எவ்வளவு துர்நாற்றம் அடித்தாலும், எத்தனை சிறிய நீர் நிலையாக இருந்தாலும், ஒரு பன்றிக்கு அதுவே சொர்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?
ஜீவாத்மாவுக்கும் கிளிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு; இரண்டுமே சிறைப்பட்டிருக்கின்றன; ஒன்று மனித உடல்; மற்றொன்று கூண்டில். சுதந்திரத்தை இழந்த போதிலும் கிளிக்குக் கூண்டே சுவர்க்கம்!
சுதந்திரத்தின் குதூகலம் அறியாத கிணற்றுத் தவளையைப் போல், கிளி தன் கூண்டிலேயே எல்லா சுகங்களையும் காண்கிறது; ஆசைகள் நிரம்பிய ஜீவாத்மாவும் அவ்வாறே.
ஆஹா, என்னுடைய கூண்டு எவ்வளவு அழகாக இருக்கிறது! தங்கத்தாலான குறுக்குத் தண்டிலிருந்து இங்குமங்கும் சிறகடிப்பது எவ்வளவு ஆனந்தம்! தலைகீழாகத் தொங்கினாலும் கால் நழுவி விழுந்து விடுவோமோ என்ற பயம் இல்லையே!
இக்கூண்டிலிருந்து வெளியேறினால், என்னுடைய சுகங்களனைத்தையும் இழப்பேன். அது, தன்னுடைய சுகத்தைத்தானே அழித்துக் கொள்ளும் செய்கையாகி விடும். மாதுளம் முத்துகளோ சுவையான மிளகாய்ப்பழமோ கிடைக்காது.
ஆயினும், நேரம் வரும் போது, அன்பாகத் தட்டிக் கொடுத்துக் கண்களுக்கு ஞானமெனும் மையை இட்டு சுதந்திரத்தின் உல்லாசத்தை உணரவைக்கும் அற்புதம் நிகழ்கிறது.
அன்பான தட்டு, (கையால் தொட்டு குரு அளிக்கும் தீட்சை) கிளியின் இயல்பான சுதந்திர உணர்வை எழுப்பி விடுவதால் கிளி பறந்தோடி விடுகிறது. திறந்த கண்ணோட்டத்துடன் சுதந்திரமாக வானமெங்கும் சிறகடித்து சந்தோஷமாகப் பறக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்?
இவ்வுலகமே கிளியை வா, வா என்றழைக்கிறது. பழத்தோப்புகளில் மாதுளையையும் கொய்யாவையும் வயிறு புடைக்கும் வரை தின்னலாம். எல்லையற்ற வானில் எங்கும் பறந்து திரியலாம். புதிதாகக் கண்டெடுத்த சுதந்திரத்தை அமோகமாக அனுபவிக்கலாம்.
ஜீவாத்மாவின் நிலையும் இதுவே. இறைவனின் கருணையால் ஒரு குரு கிடைத்தவுடன் பந்தங்களிருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் சுதந்திரத்தின் முக்தியையும் அனுபவிக்கிறான்.
No comments:
Post a Comment