Sunday, September 1, 2013

ஆனந்தமாய் இரு! - பகுதி 1

சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்....

(சத் சரித்திரம் அத் – 17 - 113)

என்ன, சோர்ந்து உட்கார்ந்து விட்டாயா?
பாபா மீது பயங்கரமான கோபம் வருமே!
இருக்காதா பின்னே!
அவரைத்தானே நம்பியிருந்தேன். அவர் என்னை கைவிட்டு விட்டாரே! எல்லோரும் என்னை கேலி செய்யும் அளவுக்கு என் பிரார்த்தனைகளை அவர் கேட்கவே இல்லையே! அவர்களுக்கு பாபாவின் மகிமையைச்சொன்னேன்,  அவர் சரியாகிவிட்டார், இவருக்குச் சொன்னேன்.. இவரும் சரியாகிவிட்டார். எல்லோரும் நான் சரியாகிவிடுவேன் என நினைத்துக்கொண்டிருக்க, இவர் என்னை கைவிட்டு விட்டாரே!
சாயிராம்!  உங்களுக்குத் தெரியாது..
இவரை எப்படியெல்லாம் நேசித்தேன் தெரியுமா?
இவருக்கு நைவேத்தியம் வைக்காமல் சாப்பிட்டதே கிடையாது.
இவர் பெயரை உச்சரிக்காமல் எங்கும் சென்றதும் கிடையாது.. அப்படியிருந்தும் என்னை இவர் கண்டுகொள்ளவேயில்லை.. அதனால்தான் இவர் மீது எனக்குக் கோபம்...
இப்படித்தானே நீங்கள் என்னிடம் சொல்லப் போகிறீர்கள்..
அம்மா, எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடக்கிறது. அவருக்கு எது பிடிக்குமோ அதை அவர் செய்கிறார்.. உனக்கு உடனே நடந்துவிட்டால் கர்வம் பிடிக்கும், அல்லது கஷ்டம் உன்னை தொடர்ந்து வந்து பிடிக்கும் என்பதற்காகக்கூட, அவர் உனது வேண்டுதலை தள்ளி வைத்திருக்கலாம். ஏற்ற காலத்தில் உனக்கு வேண்டியதை அவர் நிச்சயமாகச் செய்வார்.
சத்சரித்திரம் கூறுகிறது்:  பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பதற்காகவே அவர் அவதரித்தார் என்று- (அத் - 30)
அப்படியிருக்க, அவர் உன்னை கைவிடுவாரா? உனக்கு எது தேவை கிடையாதோ அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டார் அல்லது தள்ளி வைத்து இருக்கிறார். அவ்வளவே!
இமைப்பொழுது உன்னைக் கைவிடுவதைப்போல காட்டிக்கொள்வார். ஆனால், தனது நீடித்த கருணையால் உன்னை சேர்த்தணைத்து உன் மனோரதங்களைப் பூர்த்தி செய்வார்.
சாயியின் மீது பக்தி கொண்டுள்ள நீ, அவரைப்பற்றி மட்டுமே பெருமையாக நினைக்க வேண்டுமே தவிர, உனது பக்தியைப் பற்றிக்கூட பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடாது.
இந்தக் கஷ்டம் என்பது வரும், போகும். ஆனால் உன் பக்தி என்றைக்கும் மாறாதிருக்க வேண்டும் என்றே பாபா விரும்புவார். உலக விஷயங்கள் மீது நீ தீவிர பற்று கொள்ளக் கூடாது,
சின்ன சின்ன விஷயங்களும் உன்னை பாதிக்காமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும். கிடைப்பதை விரும்ப வேண்டும். ஒருவேளை கிடைக்காமல் போனால் அதற்காக வருந்தக்கூடாது.. எப்போதும் உன் முகம் மலர்ந்த முகமாக இருக்க வேண்டும் என்பதையே பாபா விரும்புவார். சுருக்கமாகச்சொன்னால், ஒரு குழந்தையின் மனநிலையும் அதனுடைய முகத்தின் பிரகாசமும் உன்னிடம் இருக்கவேண்டும். அப்போது தான் நீ அவரது அருளுக்குப் பாத்திரமாவாய். இப்படியிருந்தால்தான் நீ பாபா பக்தை. மாறாக எதையேனும் கேட்டு கிடைக்காவிட்டாலோ, தாமதம் ஆனாலோ.. வேறு விஷயத்திற்காகவோ உன் முகத்தைச் சோர்ந்து போக விட்டுக் கொண்டிருந்தால் நீ பக்தையல்ல, பக்தையாக மாற இன்னும் முயற்சி செய்து கொண்டிருப்பவள் என்றே பொருள்.
சதா கட்டுப்பாடற்ற மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடையமாட்டான். அவன் பரம பதத்தையும் அடையமுடியாது, சம்சாரச் சுழலில் இருந்தும் தப்பிக்க முடியாது..
நீ உனது தேவைகளுக்காக ஏங்குவது என்பது ஒரு வித தடங்கல். அதை தகர்த்து எறிய முற்படு.எதையும் அவர் பொறுப்பில் விட்டு விட்டு மகிழ்ச்சியாக இரு..
சுக்லாம் பரதரம் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம்... என்பதில் பிரசன்ன வதனம் என்பது என்ன?  மலர்ந்த முகம். பகவானின் முகம் மலர்ச்சியாகவே இருக்கும். நீ பக்தையாவது உண்மையாக இருந்தால் இப்படி மலர்ச்சியாகவே எப்போதும் இருக்கவேண்டும்.
பாபா சொன்னார்: ஆனந்தமே பிரம்மம்.. இதை நான் உறுதியுடன் அறிகிறேன்.
சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டா.. கவலையே வேண்டா.. இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.... (சத் சரித்திரம் அத் – 17 - 113)

எதற்காக

இதன் தொடர்ச்சியினை நாளை காண்போமா?

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...