அதை எடுத்துக் கொள்ளும் அவசியமிருந்தால் என்னோடு யார் வேண்டுமானாலும் வரலாம்போகும் வழியில், எனது அனுப வங்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்....
சாயி பாபாவை அடைந்த பிறகு ஒவ்வொன்றும் மாறத்தொடங்கியது. இந்த மாற்றத்தை முழுமையாக தினமும் உணரத்தொடங்கினேன். உனக்கு இது தேவையா? அது தேவையா என்று என்னிடமே வாய்ப்புகள் தரப்பட்டன. அப்படி நடக்கவேண்டும், இப்படி நடக்கக் கூடாது என்ற ஆலோசனை வழங்கப்பட்டன. இது சரி, இது தவறு என உணர்த்தப்பட்டது.
இவ்வளவு காலம் எவ்வளவோ விக்ஷயங்களை அணுகியிருக்கிறேன். அப்போ தெல்லாம் இல்லாத புதுமையான விக்ஷயங்கள் இவை. இவற்றையெல்லாம் சாயிபாபா செய்கிறார் என்ற உணர்வும் கூடவே இருந்து வந்தது. சாயி தரிசனம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் எனக்கு பாபா பற்றி எதுவுமே தெரியாது. ஒவ்வொன்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று கூறுவது போலிருந்தது. அதற்கேற்பவே எல்லாம் நடைபெற்று வந்தன.
எனக்கு ஒவ்வொரு சக்தியையும் அளிப்பதற்காக பாபா ஒவ்வொரு மகானாகத் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். அல்லது அவர்கள் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
ஒரு பயிற்சிக்கு ஒரு மகான், இன்னொரு பயிற்சிக்கு வேறு ஒருவர் என பலரது அணுகுமுறைகளையும் கலந்து ஒரு புதிய அணுகுமுறையை நான் மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டது.
இத்தனைக்கும் நான் பயிற்சி எடுக்கிறேன் என்ற உணர்வே இல்லாமல் எல்லாம் இயல்பாக நடந்தன. ஒருவர் மூலமாக இன்னொரு மகானின் தொடர்பு என சங்கிலித் தொடர் போன்ற இணைப்பு ஏற்பட்டது.
நான் எங்கேனும் தவறுவது போல் தெரிகிற நேரத்தில், என் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, அதை சரி செய்வதற்காக இன்னொரு குருவை பாபா அனுப்பினார். ஏதாவது தவறான வழியில் சென்று நின்றாலும் அங்கே எனக்கு பாடம் சொல்லும் வகையில் தகவல்களை அவர் தந்து கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளாக ரகசியம் என்று பாதுகாக்கப்பட்ட விக்ஷயங்கள் அனைத்தும் வெகு சொற்ப காலத்தில் விளங்க ஆரம்பித்தன. எது எப்படியோ என மலைக்கிற விக்ஷயங்களை எல்லாம் இதெல்லாம் ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு பாபா எளிமைப் படுத்தினார்.
இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில்,  என்னுடைய பழைய இயல்புகளும் மாறாமல் அப்படியே இருந்தன. இது எனக்கு பழைய மாதிரியான நட்டங்களையும் கெட்டப்பெயர்களையும் ஏற்படுத்தி வந்தன.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், என்னிடம் நெருங்கிப் பழகிவிடுகிறவர்களை உடனடியாக நம்ப ஆரம்பித்துவிடுவேன். அவர்கள் கஷ்டப்பட்டால் உடனடியாக உத்தரவாதம் கேட்காமல் ஓடோடிச் செய்வேன்.
கடுகளவு நன்மையைப் பிறர் செய்திருந்தாலும், அதைக் கடல் அளவாகப் பேசுவேன். இவையெல்லாம் என்னை வளர்ப்பதற்கு பதில், தாழ்த்தவே செய்தன. என்னைப் பற்றிய அவதூறான விக்ஷயங்களையும், இட்டுக் கட்டிய செய்திகளையும் என் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்களால் பரப்பப்பட்டன.
ஆனால், என்னை அறிந்தவர்கள், எனது இயல்பை உணர்ந்தவர்கள் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. நானும் அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.
