Saturday, June 8, 2013

உனது பைசாக்கள் நோட்டுக்களாகும்!-2






பூனாவுக்கு அருகில் சாஸ்வாட் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவன் பாபு ராவ் போராங்கே. இளம் வயதிலேயே பெற்றோர் இருவரும் காலமாகிவிட்டபிறகு, உறவுக்காரர்கள் அவனது சொத்துகளை அபகரித்துக் கொண்டார்கள்.  பாபு ராவ் அனாதையாகிவிட்டான். படிக்கவும் வசதியில்லை, ஏதேனும் வேலை செய்து பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான் பாபுராவ்.
பாபுராவின் மாமா ஒருவர் சீரடியில் இருந்தார். அங்கு வயலில் கரும்பு பயிரிட்டு வெல்லம் காய்ச்சி விற்பனை செய்துவந்தார். கிராமத்திற்கு வரும் போதெல்லாம் பாபாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். பாபாவின் லீலைகள் பற்றிய மாமாவின் பேச்சில் மயங்கிய பாபுராவுக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நாளடைவில் பாபாவின் பக்தனாகவும் ஆகிவிட்டான்.
ஒரு மனிதனுக்கு நல்ல காலம் பிறந்தபிறகுதானே அவனுக்கு ஞானிகள் பற்றிய நினைவு வந்து, அவர்களைத் தேடத் தொடங்கி அவர்கள் மூலம் நிவாரணம் பெறும் வழியை அறிய முடிகிறது.
அப்படித்தான் பாபாவை அறிந்த பாபுராவுக்கு பாபாவை தரிசிக்கும்  ஆவல் அதிகமாகிக்கொண்டே வந்தது. எப்படியும் பாபாவை தரிசித்தே ஆகவேண்டும்! கையில் காசு இல்லை. வழிச் செலவுக்கு என வெறும் மூன்று அணாக்கள் (பதினெட்டு பைசா) மட்டுமே உள்ளன. இதை வைத்துக்கொண்டு சீரடிக்குப் போய்ச் சேர முடியாது.. ஆனாலும் நான் போவேன், அவரை தரிசிப்பேன் என்று உறுதி கொண்டு புறப்பட்டுவிட்டான்.
பூனாவிலிருந்து கோபர்கானுக்கு டிக்கெட் வாங்கினான். ரயில் அகமத் நகர் வந்ததும், பாபாவை தரிசிக்கும் வரை உண்ணா நோன்கு இருப்பதாக வேண்டிக்கொண்டான். கோபர்கானிலிருந்து கோதாவரிக் கரைவரை மூன்று மைல் தூரத்துக்கு குதிரை வண்டியில் வந்தவன், அதற்கு மேல் போக வழியில்லாமல் இறங்கினான். இனி சீரடிக்கு நடந்தே வருவேன் என நடக்கத் தொடங்கினான்.
சீரடிக்குப் போகும் வழியில் மாமா வீடு இருந்தது. அங்கு வந்த பாபுராவைப் பார்த்த மாமி, ஏதேனும் சாப்பிடுமாறு வற்புறுத்தினாள். தனது விரதம் பற்றி எடுத்துக்கூறிவிட்டு, நேராக சீரடிக்கு வந்தான்.
லெண்டித் தோட்டத்திற்கு அருகே அவனது மாமாவைப் பார்த்தான். நலம் விசாரித்த அவர்,ஏதேனும் சாப்பிட்டாயா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னதும், அவனிடம் ஒரு ரூபாய் தந்து சாப்பிடுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு ரூபாயை பாக்கெட்டில் வைத்துக்கொண்ட பாபு ராவ், பாபாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் மசூதிக்கு வந்தான். துவாரகாமாயி வந்து பாபாவை தரிசித்தான், மனமெல்லாம் புல்லரிக்க அவரது பாதங்களில் தலை வைத்தான்.
பாபா அவனை ஆசீர்வதித்து அவனிடம் அன்பொழுகப் பேசினார். பிறகு தன் வழக்கப்படி தட்சணை கேட்டார். பாபுராவுக்கு தன்னிடம் மாமா கொடுத்த ஒரு ரூபாய் நினைவில் இல்லை. அவன் எடுத்து வந்திருந்த மூன்றணாவும் செலவாகிப் போயிருந்தது. இதனால் பாபாவிடம்,  ‘உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே!’ , என்றான்.

                                        இதன் தொடர்ச்சி நாளை......

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...