Friday, January 31, 2014

நரசிம்ம சுவாமி - தொடர் பாகம் 3

நரசிம்ம சுவாமி சேலத்தில் வாழ்க்கை
     வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து பாடம் கற்பித்தச் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர் . நரசிம்மர் மற்றச் சிறுவரைப் போல அல்லாமல் மிகவும் புத்திசாலியாகவும் , துறுத்துறுப்பானவராகவும் இருந்தார் . பள்ளியில கூறப்பட்ட பாடங்களில் இருந்த அப்பியாசங்களை தானே சோதனை செய்து பார்த்தால் ஒழிய நம்ப மறுத்தார் . நமக்குத் தெரியாத , புரியாத , நம் அறிவுக்கு அப்பாற்பட்டதை தெரிந்து கொள்ள முயன்றார் . உலக நிகழ்வுகளை படிக்கத் துவங்கியவர் மனதை அமைதி இன்மை ஆக்ரமித்தது .
     இயற்கையிலேயே உடல் வலிமை கொண்டிருந்தவர் புதுமையாக எதையேனும் செய்ய நினைத்தார் . தன்னை சுற்றி உள்ள நண்பர்கள் சோம்பேறித்தனமாக , துடிப்பின்றி , எந்த பிரச்சனைக்கும் முடிவு காண முடியாமல் தவித்தபடி இருந்ததைக் கண்டார் . ஆகவே அவர்களுடன் தாமும் சேர்ந்து இருந்தால் எங்கே தாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோமோ என பயந்தார் . மந்தமாக இருப்பது தற்கொலைக்கு சமம் என நினைத்தார் .
     அவருடைய பெற்றோர்களான அங்கச்சியம்மாளும் வெங்கடகிரி ஐயரும் அவரை பக்தி மார்க்கத்தில் வைத்து வளர்த்திருந்தனர் . செல்வந்தர்கள் என்றாலும் தாராள மனம் படைத்தவர்கள் . தம் தோட்டத்தில் விளைந்த தேங்காய் ,மாங்காய் போன்றவற்றை தம் உபயோகத்துக்கென வைத்திருந்தது போக மீதியை நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் , வேலையாட்கள் என அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள் . தம்முடைய வாழ்வில் பின்னாளில் அது குறித்துக் கூறிய நரசிம்மசுவாமி தன்னுடைய தாயாரிடம் இருந்தே ஒருவர் தன வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய சமூக தர்மத்தை தாம் கற்று அறிந்ததாகக் கூறினார் .
     நரசிம்மசுவாமியின் தந்தை பக்தி மார்க்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்ததினால் மாலை வேளைகளில் நண்பர்கள் , அக்கம்பக்கத்தினர் வேலையாட்கள் என அனைவரையும் அழைத்து ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி சொற்பொழிவு ஆற்றுவார் . அது போல பண்டிகை நாட்களிலும் சாதுக்கள் , சன்னியாசிகளை வீட்டிற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றுமாறுக் கூறுவார் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து எடுத்த காட்சிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார் .
     அதனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த நரசிம்மசுவாமிக்கும் சாதுக்கள் , சன்னியாசிகளின் மீது தன்னை அறியாமலேயே ஒரு ஈடுபாடு ஏற்பட்டது . அனைவரும் அந்த சாதுக்கள் , சன்னியாசிகளுக்குக் கொடுத்த மரியாதையை கண்டவருக்கு தாமும் அவர்களைப் போல சாதுவாக , சன்னியாசியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
     நரசிம்மசுவாமியின் தந்தை மூட நம்பிக்கைகளைக் கொண்டவர் அல்ல.  தம் மதத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களையும் தம் வீட்டில் நடைபெற்ற பஜனைகளில் , பூஜைகளில் கலந்துக்கொள்ள அழைப்பதில் பாகுபாடே காட்டவில்லை . அது குறித்து பின்னர் நரசிம்மசுவாமி கூறிய பொழுது தம்முடைய வாழ்வில் தூய்மையான வாழ்வை கடைப்பிடித்தத்தின் காரணம் தம்முடைய தந்தையிடம் இருந்து அவற்றைக் கற்று அறிந்ததுதான் என்றார் .
      நரசிம்மசுவாமி வாழ்க்கை முறையை வடிவமைத்ததில் அவருடைய தாயாரின் பங்கு மிகவும் அதிகம் . தன்னுடைய மகன் பக்தி மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடல்களை பாடிக் காட்டுவார் . ஊரில் எந்த சாதுக்கள் , சன்னியாசிகள் வந்தாலும் அவர்களை தம் வீட்டிற்க்கு அழைத்து விருந்து உபசாரம் செய்வதை நரசிம்மசுவாமியின் பெற்றோர்கள் ஒரு நியமமாகவே வைத்து இருந்தனர் . சிருங்கேரி சுவாமிகளும் காரைக்காலில் இருந்த சுரக்காய் சுவாமிகளும் நரசிம்மசுவாமியின் மனதில் பெரும் இடத்தை பிடித்து இருந்தனர் . ஆதி சங்கராச்சாரியாரின் அவதாரமாகக் கருதப்பட்ட சிருங்கேரி சுவாமிகளிடம் சிறு வயதில் அவர் சென்று இருந்த பொழுது ஸ்வாமிகள் நரசிம்மசுவாமி கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தாராம் . அதன் பின் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்மபாரதி அங்கிருந்து சென்று விட்டார் . அப்போதுதான் அந்த சிருங்கேரி ஸ்வாமிகள் தரையில் தம் பாதங்கள் படாமல் வேக வேகமாகச் செல்வதை நரசிம்மசுவாமி கவனித்தார் . அவரை தாம் சிறு வயதில் சந்தித்த பொழுது அவர் நேருக்கு நேர் பார்த்த பார்வையில் இருந்த காந்த சக்தியை தம் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாகக் கருதியதாகவும் அதை தம்மால் மறக்கவே முடியாது எனவும் நரசிம்மசுவாமி கூறினார் .
