Friday, September 20, 2013

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 4

சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் - பாகம் 4


தேனி. எம். சுப்பிரமணி





(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)

(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)

(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)


                          இதற்கிடையில் சீரடியிலிருந்த பாபா காணாமல் போய்விட்டது குறித்து அந்த ஊர் மக்கள் வருத்தமடைந்தனர். அவர் ஊரை விட்டுச் சென்றிருந்த சமயம் அந்த ஊர் முழுக்க காலரா நோய் பரவியிருந்தது. பாபாவின் மீது பொறாமையாக இருந்த அந்த ஊர் மருத்துவரும் இன்னும் சிலரும் அப்போது காலராவால் பாதிப்படைந்திருந்தார்கள்.

           ஒருநாள் சாந்த்பட்டீல் பாபாவிடம், “என் உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. நீங்களும் அவசியம் எங்களுடன் வர வேண்டும். என்று கூறி திருமண வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

                          அவர் அழைத்துச் சென்ற திருமண வீடு சீரடியில்தான் இருந்தது. சீரடிக்கு திருமணக் குழுவினருடன் மீண்டும் திரும்பி வந்தார் பாபா. பாபா திருமணக்குழுவுடன் அந்த ஊருக்கு திரும்பி வந்தது அந்த ஊர் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

           அவரைப் பார்க்க அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடினர். பாபா ஊர் திரும்பியதறிந்த மகல்சபாதி, “யா சாயி வந்து விட்டாயா என்று கதறி கொண்டே அங்கு வந்தார். பாபாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார். அன்றில் இருந்துதான் பாபாவாக அழைக்கப்பட்ட அந்த மகான், “சாய் பாபா. என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

            சீரடி மக்கள், “பாபா, எங்கள் ஊரை இந்தக் காலரா நோயிலிருந்து காப்பாற்றுங்கள் என்று அவரிடம் வேண்டியதுடன், “இனி இந்த ஊரை விட்டு வெளியில் எங்கும் செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டனர். 

            சாய்பாபாவும், “காலரா நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறேன். இனி இந்த ஊரை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று உறுதியளித்தார். 

                           மறுநாள், பாபா ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதில் திருகையை வைத்தார். திருகையில் கோதுமையைப் போட்டு அரைக்கத் தொடங்கினார். 

            பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பிச்சை எடுத்து வாழும் ஒருவருக்கு கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. அவர் ஏன் மாவு அரைக்கிறார்? என்று அவரிடம் கேட்க யாருமே முன் வரவில்லை. பாபா மாவரைக்கும் செய்தி ஊர் முழுக்கப் பரவியது. 

            ஊரில் இருக்கும் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர். அதில் சில பெண்கள் பாபாவின் கையை ஒதுக்கிக் திருகைக் குச்சியைக் கைப்பற்றி மாவரைக்கத் தொடங்கினர். பாபா முதலில் கோபமடைந்தாலும், அந்தப் பெண்களின் அன்பான நடவடிக்கையால் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 

            பாபா, கோதுமை மாவு அரைத்து முடிந்ததும் அந்த மாவைக் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வரச் சொன்னார். இப்படி நன்றாக அரைத்த மாவைப் பயன்படுத்த விடாமல் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டச் சொல்கிறாரே? என்று நினைத்தாலும் அவரிடம் கேட்க முடியாமல், அரைத்த கோதுமை மாவைக் கிராம எல்லையில் கொண்டு போய்க் கொட்டித் திரும்பினர். 

                    அங்கிருந்தவர்கள் பாபாவிடம், “கோதுமை மாவை அரைத்து ஊர் எல்லையில் கொட்டி வரச் செய்தது ஏன்?” என்று கேட்டனர். 

                      உடனே பாபா, “நான் கோதுமை மாவை அரைக்கவில்லை. ஊருக்குள் நுழைந்த காலராவை அல்லவா அரைத்தேன் என்றார். 

                      அதன் பிறகு அந்த ஊரில் காலரா நோய் காணாமல் போய் விட்டது. கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். பாபாவின் மேல் கோபம் கொண்டிருந்த அந்த ஊர் வைத்தியரும் தன் காலரா நோய் குணமடைந்தது அறிந்து மகிழ்ச்சியடைந்தார். பாபாவிடம் வந்து மன்னிப்பு கோரினார். 

(தொடரும்)


நன்றி:  தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...