Wednesday, May 27, 2015

பலன் தரும்! பிரார்த்தனை செய்!



பாபாவிடம் வேண்டுதல் செய்தால் நிச்சயமாக அதைப் பெற்றுக்கொண்டோம் என்று நம்புகிறவர்களுக்கு உடனடியாகப் பலன் உண்டு. ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும். அதுவும் பரமாத்மாவான நமது சத்குரு சாயியிடம் பிரார்த்தனை செய்யும்போது மிகுந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும். பொறுமையோடு காத்திருக்கவும் வேண்டும் என  ஸ்ரீ சாயி வரதராஜன் ஒவ்வொரு கூட்டுப் பிரார்த்தனை யின்போதும் வலியுறுத்துவார். அவரால் விவரிக்கப்படுகிற பிரார்த்தனை முறை பற்றி சிறிது தெரிந்துகொள்ளுங்கள்.
”தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும்” என்றார் இயேசு. இது ஒரு நம்பிக்கையூட்டல்.  கேட்டால்தான் கிடைக்கும். நாம் வாய் திறந்து கேட்க வேண்டும். நாம் செய்கிற பிரார்த்தனையும் அந்த வகையைச் சார்ந்ததே. பிரார்த்தனை என்பது நமக்கும் அதாவது நமது ஆத்மாவுக்கும், நம்மைவிட உயர்ந்ததான பரமாத்மாவுக்கும் இடையே நம்மால் ஏற்படுத்தப்படுகிற தொடர்பாகும்.
நமது கண்களுக்குப் புலப்படாத, நம்மைப்படைத்து உருவாக்கிக் காக்கிற கடவுளான அதீத சக்தியுடன் தொடர்புகொள்ள பிரார்த்தனை ஒரு நடைமுறை வழியாக அமைந்துவிடுகிறது.
பிரார்த்தனைக்கு இரண்டு நிலைகள் உள்ளன.  ஒன்று ஆன்ம நிலை, இரண்டாவது உலகியல் நிலை.  ஆன்ம நிலை நம்மை கடவுளுக்கு அருகில் அவரது கருணைக்காக அழைத்துச் செல்கிறது. உலகைச் சார்ந்த நிலையானது வாழ்க்கையின் வலிமை மிக்கப் போராட்டங்களை மன வலிமையுடன் எதிர்கொள்ள நமக்கு உதவுகிறது.
பிரார்த்தனையை இந்த இடத்தில், இன்ன நேரத்தில்தான் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்றோ, இப்படித்தான் செய்யவேண்டும் என்ற வழிமுறை எதுவும் கிடையாது. எங்கேயும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், அது பகலானாலும், இரவானாலும் பிரார்த்தனை செய்யலாம்.
ஆனால் எந்த இடத்தில் அமர்ந்தால் பிறர் இடையூறுகளால் மனம் கலையாதோ, எங்கு அமர்ந்தால் இறைவனிடம் நீண்ட நேரம் கலந்துறவாட முடியுமோ, எங்கே அமர்ந்தால் மனம் அமைதியுறுகிறதோ, எந்த இடத்தில் அமரும்போது மனதின் பாரம் தாமாக இறங்குகிறதோ அங்கே சென்று பிரார்த்தனை செய்வது உத்தமமானது.
நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் செய்யப்படுவதல்ல பிரார்த்தனை. பிரார்த்தனை நமது தனித்தன்மையை மாற்றவேண்டும். வாழ்க்கையின் பாதையில் பிரார்த்தனை முக்கிய இடம் பிடிக்க வேண்டும்.
நல்ல சிந்தனை, நல்ல செயல், பிறருக்கு உதவி செய்தல்கூட ஒரு வகையில் பிரார்த்தனை தான். பிரார்த்தனைக்காக பிரத்யேகமான மொழி எதுவும் தேவையில்லை. நாம் பாபாவை தாயாக, தந்தையாக, ஆசானாக, சத்குருவாக, வழிகாட்டியாக நினைத்து பிரார்த்தனை செய்தாலே போதும்! இப்படித்தான் நமது குருதேவர் வலியுறுத்துவார்.
உலகியல் ரீதியான பிரார்த்தனையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நமக்காக வேண்டிக்கொள்வது. அடுத்து பிறருக்காக வேண்டுவது.
முதலில் நமக்காக வேண்டிக்கொள்ள வேண்டும். வேண்டுதலின் துவக்கத்தில் நமது தவறுகளையும், இயலாமையை யும் இறைவனிடம் எடுத்துக் கூறி, அந்தத் தவறுகள் தொடராமல் காத்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ளவேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளும்போது இறைவன் மனம் இரங்குகிறார். நமது தவறுகளை நாம் ஒப்புக் கொள்ளும் போதே, நமது மனம் சுத்தமாக்கப்படுகிறது. இதன் பிறகு நமக்கு எது தேவையோ அதைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.
வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொண்டார் என்ற முழு நம்பிக்கையுடன், அடுத்து பிறருக்காக வேண்டிக்கொள்ள வேண்டும். இறைவனிடம் பரிந்து பேசவேண்டும். மகான்கள், ஞானியர் அனைவரும் உலகுக்காக வேண்டிக்கொள்கிறார்கள். உலக மக்களின் நலனுக்காக இரங்கி, இறங்கி வருகிறார்கள்.
