Sunday, May 29, 2016

உனக்கு வந்த சோதனைதான் சாதனையாக மாறப்போகிறது

நான் பாபாவை நன்றாக வணங்குகிறேன், அவர் சோதனையைத்தருகிறார். இது ஏன் எனத் தெரியாமல் பல பக்தர்கள் தவிக்கிறார்கள்.  சோதனைகள் என்பவை ஆளாளுக்கு ஏற்றாற்போலத்தான் வரும். ஆன்மிக வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு உலக வாழ்க்கையில் விரக்தி ஏற்படவேண்டும் என்பதற்காக சோதனை வரும்.
அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அந்த சாதனையை வெற்றியாக்க சோதனைகள் தரப்படும். சுகத்திற்குப் பிறகு துக்கம் வரும் என்பதை புரியாதவர்கள்தான் சுகம் வந்தபோதுஅதை இன்முகத்தோடு ஏற்று களிக்கிறார்கள். துக்கம் வந்ததும் தாளாமல் அழுகிறார்கள்.
துக்கத்திற்குப் பிறகு வருகிற சுகம்கடைசி வரை நிலைத்து நீடிக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளும் படிப்பினையைத்தருவதற்காக பாபா சோதனையைத் தன் பக்தனுக்குத் தருகிறார்.
வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் நடப்பது நடந்தே தீரும். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதே சோதனையின் நோக்கம். சோதனைகள் நம்மை திடப்படுத்த வருகின்றன என்பதை உணர்ந்திட வேண்டும். உதாரணக் கதை ஒன்று கூறுகிறேன் கேளுங்கள்:
ஒரு திருடன் தனது மகனுக்குத் திருட்டுத்தொழிலைக் கற்பிக்க விரும்பினான். மகனுடன் சேர்ந்து ஒரு சேட்டுக் கடையில் நகையைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அந்தக் கடைக்குச் சென்று சத்தமே வெளியில் கேட்காதவாறு சுவரில் ஓட்டை போட்டார்கள்.
பையன் சொன்னான்: அப்பா நான் போய் திருடிவருகிறேன்என்று. மகனை ஆசீர்வதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்றான் அப்பா. பையன் திருடியதை மூட்டை கட்டுவதற்குள் அப்பா திடீரென திருடன், திருடன் என சத்தம் போட்டான். இதைக் கேட்டு திகைத்த பையன் திருட்டு மூட்டையுடன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பெட்டியில் படுத்துக்கொண்டான்.
சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த உரிமையாளர், அந்தப் பெட்டியின் மீது  அமர்ந்து கொண்டான். இனி தப்பிக்க முடியாது என்பது தெரிந்து போன நிலையில் பையன் பெட்டிக்குள்ளிருந்து எலி வருடுவதுபோல பெட்டியை வருடினான். பெட்டியின் உள்ளே எலி இருப்பதாக நினைத்து உரிமையாளன் பெட்டியைத் திறந்தபோது, அந்த பையன் சர்ரென எழுந்து பொருளோடு தப்பி ஓடினான். உரிமையாளர் திகைத்தான்.
நேராக வீட்டுக்கு வந்தான் பையன். அங்கே ஓய்வாக இருந்த அப்பாவிடம், “ஏம்பா என்னை காட்டிக்கொடுத்துட்டு ஓடி வந்துட்டே?” எனக்கேட்டான். அப்படி செஞ்சதாலதானே நீயா தப்பிக்கிற வழியைக் கண்டுபிடிச்சு தப்பிச்சு வந்தே -  இல்லேன்னா திருடத் தெரிந்த உனக்கு தப்பிக்கும் வழி தெரியாமல் போயிருக்குமே!என்று பதில் சொன்னான் அப்பா.
கதை புரிகிறதா?
ஒரு பிரச்சினையிலிருந்து நீயாகத் தப்பிக்கவே சோதனையை கடவுள் அனுமதிக்கிறார். சோதனை நேரத்தில் நீங்கள் என்னை பார்க்க வந்து சோதனையை நீக்க வழிகேட்கிறீர்கள்.
நான் சொல்கிறேன் என்றால் சொன்னது நடக்குமா? நடக்காதா? எனக்குத் தெரியாது. ஆனால் என் போன்று எப்போதும் சாயி பற்றி சொல்லிக்கொண்டிருப்பவர்களின் சங்கத்தை நாடும்போது, அச்சம், தயக்கம் போன்றவை நீங்கி உபாயம் பிறக்கிறது. இதனால்தான் துன்பம் வரும்போது இறை அடியார்களின் சத்சங்கத்தை நாடுங்கள் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
சோதனை என்பது உனக்குக் குழந்தை இன்னும் பிறக்க வழியில்லாமல் கோயில் குளங்களைச்சுற்றுவதாக இருக்கலாம். குழந்தைப் பேற்றுக்காக மருத்துவமனைக்கு அலைந்து லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து இன்னும் பலன் கிடைக்காத நிலையாக இருக்கலாம். தைரியத்தை விடாதே!
அவரைப் பற்றிக்கொள், நிச்சயம் பலன் கிடைக்கும்.
சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட கடனாக இருக்க லாம்; கடன் தந்தவர் கழுத்தை நெறிக்க என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி இருக்கலாம்; பயப்படாதே! அவர் உன்னோடுஇருந்து அதை அடைப்பதற்கான வழியைக்காட்ட சோதிக்கிறார் என்பதை புரிந்துகொள். பணத்தை பெருக்க இன்னும் தீவிரமாக உழை. கிடைத்ததை செலவழிக்காமல் சேமித்து வை.
வீடு கட்ட முடியாத நிலையாக இருக்கலாம். அதனால் என்ன? கடன் வாங்கி வீடு கட்டி பிறகு கஷ்டப்படுவதைவிட பொறுமையாக இருந்து கடனே இல்லாமல் வீட்டைக் கட்டி முடிக்க அவர் இந்த சோதனையைத் தருகிறார் என்பதை உணர்ந்துகொள், வாழ்க்கை இனிமையாகும்.
வேலையில் பிரச்சினை என்கிற வடிவில் இந்த சோதனை வருவதாக இருக்கலாம். இந்த வேலைக்காகவா படைக்கப்பட்டாய்? இல்லையே! இதை விட நல்ல வேலையைத் தேடுவதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். அல்லது இதுவே நல்ல வேலை என்றால், எதற்காக உனக்குப்பிரச்சினை தரப்படுகிறது என்பதை யோசித்து அதற்கு ஏற்ப சமயோசிதமாக நடந்து கொள். விட்டு ஓட வேண்டும் என நினைக்காதே!
ஜெயித்தே ஆகவேண்டும்...
அதற்காகத்தான் இந்த சோதனை. இதிலிருந்து எப்படி மீள்கிறாய் என்று பார்க்க சுவாமி இதை அனுமதித்து இருக்கிறார். நீச்சல் கற்றுத் தரும்போது இடுப்பில் துணியைக் கட்டி விட்டு குழந்தையை தண்ணீரில் இறக்கி விடுவதைப் போலத்தான் பாபா உன்னைப் பிடித்துக்கொண்டு சோதனையில் நடமாட விட்டிருக்கிறார். இதை புரிந்துகொண்டால் நீ ஜெயித்து விடுவாய்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...