Thursday, January 9, 2014

பீமாஜி பாடீல் - 2

நேற்றைய தொடர்ச்சி
      நானா எழுதினார், ''உங்களுடைய கடிதத்திற்குப் பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தைப் பரிந்துரை செய்கிறேன். ஸாயீ பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள்.  அவரே நம் அன்னையும் தந்தையும்,  அவரே அனைவர்க்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். கொடிய குஷ்டரோகம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷயரோகம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் ஸந்தேஹம் வேண்டா; போய் ஸாயீயின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாகச் சென்று ஸாயீ தரிசனம் செய்யவும். மரண பயத்தைவிடப் பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, ஸாயீயின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தைப் போக்கமுடியும்.
       பொறுக்கமுடியாத அவதியாலும் அந்திம காலம் நெருங்கி விட்டதோ என்ற பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், ''நான் எப்பொழுது ஸாயீநாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்குக் காரியசித்தி ஆகும்?
       பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. ''உடனே வேண்டியதையெல்லாம் மூட்டைகட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள்; சீக்கிரமாக சிர்டீக்குப் போவோம்.
      இவ்வாறு திடநிச்சயமாகப் பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஸாயீ தரிசனத்திற்காக சிர்டீக்குப் பயணமானார்.          தம்முடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு, எப்படி சிர்டீக்குப் போய்ச் சேர்வது என்னும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனத்துடன் பீமாஜீ சிர்டீக்குக் கிளம்பினார்.
       பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில் இருந்த சவுக்கத்திற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்துசேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜீயைக் கைகளால் தூக்கிக்கொண்டு வந்தனர்.   நானா ஸாஹேப்பும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்துவைக்கும் மாதவராவும் ஏற்கெனவே அங்கு வந்திருந்தார்.
      பாடீலைப் பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், ''சாமா, இன்னும் எத்தனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?
      பீமாஜீ ஸாயீபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், ''ஸாயீநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள். தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்.
     பாடீலி­னுடைய துன்பத்தைப் பார்த்த ஸாயீநாத் பரிதாபப்பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டதை உணர்ந்தார்.
      பீமாஜீயினுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்த கருணாஸாகரமான ஸமர்த்த ஸாயீ, மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப்படுவதில்லை. சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கட­ல் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். இவ்விடத்திலி­ருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலி­யையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான். 'ஆகவே, நீர் அமைதிகொள்ளும்; பீமாபாயீயின் வீட்டில் தங்கும்; போய்வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்.
        ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது.  ஸாயீயின் திருமுகத்தி­ருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாக்த்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்ததாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.
       ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாய்க்கு ஏறிவந்த இரத்தம், பாபாவுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண் டிருந்தபோது அடங்கிவிட்டது.  பாபா நோயாளியைப் பரிசோதிக்கவில்லை; நோய் எப்படி ஏற்பட்டது என்று காரணமும் கேட்கவில்லை. அவருடைய அருட்பார்வையே கணமாத்திரத்தில் வியாதியினுடைய வேரை அறுத்துவிட்டது.
       அவருடைய கிருபை கனிந்த பார்வையொன்று போதும்; பட்டமரம் துளிர்த்துவிடும்; வஸந்தகாலம் வருவதற்கு முன்னரே மரம் பூத்துக் குலுங்கும்; சுவையான பழங்களின் பளு தாங்காது மரம் தழையும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...