Monday, March 10, 2014

எதைப் பற்றியும் கவலைப்படாதே

இக்கட்டான நிலையில் இருக்கிற ஒரு பக்தனின் ஆழமான, சுருக்கமான பிரார்த்தனை இது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் தேடி சீரடிக்கு வந்த அமீர்சக்கரை சாவடியில் தங்கச்சொல்லி, “மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம், தரை மேடு பள்ளம், குழிகளாகவும் இருக்கலாம். ஆனால் நீர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர் என்றார் பாபா.
                அமீர் சக்கர் பாபா மீது அளப்பரிய பக்தி உள்ளவர். அவரோடு இருப்பதை பாக்கியமாகக் கருதினார். அவரது வார்த்தைகளை அம்ருதமாக, அருமருந்தாக எடுத்துக் கொண்டார். பாபாவின் திருவாய் மொழிகள் மீது நம்பிக்கை வைத்து ஒன்பது மாதங்கள் சாவடியில் தங்கி, சாயியின் அருகின் சுகத்தை அனுபவித்தார்.
                பாபா கூடவே இருந்தும் தனது துயரம் நீங்கவில்லையே, என பல மாதங்கள் பொறுமை காத்த அமீர் சக்கர், சீரடியை விட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனார்.
                “சுகத்தை நாடி நான் சாவடியை விடுத்தேன். ஆகவே, எனக்கு தண்டனை அளித்துவிட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ இந்த ஆபத்தில் இருந்து  என்னை விடுவித்து சீரடி கொண்டு போய் சேருங்கள். (அத்-22- 150)
                ஒரு சத்திரத்தில் தங்கியிருந்த போது, ஒருவர் குடிக்க நீர் கேட்டார். நீர் கொடுத்தார். நீரைக்குடித்தவர் இவரது மடியிலேயே இறந்துபோகவே, கொலைப் பழி தன் மீது விழும் என்ற பயத்தில், அமீர் சக்கர் பாபாவை நோக்கி இந்தப் பிரார்த்தனையை செய்தார்.
                பாபா நமக்கு அற்புதத்தைச் செய்வார் என அவரை நாடுகிறோம். பல மாதங்கள் அவர் மீது பக்தி செலுத்தி, கஷ்ட நஷ்டங்களை சகிக்கிறோம். நினைக்கும் போது அவர் நமக்குக் காட்சி கொடுக்கிறார். ஆறுதல் தருகிறார். ஆனால், நமது கஷ்டத்தை அவர் நீக்கவேயில்லை. பாபாவே கதியெனக் கிடந்தும் பலன் இல்லை. இனி பாபாவை நம்பி எந்தப் பலனும் கிடையாது. எங்காவது ஓடிப்போகலாம் என அவரை விட்டு ஓடிப் போகிறோம்.
                அதன் பிறகு கஷ்டம் அதிகமாகிறது. இனி எங்கு செல்வது என்ற தவிப்பு ஏற்படுகிறது. புத்திசாலி, தான் எங்கிருந்து ஓடி வந்தானோ, அங்கே சென்று அடைக்கலம் பெறுவதே உசிதம் என்பதை புரிந்து சாயியை மீண்டும் சரண் அடைவான்.
                கஷ்டம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், பாபாவை விட்டுவிடாதே. கஷ்டங்கள் முன் வினையால் மட்டும் வருவதில்லை, கடவுள் நமக்குச் செய்கிற நன்மையின் காரணமாகவும் வரும். என்ன நடந்தாலும் எதற்காகவோ, கடவுள் தன்னை சோதிக்கிறார் என்று தெளிவடைந்து அவருடையத் திருவடிகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.
     கடவுளிடம் வரும்போது கஷ்டங்கள் மேலும் அதிகமாகும். மானம் போய், அவமானம் உன்னை நெருக்கி, தலை நிமிர வைக்கமுடியாமல் செய்யலாம். நீ நம்பியவர்கள் உன்னை மோசம் செய்திருக்கலாம். மாமியார், நாத்தனார் கொடுமை செய்யலாம். கணவன் உன்னைப் புரிந்துகொள்ளாமல் உன்னை வறுத்தெடுக்கலாம். குடும்பத்தில் தாங்கமுடியாத கடன் தொல்லை யிருந்து உன்னை கஷ்டப் படுத்தக் கூடும். வேறுவித பிரச்சினையும் வரலாம். எது வந்தாலும், பொறுத்துக் கொண்டு பாபாவின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாபா சொன்னார்,  நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று, இவை எதுவும் உன்னை பாதிக்காது.
     அமீர் சக்கரைப் போல் பாபாவை விட்டு விலகியிருந்தாலும், ‘பாபா, என்னை எப்படியாவது இந்தத் துன்பத்திலிருந்து விடுவித்துக் காத்தருளுங்கள் என்று நீங்கள் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

     இந்த உண்மையான பிரார்த்தனை உங்களை மீண்டும் அவரிடம் கொண்டு செல்லும். உங்கள் எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். நிம்மதியாக வாழ்வீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...