Tuesday, May 26, 2015

உன்னுடைய மூட்டுவலி சரியாகிவிடும்!

இந்த முறை என்னுடன் சாயி தரிசனம் செய்ய சீரடி வந்தவர்களுள் 47 பேர் முதியவர்கள். அதிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு மூட்டு வலி இருந்தது. ஒரு அம்மையார் நடக்க முடியாத அளவு சிரமப்படுவதாகவும் நான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அவரது அருகில் அமர்ந்து சத்சங்கம் செய்து கொண்டிருந்த நான், பாபாவிடம் வேண்டி என் உடலில் இருந்து சக்தியை அந்தத் தாயாருக்குப் பிரயோகம் செய்தேன்.
தொடாமல், உதி தராமல், ஆசீர்வதிக்காமல் அவர் ஆரோக்கியமாக நடந்தார்.
இது எப்படி சாத்தியமானது?
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சமாதி மந்திரைக் கட்டிக்கொடுத்த புட்டி என்ற செல்வந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இவர் சீரடியில் தங்கியிருந்தபோது காலரா நோயால் பாதிக்கப்பட்டார். வாந்தி பேதி நிற்காமல் போய்க்கொண்டிருந்தது.
டாக்டர் பிள்ளை அந்த சமயம், சீரடியில் இருந்தார். தன்னால் முடிந்த எல்லா வைத்தியத்தையும் செய்து பார்த்துவிட்டு, முடியாத பட்சத்தில் பாபாவிடம் வந்தார்.
பாபா அவரிடம், பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புநொய், அரிசி நொய் ஆகியவற்றால் கஞ்சி செய்து குடிக்கக்கொடுக்குமாறு கூறினார்.
டாக்டர் பிள்ளை மறுமொழி கூறாமல் பாபா செய்ததைப் போல செய்தார். பூட்டி குணம் அடைந்தார். இந்தத் தகவல் சத்சரித்திரம் 13வது அத்தியாயத்தில் இருக்கிறது.
பாதாம், பிஸ்தா, அக்ரூட், பருப்புகளைச் சாப்பிட்டு காலரா நோய் கண்டவர் நிவாரணம் அடைவதா!   இங்கு பாபாவின் வார்த்தைகளே நம்பிக்கையின் அஸ்திவாரம். சந்தேகம் என்பதற்கு இங்கு இடமே இல்லை!”
இதேபோல, சத்சரித்திரம் 33ம் அத்தியாயத்தில் நாராயண ஜனியின் நண்பருக்கு தேள் கொட்டியபோது, பாபாவின் படத்தின் கீழ் விழுந்த ஊதுபத்தி சாம்பலை எடுத்து தேள் கடித்த இடத்தில் தடவினார். உடனடியாக நண்பர் குணம் அடைந்தார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்.
ஒருமுறை நானா சாந்தோர்க்கர், தாணே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் வந்து, தனது மகளுக்கு மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சல். பிரார்த்தனை செய்து உதி கொடுத்து அனுப்புங்கள் என்று வேண்டினார்.
அந்த நேரத்தில் சாந்தோர்க்கரிடம் உதியில்லை. புழுதி மண்ணை எடுத்து, பிரார்த்தனை செய்து தனது மனைவியின் நெற்றியில் இட்டு, அந்தப் பெண் குணமடைய வேண்டும் என வேண்டினார். அந்தப் பெண் குணமடைந்து விட்டார் என்ற தகவல் சத்சரித்திரத்தில் உள்ளது.
சத்சரித்திரம் என்பது பாபாவின் வேதநூல். சில விக்ஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பினும், பொய்யான தகவலாக இருப்பினும் அவை நமது நம்பிக்கைக்கு உரிய நூல். அதில் என்ன கூறப்பட்டு உள்ளதோ அதை அப்படியே பின்பற்றினால் நமக்கு நிச்சயம் விடிவு உண்டு. இதை முழுமையாக நம்பவேண்டும். காரணம், அந்த எழுத்துக்களில் சக்தியில்லை. நமது நம்பிக்கையில்தான் சக்தியிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவை தரிசிக்க அந்நியப் பெண்மணி ஒருவர் வந்தார். தனக்கு நிற்காமல் மாதப்போக்கு ஏற்படுவதாகவும், தன்னை குணப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இயேசு, பிள்ளைகளுக்குத் தர வைத்திருக்கும் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்கு போடுவதில்லை என்று கூறினார். உடனடியாக அந்தப் பெண்மணி, பிள்ளைகள் தின்னும்போது மேசை கீழ் சிதறுகிற ரொட்டித் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என்றாள்.
