Friday, March 14, 2014

உனக்கும் இது சாத்தியமாகும்!

சாயி பக்தர்களுக்கு ஒரு பெரிய புதிர்... சாயி வரதராஜன் பிரார்த்தனை செய்தால் காரிய சித்தியாகிறது, நமக்கு அது தாமதிப்பது ஏன்?
     சில விக்ஷயங்களை நான் பின்பற்றுகிறேன். முதலாவது கடவுள் என்னை அதிகமாக நேசிக்கிறார், என் மீது அன்பாக, கரிசனமாக இருக்கிறார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.
     அவரை நேசிப்பதை வெளிப்படையாக காட்ட அவருக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட முயற்சிக்கிறேன். ஆகவே பதிலுக்கு அவரும் என்னிடம் அப்படியே நடக்கிறார்.
     எனக்கு அவருடைய உதவி எப்போதும் தேவை என்பதையும் எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து கண்டிப்பாக உதவுவான் என்ற உண்மையையும் தெளிவாக உணர்ந்து உறுதியாக நம்புவதால், இந்த உதவிக்காக சரணாகதி செய்து அவரது பாதத்தில் காத்திருக்கிறேன். கடவுளின் உதவியைப் பெற உரிமையோடு கேட்க வேண்டும். அவர் மீது எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும்போது இந்த உரிமை உணர்வு ஏற்படும். அதைத் தெரிந்துகொண்டால் அற்புதத்தை அனுபவிக்கலாம்.
     தந்தாலும் தராமல் போனாலும் அவரே கதி என்று சரணாகதி செய்தால் போதும், அவர் நம் பொறுப்பை பார்த்துக் கொள்வார் என்பதில் உறுதியோடு இருக்கிறேன். இதனால் நான் விரதங்கள் இருப்பதில்லை, எனக்காக வேண்டுதல் வைப்பதில்லை.
     மற்றவர்களுக்காக வாழ்வதை பாபா ஊக்குவிக்கிறார். இதை உணர்ந்து அவரது பிள்ளைகளான பக்தர்களிடம், ‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று சொல்லி விட்டு, நான் உறங்கிப் போய்விட வில்லை. சாயியின் பாதத்தில் விழிப்போடு உட்கார்ந்திருந்து, அவருக்கு பதில் நான் இங்கே விழித்திருக்கிறேன் என்கிறேன்.
     நான் விழித்திருக்க விரும்புவாரா சாயி? வேண்டுதலைக் கேட்க வைத்தார். அடுத்தது, என்னைக் காக்கும் தகுதி படைத்தவர் சாயி நாதன் மட்டுமே என்ற நம்பிக்கை.எனக்கு தேவை சாயி என்ற ஒரே கடவுள், நான் புரிந்து கொண்ட கடவுள். அவர் என் சொந்தக் கடவுள். அதன் பிறகு வேறு யாரையும், வேறு எந்த கல்யாண ரூபத்திலும் அவரைப் பார்க்க நான் முனைவதில்லை.
     என் கண்கள் சாயியின் பாதங்களை நோக்கி இருக்கிறது. இதனால் அலை பாயாத மனம், அடுத்தடுத்து வெற்றிகள் பெற முடிகிறது. கிடைக்குமோ கிடைக்காதோ என நினைப்பதில்லை. கிடைத்துவிடும் என உறுதி கொள்கிறேன்.
     என்னுடன் இருப்பவர் சாயி அல்லவா? சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாயியை மாற்றக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
     மனம் அறிந்து தப்பு செய்த நேரத்தில் தண்டனை தரும் தந்தையாக, தவறுக்கு வருந்தும்போது தேற்றும் தாயாக, உதவி தேவைப்படும் போது உற்ற நண்பனாக, இடுக்கண் காலத்தில் கை கொடுக்கும் உடன் பிறப்பாளனாக, பாசம் பொங்கும்போது நான் பெற்ற குழந்தையாக, என்னால் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது என் பணியாளனாக.. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவரை உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். அவரும் என் மனநிலைக்கு ஏற்ப ஒத்துழைப்பு தருகிறார்.
கடமையாகக் கருதுகிறேன்!
