Monday, November 25, 2013

காகாஜி வைத்யா

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.  இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக்கொண்டுவந்தால், ஸாயீலீலை ரசவாதம் புரியும். பிறவியெனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். ஸமர்த்த ஸாயீ மஹத்தான சக்தி பெற்றவர் அல்லரோ.
நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்துவந்தார். அங்கிருந்த தேவியின் கோயில் பூஜை செய்பவராக இருந்தார். 
தேவியின் பெயர் ஸப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளாலும் வேதனைகளாலும் துன்புற்ற பூஜாரி  மன உளைச்சலுற்றார். காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை. 
மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளி­ருந்தும் சஞ்சலங்களி­ருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார். 
    தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித் திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்களே!  இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!
 தேவி ஸப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, ''பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும் என்று கூறினார்.
  'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது? என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார். 
மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார். 
 பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவர் ஆகத்தான்  இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனவுளைச்சல் நிற்கவில்லை. 
திரியம்பகேசுவரத்தில் பத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை. 
  உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார். 
 தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவ­லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும் மனம் அமைதியற்று இருந்தது. 
 மறுபடியும் தேவியின் கோயிலுக்குச் சென்று, ''என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனத்திற்கு அமைதி கொடுங்கள். என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டாம் என்று மனமுருகி வேண்டினார். 
      தீனமான குர­ல் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினார். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி, ''பாபா என்று நான் குறிப்பிட்டது ஷீரடியில் வாழும் ஸமர்த்த ஸாயீயை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே? எனச் சொல்­ அருள் செய்தார். 

      ''இந்த ஷீரடி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீரடி விஜயம் எப்படி நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லையே? என்று காகாஜி குழம்பினார். 
     ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமல்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார். 
     ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசம் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளும் இறைவனும் அத்வைதம். 
 ''என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன். இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையுமாகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை. 
  ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்லமுடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.  பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்யவேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பாவமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது. 
இவ்விதமாகக் காகாஜி, 'ஷீரடி தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்?என்று மூளையைக் குழப்பிக்கொண் டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு ஷீரடியி­ருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்.
    விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? , இல்லவேயில்லை. எவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்õ   அவருடைய பெயர் மாதவராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது. 
      சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அன்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் ('நீ, வா, போஃ என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்துசேர்ந்த விருந்தாளி இவர்தான். 
குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், ''இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு. குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன். இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயி­ருந்து விடுபட்டது. 
     வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன் நிறைவேற்றப்படாமல் கிடக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்குக் காரணம் ஆகிறது. 
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார்.
  ''பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா.
தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வலி­யையும் துன்பத்தையும் அளித்தன. 
 ''தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வ­லியையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சன்னிதியில் ஆரத்திபோல் சுற்றியபின் பாதங்களில் ஸமர்ப்பிக்கிறேன்.
   செய்யலாம், செய்யலாம் என்று சொல்­ இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது. 
    தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார். 
மறுபடியும், 'போவோம், போவோம் என்று சொல்லி­யே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவராவ் மறந்தே போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.
 30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷீரடிக்கு வந்துசேர்ந்தார்.  ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண் டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும்பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார். 
ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி­ எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச்செய்து மதிப்புப் பெற்றிருந்தார். 
மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தைப்பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார். 
ஜோதிடர் கூறினார், ''உமது தாயார் மரணத் தறுவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்கச் சொன்னார். ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள். மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார். 
      மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார். 
பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, ''என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள் என்று வேண்டினார்.
 ''நீரே எனது ஸப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்.
பாபா பதில் கூறினார், ''நீ ஸப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே ஸமர்ப்பணம் செய்.
பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்குப் போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்குத் திரும்பினார். 
பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் உதீ பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார். 
      ஸப்தசிருங்கிக்கு வந்துசேர்ந்து, குல உபாத்தியாயருக்காகத் தேடினார். தெய்வாதீனமாகக் காகாஜியின் வீட்டை அனாயாசமாகச் சென்றடைந்தார். 
      காகாஜியோ இங்கு பாபா தரிசனத்திற்காகத் துடித்துக்கொண் டிருக்கிறார். அதே சமயத்தில் மாதவராவும் அங்கு வந்துசேர்கிறார். இது சாமானியமாக நடக்கக்கூடிய சம்பவமா என்ன? 
காகாஜி அவரை யார் என்றும் எங்கிருந்து வந்திருக்கிறாரென்றும் விசாரித்தார். மாதவராவ் ஷீரடியி­ருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் காகாஜி அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். போற்றத்தக்க இந்த சம்பவக் கூடலைக் கண்டு இருவரும் துள்ளிக் குதித்தனர். 
 இவ்வாறாக, இருவரும் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன் ஸாயீ லீலையைப் புகழ்ந்து கொண்டே நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகளை முடித்தனர். அது முடிந்ததும் உபாத்தியாயர் (காகாஜி) ஷீரடிக்குக் கிளம்பினார். 
மாதவராவின் மதிப்பிற்குரிய சங்கமும் தோழமையும் கிடைக்குமென்று கனவிலும் எதிர்பாராத காகாஜி ஆனந்தத்தால் நிரம்பினார். அவருடைய கவனம் முழுவதும் ஷீரடி செல்லும் பாதைக்குத் திரும்பியது. 
நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகள் முடிந்தவுடன், ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியவர்களாய் இருவரும் சீக்கிரமாக ஷீரடிக்குக் கிளம்பினர். 
    அவர்கள் கிளம்பிய வேகம், காகாஜியின் மனத்தில் முன்னமிருந்த ஆவலையும் துடிப்பையும் ஒத்திருந்தது. கோதாவரிக் கரையை சீக்கிரமாகச் சென்றடைந்தனர். அங்கிருந்து ஷீரடி சமீபத்தில் இருந்தது. 
காகாஜி பாபாவை வணங்கி அவருடைய பாதங்களைத் தம் கண்ணீரால் குளிப்பாட்டினார். பாபாவின் தரிசனத்தால் சாந்தியையும் மகிழ்ச்சியையும் திரும்பப்பெற்றார். 
இதற்காகத்தான் தேவி அவருடைய கனவில் தோன்றினாள். ஸமர்த்த ஸாயீயைக் கண்டவுடனே காகாஜி உண்மையான சந்தோஷமடைந்தார். அவருடைய மனோரதம் நிறைவேறியது. 
ஸாயீ தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. பாபாவின் அருள் அவர்மீது பொழிந்தவுடன் மனம் நிச்சிந்தையாகியது; கவலைகள் பறந்தோடின. 
வியப்புறும் வகையில் மனத்தின் சஞ்சலங்கள் ஓய்ந்தன. அவர் தமக்குத் தாமே, 'ஓ இதென்ன அசாதாரணமான லீலை என்று சொல்லி­க்கொண்டார். 
      ''என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; ஒரு கேள்வியும் கேட்கவில்லை; சமாதானமும் செய்யவில்லை; ஆசீர்வாதமும் செய்யவில்லை; வெறும் தரிசனமே எனக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அளித்துவிட்டது”.
''சஞ்சலங்களால் அலைபாய்ந்துகொண் டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மஹிமையே அன்றி வேறெதுவும் இல்லை.
ஸாயீ பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது. 
    உபாத்தியாயர் (காகாஜி) பாவத்துடன் ஸாயீயின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார். 

இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் ஷீரடியில் தங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, ஸப்தசிருங்கிக்குத் திரும்பினார். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...