காய்த்த மரம் கல்லடிபடும் என்று உணர்ந்து,நான் காய்த்த மரமாகிவிட்டேன் என மகிழ்ந்தேன். என்னைப் பற்றிய விமர்சனங்கள் முடிந்து விடக் கூடியவை. விமர்சகர்கள் இன்றோ நாளையோ முடிந்துவிடப் போகிறவர்கள். அவர்களது விமர்சனங்களும் அவர்களோடு முடிந்துவிடும். ஆனால் நான் அப்படியல்ல. காலங்களைக் கடந்து வாழப் போகிறவன்.
எறும்பு கடிக்கிறதே என்பதற்காக யாரும் காலை வெட்டிக் கொள்வதில்லை. அரிப்பு எடுக்கிறதே என சூடு போட்டுக் கொள்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?
இவர்களுடைய விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாலோ, அதைப் பற்றி பேசி, அல்லது பயந்து கொண்டிருந்தாலோ நான் என்னுடைய இலக்கை அடையமுடியாது என்பதில் தெளிவாக இருந்தேன். அப்படியானால், நான் என்ன செய்வது?
பகவான் தத்தர் கூறுவதைப் போல உலகைக்கூர்ந்து கவனித்து அனைத்திலும் இருந்து பாடங்களைக் கற்க ஆரம்பித்தேன். கற்ற பாடங்களுடன் பாபா எனக்கு கற்பித்த பாடங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தேன்.
எனக்கென புதிய வழியை உருவாக்குவது, எனக்குத் தெரிந்த ரகசியங்களை என்னை அணுகும் உலகத்துக்குச் சொல்லித் தருவது. அவ்வப்பொழுது எனக்கு வெளிப்படுத்தப்படுகிற விக்ஷயங்களை நான் விளக்கிச் சொல்வது என முடிவு எடுத்தேன்.
இதற்கான மீடியமாக என்னால் உருவாக்கப்பட்ட சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையமும், _ சாயி தரிசனம் பத்திரிகையும் அமைந்தன.
என் அணுகுமுறையைப் பின்பற்றியவர்கள், வாழ்வில் தடைகளைத் தாண்டினார்கள். இதற்காக அவர்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றோ, நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்றோ, நான் எதிர்பார்ப்பதும் இல்லை.
செயலையும் மனத்தின் தாவல்களையும் புத்திக்கு விட்டுவிட வேண்டும் என்பதை அடிப்படைத்தத்துவமாக அறிந்து கொள். உன்னைப் பொறுத்தவரை இறைவனின் கையில் நான் ஒரு கருவியே என்று நினைத்து சுயமாக செயல்படாதவனாக இரு..  (அத்: 8 - 75)
ஏனெனில், அன்றாட வாழ்க்கையில் என் நினைவு இல்லாமல் அவர்களால் சிந்திக்க முடியாது. என்னை நினைக்காமல் அவர்களால் வெற்றியை சுவைக்கவும் முடியாது. பாபா என்று கூறும்போதே, அடுத்ததாக அவர்கள் என்னைத்தான் நினைப்பார்கள், அந்தளவுக்கு எனது கருத்துக்களும், வார்த்தைகளும் அவர்களை நிச்சயமாக மாற்றியிருக்கும்.
இப்படி அனைத்தும் இயல்பாக இருக்கப்போகிறது என்பது எனக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிற விக்ஷயம் என்பதால், ஒருவர்என்னிடம், நன்றி என்று சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது நான் மண்ணோடு மண்ணாகக் கலந்திருந்த ஒரு காந்தம். இதை பாபா அற்புதமாக எடுத்துக்காட்டிய பிறகும்கூட, இதை உணராமல், மண்ணாக நினைத்துக் கொண்டு, மீண்டும்; காந்த சக்திக்காக ஏங்கிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்?
நான் எதை நினைக்கிறேனோ அதை சாதிக்க என்னால் முடியும். அந்தளவுக்கு நான் எனது நினைவுகளில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன். என் போலவே நீங்களும் மாறவேண்டும் என்பதற்காகவே நான் பின்பற்றிய எனது வழிமுறைகளை சொல்லிக்கொண்டே வருகிறேன்.
என்னுடன் நடந்தபடி கேட்டுக்கொண்டே வாருங்கள்.. மாற்றம் உங்களுக்கும் நிச்சயம் உண்டு.


ஸ்ரீ சாயி வரதராஜன்
 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...