Saturday, March 15, 2014

அது அப்படித்தான்! அவர்கள் அப்படித்தான்!

என் அன்புக் குழந்தாய்! உன்னுடைய மனதின் பிரார்த்தனையைக் கேட்டேன். வீட்டில் இருப்பவர்கள் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை. உன் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. நீ என்ன பேசினாலும் அதற்கு மாறாகப் பேசுவதை கடமையாக வைத்திருக்கிறார்கள். சரி,
     வீட்டில்தான் இப்படி, வேலையிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்றால் அங்கும் பிரச்சினை. உன்னைப் பற்றி பிறர் முகத்திற்குப் பின்னால் பேசுகிறார்கள். அதிகாரிகளும் மற்றவர்களும் உன் திறமையைக் குறை கூறுகிறார்கள். வேலையில் போட்டிப் பொறாமை ஏற்படுகிறது.
     ஏற்கனவே, கடன் பிரச்சினைகள், உறவு முறைகளில் பிரச்சினைகள் என பலவித பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறாய். இ;ந்த நிலையில் என்னை அறிந்து, வணங்கி என்னிடம் நீ வைத்த பிரார்த்தனையை நான் கேட்டேன்.
     உன்னைப் பிறர் மனம் நோகுமாறு பேசும்போதும், உண்மையான உனது உழைப்பை உதாசினப்படுத்தி உன்னைத் துன்புறுத்தும்போதும், நீ என்னிடம், “அப்பா, என்னைப் பிறர் தூற்றும் போதும், துன்புறுத்தும் போதும், நீ என்னை கண்டு கொள்ளவில்லை  என உன்னை நான் கடிந்து கொள்கிறேன்.. இது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. என்னை ஏன் கை விடுகிறீர்கள்? என்று கேட்டுப் புலம்புகிறாய்.
     சில செயல்கள் நீ எதிர்பார்த்தது போல நடக்காமல் போகும்போதும், நீ நம்புகிறவர்கள் உன்னை ஏமாற்றி, உனக்குத் துரோகம் செய்து, உன்னைப் பற்றி புறம் பேசி, உன்னைத் துன்புறுத்தும்போதும் நீ சோர்ந்து போய், “எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? எனப் புலம்புகிறாய்
     இது உனக்கு மட்டும் வரும் பிரச்சினை என நினைத்துக் கொள்ளாதே. பிறந்த குழந்தை முதல் படிக்கிறவர்கள், திருமணத்தை எதிர்பார்க்கிறவர்கள், திருமணம் செய்தவர்கள், குழந்தைப் பெற்றவர்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டவர்கள், குடும்ப உறுப்பினரையோ, நேசித்த ஒருவரையோ இழந்தவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக சண்டை சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர், பிரிந்து போனவர்கள், மனதில் அனைத்தையும் போட்டு அடக்கிக்கெர்ணடவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இத்தகையப் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டு திணறுவது அதிகம்.
     நீ சந்திக்கிற சூழலில் உனக்கு ஏற்படுகிற பின்னடைவுகள், ஏமாற்றங்கள், போராட்டங்கள் போன்றவற்றால் நீ பாதிக்கப்பட்டு இப்படி புலம்புகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாய்.
     சில நேரங்களில் எதற்கு இந்த வாழ்க்கை எனத்தடுமாறுகிறாய். இனி என்னால் வாழ முடியுமா என தன்னம்பிக்கை இழக்கிறாய். வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் வெறுமையாக இருப்பதாக நினைப்பாய். ஒரே குடும்பமாக இருந்தாலும் ஆளாளுக்குத் தனித் தனியாகஇருக்கிறோம் என்று எண்ணுகிறாய். எதிர்காலம் உனக்கு சாதகமாக இருக்காது என நீயே முடிவு செய்து கொள்கிறாய்.
