Friday, July 1, 2016

எல்லாம் எனக்கு ஏற்றவையே!

பாலா ராம் மான்கர் என்ற சாயி பக்தர் இறந்து     விட்டார். அவரது மகன் கோவிந்தஜீ ஈமச்சடங்கு செய்ய சீரடிக்குப் போக இருந்தான். சாயி பக்தையான திருமதி தர்கட் அம்மையார் அவனிடம் ஒரு பால்கோவாவை பாபாவுக்கு கொடுத்து அனுப்பினார்; இந்த பால்கோவா ஏற்கனவே நைவேத்தியம் செய்யப்பட்டது.
கோவிந்தஜீ சீரடிக்கு வந்து பாபாவை தரிசனம் செய்தபோது பால்கோவாவை சமர்ப்பிக்க மறந்து விட்டான். பிற்பகலில் சாயி தர்பாருக்கு வந்த போதும் அதைக் கொண்டுவரவில்லை.
பொறுமையிழந்த பாபா, “நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?” எனக் கேட்டார். பையன் ஒன்றுமில்லை என்றான். வேறு யாராவது உன் மூலம் ஏதேனும் கொடுத்தார்களா?” என்று கேட்ட போதும் அவனுக்கு பால் கோவா நினைவுக்குவரவில்லை.
மகனே, நீ கிளம்பும்போது அன்னை எனக்கு பால் கோவா கொடுத்தனுப்பவில்லையா? எங்கே அது என நேரடியாகவே கேட்டார். அப்போதுதான் அவனுக்கு விஷயம் நினைவுக்கு வந்தது. வெட்கப்பட்டவாறே ஓடிச் சென்று அதை எடுத்து வந்து பாபாவுக்கு சமர்ப்பித்தான். (அத்தியாயம் 9ல் 144 முதல் 156) இதுதான் நிகழ்ச்சி.
நிறைய பேர் என்னிடம் கேட்கிற விஷயம், “ஐயா என் வீட்டில் சாவுத் தீட்டு இருக்கிறது; நான் பாபா ஆலயம் வரலாமா?” என்பது. விஷயத்தைப் பாருங்கள்: சாவுத் தீட்டுள்ள கோவிந்தஜீ சீரடி வந்தான். சீரடியில் இறந்தவர்களுக்கான சடங்கு செய்யப்பட்டது.(இப்போது அவ்வாறு செய்யப்படுவது இல்லை)
ஏற்கனவே நைவேத்தியம் செய்யப்பட்டதை மீண்டும் தந்தாலும் அதை பாபா ஏற்கிறார் என சத்சரித்திரம் கூறுகிறது. இந்தச் செயல்கள் மூலம் தன் மீது பக்தன் வைத்துள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை பாபா ஊக்கப்படுத்துவதோடு, அதைப் பிறருக்கும் அறிவிக்கிறார்.
சாம வேதத் தகவல் ஒன்று: கோசுருதி          என்ற அறிஞர், சத்திய காம ஜாபாவான் என்ற மகரிஷியை அணுகி சுவாசத்திற்கு உணவு எது எனக் கேட்டார்.
பூமியில் உள்ள நாய், பட்சி முதலியவற்றுக்கு எது உணவோ அதுவே சுவாசத்திற்கும் உணவு என்றார். ஜலமே சுவாசத்தின் ஆடையாகும்.. எதையும் உணவாகப் புசிக்கலாம். ஆனால்,உணவு உண்பதற்கு முன்னால் பின்னால் நீ ஜலம் பருகவேண்டும். இதைத்தான் சுவாசத்தின் உடை என்றார்கள் எனக் கூறினார். உணவை ஜலத்தால் பரிசுத்தமாக்கிவிட்டு சாப்பிடலாம்.
ஞானிகள் மரணத் தீட்டையும், வேறுவித தீட்டுகளையும் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் உனக்கு நம்பிக்கையும் பக்தியும் இருக்கிறதா என்ற ஒன்றை மட்டும்தான். இதை அடிப்படையாக வைத்துதான் அருள் பாலிக்கிறார்கள். ஆகவே பாபா ஆலயத்திற்கு தீட்டுடன் வந்தால் அவர் தள்ளிவிடுவதில்லை.
ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்த  யந்திரத்திற்கு சக்தியுண்டு. தீட்டு போன்ற சம்பவங்களால் யந்திர சக்தி குறைவதும், தீட்டானவருக்கு எதிர்மாறான பலன் ஏற்படுவதும் அனுபவப்பூர்வ உண்மைகள். ஆகவேதான் குளித்துவிட்டு கோயிலுக்கு வருமாறு கூறுகிறார்கள்.
பக்தியற்றவர்கள் கோயிலுக்கு வரும்போது ஆடை சார்ந்த பிரச்சினைகளால் அவர்கள் மனம் இறைவன் மீது குவியாமல் அநாகரீக ஆடையாளர்கள் மீது செல்லும் என்பதற்காகவே ஆடைக் கட்டுப்பாது தேவை என்கிறார்கள்.
ஆடை இல்லாதவன் தன்னிடமுள்ள ஆடையுடன் போவதில் தப்பில்லை. ஆடை வாங்க வசதியிருந்தும் அரைகுறை ஆடையுடன் செல்வதுதான் தப்பு.
இங்கே எத்தனையோ பேர் பிச்சைக்காரர்கள் போன்ற உடையில் என்னை பார்க்க வந்த சமயத்தில் அவர்களுக்கு மாற்று ஆடை தந்து அனுப்பியிருக்கிறேன். அது இறைவனுக்குச்செய்யும் தொண்டு. சமயங்களில் நானே அப்படித்தான் செல்வேன்.
தூய்மையான மனத்துடன் கோயிலுக்குச் செல்லுங்கள், உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனை அங்கு நிதர்சனமாக தரிசனம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...