Tuesday, February 11, 2014

சாயி நாம மகிமை


பாபாவின் நாமத்தை ஆத்மார்த்தமாக உச்சரிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை சத்சரித்திரம் அழகாகக் கூறுகிறது.
                “எவன் ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிக்கிறானோ, நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து, அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். என் வாழ்க்கையையும், செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன். என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வு அடைவார்கள். நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி என்றும் நிலைத்திருக்கும் திருப்திளை அளிப்பேன்.
                எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகிறானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகிறானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ, அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.
                என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எங்ஙனம் உலகப் பொருட்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனம் உள்ளவர்களாக இருக்க முடியும்? சாவின் வாயினின்று எனது அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன்.
     எனது கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். எனது கதைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக் கொள்ளுங்கள். இதுவே மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான மார்க்கமாகும்.
     என் அடியவர்களின் பெருமையும், அகம்பாவமும் அற்றுவிடும். கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும். அன்றியும் அது இதயப்பூர்வமும், முழுமையுமான பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகிவிடும்.
     சாயி சாயி என்று சாதாரணமாக ஞாபகமூட்டிக்கொள்வதே பேசுவதில், கேட்பதில் உள்ள பாவங்களைத் தீர்க்கும்.
     நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருப்போமானால் என்னென்ன பலன்கள் பார்த்தீர்களா?  ஆசைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பக்தி அதிகமாகிறது. மகிழ்ச்சி பன்மடங்கு பெருகுகிறது.
     பாபா எல்லாத்திசைகளிலும் முன்னும் பின்னும் சூழ்ந்திருக்கிறார். எல்லையற்ற பேரின்பம் ஏற்படுகிறது.  மேலும், செய்த பாவங்கள் விடுவிக்கப்படுகின்றன. சாவின் விளிம்பிலிருந்து வெளியே இழுத்துவிடப்படுகிறோம். நோய்கள் குணமாகின்றன. அகம்பாவம் அகற்றப்படுகிறது. மனம் அமைதியாகிறது. உணர்ச்சிகள் ஒன்றாகி விடுகின்றன. சாயி சாயி என்று நினைவூட்டினாலே,  எல்லா பாவங்களும் தீர்க்கப்படுகின்றன.
     இதனால்தான் சாயி வரதராஜன் எப்போதும், தன் சாயி பக்தர்களை சாயி நாம ஜெபம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்.  நாமும் எப்போதும் பாபாவின் நாமத்தை உச்சரிப்போம். ஆத்மார்த்தமாக வணங்குவோம், அளவிட முடியாத பலன்களைப் பெறுவோம்.


-  சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...