     நான் வாழத் தகுதியில்லாத நபர் என உன் உள்ளம் உன்னை பரிதாபமாகப் பார்க்கிறது. மொத்தத்தில் உனது சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில், உணர்வுகளில் மாற்றம் ஏற்படுகிறது.இந்த மாற்றம் உன்னை ஆக்கிரமிக்கும் போது நீ தனித்து உட்கார்ந்துவிடுகிறாய்.
     ஏதோ களைப்பாக இருப்பது போலவும், சக்தியை இழந்தது போலவும், தலை வலிப்பது போலவும், உடம்பை தடியால் யாரோ அடித்துப் போட்டது போலவும் உணர்கிறாய். யாரைப் பார்த்தாலும் எரிச்சல், எதைப் பார்த்தாலும் எரிச்சல், தொட்டதற்கு எல்லாம் கோபம், யார் எதைச் சொன்னாலும் தன்னைத் தான் சொல்கிறர்கள் என்ற குற்ற உணர்ச்சி, காரணமே இல்லாமல் பரப்பரப்பாக இருத்தல் போன்றவற்றால் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது வந்து போகிறது.
     உன்னைப் புரிந்துகொள்ளாத நபர்கள், வீட்டாள்கள் இல்லாதபோது நன்றாக சிரித்துப் பேசுவதாகவும்,அவர்கள் வந்த பிறகு முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டதாகவும் குறை சொல்கிறார்கள்.
     இதையெல்லாம் நீ எதிர்கொள்ளும்போது இயற்கையாக இருந்த ஆர்வம் எல்லாம் குறைந்து விட்டது. முன்பு எதையெல்லாம் விருப்பத்தோடு செய்தாயோ, அதை இப்போது கடமைக்காகவும், நாட்டம் இல்லாமலும் செய்கிறாய்.
     இதற்கு முன்பெல்லாம் எதை விரும்பி சாப்பிட்டாயோ இப்போது அதையும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பசியே இல்லாததைப் போன்ற உணர்வு, சாப்பிட்டாலும் ஜிரணம் ஆகாத நிலைமை, எதிலும் பிடிப்பு இல்லாத நிலைமை, கேட்ட விக்ஷயத்தையும், வைத்த பொருட்களையும் அடிக்கடி மறந்து போதல் என தடுமாறுகிறாய். எந்த விக்ஷயத்தையும் உன்னால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. மொத்தத்தில் நீ பழைய ஆளாக இல்லை.
     உனது திறமைகளை இழந்து தடுமாறுகிறாய். இதனால் வாழ்க்கையே போச்சு என்பதும், வெறுமையாக தனித்து விடப்பட்டது போல உணர்வதும், பரிதாபத்திற்கு ஆளாவதும், கோபப்படுவதுமாக காட்டிக் கொள்கிறாய்.
     உன் மனம் முழுவதும் நெகட்டிவ் எண்ணங்களே தலை தூக்கி நிற்கின்றன. எதன் மீதும் நாட்டம் காட்டாத நீ, என் மீதும் நாட்டம் காட்டுவது இல்லை.  என் சரிதத்தை முழுமையாக ஒரு அத்தியாயத்தைக் கூட உன்னால் படிக்கமுடியாது, என்னைப் பற்றிய ஒரு பாடலை முழுதாகக் கேட்க முடியாது.
     உனக்கு மனப்பிரச்சினை என நினைத்து மருத்துவரிடம் போனால், ஆயிரங்களில் செலவாகுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. சாமியார்களைத் தேடிப் போனால், நிம்மதியிருக்காது. தீர்வும் கிடைக்காது. எங்கே தீர்வு எங்கே தீர்வு என்று தேடி அலைந்து கொண்டிருப்பாய்.
என் குழந்தாய்!
     இங்கேதான் தீர்வு இருக்கிறது. இதைத் தாண்டி நீ எங்கு சென்றாலும் கதி மோட்சமில்லை என்பதைப்புரிந்து கொள்.
எங்கே அப்பா தீர்வு இருக்கிறது என்கிறாயா?
