Friday, December 28, 2012

அன்னதானம் - 3


அன்னதானம் - 3

அன்னதானம் பகுதி இரண்டின் தொடர்ச்சி......

(பகுதி ஒன்றினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
(பகுதி இரண்டினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

அன்னதானத்தின் மகிமை பற்றி ஒரு கதை உண்டு. அதனை இப்போது காண்போம்.
தேவலோக அதிபதியான இந்திரன் தனது தூதர்களாக உலகை சுற்றித் திரிபவர்களிடம் ‘தானத்தில் பெரியது எது? சிறந்த தானவான் யார்? எனக் கேட்டான்.
எல்லோரும் ஒவ்வொரு பெயரை கூறினார்கள். இந்திரன் திருப்தியடையவில்லை. கடைசியாக ஒருவன் வந்தான் அவனிடம், ‘தானத்தில் பெரியது எது? சிறந்த தானவான் யார்? எனக் கேட்டான்.
உடனே அந்த தூதன், இந்திரனை வணங்கி, ‘பிரபோ!, பூமியில் சஞ்சாரம் செய்தபோது, பசியால் உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தேன். ஒரு கவளம் உணவு கிடைத்தாலும் உயிர் பிழைத்துவிடலாம் என்ற பரிதாப நிலையில் நம்பிக்கையுடன் இருந்தான்.
அவனது நிலையினை பார்த்து பரிதாபப்பட்ட சிலர்  அவனுக்கு சிறிது உணவு அளித்தார்கள்.  அவன் உணவு உண்ண எத்தனிக்கையில், அவனைப்போலவே பசியால் துடித்து உயிரை விட்டுக்கொண்டிருந்த நாய் ஒன்று தன் பக்கத்தில் இருந்ததைப் பார்த்து, மனம் இரங்கி தனக்கு கிடைத்த உணவினை அந்த நாய்க்கு அளித்துவிட்டு தனது உயிரை விட்டு விட்டான்.
எனக்குத் தெரிந்து அவனே மிகப் பெரிய வள்ளல். அவன் அளித்த அன்னதானமே உயரிய தானம்! என்றான்.
இதைக்கேட்ட இந்திரன் ,‘சபாஷ், இதுதான் சரியான தகவல். வாருங்கள், அந்த பிச்சைக்காரனை நமது இந்திரபுரிக்கு அழைத்து உபசரிப்போம்என்று கூறி, பிச்சைக்காரனை எதிர் கொண்டழைக்க புறப்பட்டான் என்று ஒரு கதையுண்டு.
பசியால் துடிப்பவர்களுக்கு உணவு அளிப்பதே மிக உயரிய தானம்.  இதை ஏதோ சடங்காகச் செய்வது கூடாது.  பாபா பிச்சையெடுத்த உணைவினை நாய், பூனை, காக்கை, ஏழை பக்தர்கள் ஆகியோர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்று பாபாவின் சத்சரித்திரத்தில் படிக்கிறோம். இதுதான் பெரிய தானம்.
சென்னை குரோம்பேட்டையில் ஒரு அன்பர் வீட்டிம் ஒரு பகுதியை ஒதுக்கி, அதில் ஆதரவற்ற நாய்களை வைத்து வளர்த்து தினமும் வேளை தவறாமல் உணவளிப்பதுடன், அவைகட்கு மருத்துவச் சிகிச்சைகளையும் செய்கிறார். அவைகளுக்காக தனது வாழ்க்கையினையே அர்ப்பணித்துள்ளார். இதுதான் அன்னதானம், அதிதி உபசரிப்பு.
நியூடெக் என்னும் நிறுவனத்தினை நடத்தி வரும் ராஜேந்திரன் என்ற அன்பர், தன் காரில் எப்போதும் பிஸ்கெட் பண்டல்களை வைத்திருப்பார். காரில் செல்லும்போது வழியில் வறியவர், பசியால் வாடுவோர் என எவரையேனும் பார்க்க நேர்ந்தால் தவறாது அவர்கள் அருகே இறங்கி, அன்போடு அதைக் கொடுத்து சாப்பிடச் செய்துவிட்டு செல்வார். இதற்குப் பெயர்தான் அன்னதானம்.  பாபா இதனை ஆசிர்வதிப்பார்.
அன்னதானம் என்பது பெரிய விஷயமல்ல.  பசித்தவருக்கு உணவு கொடுப்பது! இதை மனிதர்க்கு மட்டுமல்ல காக்கை, குருவி என்று அனைத்து உயிரிகட்கும் அளிக்கலாம். குறைந்தது வீட்டின் மாடியில் ஒரு ஓரத்தில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு சாதம் அல்லது நீராவது வைக்கலாம்.
எச்சில் கையால் ஈ ஓட்டாதவர்கள் கூட இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்தால் அவர்களைத் தேடி புண்ணியம் வரும். தேவ தேவர்கள் வருவார்கள்.  வாழ்க்கையில் மேலும் வளங்கள் வந்து சேரும்.
உங்களுக்கும், உங்களது சந்ததிக்கும் எதிர்காலத்துக்கு புண்ணியம் தேடுங்கள். அதை விளம்பரமாக்க வேண்டாம்.  வேறு வழியில் விளம்பரம் தாமாக வரும்.
வாழ்க நீங்கள்!

(அன்னதானம் தொடர் நிறைவடைந்தது)

ஜெய் சாயிராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...