பிறருக்காக வேண்டிக்கொள்ளும் பெருந்தன்மை நமக்கு வந்தவுடன், தாமாகவே இறையருளும், குரு அருளும் நம்மிடம் வந்துவிடும். நமக்கு வேண்டாதவர் நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டும் போது மிகுந்த பலன் கிடைக்கிறது. எனக்கு இதைச் செய்தால் நான் அதைச் செய்கிறேன் என நேர்ந்து கொள்வதை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். அது வலியச் சென்று நாம் சிக்கிக்கொள்வதாகும். தவிர, அது தரம் தாழ்ந்த பிரார்த்தனையாகும். மிக உயர்ந்த சக்தியான இறைவனுக்கு எதை உங்களால் தரமுடியும்? எனவே இறைவா எனக்குத் தா என அவனிடம் கையேந்த வேண்டுமே
தவிர, தருகிறேன் என்று சொல்லக்கூடாது. ஆன்ம நிலைப் பிரார்த்தனையை எப்போது செய்யவேண்டும் என்றால், நமது தேவைகள் தீர்ந்து, மனம் லேசாகும்போது, இறைவா, மனம் கனிந்தது. இந்த மனத்தை உன் பக்கம் திருப்பி, உனக்கு விருப்பமான வழியில் நடைபோடச் செய் என வேண்டிக் கொள்வதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
எப்போதும் நமது சிந்தனை, உணர்ச்சி, விருப்பம் என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யவேண்டும். பிரார்த்தனைக்கு முன் இறை நாமத்தைப் போற்றி வழிபடுவது முக்கியம். இவ்வாறு போற்றி வழிபாட்டை மேற்கொள்ளும்போது, சிதறிக்கிடக்கும் சிந்தனைகள் ஒன்று சேர்ந்து, மனம் ஒருமைப்பட ஆரம்பிக்கும். நம்பிக்கைப் பிறக்கும். அந்தக்காலத்தில் உடுக்கை, பம்பை போன்றவற்றை அடித்தும், உச்சஸ்தாயியில் பாடியும் சிதறிய மனத்தைச் சேர்த்து அதனுள் இறை உணர்வைக்கொண்டு வந்தார்கள். இப்போது அப்படித் தேவையில்லை. மனதுள் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலே போதுமானது.
எப்போது தனித்துப் பிரார்த்தனை செய்தாலும் கடவுளைப் பற்றியும், நான் யார் என்பதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு செய்யச்செய்ய, உள்ளேயும், வெளியேயும் வியாபித்திருக்கிற இறைவனின் தன்மைக்கு நீங்கள் மாறுவதை உணரமுடியும்.
சின்னச் சின்ன விக்ஷயங்களுக்காகவும் பிரார்த்தனை செய்வது நல்லதுதான். ஆனால் அதிலேயே மயங்கிவிடக்கூடாது. காரணம், குறுகிய நன்மை தரக்கூடிய வேண்டுதல்களை இறைவன் உடனடியாக நிறைவேற்றி, மிகப் பெரிய வேண்டுதல்களை தள்ளிவைத்துவிடுவான். எனவே, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வாழ்க்கையை மாற்றக்கூடிய விக்ஷயங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
முழுமையான நம்பிக்கையுடன் செய்யப்படுகிற பிரார்த்தனைகளுக்கு உடனடியான பலன்கள் உண்டு. இதையேதான் வாராவாரம் நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் செய்கிறது. நற்பலன் அடைந்தவர்கள் வாராவாரம் வந்து சொல்கிற அற்புதங்களே இதற்குச் சாட்சிகள். மிகச் சிறிய இடமாக இருந்தாலும் உலகளவில் பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாக பெருங்களத்தூர் மாறுவதற்கு முக்கியக் காரணம், இத்தகைய அணுகுமுறைகளை சாயி பக்தர்களுக்கு கற்றுத் தருவதுதான்.
பிரார்த்தனை உங்களை நிச்சயமாக மாற்றிவிடும். இறைவனிடம் உண்மையாக இருக்கவும், இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வரவும், எப்போதும் நல்லதையே நினைத்து, நல்லவற்றையே செய்வதற்கும், தகாத குணநலன்களை மாற்றவும், ஆன்மா பரிசுத்தமாக இருந்து அன்பு பெருகவும், நன்றி உணர்வோடு இருக்கவும், எல்லோரையும் அனுசரித்து அரவணைப்போடு செல்வதற்கும், மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
இப்படிப் பிரார்த்தனை செய்யும்போது மாற்றம் உங்கள் மனதில் குடிபுகுந்துவிடும். தேவைகள் அனைத்தையும் இறைவன் நிறைவேற்றுவார். இந்த வழிகளில் பிரார்த்தனை செய்வதால்தான்  ஸ்ரீ சாயி வரதராஜன் சாயி பாபாவின் அணுக்கத் தொண்டராக மக்களால் மதிக்கப்படுகிறார்.


சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...