     இந்த அப்பா சாயியிடம்தான். குழந்தாய்! நான் சொல்லும் விக்ஷயங்களை சிறிது கவனித்து உள்வாங்கு.எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளப் பழகு.
     ஒரே வரியில் உனக்குச் சொல்ல வேண்டும் என்றால், அது அப்படித் தான்.. அவர்கள் அப்படித்தான்... நீயோ அவற்றைப் பற்றிக் கவலைப் படாதே.. எப்போதும் என் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு இரு! எல்லாம் நன்மைக்கே நான் சொல்லவருவதைப் பொறுமையாகக் கவனி.
     இந்த உலகம் நாம் எதிர்பார்ப்பது போல இருப்பது கிடையாது. நாமும் மற்றவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட முடியாது. நமக்கும் மற்றவர்கள் அப்படியே ஒரு விக்ஷயத்தை நன்றாகக் கூர்ந்து பார்த்தால் எல்லாவற்றுக்கும் நாம் போராடியாக வேண்டும்.
     இந்தப் போராட்டத்தை நம் தாய் ஆரம்பித்து வைத்தாள். ஆமாம், நமது பிரசவத்தின்போது, மிகப் பிரயத்னப்பட்டு, போராடித்தான் இந்த பூமிக்கு நம்மைக் கொண்டுவந்தாள்.
     நமது முதல் சுவாசமும் போராட்டத்துடன்தான் வெளியே வந்தது. அன்றுமுதல் நாம் ஒவ்வொரு விக்ஷயத்திற்காகவும் எதிர்த்துப் போராடிக் கொண்டும், ஜெயித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். சில சமயம் நம் மீது நமக்குப் பிடிக்காத சில விக்ஷயங்கள் திணிக்கப்படுகின்றன. இதையும் அம்மாதான் தொடங்கி வைத்தாள்.
     பிடிக்காத உணவை மறுத்தபோது, நிலாவைக் காட்டி ஏமாற்றி ஊட்டினாள். சில சமயம் வலுவில் வாயில் திணித்தாள். விருப்பத்திற்கு மாறானதை பொறுமையாகவோ, அழுதோ எதிர்த்தாலும் பிரயோசனமின்றி ஏற்றுக் கொண்டோம்.
ஏன்?
     அம்மா நினைத்தாள்! குழந்தை என்றால் அப்படித்தான்! அடம் பிடிக்கும். நாம்தான் அதன் நலனைப்பேணவேண்டும்!
     குழந்தை நினைக்கும்! அம்மா என்றால் இப்படித்தான்.. தலையெழுத்து ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்..
     வளர்ந்த பிறகும் சூழ்நிலைகளை கவனித்து, நமக்கு எதிரான நிலைமைகளை எப்படியெல்லாம் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக்கற்றுக்கொண்டு, முடிந்தவரை அதற்கு இணங்கி நடக்க முயற்சிக்கிறோம். முடியாத பட்சத்தில் நாம் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பு கோபமாக, வெறுப்பாக, பிரிவாக, இழப்பாக இப்படியெல்லாம் வெளிப்பட்டு நம்மை பிறரிடமிருந்து தனித்து வைக்கிறது.
     இந்தத் தனிமையான நிலைமை வரும்போதுதான் நாம் தடுமாறிப் போகிறோம். நம்மை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள், ஏளனமாகப் பார்க்கிறார்கள், உதாசினப்படுத்துகிறார்கள், கொடுமை செய்கிறார்கள், மரியாதை தர மறுக்கிறார்கள், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை பிறர் மத்தியில் அவமானப்படும் வகையில் நடத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்புகிறோம்.