     1882 ஆம் ஆண்டில் அவருக்கு பூணூல் போடப்பட்டது . காயத்ரி மந்திரத்தை தந்தை வெங்கடகிரி ஓத , வீட்டு வைதீகர் சந்தியாவந்தனத்தைக் கற்றுக் கொடுத்தார் . தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்துகொண்டும் வேத பாடசாலையில் ருத்ரம் , சமகம் , ஸ்ரீசூக்தம் போன்றவற்றையும் கற்று அறிந்தார் . பக்கத்து வீட்டில் இருந்த அலமேலு என்ற பெண்மணி அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்தார் .
     நரசிம்மசுவாமியுடைய தாயார் தினமும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிய பின்னால் , பசுவுக்கு சிறிது உணவு தந்தபின்னரே உணவு அருந்துமாறு அவரிடம் கூறி இருந்தாள். அதற்குக் காரணம் கேட்டபொழுது , மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாம் உணவு அருந்துவது பாவம் என்றாளாம் அங்கச்சியமாள் தினமும் ஏழைகளுக்கும் தானம் செய்வது உண்டு .
     அப்படி ஒரு நாள் ஒருவருக்கு பிச்சை போட்டதை,  நரசிம்மர் கண்டித்தார் . அநத ஆள் அதற்குத் தகுதியானவன் அல்ல என அவர் கூறியபோது , அவருடைய தாயார் அவரிடம் , நரசிம்மா, தானம் கேட்டு வருபவன் தகுதியானவனா, இல்லை தகுதி இல்லாதவனா எனத் தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை . தானம் கேட்டு வரும் எவருமே கடவுளின் அவதாரமே , ஆகவே அவர்களுக்கு தானம் தருவது நமது கடமை என்றாளாம் .
     அது போலவே சமூகத்தினால் கீழ் ஜாதியினர் , தீண்டப்படாதவர் என ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய தாயார் உதவி வந்தாள் . அது குறித்து பின்னர் கூறிய நரசிம்மசுவாமி தம்மிடம் உள்ளவற்றை கொடுப்பவரே கடவுள்.  அதைச் செய்யாமல் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் பேய்களுக்கு சமம் என்றார் . தனது தாயார் அங்கச்சியம்மாள் கடைப்பிடித்து வந்த அந்தக் கொள்கையே கர்மயோகம் என்றார் . மனித ஜீவன்களை சிவபெருமானாகக் கருதி அதை தம்முடைய வாழ்விலும் கடை பிடிப்பவர் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் . அவர்களே புனிதமானவர்கள் என்ற தத்துவார்த்தமான உண்மையையும் புரிந்து கொண்டார் .
     அக்கம்பக்கத்தினர் உதவி கேட்டு வந்த பொழுதெல்லாம் உதவ அவருடைய தாயார் தயங்கியதே இல்லை . ஒருமுறை அடுத்த வீட்டில் இருந்தவள் சுகம் இன்றி இருந்த போது தம் வீட்டில் சமையலை முடித்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் பொய் சமைத்து கொடுத்தவளிடம் நரசிம்மர் அம்மா நீ சுயநலம் பிடித்தவளாக இருக்கின்றாயே . முதலில் அவளுக்கு சமைத்துப் போட்டுவிட்டு வந்து அல்லவா  நம் வீட்டில் சமைக்க வேண்டும் என்ற பொழுது அவருடைய தாயார் கூறினாராம் , நான் அப்படிச் செய்து இருந்தால் அவர்கள் சாப்பிடப் போகும் முன், அந்தச் சமையல் ஆறிப் போய்விடாதா ? ”. அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழப் பதிந்தன .
     அப்படிப்பட்ட விசாலமான மனது கொண்ட தாயார் அவருக்கு குருவாக இருந்தாள் . பிற்காலத்தில் நரசிம்மசுவாமி தன்னைப் பற்றி அதிகம் கூறிக் கொண்டது இல்லை . மாறாக தம்முடைய தாய் தந்தையின் வாழ்க்கை நெறியும் தத்துவமும் தம்மை நல்ல முறையிலான வாழ்கையை அமைத்துக் கொள்ள எப்படி எல்லாம் உதவின என்பதை அடிக்கடி கூறுவது உண்டு . சேலத்தில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவர் மேல் படிப்பு படிக்க சென்னைக்குச் சென்றார் .

………தொடரும்

நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 1
நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 2

நன்றி:

http://shirdisaibabatamilstories.blogspot.in


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...