Thursday, November 28, 2013

ஒரு பக்தரின் அனுபவம்


ஜெய் ஸாயிராம். என் பெயர் சுமன். உத்தகாண்ட்டைச் சேர்ந்தவன். பாபாவின் ஒரு எளிய அடியவன். அவர் சொன்னவற்றின்படி நடக்க முற்பட்டாலும், அடிக்கடி தவறுகள் செய்து, அவருடைய மன்னிப்பைக் கோருபவன். என்னுடைய முந்தையப் பதிவில் சொல்லியவாறு, கடந்த 7 ஆண்டுகளாக நான் சில சோதனைகளைச் சந்தித்து வருகிறேன். அவற்றை மீண்டும் சொல்லாத‌தற்காக என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

சிறுவயது முதலே நான் ஸாயி வழியைப் பின்பற்றி வந்தபோதிலும், சமீப காலமாக இந்த பக்தி எனக்கு நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக, எனது பிரச்சினை இன்னும் தீராத போதிலும், நான் ஸாயிக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறேன்.

எனது பிரச்சினை தொடர்பாக, ஸாயியின் ஆணைப்படி தில்லியில் இருக்கும் ஒருவரைச் சென்று பார்த்தேன். அந்தப் பெண்மணி அடுத்த 9 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை 7 தினங்களுக்குத் தன்னை வந்து பார்க்குமாறு சொன்னார். அதனால், மாதமொரு முறை தில்லி வந்து என் சகோதரனின் வீட்டில் தங்கி, மெட்ரோ ரயில் மூலம் இவர் இருக்கும் இடத்துக்குச் செல்லவேண்டியதாயிற்று. இது ஒரு 40 நிமிடப் பயணம் என்பதால், இந்த நேரத்தில் ஸாயி ஸத் சரிதப் பாராயணம் செய்ய முடிவெடுத்தேன். இப்படிச் செய்கையில் அந்த 7 நாட்களில் நான் ஸாயி ஸத்சரிதப் பாராயணத்தைப் பூர்த்தி செய்ததை அறியவில்லை. அடுத்த மாதத்திலிருந்து இதை உணர்ந்து, நான் செய்தபோது பாபாவின் ஆசீர்வாதம் எனக்குப் பல வகையிலும் கிடைத்ததை உணர்ந்தேன்.

ஒருமுறை எங்கள் தெருவின் வழியே ஸாயி பால்கி வந்தபோது நான் 10 ரூபாய் கொடுத்தேன். உதி, அக்ஷதை மற்றும் ஒரு பூ எனக்குக் கிடைத்தது. அன்று மாலை பூஜைக்குப் பின், ஸத்சரிதத்தைப் புரட்டியபோது, அப்பாசாஹேப் குல்கர்னி என்பவர் பாபாவுக்குப் பத்து ரூபாய் தக்ஷணை கொடுத்ததும், அவர்க்கு உதி, அக்ஷதை, மலர் பிரசாதம் கிடத்த நிகழ்வைப் படித்து, இரண்டிற்கும் இடையே உள்ள பொருத்தத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னொரு முறை,பாராயணத்தை முடித்து நான் வீடு திரும்பியதும், மற்றொரு அதிசயம் நிகழ்ந்தது. காலையும், மாலையும் பாபாவுக்கு அளிக்கும் நீரையே நான் அருந்துவது வழக்கம். ஒரு நாளிரவில், அப்படி அந்த நீரைக் குடிக்கச் சென்றபோது, அதில் ஒருசில சொட்டுக்கள் மட்டுமே இருந்தது. வீட்டிலிருந்த வேறு யாரும் அதைத் தொடவே இல்லையெனச் சொன்னார்கள். இதுமாதிரி நேரங்களில் நான் பாபாவிடமே நேரிடையாகச் சீட்டுப் போட்டுக் கேட்பது என் வழக்கம். அப்படிக் கேட்டபோது, 'ஆம், நானே அதைக் குடித்தேன்' என வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு முறை, பாராயணம் முடித்த அன்று என் தோழி ஒருவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, பாதியில் எழுந்து சென்று அவள் ஒரு அழகிய பாபா சிலையை எனக்கு அளித்தாள். 'அவளது சகோதரன் ஷீர்டி சென்றபோது, இரண்டு சிலைகளை வாங்கியதாகவும், அந்த இன்னொன்றுதான் இது என்றும், அதை முறையாகப் பூஜை செய்யும் ஒருவருக்குத் தர எண்ணி, என்னிடம் அளித்ததாகவும் அவள் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினாள். அதன் பின்னர் ஸ்கூட்டரில் இருவருமாகச் சென்றபோது, எங்கு போகலாம் என என்னைக் கேட்டுவிட்டு, அருகிலிருக்கும் பாபா கோவிலுக்கே செல்லலாம் எனச் சொன்னாள். அவள் ஒன்றும் பாபா பக்தை அல்லள். மகிழ்ச்சியுடன் அங்கே சென்று ஸாயி தர்பாரை கண்ணாரக் கண்டு, 10 ரூபாய் தக்ஷணை அளித்துவிட்டு, வீடு திரும்பிய பின்னரே, நிகழ்ந்த அனைத்தின் பெருமையும் புரிந்தது.

அடுத்த தடவை, நான் மெட்ரோவில் செல்லும்போது, வழக்கமாகப் படிக்காமல், பாட்டு கேட்கலாம் என நினைத்து, என்னிடமிருந்த 'ஐ-பாட்'-இல் கேட்கலானேன். அதை முன்னிரவுதான் முழுதுமாக 'சார்ஜ்' செய்திருந்தேன். ஆனால், இரண்டு பாட்டுகளுக்குப் பின்னர், அது வேலை செய்ய ஒத்துழைக்கவில்லை. வேறு வழியில்லாமல், நான் அன்றைய ஸத்சரித அத்தியாயங்களைப் படித்துவிட்டு, வீடு திரும்பினேன். ஆனால், என் மனம் என்னவோ அமைதியாகவே இல்லை. மதிய உணவை முடித்ததும், மீண்டும் எனது 'ஐ-பாட்'ஐ அழுத்த, இந்த முறை அது முழு நேரத்துக்கும் [40 நிமிடங்கள்] தொடர்ந்து ஒலித்தது. எனது சகோதரியுடன் இதைப் பகிர்ந்தபோது, 'உனது தினசரி பாராய‌ணத்தை நீ ஒதுக்கி பாட்டு கேட்கக்கூடாது என்றுதான் பாபா இவ்வாறு செய்திருக்கிறார்' எனத் தெளிவுபடுத்தினாள்.

பாபாவின் படம் ஏதாவதொரு ஆட்டோவிலோ, அல்லது வேறு இடத்திலோ காட்சி அளித்து என்னை மகிழ்த்துவதும் வாடிக்கையாக நிகழும். ஆனால், ஒருநாள் [அன்று வியாழக்கிழமை] அதுபோல எங்கும் தெரியாமல் நான் நம்பிக்கை இழந்துபோன நேரத்தில், ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் மிகப் பெரிய சமாதி புகைப்படத்தைத் தனது கைகளில் வைத்திருப்பதைக் கண்டு ஆனந்தத்துடன் தரிசனம் செய்துகொண்டேன்.


இதுபோல பாபா எப்போதும் என் கூடவே இருந்து, என்னைப் பாதுகாத்து, என‌க்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். இதைச் சொல்ல அனுமதித்தமைக்கு என் பணிவன்பான வணக்கம். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...