     இந்த நிலைகள் உளவியல் காரணமாகத்தான் வரும் என்று சொல்லமுடியாது. இயற்கையில் நமது வாழ்வில் ஏற்படும் சில திடீர் நிகழ்வுகளின் காரணமாகக் கூட இப்படி ஏற்படலாம். நான் முன்னே சொன்னது போல, நமது உணர்வுகள் பாதிக்கப்படும் போது நாம் இத்தகைய நிலைக்கு ஆளாகிறோம்.
     நம்முடைய எதிர்ப்பு உணர்வுதான் நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதில் நமது இயலாமையை நாம் சேர்த்துக்கொண்டுவிட்டதால் இப்படி புலம்புகிறோம்.. என்பதைப் புரிந்து கொண்டு, எப்படியும் ஜெயித்துக் காட்டுவேன் என துணிந்து பாரேன்.. நீ அதை ஜெயித்து விடுவாய்.
     எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி, மனதில் இரண்டு விக்ஷயங்களை முன்னிறுத்திக்கொள். அது என்ன தெரியுமா?
     அவர்கள் அப்படித்தான்!
     அது அப்படித்தான்!
     ஆசிரியர் பள்ளியில் திட்டுவார்... அவர் அப்படித்தான்.. அண்ணன் எப்போதும் சீண்டிக் கொண்டே இருப்பான்... அவன் அப்படித்தான்..
     தங்கை அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்.. அவள் அப்படித்தான்..
     தெருவில் நடக்கவே முடியவில்லை.. ஏதோ வெளி உலக ஜந்துவைப் பார்ப்பதைப் போல முறைத்துப் பார்க்கிறார்கள்! அவர்கள் அப்படித்தான்.
     காதலித்தவர் கைவிட்டு விட்டார்.. அவர் அப்படித்தான்...
     மாமியார் கொடுமை செய்கிறார்.. கணவர் அதை ஏன் என்றுகூட கேட்பதேயில்லை.. அவர்கள் அப்படித்தான்.
     கடன் கொடுத்தவன் வந்து மானம் போகுமாறு பேசுவான்.. உடனே, மனம் உடைந்துவிடாதே.. அவன் அப்படித்தான்!
     வேலையில் மேலதிகாரியின் தொல்லை தாங்க முடியவில்லை.. என்னை என்னுடன் வேலை செய்கிறவனே போட்டுக்கொடுக்கிறான்.. அவன் அப்படித்தான்!
     என் பிள்ளை என் பேச்சைக் கேட்பது கிடையாது. அவன் அப்படித்தான்.
     இப்படி ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், எந்த ஒரு நபரும் தனது விருப்பத்தை செயல்படுத்தவே முனைவார். அப்போது அவருக்கு நாம் ஒரு பொருட்டாகத் தெரியமாட்டோம். அவர் விருப்பத்திற்கு ஈடு கொடுக்கிறவரைத்தான் அவர் விரும்புவார். தனித்து நிற்கிற குணம் உடைய நம் போன்றவரை புறம் தள்ளிவிடுவார்கள்.
     எந்த ஒரு பொருளும் தனது இயல்பு நிலையை மாற்றினால், அதன் தன்மை கெட்டுவிடும். இதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
     உன்னால் முடிந்தால் அவர்களோடு இணங்கிப் போ. இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு சிறிது காலமாவது விலகி இரு.
     உனக்கு நெருக்கமானவர்களை அழைத்து அவர்களிடம் விக்ஷயத்தைப் பகிர்ந்து கொள். தனித்து இல்லாமல் நாலு பேருடன் சேர்ந்து செல்லவும், பழகவும் கற்றுக் கொள். கண்ட சிந்தனைகள் மனதில் நுழையாமல் முடிந்தால் எனது நாமத்தை தியானம் செய். உடம்பைப் பார்த்துக் கொள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடு, காற்றோட்டமாக நடந்து வா.
     இதையெல்லாம் செய்து பார். எதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், நமதுபெருங்களத்தூர் மையத்திற்கு வந்துவிடு. என் முன் அமர்ந்து கண்களை மூடியோ திறந்தோ என்னிடம் வேண்டுதல் செய். நான் உன்னை சிறிது சிறிதாக ஆனால் முற்றிலுமாக மாற்றிவிடுகிறேன்.