முழுமையாக யூதர்களுக்கு இயேசு அற்புதம் செய்தாலும், சிறிதளவாவது என் போன்ற அந்நியர்கள் அதை அனுபவிக்கலாமே என்பது அவள் வாதம். அவளது நம்பிக்கையைக்கண்டு, உன் நோய் குணமானது என ஆசீர்வதித்தார். குணமானாள்.
இது போன்று எண்ணற்ற மகான்களின் வரலாறுகளில் அற்புதங்கள் உள்ளன. இவை அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கின்றவை.
நான் உதியை பக்தர்களுக்குத் தரும்போது, நம்பிக்கையோடு இந்த உதியைப் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் பலனைத் தரும். நம்பிக்கை இல்லாமல் பயன்படுத்தினால் வெறும் சாம்பலை சாப்பிட்ட பலன்தான் கிட்டும் என்பேன்.
எனக்குள் பாபா இருக்கிறார். இதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அவர் இருக்கும்போது என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற தைரியம் என்னிடம் இருக்கிறது, இதையும் தெளிவாக நான் அறிந்திருக்கிறேன். நான் வேண்டிக் கொண்டால் அவர் எனது வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என முழுமையாக நம்புகிறேன்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மையாருக்கு எனது உடலிலிருந்து, உங்கள் சக்தி வெளியேறி அந்த அம்மையாரின் நோயைப் பூரணமாக குணமாக்க வேண்டும் என வேண்டினேன். பாபா நிவாரணம் அளித்து, அந்த அம்மையாரை குணப்படுத்தினார்.
இந்த சக்தி எனக்குள் மட்டும்தான் இருக்கிறது என சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு. யாரெல்லாம் சாயி பக்தரோ, அவர் உள்ளேயெல்லாம் சாயியின் சக்தி முழுமையாக வியாபித்து இருக்கிறது.
நீங்கள் அவரை வணங்கவில்லை. அவர் உங்கள் கால்களில் கயிறைக் கட்டி தன்னிடம் இழுத்துக்கொண்டிருக்கிறார். அவரால் இழுக்கப்பட்டு, அவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உங்கள் உடம்பு முழுக்க அவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முழுமையாக நம்பினால் நிச்சயம் பலன் உண்டு.
நிறைய பேர் விரதம் இருந்து வேண்டிக் கொள்கிறார்கள். நான் எப்போதும் வயிறு முட்ட சாப்பிடுவேன். குளித்து விட்டு கோயிலுக்குப் போவார்கள். நான் குளிக்காமல் போவதுமுண்டு.
எனது நம்பிக்கை, நான் எப்படி இருந்தாலும் என் பாபா என்னை ஆசீர்வதிப்பார் என்பது. நான் ஆசீர்வாதமாக இருக்கிறேன்.
எனக்கு உடம்பு சரியில்லாத போதும், உயிரை போக்கும் நோய் அறிகுறிகள் வரும்போதும், ”பாபா உங்கள் உடம்பு சரியில்லை. கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உடம்பிலிருந்து நோயை நீக்கினால் தான் உங்களால் சரியாகச் செயல் பட முடியும்என்று கூறுவேன். எனது உடல் ஆரோக்கியமாக மாறிவிடும்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
எனக்கு நோயைத் தருபவனும், நிவாரணம் தருபவனும், வலியைத் தருபவனும் வேண்டச்செய்பவனும் பாபாவே என்கிற தெளிவு.
நான் வலியுறுத்திக் கூறுவது என்னவெனில், பாபாவின் உதியை தண்ணீரில் குழைத்து வலியுள்ள இடத்தின் மீது பற்று (பத்து) போடுங்கள். உடனடியாக வலி மாறிவிடும்.
நிறைய பெண்கள் சரியாக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் சக்தி சேராமல் இரத்தக் குறைவு மற்றும் இரத்த சோகை போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இவர்களுக்கு மூட்டு வலியும வரும்.
இவர்கள் முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இவற்றை தினந்தோறும் நிறைய உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் அதிகரித்து மூட்டு வலிகள் உண்டாகாது. இதையும் அவர்கள் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...