     அடுத்தது, நான் ‘சாயி என்கிற தந்தை உருவாக்கிய குடும்பத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் என் சக உடன்பிறப்புகளுக்காக பிரார்த்தனை செய்வதை கடமையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு அவர் அற்புதம் செய்யும்போது, இது என்னால்தான் நடந்தது என ஒருபோதும் மனதால் சொல்லவே மாட்டேன். நான் சாயிக்கு ஒரு சாட்சியாக விளங்குவேன் எனத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன்.
     உனக்காக, உன் பெயருக்காக தீவிரமாக சுயநலமில்லாமல் சேவையாற்றுவேன். அப்படிப்பட்ட மனத்தை மட்டுமே எனக்குள் நீ உருவாக்க வேண்டும். தவறாமல் உன்னை தியானிக்கும் பழக்கத்தை சுபாவமாக மாற்றவேண்டும். எனக்குள் நீ இருந்து, என்னை நீயாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த உடல் இறந்த பிறகும் இந்த உலகில் நான் வாழவேண்டும் என்றுதான் பிரார்த்திப்பேன். இதனால், எனக்கு ஒரு தேவை என்றால் வருத்தப்படுவதில்லை. அதாவது எனக்கு வருத்தம் வருவதில்லை. யாருக்காவது ஒன்று என்றால் என்னை அறியாமல் தேம்பித் தேம்பி  அழுகிறேன். இது நானாக ஏற்படுத்திக்கொண்டது அல்ல, தானாக வந்தது.
     சமயத்தில் வேண்டியது கிடைக்காவிட்டால், எனக்கு தேவைப்படாத விக்ஷயத்தில் அவரது நிராகரிப்பு சரியென ஒத்துக் கொள்கிறேன். அவரிடம் ‘அதுதான் வேண்டும் எனக் கேட்டு அடம் பிடிப்பதில்லை.
     அடுத்து, எனது இயலாமை, பாவங்கள், நான் செய்த துரோகங்கள் என எனது எதிர்மறை செயல்கள் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அதனால் ஒவ்வொரு முறையும் அதற்காக மனம் வருந்தி, பாபா இனி தப்பு செய்யமாட்டேன், பாவம் செய்யாமல் பார்த்துக் கொள், துரோகம் செய்யும் குணத்திலிருந்து என்னை காப்பாற்று என வேண்டுகிறேன்.
     சுருக்கமாக, என் மனம் என்னவென அவன் மட்டுமே அறியுமாறு திறந்ததாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கிறேன
     கடைசியாக, கிவ் எனர்ஜி டு கிரியேட் பாசிடிவ் எனர்ஜி (பவர்) என்று வேண்டுவேன். இதனால் எப்போதும் மின்சாரத்தை சேகரித்து, தேவைக்கேற்ப செலவிட்டும், சேமித்தும் வைத்துக்கொள்ளும் சாதனமாக என்னை மாற்றத் தெரிந்து வைத்திருக்கிறேன்.
     மந்திரம் மாயமில்லை. கடும் பிரத்யனமில்லை. விரதமில்லை, அப்பம் வைப்பதில்லை, வேண்டுதல் செய்வதில்லை.. சுய சோதனை மட்டுமே செய்து
தேவையற்றதை ஒதுக்குகிறேன், வெற்றி வருகிறது. ஒவ்வொரு முறையும் எல்லாருக்காகவும் நான் பிரார்த்தனை செய்ய மாட்டேன், அவரவருக்குள் நம்பிக்கையை, பாசிடிவ் எனர்ஜியைப் பாய்ச்சுகிறேன். அவற்றின் அளவே அவர்களுக்குக் கிடைக்கும் விடுதலையின் அளவாக இருக்கிறது. இப்படி மாறுவதற்கு நிறைய தியாகங்கள் தேவைப்படுகிறது. தேவை மனமாற்றம், உணவு, உடை மாற்றம் அல்ல. இந்த நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளும் போது அவன் என் பெயரை மாற்றி, என்னை மாற்றி வித்தியாசமாக எடுத்துச் செல்லும்போது ‘விமர்சனங்கள் வருமே! கேலி பேசுவார்களே! தூற்றுவார்களே என்று கவலைப் படுவதில்லை. போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் என் சாயி பாதங்களுக்கே! என்று நடந்துவிடுகிறேன். இப்படித்தான் இதுவரை செய்து வருகிறேன்.

     அவன் என் பாத்திரத்தை தினமும் துலக்கி சுத்தமாக வைத்திருக்கிறான். அதிலிருந்து எடுக்கப்படும் எதுவும் நச்சாக மாறுவதில்லை. அந்த அளவு நம்பிக்கை இல்லாதவர்கள், சீரடிக்கே போனாலும் வேண்டுதல் நிறைவேறாது. நம்பிக்கையே வாழ்க்கையை மாற்றும் சக்தியாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...