     அப்பா பழைய ஹக்கீம் என்கிற வைத்தியராயிற்றே! அதனால் இப்படி மனம் தொடர்பாகப் பேசுகிறார் என நினைத்துவிடாதே.
     நீ இழந்து போன நிம்மதியை, உறக்கத்தை, உற்சாகத்தை, திறமையை, ஆர்வத்தை மீண்டும் கொடுத்து உன்னை பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையில்தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்.
     எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும். அம்மா, என்னை எடுத்துக் கொள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரப்பிரம்மம் நான். ஆனால், நான் கிழிந்த ஆடையை உடுத்தினேன், கந்தல் கோணியில் அமர்ந்தேன், வீடு வீடாகப் பிச்சை எடுத்தேன். எனது உணவுகளை நாய்களோடும், பறவைகளோடும், பன்றிகளோடும் ஒன்றாகப் பகிர்ந்து உண்டேன்.
     இருக்க இடம் தராமல் பாழடைந்த மசூதியில் தங்க வைத்தார்கள். என்னை கல்லால் அடித்தார்கள், பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள், பணத்தாசை பிடித்தவன் என்றார்கள்.
     இவையெல்லாம் என்னைத் தாழ்ச்சி அடையச் செய்தனவா? இல்லையே மகளே! அவதாரங்களில் எனது இந்த சாயி அவதாரமே சிறந்த அவதாரம் என்ற பெயரை எனக்கு உண்டாக்கியது.
     காரணம் என்ன?
     எல்லாவற்றையும் எனக்குச் சாதகமாக நான் மாற்றிக் கொண்டேன். இதனால் படித்தவர்கள் முதல் பாமரர் வரை என் பேச்சைக் கேட்டார்கள். என் வார்த்தைகளை வேதம் என்றார்கள்.
     என் உடம்பு சமாதியில் படுத்துக் கொண்ட பிறகும் கோடிக்கணக்கான மக்கள் என்னைத் தேடி வருகிறார்கள்.
     என் செல்லக் குழந்தையே!
     இந்த துன்பங்களை சகித்துக் கொள் என உனக்கு கற்றுத் தரமாட்டேன், இவை அனைத்தையும் ஒரு பொருட்டாக நினைக்காதே என்று சொல்லித் தருகிறேன். எல்லாவற்றையும் எதிர்த்தே நாம் ஓட வேண்டும்.
     உலகமும் அதன் செயல்பாடுகளும் ஒரு நோய்க்கிருமிகள் போன்றவை. நாம் அதை எதிர்க்கிற நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவர் என்பதை உணர்ந்து கொள்..
     போ.. போய்.. என் உதியை எடுத்து வாயில் போட்டுக் கொள். அமைதியாகப் படுத்து என் பெயரை உச்சாடணம் செய்..
     உன் நிலைமைகளை நிச்சயம் விரைவில் மாற்றிவிட்டு, உன்னை உயர்த்திக்காட்டுகிறேன். கடனா? பிரச்சினையா? பிள்ளைகள் வாழ்வா? வேலை இல்லையா? எதுவானால் என்ன? நான் உனக்குத் துணை செய்கிறேன். உன் நிலையை மாற்றிக் காட்டுகிறேன். நான் இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு பொய் பேசமாட்டேன் என்பதை நீ அறிந்திருக்கிறாய் தானே! இந்த அப்பாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வை.
     துணிந்து நில், துணிந்து செல், தைரியமாக அனைத்தையும் எதிர்கொள். இதுதான் இந்த அப்பா உனக்கு இடுகிற அன்புக்கட்டளை. உன்னை வெகு விரைவில் வந்து சந்திக்கிறேன். அதுவரை என் நாமமே உனக்குத் துணையாகட்டும்.

அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...